என் காதல் கனா
6
இதற்குள் துபாய் விமானத்திற்கான இமிக்ரேஷன் அழைப்பு மீண்டும் ஒரு முறை ஒலிக்க, தன் கைப்பையை சுமந்து கொண்டு, தாயிடம் விடைப் பெற்று நகர்ந்தாள். விவேக் பொதுவாக அனைவரிடமும் விடைபெற்று சுஜினியைத் தொடர்ந்து நடக்கலானான். அவளுக்கு இரண்டு அடி இடைவெளியில் அவளுடன் நடந்த விவேக்கை மறந்தும் கூட ஏறிட்டுப் பார்க்கவில்லை. கவுண்ட்டரின் அருகில் நின்றிருந்த சதீஷின் அருகில் நிற்பதா, அல்லது தனி வரிசையில் நின்றிருந்த சுஜினியின் அருகில் செல்வதா என குழப்பமாக இருந்தது. அவ்வப்போது திரும்பி தாயைப் பார்த்துக் கொண்டே நடந்த சுஜினியைக் காண பாவமாக இருந்தது. அதனால சுஜினி நின்றிருந்த வரிசையின் அருகில் நின்றிருந்தவனை, “டே, இங்க இருக்கேன்” என்று அடுத்த வரிசையில் இருந்து சதீஷ் கை அசைத்து அழைத்தான். இருவரும் இமிகிரேஷனை முடித்துக் கொண்டு காத்திருப்பு அறையில் அமர்ந்திருந்தனர்.
“என்னடா பிகரைப் பார்த்ததும் ஃப்ரெண்டை கட் பண்ணிட்ட”என்று அருகில் அமர்ந்த விவேக்கிடம் கொஞ்சம் காட்டமாக மொழிந்தான் சதீஷ்.
“அதெல்லாம் ஒண்ணும் இல்லடா மச்சான்… அந்த அம்மாவைப் பார்த்தா பாவமா இருந்துச்சுடா… அது இருக்கட்டும், நீ ஏண்டா அப்படி பேசின? பட்டுன்னு முகத்தில அடிக்கறாப்ல இருந்துச்சு மச்சான்? சும்மா ஃபார்மாலிட்டிக்காகவாது பார்த்துக்கறோம்னு சொல்லியிருக்கலாம்ல..என்ன கொறஞ்சு போயிருவ நீ?” என்று வினவினான் விவேக்.
“சும்மா சொல்லு, காசுக்கு சொல்லுன்னு என்ன பேச்சு இது. என்னால இந்த ரெஸ்பான்சிபிளிட்டியோடலாம் இருக்க முடியாது மச்சி… அமெரிக்கா போய் அந்த பொண்ணு ஒரு நாள் ஃபோன் பண்ணலைன்னா கூட, நம்ம கழுத்தை புடிச்சு தொங்குவாங்க…. அப்பறம் ஊருக்கு வரப்போ போறப்போ ஊறுகாய் கொண்டு போங்க, உளுத்தம் பருப்பு கொண்டு போங்கன்னு ஆரம்பிப்பாங்க… இதெல்லாம் தேவையா சொல்லு…. நமக்கு சரிபட்டு வராது…”என்று சதீஷ் அவன் போக்கில் பேசிக் கொண்டே செல்ல, விவேக்கின் முகம் மாறிக் கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் சதீஷின் கண்களை சந்திப்பதைத் தவிர்த்து அவன் பக்கவாட்டில் பார்வையை செலுத்தியிருந்தான்.
சதீஷின் வலது தோளின் பின்னால் நின்று அவன் பேசுவதை ஒன்று விடாமல் கேட்டுக் கொண்டு கண்களில் ஒரு வித சிரிப்புடன் நின்றிருந்த சுஜினியைக் கண்டு விவேக்கிற்கு தர்ம சங்கடமாக இருந்தது. சதீஷிற்கு சுஜினி நிற்பதை ஜாடை காட்ட எண்ணியவனை தலை அசைத்து வேண்டாம் என தடுத்து விட்டிருந்தாள். சதீஷ் அவன் போக்கில் பேசி முடித்த பின்பு அவனது தோள் தொட்டு திருப்பினாள்.
“ஹலோ மிஸ்டர் சதீஷ்…. ஹாய் விவேக்…என்னைப் பத்தி தான் பேசிட்டு இருக்கீங்கண்ணு நினைக்கறேன்”என்று முகத்தில் எந்த மாற்றங்களையும் காட்டது, உதட்டளவில் புன்னகையுடனும், அதேசமயம் அனல் கொப்பளிக்கும் கண்களுடனும் தங்கள் அருகில் நின்றிருந்த சுஜினியைக் கண்டு சட்டென பதில் பேச முடியாமல் சதீஷ் திணறித்தான் போனான். விவேக்கிற்கு புன்னகை அரும்பியது. நண்பன் திட்டுவானோ என சின்ன உதடு விரிப்புடன் நடப்பதை வேடிக்கைப் பார்க்கத் துவங்கினான்.
சில கணங்கள் சதீஷ் தடுமாறிய போதும் சட்டென சுதாரித்துக் கொண்டவன், கண்களை குறுக்கி சுஜினியை ஒரு எடை போடும் பார்வையுடன் ஏறிட்டான். “ரெண்டு பேர் பேசிட்டு இருந்தா, உடனே அது உங்களைப் பத்தி தான் இருக்கும்னு நீங்களா நினைச்சுகுவீங்க போல…த வர்ல்ட் இஸ் நாட் ரிவால்விங்க அரவுண்ட் யூ மிஸ்.சுஜினி….”என்று மட்டம் தட்டுவது போல் பதிலளித்திருந்தான்.
“ஓ, ஃபைன்…. நீங்க பேசினதா நான் கேட்டுட்டேன்னு டிராக் மாத்தி பேசறீங்க சதிஷ்.டோண்ட் பீ அஃப்ரைட். நான் எங்க அம்மா பேசினதை சீரியஸா எடுத்துக்காதீங்க, அவங்க பொண்ணைப் பத்தின கவலையில கொஞ்சம் எமோஷ்னலா பேசிட்டாங்கன்னு சொல்லத்தான் வந்தேன்…ரெண்டு ஆஆஆம்பிள்ளை பசங்க கூட போறாங்களே, பார்த்துக்குவாங்கன்னு ஒரு நம்பிக்கையில சொல்லியிருப்பாங்க…. ஆனா பொறுப்புன்னு வந்துட்டா தெரிச்சு ஓடற பசங்கன்னு அவங்களுக்குத் தெரியாது…ஆஆஆம்பிள்ளை பசங்கன்னு, பேருக்கு தகுந்த மாதிரி இருப்பாங்கன்னு எதிர்பார்த்திருப்பாங்க….” என்று கொஞ்சமும் புன்னகை மாறாமல் பேசிய சுஜினியின் கன்னத்தில் பளார் என அரைய வேண்டும் போல் ஆத்திரம் எழுந்தது. கை முஷ்டியை இறுக்கமாக மூடி, தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டான். விவேக்கிற்கு ஒரு பக்கம் சுஜினியைக் கண்டு சிரிப்பாகவும், நண்பனின் கோபத்தைக் கண்டு பாவமாகவும் இருந்தது. சதீஷ் என்ன சொல்லப் போகிறானோ என்ற கவலையும் உடன் எழுந்தது.
“நாங்க ஆம்பிள்ளையா இல்லையான்னு உன் ஆராய்ச்சியோட முடிவ சொல்லத்தான் இப்போ வந்தியா?”என்று எடுத்த எடுப்புலேயே ஏக வசனத்தில் ஆரம்பித்தான். “டே…அமைதியா இருடா” என்று மெல்லிய குரலில் விவேக் கூறியது சதீஷின் காதுகளில் விழுந்ததாகவே தெரியவில்லை. சுஜினியிடம் ஏதாவது தகாத வார்த்தை சொல்லிவிடுவானோ என்ற பயத்தில் விவேக் சுஜினியைப் பார்த்தால், அங்கே அவளது உதட்டில் வீற்றிருந்த ஏளனப் புன்னகை மாறாமல் அப்படியே இருந்தது.
“சே, சே ஆராய்ச்சி எல்லாம் தேவையே இல்லை. ரிசல்ட் இதுதான்னு உங்க பதில்லையே எனக்குத் தெரியும்….ஆக்ட்சியுவலா, உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லலாம்னு தான் வந்தேன். ஆனா இனிமே அதுக்கு அவசியம் இருக்காதுன்னு நினைக்கறேன்…. சீ யூ மிஸ்டர்.விவேக், குட் பை சதீஷ் பரந்தாமன்” என்று கர்வம் மாறா சிரிப்புடன் மொழிந்தவள் ஒரு நொடி கூட அவர்கள் அருகில் நில்லாமல், தன் கைப்யை எடுத்துக் கொண்டு அவர்களிடம் இருந்து நகர்ந்தாள்.
சதீஷ் கொதி நிலையை அடைந்திருந்தான். “அடிங்க”என்று ஓரடி முன்னே வைத்தவனை விவேக் தடுத்திருந்தான். “எவ்வளோ திமிறு பாருடா….பொட்டைன்னு சொல்லாம சொல்லிட்டு போறா…” என்று கோபமாக கத்தியவனை, சாந்தப்படுத்தி சுஜினி சென்ற திசையில் இருந்து மறுபக்கம் அழைத்துச் சென்று காலி இருக்கை ஒன்றில் அமரச் செய்தான். “விடு மச்சி..அவங்க அம்மா மனசு சங்கடபடுத்தின கோபத்தில பேசியிருப்பா…பெருசு பண்ணாதடா… நீ பேசினதும் தப்புதாண்டா”என்று சிறிது சிறிதாக பேசி சமாதனப்படுத்தினான். சதீஷின் கண்கள் சுஜினி எங்கே அமர்ந்திருக்கிறாள் என நோட்டம் விட்டபடிக்கே இருந்தது.
இவர்கள் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து நான்கு வரிசைகள் தள்ளி அமர்ந்திருந்தவள் இவர்கள் இருவரையும் கண்டு கொள்ளவேயில்லை. அவளது அருகில் அமர்ந்திருந்த நடுத்தர வயது தம்பதியினரிடம் பேசிக் கொண்டும், அவர்களது குழந்தையுடன் விளையாடிக் கொண்டும் மகிழ்ச்சியாகவே காணப்பட்டாள். கன்னத்தில் குழி விழ தலையை பின்னால் சரித்து புன்னகைத்துக் கொண்டிருந்த சுஜினியைப் பார்க்க பார்க்க எரிச்சலாக எழுந்தது சதீஷிற்கு.
“மெதுவா மெதுவா…பல்லெல்லாம் கொட்டிர போகுது”என்று முனுமுனுத்தவன், ஆச்சர்யமாக தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த விவேக்கிடம் தன் கோபத்தை திசை திருப்பினான். “என்னடா….என் மூஞ்சில என்ன படமா ஓடுது… கண் சிமிட்டாம பார்க்கற”என்று கடுப்புடன் வினவியவினடம் விவேக் மென்மையாக சிரித்தான்.
“எதுக்கு சிரிக்கற? என்னைப் பார்த்தா நக்கலா இருக்கா?”என்று கோபத்தை முழுவதும் நண்பனின் மீது செலுத்தினான்.
“ஆத்திர காரனுக்கு புத்தி மட்டு”என்று மட்டும் முனுமுனுத்தவன், கையுடன் கொண்டு வந்திருந்த ஆங்கில நாவலைப் பிரித்துக் கொண்டு அமர்ந்தான் விவேக்.
“என்ன என்ன..புத்தி மட்டு? யாருக்கு?”
“யு ஆர் பீயிங் எ ஜெர்க்… எங்கையோ இருக்கற கோபத்தை, சம்பந்தமேயில்லாம யாரோ மேல காட்டற..கோபத்தில இருக்கறவங்களுக்கு புத்தி வேலை செய்யாதாம்”என்ற விவேக்கை எரிச்சலுடன் பார்த்தான் சதீஷ்.
“சரி, சுபா மேல இருக்கற கோபம்…அதை இந்த பொண்ணைப் பார்த்ததும் அந்தக் கோபத்தை…சரி..தப்பு தான்… சொல்லு.. கோபப்படாம கேட்கறேன்…என்ன புத்தி வேலை செய்யாம போச்சுன்னு சொல்லு”
“அந்தப் பொண்ணு உன்னை என்னன்னு கூப்பிட்டா?”
“பொட்டைன்னு…”என்றான் திரும்ப ஆத்திரமாக.
“டே…டே….. திரும்ப அங்கையே போற பாரு….. என்ன பேர் சொல்லி கூப்பிட்டா?”
“குட் பை சதீஷ் பரந்தாமன்” என்று பெண்குரல் போல் பழித்துக் காட்டினான் சதீஷ்.
“உன் ஃபுல் பேர் அவளுக்கு தெரிஞ்சிருக்கு…. எப்படி?”
“அதான? எப்படி விவேக்?”
“யோசி யோசி…”
“டே, ஆமா டா…. முழு பேர் சொல்லி கூப்பிட்டாள்ல…. எப்படி? ஒருவேளை அம்மா சொல்லியிருப்பாங்களோ?”
“என்ன செல்ஃப் இன்ர்டோடெக்ஷனா குடுத்திருப்பாங்க…இல்லைடா மடையா…அவளுக்கு உன்னை முன்னடியே தெரிஞ்சிருக்கு…அதை சொல்லத்தான் அவ வந்திருக்கா….நீ பேசினதைக் கேட்டு கோவிச்சுட்டு சொல்லாமயே போயிட்டான்னு நினைக்கறேன்.”
“ஆமா இவ சொல்லலைன்னா குடிமுழுகிப் போயிரும்பாரு… தெரிஞ்சுக்காத வரைக்கும் நல்லது..”என்று ஆத்திரத்துடன் சதீஷ் மொழிந்தாலும், அவனது ஆர்வம் தூண்டித்தான் போயிருந்தது. “யாராக இருக்கும்? ஒரு வேளை கல்லூரியில் உடன் படித்தவளோ? தூரத்து சொந்தம் ஏதாவதாக இருக்குமோ?”என மனம் பலவிதமாக எண்ணத்துவங்க,
“விவேக், ஒருவேளை நம்ம காலேஜா இருப்பளோ? நீ பார்த்திருக்கியான்னு நியாபகப்படுத்திப் பாரு” என்று அமைதியாக அருகில் அமர்ந்து நாவலுக்குள் புதைந்திருந்த விவேக்கிடம் வினவினான் சதீஷ்.
“தெரியலை மச்சி…இருக்கலாம்”
“வாய்ப்பே இல்லை விவேக்…எனக்கு அந்த முகரையை எங்கையும் பார்த்த நியாபகமேயில்லை.”
“ஆமா, நாலு வருஷமும் சுபா முகத்தயே பார்த்திட்டு இருந்தா மத்த முகமெல்லாம் எப்படி நியாபகம் இருக்கும்”என சதீஷின் முன்னால் காதலியை சட்டென நினைவுபடுத்த சதீஷின் முகம் கன்றிப் போனது. விவேக் தன் நாவை கடித்துக் கொண்டான்.
“டே, டே,,, சாரி டா மச்சி…வாய் தவறி உளறிட்டேண்டா…ரியலி சாரி….கொஞ்ச நேரம் எதுவும் எங்கிட்ட பேசாத… கேட்காத….நான் எது சொன்னாலும் தப்பா போகுது..”என்று மீண்டும் மன்னிப்பு கேட்ட விவேக்கிடம் பதில் எதுவும் பேசாமல் தலையை உலுக்கிய சதீஷ், கைப்பேசியில் கேம் விளையாடத் துவங்கியிருந்தான்.
விவேக், கண்களை சிமிட்டாமல் கைப்பேசியில் லயித்திருந்த நண்பனையும், நான்கு வரிசைக்கு முன் அமர்ந்து குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த சுஜினியையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, கையில் இருந்த புத்தகத்தில் கவனமானான். கண்கள் புத்தகத்தில் வாசகங்களை படித்துக் கொண்டிருந்தாலும், விவேக்கின் கருத்தில் சுஜினி மட்டுமே நிரம்பியிருந்தாள்.
“என்ன பெண் இவள்? முன்னால் எங்கேனும் பார்த்திருக்கிறேனா? இல்லை….பார்த்திருந்தால் நிச்சயமாக நினைவில் இருக்கும். பார்த்த சில மணி நேரத்திலேயே இவ்வளவு பிடித்துப்போன முகத்தை முன்னரே கண்டிருந்தால் நினைவிராதா?”என விவேக்கின் எண்ணங்கள் சென்ற திசையை சதீஷ் அறிந்திருந்தால், நண்பனை உண்டு இல்லை என்று ஆக்கியிருப்பான்.
சிறிது நேரத்தில் பயணத்திற்கான போர்டிங் திறக்கப்பட, நண்பனை அழைத்துக் கொண்டு விமானத்தினுள் செல்லும் வரையிலும் சதீஷிடம் விவேக் வேறு எதுவும் பேசவில்லை. சுஜினி ஏறிவிட்டாளா?எங்கே அமர்ந்திருக்கிறாள் என கண்கள் ஒரு முறை அலைபாய்ந்த போதும், சதீஷ் கண்டுகொண்டால் வம்பு எனக்கருதிய விவேக் முடிந்த மட்டில் தன் ஆர்வத்தை தன்னுடனேயே வைத்துக் கொண்டான்.
நான்கரை மணி நேரம் கழித்து டிரான்சிஷன் விமானத்திற்காக துபாய் விமான நிலையத்தில் காத்திருந்த போதும் சுஜினியிடம் பேச வேண்டும் என்ற ஆவலை வெகுவாக கட்டுபடுத்திக் கொண்டான் விவேக். ஆனால் சதீஷிற்கு அந்த தொந்தரவெல்லாம் இல்லை. பயணிகள் காத்திருப்பு அறையில் ஒரு ஓரமாக கால் மேல் கால் போட்டுக் கொண்டு ஆங்கில நாவலில் மூழ்கியிருந்த சுஜினியைப் பார்க்கப் பார்க்க சதீஷின் ஆத்திரம் கூடியதே தவிர குறையவில்லை.
“இந்தியா விட்டு தாண்டினதுமே ஜீன்ஸ் என்ன? ஷர்ட் என்ன?”என்று அமைதியாக அமர்ந்திருந்தவளைப் பற்றி விவேக்கிடம் புலம்பினான் சதீஷ். விமானம் துபாயை தொட்ட போது அந்த ஊரின் நேரப்படி காலை எட்டு மணி ஆகியிருந்தது. அதனால் விமானத்தை விட்டு இறங்கியது அங்கிருந்த பெண்கள் அறையில் சுஜினி உடை மாற்றியிருக்கக் கூடும்.
“டே, இதெல்லாம் உனக்கே ஓவரா இல்லையா? யாரு என்ன டிரஸ் போட்டா நமக்கு என்ன?”என்று விவேக் மொழிந்த போதும், அவனது கண்களும் மனதும் சுஜினியின் இந்த உடையை மனதிற்குள் மெச்சிக் கொண்டிருந்தன. அடர் நீல நிற ஜீன்ஸும், அதற்கு பொருத்தமாக இள மஞ்சளில் வெள்ளை பூக்கள் தென்பட்ட நீள டாப்ஸும் சுஜினிக்கு பாந்தமாக இருந்தது. “ஏன் இந்த டிரஸ்க்கு என்ன? டீசண்டா தான இருக்கு? அதுலையும் சுஜிக்கு அழகாவும் இருக்கே”என மனதிற்குள் நினைத்ததை நண்பனிடம் சொல்ல முடியவில்லை.
“கைல இங்கிலீஷ் நாவல் வேற….சென்னையில பார்க்கறப்ப பட்டிகாடு மாதிரி இருந்தா. இப்ப பாரு, தினமும் ஃப்ளைட்டிலையே பறக்கறாப்ல எவ்ளோ அளப்பர….”என்று விடாமல் சுஜினியை கரித்துக் கொட்டுவதிலேயே கவனமாக இருந்தான் சதீஷ்.
“உன் மெபைல்ல கேம் எதும் இல்லையா? அமைதியா எடுத்து விளையாடாம ஏண்டா படுத்தற?”
“கேம் விளையாடற மூட் இல்லை….டைம் பாஸ் பண்ணத்தான் அவளைத் திட்டறேன்”
“டைம் பாஸ்….ம்ம்ம்…, ஏர்போர்டில எவ்வளோ அழகழகா ஃபாரினர்ஸ் இருக்காங்கள்ள…கொஞ்ச நேரம் சைட் அடிச்சுட்டு இரு…. டைம் பாஸ் ஆகிடும்” என்று சுஜினி மீது சதீஷ் கொண்டிருந்த அதீத கோபத்தை குறைக்கும் விதமாக விவேக் பேச்சை திசைதிருப்பியிருந்தான்.
அடுத்த அரை மணி நேரத்தையும் அவ்வாறே கழித்த சதீஷ், ஆர்கன் மாகாணம் செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ஏறி அமர்ந்த பின் தான் கொஞ்சம் சுஜினி புராணம் பாடாமல் அமைதியானான். காரணம், விமானத்தில் பணிப்பெண் சதீஷைப் பார்த்து அழகாக புன்னகைத்தாகவும் இருக்கலாம், அல்லது விமானத்தில் காட்டிய திரைப்பட பட்டியலில் சதீஷின் விருப்பமான படங்கள் நிறைய இருந்ததாகவும் இருக்கலாம்.
“ஓஓஓ, பைரேட்ஸ் ஆஃப் கரிபியன் – டெட் மேன் டெல் நோ டேல்ஸ்…. நான் இன்னும் இது பார்க்கலையே”என ஆர்வமாக படம் பார்கத் துவங்கியிருந்தான் சதீஷ். விவேக்கிற்கு மிகவும் நிம்மதியாக இருந்தது. ஜெட் ஏர்வேஸ் விமானம் மிகவும் பெரியதாக இருந்ததால், சட்டென சுஜினி எங்கே அமர்ந்திருந்தாள் என கண்டுகொள்ள முடியவில்லை.
இரண்டு மணி நேரம் கழித்து, விமானத்தின் கழிப்பறை செல்வதற்காக சதீஷ் எழுந்த போது, ஆறு இருக்கைகள் தள்ளி சுஜினி அமர்ந்திருந்தது பார்த்தான். ஒரு பக்கம் தலை சாய்ந்து படுத்திருந்தவளின் மார்பின் மேல் “கான் கேர்ள்” என்ற ஆங்கில நாவல் பாதி திறந்தபடிக்கு இருந்தது. போர்வை உடல் மூழுக்க மூடியிருக்க, முகம் நிர்மலமான அமைதியுடன் காணப்பட்டது. கொஞ்சம் போல் திறந்திருந்த அதரங்கள் சிறிய “ஒ” வடிவில் இருக்க, படிப்பதற்காகப் போட்டிருந்த கண்ணாடியைக் கழற்றாமல் உறங்கும் சுஜினியின் முகத்தில் பார்வையை செலுத்திய சதீஷிற்கு காலையில் எதற்காக இவள் மீது இவ்வளவு கோபம் கொண்டோம் என கேள்வி பிரதானமாக எழுந்தது. “சரி, முடிஞ்சு போன விஷயம்….இப்போ யோசிச்சு என்னாகப் போகுது?”என்ற எண்ணமும் உடனே தோன்ற தன் இருக்கைக்கு வந்து அமர்ந்து கொண்டான். அடுத்த பதினாறு மணி நேரங்களும் சுஜினியைப் பற்றிய எண்ணங்கள் எதுவும் இல்லாமல், திரைப்படம், சாப்பாடு, உறக்கம் என பொழுதைக் கழித்தான் சதீஷ்.
(Ambien)