பாகம் - 18
இடம்: அர்ஜூன் & அமுதினி வீடு
நேரம்: பார்க்கிற அளவுக்கு எங்களுக்கு நேரம் இல்லை.
‘பயத்தை போக்கனும்ன்னா, அந்த பிரச்சனையை எதிர்கொள்வதுதான் சரியான வழி’ என்று கமல், தன்னோட படத்தில் ஒரு வசனம் பேசுவார்.
அது எந்தளவு உண்மை என்பது அர்ஜூனிடம் மனம் விட்டுப் பேசும் போது புரிந்தது. காதலில் மட்டுமல்ல, நட்பு, சகோதரத்துவம், உடன் பணிபுரிபவர்கள்ன்னு எல்லோரிடமும் ‘நாம என்ன எதிர்பார்க்கிறோம்ன்னு சொன்னால் அதுக்கு ஏற்றார்போல் அவங்க நடந்துக்கப் போறாங்க. முடியாதுன்னா, அதையும் அவங்க சொல்லிடப் போறாங்க.
அதைவிட்டு, எதையும் வாய்விட்டு சொல்லாமல், என்னைப் புரிஞ்சுக்கலைன்னு வருத்தப்பட்டா எப்படி? நம்ம மனசில் என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க அவங்களுக்கு மூன்றாவது கண் இல்லையே?
என்னைத் தவிர்ப்பதற்காகத்தான் அர்ஜூன் பேசாமல் இருக்கிறான் என்று நான் நினைக்க, அவனோ காதல் படுத்தும் பாட்டில் சிக்கித் தவித்திருக்கிறான்.
‘’இதன் பிறகு, எதாக இருந்தாலும் சண்டை போடுங்க, திட்டுங்க, ஆனா இப்படிப் பேசாமல் மட்டும் இருக்காதீங்க’’ என்றேன்.
‘’அதான் இத்தனை சாரி கேட்டுட்டேனே, மறுபடியும் ஆரம்பிக்காதே’ என்றவன்
‘’நீ மட்டும் எங்கம்மாவை எப்படித் தெரியும்ன்னு சொல்லாமல், இப்ப வரைக்கும் சுத்த விடற’’ என்று செல்லமாக கோபித்துக் கொண்டான்.
‘’அப்ப கடைசி வரைக்கும் உங்க மூளையை உபயோகப்படுத்தப் போவதில்லையா’’ என்று கேலி செய்தும் அவன் பிடிவாதமாய் நின்றான்.
‘’சரி.. உங்கம்மாவுக்கு போன் பண்ணி, அர்ஜூனனின் காதலி யாருன்னு தெரியுமான்னு கேளுங்க’’ என்றேன்.
உடனே அவங்கம்மாவை போனில் அழைத்து, பேசிவிட்டு வைத்தவன், ‘’அவங்க பிரெண்டுன்னு சொல்றாங்க’’ என்றான்.
சிரிப்பை அடக்கிய படி நிற்கும் என்னைப் பார்த்ததும் அந்த உபயோகிக்காத மூளையில் பல்பு எரிந்தது போல!
‘’ஏய் அது நீதான! அர்ஜூனனின் காதலி, பெயரே அழகா இருக்கு, எப்படி அவங்களை பிரெண்ட் பிடிச்ச?‘’ என்றான் ஆர்வம் மின்ன.
‘’கடவுளே, உங்களுக்கு கடைசி வரை மூளை வேலை செய்யாது போல, இந்த அமுதினியோட வாழ்க்கை பரிதாபத்துக்குரியதுதான்’’ என்று சொல்லவும் முறைத்தான்.
‘’நானும் உங்கம்மாவும் இன்ஸ்டாகிராம் பிரெண்ட்ஸ், உங்கம்மா வேலைப் பார்க்கிற ஸ்கூல் பேரை வைச்சு, தேடிப் புடிச்சு பாலோ பண்ண ஆரம்பிச்சேன்.
ஆமா, உங்கம்மாவுக்கு வேற வேலையே கிடையாதா? காலையில் எந்திரிச்சதும், செடியில் பூத்த பூவு, பறக்கற கோழின்னு எல்லாத்தையும் போட்டோ எடுத்துப் போடறது. ஸ்கூல்க்குப் போனதும், பசங்க பண்ற குறும்புகளை எழுதறது, சாய்ந்திரம் வீட்டுக்கு வந்ததும், மறுபடியும் போட்டோ போடறதுக்காகவே சோறாக்கறதுன்னு சோசியல் மீடியாலதான் வாழறாங்க.
நானும் சூப்பர் ஆன்டி, உங்க கலைத்திறமைக்கு எங்கியோ இருக்க வேண்டியவங்க நீங்க, பார்க்க 30பிளஸ் மாதிரி இருக்கீங்கன்னு ஏகப்பட்ட பிட்டு தூவிவிட்டேனா? அதில் மயங்கி என் கூட பேச ஆரம்பிச்சாங்க. அப்படியே பிரெண்ட்ஸ் ஆகிட்டோம்’’ என்றேன்.
‘’அடிப்பாவி, நீ பிராடுன்னு தெரியும், ஆனா இவ்வளவு பெரிய பிராடுன்னு தெரியாது. ஆமா எங்கம்மாவுக்கு நீ யாருன்னு தெரியுமா?’’ என்றான் உற்சாகம் மின்ன.
‘’ இல்லை, உங்களைப் பத்தி ஒருநாளும் நான் கேட்டதில்லை. ஆனா உங்க அம்மா அப்பா பற்றி, அவங்களுக்கு புடிச்சது புடிக்காதது பற்றி நிறைய தெரிஞ்சுக்கிட்டேன்’’ என்றேன்.
‘’அப்ப மாமியார் மெச்சும் மருமகள்ன்னு பெயர் வாங்க, பலதரப்பட்ட உள்வேலைகள் பார்த்திருக்கேன்னு சொல்லு’; என்றபடி என் தலையில் குட்டினான்.
மனம் நிறைந்த மகிழ்வுடன் வீடு திரும்பினேன்.
அதன் பின் வந்த சில நாட்கள் இறக்கைக் கட்டிப் பறந்தன. இன்னும் ஓரிரு மாதத்தில் மலரக்கா கணவர் வந்து கடையின் பொறுப்பேற்றபின், நான் ஊருக்கு கிளம்பவேண்டியிருக்கும்.
அதன் பிறகு, அர்ஜூனை எப்படிப் பார்ப்பது, எங்களைப் பற்றி வீட்டில் எப்படிச் சொல்வது? அர்ஜூன் இங்கேயே நிரந்தரமாகத் தங்கப் போகிறானா? இல்லை சில வருடங்களில் ஊர் திரும்பப் போகிறானா? என்று பல குழப்பங்கள் என்னுள் ஓடினாலும் எதைப் பற்றியும் அவனிடம் நான் வாய்திறக்கவில்லை.
முதலில் நான் சொல்வதற்கு நிறைய இருக்கிறது. அவன்தான் சந்தர்ப்பம் தராமல் முரண்டு பிடிக்கிறான். எப்ப பேச நினைத்தாலும் எதாவது சொல்லி என் வார்த்தைகளுக்கு தீ வைக்கிறான்.
யோசிக்க யோசிக்க மண்டை சூடாவது போலிருந்தது.
ஒருவழியாக, மலரக்கா வீட்டு மாமா லண்டன் வருவதற்காக டிக்கெட் போட்டதும், நான் ஊரிலிருக்கும் என் குடும்பத்துக்காக ஷாப்பிங் செய்ய ஆரம்பித்தேன். அப்படி ஒரு நாள் மாலைவேளை மீனாக்காவுடன் ஷாப்பிங் மால் சென்றபோது, உடனே என் வீட்டிற்கு வரச் சொல்லி போன் செய்தான் அர்ஜூன்.
‘’இப்பத்தான் மாலுக்கு வந்தோம், என்ன விசயம்ன்னு சொல்லுங்க’’ என்று கேட்டதற்கு பதில் ஏதும் சொல்லாமல் ‘’உன்னை உடனே பார்த்தாகனும், வீட்டுக்கு வா. அங்கவைச்சு பேசறதுதான் சரி’’ என்றான்.
அர்ஜூனின் இந்த உறுமல் குரல், எனக்கு புதிது. குழம்பிப் போன என் முகத்தைப் பார்த்த மீனாக்கா, ‘’எதும் அவசர வேலையா அந்த தம்பி கூப்பிடும். நீ போம்மா, நாம இன்னோரு நாள் வரலாம்’’ என்றபடி என்னை கேப் புடித்து அனுப்பி வைத்தார்.
நான் வீட்டிற்கு வரும் முன்னே, வாசலருகே எனக்காக காத்திருந்தான் அவன்.
‘’என்ன ஏதும் முக்கியமான விசயமா’’ என்று நான் கேட்டதை காதில் வாங்கிக்கொள்ளாமல், கைப்பிடித்து இழுத்து சோபாவில் உட்கார வைத்துவிட்டு,
‘’உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா? ‘’ என்று கிட்டத்தட்ட உறுமினான்.
‘’அது… அது வந்து’’
‘’இழுக்காத, என்ன நடந்ததுன்னு இன்னிக்கு எனக்கு சொல்ற’’ என்றான்
‘’அது, அது வந்து… சாரி என்னை மன்னிச்சிடுங்க, சும்மா விளையாட்டுக்குத்தான் அன்னிக்கு அப்படி சொன்னேன். ரகுவரன் ங்கிற பேரில் எனக்கு யாரையும் தெரியாது’’ என்று நான் சொல்லி முடிக்கும் முன் அவன் கை என் கன்னத்தில் பதிந்திருந்தது.
காதல் வளரும்