மனைவி - 13

Advertisement

Nivi Ammu

Well-known member
Member
மனைவி - 13

'கணவனைப் பார்க்க ஆசையாக போனவள் இப்போ எதுக்கு இப்படி கதறி அழணும்? ஒருவேளை அவன் இவளை வேண்டாம்னு சொல்லிட்டானோ? அதனால்தான் அழுகிறாள் போல. இந்த வாழ்க்கை நிலைக்காதுன்னு பல பேர் சொல்லியும் இவள் தானே அவனுக்காகக் காத்திருந்தாள்!' அவர் மனம் ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்தது.

கதறிக் கதறி அழுதவளுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் தொண்டை வறண்டு போனது. குருவம்மா வின் நெஞ்சிலேயே ஒரு பிணம் போல் சாய்ந்து போனாள். வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூடப் பேச முடியவில்லை. அவன் தன்னைத் தவறாகச் சித்தரித்து விட்டான், தன்னைத் தாசி போல் பேசிவிட்டான் என்று தன் வாயால் எப்படிச் சொல்ல முடியும்? அதைச் சொல்லவே அவளுக்கு அசிங்கமாக இருந்தது.

அந்த அம்மனை நிதானமாக ஒரு நொடி பார்த்தவள், "நீ வெறும் கல்லுதான்... இல்லை, நான் தான் முட்டாள்! இனி நான் அறிவாளியா இருந்துட்டுப் போறேன்," என்று தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

"இனிமேல் நான் இந்த இடத்துக்கு வர மாட்டேன் அக்கா. மொத்தமா இங்கிருந்து போறேன். இதுவரைக்கும் நீங்க எனக்குப் பண்ண உதவிக்கு ரொம்ப நன்றி," என்று குருவம்மாவை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.

அவர் 'என்ன ஏது' என்று கேட்பதற்கு முன்பே அங்கிருந்து வேகமாய் ஓடத் தொடங்கினாள்.

என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்ற குருவம்மாவிற்குப் பிரபாகரனின் நினைவு வந்தது. உடனே அவனுக்குத் தொடர்பு கொண்டு ராதை அழுததை மட்டும் பதற்றத்துடன் கூறினாள்.

அங்கே வீட்டில்... கலை, அலர், மலர் ஆகிய மூவருக்கும் இன்றுதான் சுதந்திரம் கிடைத்த உணர்வு. அத்தனை கொண்டாட்டம்! ஆனால், தன் மகன் மனதில் என்ன இருக்கிறது என்று கூட ஒரு நல்ல தாயாக அவர் தெரிந்து கொள்ளவே இல்லை.

தன் மகன் முழுவதுமாகத் தன் முந்தானையில் முடிந்து இருக்க வேண்டும் என்று நினைக்கும் அந்தத் தாய், எதற்காகத் தன் மகனுக்கு ஒரு திருமணம் செய்து வைக்க வேண்டும்? சுயநலத்தின் உச்சியில் நின்று கொண்டு,

எதற்காக இன்னொரு உயிரின் வாழ்க்கையை அநியாயமாக வீணடிக்க வேண்டும்? ஒரு தாயாக, தன் மகனின் வாழ்க்கையை சிதைக்க அவளுக்கு வேண்டுமானால் முழு உரிமை இருக்கலாம்; ஆனால், யாருடைய வீட்டுப் பெண்ணோ... எதற்கோ ஆசைப்பட்டு வந்தவளின் வாழ்க்கையை எதற்காக இப்படி நாசம் செய்ய வேண்டும்?"

வீட்டின் ஒரு மூலையில் முடங்கிக் கிடந்த ராதையின் மனதில் இந்தக் கேள்விகள் ரத்தக் கண்ணீராய் வடிந்தன.

அதிலும் குறிப்பாக, அவளை வீட்டை விட்டுத் துரத்துவதற்கு இவர்கள் வேறு ஏதேனும் காரணம் சொல்லியிருந்தால் கூட இந்த மனசு ஒருவேளை ஏதோ ஒரு மூலையில் தேற்றிக் கொண்டிருக்கும். ஆனால், அவளுக்கு 'தவறானவள்' என்ற கேவலமான ஒரு பட்டத்தைக் கட்டி, அசிங்கப்படுத்தி துரத்தியது... அது எந்தக் காலத்திலும், எந்தச் சட்டத்திலும் மன்னிக்கவே முடியாத துரோகம்!

அறைக்குள் தன்னைத் தானே சிறை வைத்துக் கொண்டான் ஸ்ரீராம். அவன் மனதுக்குள் அவள் செய்ததாகச் சொல்லப்படும் துரோகத்தை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை. ..

துரோகத்தின் வலி கொடியது தான்; ஆனால், இங்கே நடப்பதே வேறு! நடக்காத ஒரு பொய்யான துரோகத்தை, நடந்ததாகவே கற்பனை செய்து கொண்டு, தன் வாழ்வை அழித்துக் கொள்ளும் இந்த மூடனைப் பார்த்துப் பரிதாபப்படுவதா அல்லது கோபப்படுவதா என்று தெரியவில்லை.

இவனை யாராலும் திருத்த முடியாது. இவன் இப்போது அனுபவிக்கும் வலியை விட, உண்மை ஒருநாள் சுடச்சுட வெளிவரும்போது இவன் அனுபவிக்கப் போகும் வலி இன்னும் பல மடங்கு கொடுமையானதாக இருக்கப்போகிறது.

உண்மையை எவ்வளவு காலத்துக்குத்தான் மூடி மறைக்க முடியும்? கண் முன்னே நிழலாடும் உண்மையைச் சிதைத்துவிட்டு, இவர்கள் எப்படி இப்படி ஒரு கற்பனையான நாடகத்தை அரங்கேற்றினார்கள்? அதை அவன் எப்படித் தான் நம்பினான்? அவளை வீட்டை விட்டுத் துரத்தி விட்டாலோ அல்லது அவள் மீது வீண்பழி சுமத்தி விட்டாலோ அவள் தவறானவள் ஆகிவிடுவாளா என்ன? இல்லையே!

இனிமேல் தான் அவர்கள், தாங்களே வெட்டிக் கொண்ட படுகுழியில் முழுவதுமாகச் சரிந்து விழப் போகிறார்கள்.

ராதை, அழுது அழுது வீங்கிய முகத்துடன் தன் அண்ணன் வீட்டு வாசலில் வந்து நின்றாள். அவளுக்குச் செல்ல வேறு இடமும் இல்லை, கை கொடுத்துத் தூக்க வேறு துணையும் இல்லை. விதி அவளை இங்கேதான் கொண்டு வந்து நிறுத்தியிருந்தது.

ஆனால், அங்கே அவள் கண்ட காட்சி... அது அவள் உயிரைப் பிடுங்குவது போல இருந்தது! இதுவரை தான் அனுபவித்த வலிகள் எல்லாம் இந்தத் துயரத்திற்கு முன்னால் ஒன்றுமே இல்லை என்று தோன்றிவிட்டது.

"அத்த... நான் எதுவும் செய்யல அத்த... அத்த ப்ளீஸ் அத்த... என்னை அடிக்காதீங்க..." ஒரு பிஞ்சுப் பெண்ணின் குரல் அந்த வீட்டின் கூரையைப் பிளந்தது.

ராதையின் இளைய மகள் மகாலட்சுமியை தான், அவள் அண்ணன் மனைவி ராஜலட்சுமி மாட்டை அடிப்பது போல அடித்துக் கொண்டிருந்தாள்.

இதைக் கண்டு துடித்த ராதையின் மூத்த மகள் சீதாலட்சுமி, தன் தங்கையை காக்க இடையில் புகுந்து, ராஜலட்சுமி கொடுத்த அடிகளில் பாதியைத் தன் பிஞ்சு முதுகில் வாங்கிக் கொண்டாள்.

"அத்தை... மகா அப்படிப் பண்ணியிருக்க மாட்டா... ப்ளீஸ் அவளை விட்டிடுங்க அத்த..." எனச் சீதா கை எடுத்துக் கெஞ்சிக் கொண்டிருக்க, இதைக் கண்ட ஒரு தாயின் இதயம் எப்படித் துடிக்காமல் இருக்கும்?

"அண்ணி... நிறுத்துங்க!" என்று சிங்கம் போல் வெகுண்டு எழுந்த ராதை, ஓடிச் சென்று தன் இரு மகள்களையும் வாரியணைத்து நெஞ்சோடு சேர்த்துக் கொண்டாள்.

"எதுக்காக என் பொண்ணுங்களை இப்படிப் போட்டு அடிக்கிறீங்க? அவங்க என்ன தப்பு பண்ணாங்க?" என்று ஆக்ரோஷமாக கேட்டாள்.

கையில் இருந்த குச்சியைக் கீழே எறிந்த ராஜி, ராதையை அருவருப்பாகப் பார்த்தாள்.

"சொன்ன வேலையை உன் பொண்ணு சரியாச் செய்யல... அதான் அடிச்சேன்! சும்மா என் வீட்டுல வந்து உட்கார்ந்து தண்டச் சோறு திங்கிறதுக்கு எல்லாம் இங்க வழியில்லை. உன் பொண்ணுங்களுக்கு சோறு போடணும்னு எந்த அவசியமும் எனக்கும் கிடையாது. வேலை செஞ்சா தான் சாப்பாடு... புரியுதா?" என்று நஞ்சைக் கக்கினாள்.

ராதையின் மனதை யாரோ இரும்புக் கரம் கொண்டு பிழிவது போல இருந்தது. ஒவ்வொரு சொட்டு ரத்தமாகச் சிந்துவது போன்ற வலி.

'தன் மகள்கள் இத்தனை காலம் இந்த வீட்டில் இப்படிப்பட்ட சித்திரவதைகளை தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்களா?' என்ற வேதனையோடு தன் தாயைப் பார்த்தாள்.

அவள் அம்மா கனகவல்லியோ, தன் மகனிடம் பேசத் துணிவின்றி, கையைப் பிசைந்தபடி தரை பார்த்துக் குனிந்து நின்றிருந்தாள்.

மகள்களை அணைத்தபடியே தன் தாயிடம் சென்ற ராதை, "அம்மா... நீ இப்படித்தான் என் பொண்ணுங்களைப் பார்த்துக்கிட்டியா? இத்தனை வருஷமா இவங்க இப்படித் தவிச்சப்ப நீ என்ன பண்ணிட்டு இருந்த?" என்று உடைந்து போய்க் கேட்டாள். அதைத் தாண்டி அவளால் எதுவும் பேச முடியவில்லை.

தன் தாய் தன் பிள்ளைகளை நன்றாக பார்த்துக் கொள்கிறாள் என்று நம்பி அல்லவா அவள் அங்கே தவிக்கவிட்டுப் போயிருந்தாள்!

பிள்ளைகளை விட்டுப் பிரிய ராதைக்கு என்றுமே விருப்பமில்லை. ஆனால், அவர்கள் தனித்து வாழ இந்த உலகம் அவளுக்கு அனுமதி தரவில்லை!

"பொம்பள பிள்ளைகளை நான் பத்திரமா பார்த்துக்கிறேன்... நீ எப்படியாவது உன் வாழ்க்கையை காப்பாத்திக்கோ ராதை" என்று ஆசை வார்த்தை சொல்லி பிள்ளைகளைப் பிரித்து இழுத்து வந்தது இதே கனகவல்லி தான்.

ராதையின் உள்ளத்தில் இப்போது ஒரே ஒரு எண்ணம் தான் ஓடியது. 'நானும் அம்மாவை நம்பித் தானே வீணாப் போயிட்டேன். என் அம்மாவை மட்டும் நான் நம்பாமல் இருந்திருந்தால், என் பொண்ணுங்களுக்கு நானே அல்லவா அம்மாவாக இருந்திருப்பேன்!' என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள்.

அப்போது, சத்தம் கேட்டு வெளியே வந்த மருதுபாண்டி, தன் தங்கை ராதையை ஒரு விரோதியைப் பார்ப்பது போல ஏற இறங்கப் பார்த்தான். ராதைக்கு திருமணம் ஆன நாளிலிருந்து, ஒரு முறை கூட அவளை இந்த வீட்டிற்கு அவன் முறைப்படி அழைத்ததே கிடையாது.

அவள் மகள்கள் இங்கே வளர்ந்தாலும், அவர்களை வந்து பார்க்க கூட அவன் அனுமதி தரவில்லை.

"இங்க எதுக்கு வந்த? இப்ப எதுக்கு இங்க வந்து நிக்கிற?" என்று அதிகாரத் தோரணையில் கேட்டான்.

ராதை தன் கண்களைத் துடைத்துக்கொண்டு, தைரியத்தை மொத்தமாகத் திரட்டிச் சொன்னாள், "இனிமேல் நான் அந்த வீட்டுக்குப் போக மாட்டேன்!"

கனகவல்லி பதறிப் போய் ஓடி வந்தாள். "ராதை... என்னடி சொல்ற? அந்த வீட்டுக்குப் போக மாட்டேன்னா என்ன அர்த்தம்?"

"இனிமேல் நான் அவர் கூட வாழ மாட்டேன்னு அர்த்தம்! அவரும் நானும் பிரிஞ்சிட்டோம்னு அர்த்தம்!" என்று ராதை உரத்த குரலில் கத்தினாள்.

அடுத்த நொடி, மருதுபாண்டியின் கை விரல்கள் ராதையின் கன்னத்தில் பலமாக இறங்கின. அந்த அடியிலும் அவள் அசையவில்லை. கால்களைத் தரையில் ஊன்றி நிமிர்ந்து நின்றாள்.

மகள்கள் இருவரும் "அம்மா..." என்று அலறியபடி அவளைக் கட்டிக் கொண்டனர்.

"மாமா... அம்மாவை அடிக்காதீங்க மாமா..." என்று அந்தக் குழந்தைகள் கதறினர்.

"உன்கிட்ட எத்தனையோ முறை சொல்லி இருக்கேன்... வாழாவெட்டியா நீ என் வீட்டு வாசலை மிதிக்கக் கூடாதுன்னு! ஏற்கனவே உன் ரெண்டு பொண்ணுங்களை வச்சு பராமரிக்கிறது எனக்கு பெரும்பாடா இருக்கு. இதுல நீயும் வந்து உட்கார்ந்து என் கழுத்தை அறுக்கப் போறியா? என்னதான் நினைச்சுட்டு இருக்கீங்க நீங்க எல்லாம்?" என்று மருதுபாண்டி கத்தினான்.

ராதை கசப்புடன் சிரித்தாள். 'அண்ணனாக ஒருநாளாவது தனக்கு ஒரு நல்லது செய்திருப்பானா? இத்தனை வருடம் நரக வேதனையில் போராடிவிட்டு, இன்று வேறு வழியின்றி வந்து நிற்கும் தங்கை என்ன நிலையில் இருக்கிறாள் என்று கூடக் கேட்கத் துப்பில்லாத இவன் எப்படி ஒரு அண்ணனாக இருக்க முடியும்?' இதுவரை தன் குழந்தைகளை இவன் எப்படியெல்லாம் நடத்தியிருப்பான் என்பதை அந்த நொடி அவள் உணர்ந்து கொண்டாள்.

"உங்களை நம்பி என் பெண் பிள்ளைகளை இங்கே விட்டுட்டுப் போனது நான் செஞ்ச பெரிய தப்பு! அவருக்கு என் கூட வாழ விருப்பம் இல்லைன்னு சொல்லித் துரத்திட்டாரு... நான் வேற எங்க போவேன்?" என்றாள் உயிர் துடிக்க,

"அவன் துரத்தினால் நேரா இங்க வந்துடுவியா? அவன் கால்ல விழுந்தாவது நீ அங்கதான் கிடக்கணும். ஒழுங்கு மரியாதையா திரும்பிப் போ... இல்ல நானே உன்னைத் தரதரன்னு இழுத்துட்டுப் போயி அந்த வீட்டில் தள்ளிவிட்டு வந்துருவேன்" என்று மருதுபாண்டி மனசாட்சியே இல்லாமல் பேசினான்.

தொடரும்.....
 
முழு பூசணிக்காயை சோற்றில் மறைச்ச கதையா...ராதை எப்படி தன் கர்ப்பத்தையும் இரண்டு பெண் பிள்ளைகளையும்... மாமியார் புருஷனிடம் இருந்து மறைச்சா....⁉️⁉️⁉️
 
ராதை ஆண் குழந்தை பெத்துத் தரலைனு தான் அவ புருஷன் வீட்டுல இத்தனை கொடுமையை பண்ணினாங்களா?

அந்த பொம்பள இவளுக்கு குழந்தை பிறந்தையே மகன் கிட்ட சொல்லியிருக்க மாட்டாளா இருக்கும்.
 
Last edited:
enna 2girl baby athuvum amma v2la ithu epadi antha ratsachi kalu theriyama irunthurukum oru vela girl baby nale anatha ram kita kuda sollama ivanga amma v2la iruka sonnathale vittu poetalo🤔🤔🤔🤔🤦‍♀️🤷‍♀️ ivan ellam oru annan ah 🤮🤮🤮🤮
 
மகாலட்சுமி ஆண் குழந்தை பெத்துத் தரலைனு தான் அவ புருஷன் வீட்டுல இத்தனை கொடுமையை பண்ணினாங்களா?

அந்த பொம்பள இவளுக்கு குழந்தை பிறந்தையே மகன் கிட்ட சொல்லியிருக்க மாட்டாளா இருக்கும்.
சரியா சொன்னீங்க
 
மகாலட்சுமி ஆண் குழந்தை பெத்துத் தரலைனு தான் அவ புருஷன் வீட்டுல இத்தனை கொடுமையை பண்ணினாங்களா?

அந்த பொம்பள இவளுக்கு குழந்தை பிறந்தையே மகன் கிட்ட சொல்லியிருக்க மாட்டாளா இருக்கும்.
சரியா
enna 2girl baby athuvum amma v2la ithu epadi antha ratsachi kalu theriyama irunthurukum oru vela girl baby nale anatha ram kita kuda sollama ivanga amma v2la iruka sonnathale vittu poetalo🤔🤔🤔🤔🤦‍♀️🤷‍♀️ ivan ellam oru annan ah 🤮🤮🤮🤮
ஓரளவுக்கு சரியாக சொன்னீங்க
 
முழு பூசணிக்காயை சோற்றில் மறைச்ச கதையா...ராதை எப்படி தன் கர்ப்பத்தையும் இரண்டு பெண் பிள்ளைகளையும்... மாமியார் புருஷனிடம் இருந்து மறைச்சா....⁉️⁉️⁉️
அவள் மறைக்கவில்லை மறைக்கப்பட்டது
 

Advertisement

Advertisement

Back
Top