மனைவி - 48

Advertisement

Nivi Ammu

Well-known member
Member
அவன் வண்டியை ஸ்டார்ட் செய்தபடியே நிமிர்ந்து பார்த்தான். "உன்னைத் தண்டிக்க எனக்கு துளிகூட விருப்பமில்லை; ஆனா இதுக்கு மேல என்னைப் பேச வைக்காதே.

ஒரு மகனா என் கடமையை என்னால எங்க வரைக்கும் செய்ய முடியுமோ, அதை நான் சரியா செய்வேன். ஒரு தாயா நீ எனக்கு நல்லது செய்யலைன்னாலும் பரவாயில்லை, ஆனா கெடுதல் மட்டும் இடைவிடாமல் செஞ்சுகிட்டே இருக்கே!

உன்னை மாதிரி ஒரு மனுஷியா நான் சமூகத்துல நிக்க விரும்பலை. ஒரு நல்ல மனுஷனா, பிள்ளைகளுக்கு நல்ல அப்பாவா, என் பொண்டாட்டிக்கு ஒரு நல்ல புருஷனா வாழணும்னு நினைக்கிறேன்.

தயவுசெஞ்சு உள்ளே போ... இங்க இருக்கிறவங்களும் உன்னை மாதிரி ரத்தமும் சதையுமாவே பிறந்த நல்ல மனுஷங்கதான்," என்று ஒரு தீர்க்கமான முடிவோடு கூறிவிட்டு, அவன் வண்டியை சீறிப்பாய செய்து அங்கிருந்து கிளம்பினான்.

கலை அந்த இடத்திலேயே நிலைகுலைந்து அமர்ந்து கதறி அழுதார். அவர் வாய்விட்டு அழும் சத்தம் அந்த அமைதியான சூழலையே உலுக்கியது. அவர் கதறுவதைக் கேட்டு, காப்பகத்தில் இருந்த அனைவரும் மெல்ல வெளியே வந்தனர்.

"முதல் நாள் அப்படித்தான் இருக்கும்... அப்புறம் பழகிடும்," என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டு கலைந்து செல்ல, கலைக்கு அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் நெஞ்சை ஈட்டியால் அழுத்துவது போல் இருந்தது.

ஸ்ரீராம் நேராக காவல் நிலையம் சென்றான். அங்கே நடந்த உண்மைகளைத் விவரித்துவிட்டு, ஒரு புகாரை எழுதிக் கொடுத்தவன், அடுத்த நொடி வேறு எங்கேயும் வண்டியை நிறுத்தவில்லை. அவன் இலக்கு ரதி மட்டுமே!

ரதி, பிரபாகரன் விட்டுச் சென்ற அதே இடத்தில், ஒரு அசைவற்ற சிலையென அப்படியே அமர்ந்திருந்தாள்.

உள்ளுக்குள் ஒவ்வொரு நொடியும் பயம் விஷமாக ஏறியது. தொண்டை வரை துக்கம் அடைக்க, மூச்சு விடுவதற்கே சிரமப்பட்டாள்.

அந்த அதீத பயத்தின் உச்சத்தில் அவளுக்கு மயக்கமே வருவது போன்ற உணர்வு ஏற்பட்டது. தன் முன்னே உயிரையே சுமந்து ஓடி வரும் கணவனின் முகம் கூட அவளுக்கு மங்கலாகத் தெரியவில்லை.

தன் மனைவியின் நிலை குலைந்து போய் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும், ஸ்ரீராமின் உள்ளம் சுக்குநூறாக உருகியது.

"என்னை நம்பவில்லையா இவள்?" என்ற ஆதங்கம் ஒரு துளி அவன் மனதில் எழ, அடுத்த கணமே,

" அவளுக்கு முழுமையாக நம்பிக்கை தரும் அளவுக்கு இன்னும் நான் உன்னுடன் வாழவே இல்லையே ராதி," என்று அவன் மனசாட்சி அவனுக்குப் பாடம் எடுத்தது.

ஐஸ்வர்யாவுடன் விளையாடிக்கொண்டிருந்த பிள்ளைகள், தன் தகப்பனைத் தூரத்தில் கண்டதும் குதூகலத்தில் எட்டிப் பார்த்துச் சந்தோஷப்பட்டனர்.

இருவரும் மேலிருந்து இறக்கு ஓடி வரும் முன்னே, அவர்களைத் தன் கையால் தடுத்தவன்,

"அங்கே விளையாடுங்க செல்லம்... அப்பா இதோ வரேன்," என்று சைகையில் சொல்லிவிட்டு, தள்ளாடும் கால்களுடன் தன் மனைவியை நெருங்கினான்.

ஜன்னல் வழியே இந்த உருக்கமான காட்சியைக் கண்ட பிரபாகரன், ஒரு பெரும் புத்துணர்வு பெற்றார்.

ஸ்ரீராமின் வருகை அவன் மனபாரத்தைக் குறைத்தது. அமைதியாக அவ்விடத்திலிருந்து நகர்ந்து, யாருக்கும் தெரியாமல் கண்ணீரைத் துடைத்தபடி உள்ளே சென்றான்.

ரேணுகா பரபரப்பாக இருக்க, அவளிடம் பிரபாகரன் சொன்னான்,

"ரேணு... ஸ்ரீராம் வந்துட்டான். இனி அதிகமா எதுவும் சமைக்காதே. இப்போ உடனே குழந்தைகளையும் ரதியையும் அழைச்சிட்டு அவன் கிளம்பிடுவான்."

"ஏங்க... ஒரு வேளை சாப்பிட்டுப் போக மாட்டாங்களா?" என்று ரேணுகா கேட்க,

"ரதி இப்போ இருக்கிற மனநிலைமைக்கு, அவன் ஒரு நிமிஷம் கூட இங்கிருக்க நினைக்க மாட்டான். அவளைத் தேற்ற உடனே கிளம்பிடுவான்," என்றார் ஸ்ரீராமின் மனதை ஆழமாகத் தெரிந்தவர் போல.

ஸ்ரீராம் அவள் அருகில் வந்து நின்றான். அவள் முன்பு அப்படியே மண்டியிட்டு அமர்ந்தான். கால் நீட்டி நிலைகுலைந்து அமர்ந்திருந்தவளின் பாதத்தை மென்மையாக வருடி பிடித்தான்.

அந்தத் தீண்டலில், அதுவரை உயிரற்று கிடந்த ஒரு சிற்பம் உயிர் பெற்றது போல் திடுக்கிட்டு கண் விழித்தாள் ரதி. இமை சிமிட்டிப் பார்த்தவள் கண்களிலிருந்து அருவியென கண்ணீர் கொட்டியது.

எதிரே நிற்பது தன் கணவன் தான் என்று தெரிந்த மறுநொடி, மின்னலாய் பாய்ந்து அவனைத் தழுவி, மரணப் பிடியில் சிக்கியவன் உயிர் கயிற்றைப் பிடிப்பது போல இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.

ஸ்ரீராம் இதை எதிர்பார்க்கவில்லை என்றாலும், அவள் தன் மீது வைத்திருக்கும் பிடிவாதமான காதலையும் ஏக்கத்தையும் உணர்ந்தான்.

அவளை அப்படியே அள்ளித் தூக்கியபடி எழுந்தவன், அவளது விலா எலும்புகள் நொறுங்கிப் போகும் அளவுக்கு அவளைத் தன்னுள் புதைத்துக் கொண்டான்.

அந்த இறுக்கமே மௌனமாகச் சொன்னது அவன் அவளை எவ்வளவு ஆழமாக நேசிக்கிறான் என்று! அவளின் ஓயாத கண்ணீர் சொன்னது —அவள் அவனை எந்த அளவுக்குக் காதலிக்கிறாள் என்று! இருவரின் காதலும் ஆத்மார்த்தமானது.

கூடவே இருந்து வாழ்ந்து அனுபவிக்கும் காதலை விட, ஒருவரை ஒருவர் இழந்து விடுவோமோ என்ற பயத்தில் தூரம் நின்று காதலிக்கும் காதலுக்கு வலியும் அதிகம், ஏக்கமும் அதிகம்!

"நீங்க வர மாட்டீங்கன்னு நினைச்சேன்..." என்று திக்கித் திணறி, நெஞ்சை அடைக்கும் அழுகையோடு அவள் கூறினாள்.

"உங்களை விட்டுட்டு இனி நான் வாழவே மாட்டேன் ரதி," இது ஒன்றுதான் அவன் கொடுத்த ஒற்றைப் பதில்.

அவன் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டவளின் உடல் கதகதப்பில், அந்த ஆண் மகனின் மனமும் இத்தனை கால பாரம் குறைந்து நொறுங்கிப் போனது.

மனைவியைப் பொறுமையாகக் கீழே இறக்கிவிட்டவன், தன் இரு கைகளுக்குள் அவள் முகத்தைத் தாங்கிப் பிடித்து, அவள் நெற்றியில் ஒரு யுக காலத்து அன்பை அந்த முத்தத்தில் பதித்தான்.

"ரதி... நான் உயிரோடு இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் அது உனக்கு மட்டுமே சொந்தமானது. என் வாழ்க்கையில என்னைப் பெத்தவங்களும் சரி, நான் பெத்தவங்களும் சரி... உனக்கு அப்புறம் தான், எல்லாமே இரண்டாவது பட்சம் தான்.

இத்தனை காலம் நாம் இழந்த வாழ்க்கையை இனிமேல் சந்தோஷமா வாழணும். உன்னை விட்டுட்டு எங்கேயும் போக மாட்டேன், குழந்தைகளை விட்டுட்டு எங்கேயும் போக மாட்டேன், யாரு கூடவும் போக மாட்டேன். மனசார என்னை நம்பு ரதி. ஒருவேளை அப்படி நான் உன்னை விட்டுப் போறேன்னா, அது வெறும் உடலால மட்டும் தான் இருக்கும்; அது என் இறுதி நிமிஷமா இருக்கும்!"

அவன் வார்த்தைகளில் கரைந்து, கண்ணீரோடு நின்றிருந்தவள், அவன் சொன்ன அந்த 'இறுதி நிமிஷம்' என்ற வார்த்தையைக் கேட்டதும் அதிர்ச்சியில் சிவந்த விழிகளைத் திறந்தாள்.

"உங்களுக்கு முன்னாடி நான் போயிடணும்... எனக்குப் பின்னாடி தான் நீங்க வரணும். அதுவரைக்கும் நீங்க, நான், நம்ம குழந்தைகள்னு எல்லாரும் சந்தோஷமா வாழணும். அது மட்டும் போதும் எனக்கு," என்றபடி அவன் நெஞ்சில் சொல்லொண்ணா காதலோடு மீண்டும் சாய்ந்து கொண்டாள்.

தாய் தந்தையரின் அந்தப் பேரன்பை கண்ட குழந்தைகள் இருவரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தனர். பிள்ளைகளின் சத்தம் கேட்டு ஸ்ரீராம் நிமிர்ந்து பார்த்தான்.

"கீழே வாங்கடா செல்லம்," என்று அவன் குரல் கொடுக்க, சீதா ஐஸ்வர்யாவைத் தூக்கிக்கொண்டு ஓடி வந்தாள்.

அதற்குள் ரேணுகா ஓடி வந்து, "கீழே விழுந்துடப் போறாடா... பாப்பாவை என்கிட்ட கொடு," என்று பிள்ளையை வாங்கிக் கொண்டார்.

மகா, சீதா என இரு பிள்ளைகளும் தங்களின் தாய் தந்தையைச் சுற்றி அணைத்தபடி நிற்க, அந்த முழுக் குடும்பத்தையும் பார்க்கவே அத்தனை அழகாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.

அந்த உணர்ச்சிகரமான காட்சியைக் காண இரு கண்கள் போதவில்லை. ராதை வாழ்வு தழைத்ததை எண்ணி, மனநிறைவுடன் பிரபாகரன் தன் ஆனந்தக் கண்ணீரைத் துடைத்து கொண்டான்.

மிகவும் சந்தோஷமான, ஆத்மார்த்தமான தருணம் அது.

தன்னை அறியாமல், ஒரு தவிப்போடு அணைத்துக்கொண்ட மனைவியின் அந்த ஸ்பரிசத்தில் ஸ்ரீராம் அப்படியே உறைந்து போனான்.

அவளை அப்படியே அள்ளித் தூக்கிக்கொண்டு, இந்த உலகமே அதிரும் படி ஆனந்தக் கூத்தாட வேண்டும் என்று அவன் உள்ளம் துடித்தது.

ஆனால், சுற்றிலும் பிள்ளைகளும் உறவினர்களும் சூழ்ந்திருக்கும் அந்தச் சூழலில், பொங்கி வரும் தன் காதலையும், தறிகெட்டு ஓடும் மனதையும் கட்டுப்படுத்த முடியாமல் அவன் மூச்சுத் திணறினான்.

அவளின் அந்த இறுக்கமான அணைப்பில், காலம் காலமாக உறைந்து கிடந்த அவனது உணர்வுகள் எரிமலைக் குழம்பாய் மேலோங்கின.

ஒரு பிணத்தைப் போல உணர்ச்சியற்றுப் போயிருந்த அவனது உடல், திடீரென உயிர் பெற்று எழுந்தது போன்ற ஒரு வேகம்!

ரத்த நாளங்களில் ஹார்மோன்கள் கட்டுக்கடங்காமல் ஓட, உள்ளுக்குள் எழுந்த அந்தப் பேரலைகளை ஒருவாறு வசப்படுத்தித் தன்னை நிலை நிறுத்திக் கொண்டான்.

"ரதி... வீட்டுக்குப் போகலாமா?" என்று கரகரப்பான குரலில் கேட்டான். அவளோ அவன் பிடியை விட்டு விலகவே மனமில்லாமல், அப்படியே ஒட்டிக்கொண்டு,

"ம்ம்..." என்று மட்டும் மெல்லத் தலையசைத்தாள்.

தன்னைப் பார்த்ததும் தன் மனைவி சிலிர்த்துப் போன அந்த விநாடி, ஸ்ரீராமிற்குள் ஏதோ ஒரு மின்னல் வெட்டியது.

அவன் மெல்லத் திரும்பிப் பார்க்க, அங்கே பிரபாகரன் அவர்கள் இருவரையும் ஒருவிதத் திருப்தியோடு, அகம் நிறைந்த மகிழ்ச்சியோடும் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

பிரபாகரன் மட்டும் அங்கே அனாதையாக, தனித்து நிற்பது ஸ்ரீராமிற்குப் பெரும் வேதனையாக இருந்தது.

ஆனால், கடைசி வரை திருந்தாத தன் தங்கை அலரிடம், பிரபாகரன் போன்ற ஒரு நல்லவன் வாழவே முடியாது என்பது கசப்பான உண்மை. "விதி யாரை விட்டது?" என்று அவன் தன்னைத் தானே தேற்றிக் கொண்டான்.

"நாங்க வீட்டுக்குப் போறோம்..." என்று ஶ்ரீராம் தன் இதழ்களை சுழித்துக் கூற, பிரபாகரன் சத்தமில்லாமல் கண்ணசைத்து சம்மதம் சொன்னான்.

அந்த ஒரு நொடி, அவர்கள் ஒரு முழுமையான குடும்பமாக நிற்பதைப் பார்த்த போது, பிரபாகரனுக்குள் ஏதோ ஒரு கோடி நம்பிக்கைகள் துளிர்விட்டன. தான் இழந்த வாழ்வின் ரணங்களை விட, இவர்கள் இணைந்த வாழ்வின் சந்தோஷமே அவன் மனதில் உயர்ந்து நின்றது.

ஸ்ரீராம் தன் குழந்தைகளையும் மனைவியையும் வண்டியில் ஏற்றினான்.

பிள்ளைகள் இருவரையும் முன்னால் அமர வைத்துவிட்டு, ரதியைத் தன்னைப் பார்த்தபடி பின்னால் அமரச் சொன்னான். ஆனால் அவளோ, அவனுக்குப் பேரதிர்ச்சியும் பெரும் இன்பமும் கொடுக்கும் வகையில், அவனது இடுப்பை இறுக்கக் கட்டிக்கொண்டு, அவன் முதுகில் தன் முகம் சாய்த்து சாய்ந்து கொண்டாள்.

பிரபாகரன் தன் விழிகளை நம்ப முடியாமல் பார்த்தான். வேடிக்கைப் பார்க்கும் இவனுக்கே இந்தத் திகைப்பு என்றால், இத்தனை காலம் அவளது அன்பிற்காக ஏங்கித் தவித்த ஸ்ரீராமிற்கு அது எப்படியிருக்கும்? அவன் அப்படியே உறைந்து போனான்.

"எப்போடா வீடு வரும்?" என்று அவன் மனம் பித்துப் பிடித்துத் தவித்தது.

ஒரு பக்கம் மனைவியின் மூச்சுக் காற்று முதுகுத் தண்டைச் சிலிர்க்க வைக்க, இன்னொரு பக்கம் சாலையில் கவனத்தைத் திருப்ப அவன் பெரும் போராட்டமே நடத்தினான்.

ஒரு கண் கண்ணாடியில் தெரியும் ரதியையும், இன்னொரு கண் சாலையையும் மாறி மாறிப் பார்ப்பதே அவனுக்கு ஒரு பெரிய யுத்தமாக இருந்தது.

தொடரும்....
 
கலையோட கதறல்ல தான் ராதையோட நீதி கிடைச்சிருக்கு.
 
Last edited:

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top