ஆம்! இருந்த உறவு கிடையாது, இருக்கும் உறவு! இன்றுமே அவரின் அய்யா அவருக்கு மனதளவில் நெருக்கம் தான்.
ஏழு வயதில் அப்பா அம்மா இன்றி நின்ற போது கை பிடித்து இந்த வீட்டினுள் அழைத்து வந்தார். அங்கே வந்த பிறகு உணவு என்ற ஒன்றிற்கு அவன் தவித்ததே கிடையாது. அம்மா அப்பாவுடன் இருந்த போது கூட கஷ்ட ஜீவனம் தான். மதியம் பள்ளியில் உண்டு கொள்ள, காலை, இரவு உணவு அங்கே சூடாக, எல்லோருக்கும் முன் அவனுக்கு வந்து விடும். அதுவும் அவரின் பிள்ளைகள் பொதுவாய் கொறிக்க, அவன் நன்கு உண்பான்.
நாச்சி அவனை சமையலறை ஓரத்தில் உட்கார வைத்து உணவு கொடுத்து விடுவார். அவன் உண்ணும் அளவு அவருக்கு மட்டுமே தெரியும்.
மற்றபடி அங்கே சொல்லும் வேலைகள் செய்து கொண்டு பெரியவானான். ராயர் விடுமுறை நாட்களில் அவரோடே வைத்துக் கொள்வார் அவரின் வேலைகளுக்கு துணையாக.
இந்த காதல் அது ஏன் அவருக்கு வந்தது என்று இதுவரை தெரியாது. நிச்சயம் ராஜலக்ஷ்மியை பிரித்து அழைத்துக் கொண்டு போகும் எண்ணமெல்லாம் இல்லை. ராயரின் குடும்ப கௌரவம் அவர்களை விட அன்பழகனுக்கு மிக முக்கியம்.
சுவாமிநாதனும் தமிழ்செல்வனும் அடித்து விரட்டியிராவிட்டால், அவராய் இது நிறைவேறாது என்று புரிந்து எங்காவது சென்றிருப்பார், நிச்சயம் வேறு நினைத்து இருக்க மாட்டார்.
அவர் அங்கே வந்த போதும் ராஜலக்ஷ்மிக்கு திருமணமாகி இருக்கக் கூடும் என்று நினைத்து, ராயரையும் நாச்சியையும் பார்த்து தான் ராணுவத்தில் சேர்ந்து விட்டதை சொல்லிப் போக தான் ஊருக்கே வந்தார்.
அவர்கள் அடித்து விரட்டியிருந்தாலும் அவரின் பாசம் அந்த வீட்டினோடு குறையவில்லை. நான் செய்ததும் தப்பு தானே என்ற எண்ணம் கூட.
ஆனால் அங்கே ராஜியை அப்படி பார்த்ததும் அதுவும் அவள் கண் விழித்ததும் “செத்து போய் உங்க கிட்ட வந்துட்டேனா” என்று கேட்டதும், “பைத்தியக்காரி இவள்” என்று தோன்றிய போதும் அந்த நேரம் வேறு செய்ய இயலாமல் அவளை அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.
சென்று ஒரு வாரத்திலேயே தொலைபேசி மூலமாக ராயரை தொடர்பு கொண்டார். அவரோ இந்த பக்கம் கூட அவர்கள் வந்து விடக் கூடாது என்று விட்டார்.
மகள் மேல் இருந்த பாசத்தில் சொன்னாரோ, இல்லை கோபத்தில் சொன்னாரோ அவருக்கே வெளிச்சம்! அதுவும் அன்பழகனுக்கு ஊரில் இவ்வளவு கலவரம் நடக்கிறது என்று இம்மியளவும் தெரியாது. ஒரு வேளை வந்தால் ஆத்மனை ஏதாவது செய்து விடக் கூடும் என்று கூட வரவிடாமல் இருந்திருக்கலாம்.
சுவாமிநாதன் பிரச்சனைக்கு தீர்வு சொல்லும் பெரிய மனிதர் தான். ஆனால் பிரச்சனைக்குள் இறங்கும் மனிதர் கிடையாது. ஆனால் அன்பழகன் அப்படி கிடையாது இறங்கி அதனுள் புகுந்து வேலை செய்பவன், சொல்லப் போனால் ராயரின் மூளை அவன். அதனாலும் கூட ராயர் தன் மகளின் நல்வாழ்வு பொருட்டு ஊருக்கு வரவிடாமல் செய்திருக்கலாம்.
அவ்வப் போது இவரின் ராணுவ சிநேகிதன் ஒருவன் மூலமாக ராயருக்கு தகவல் அனுப்புவார், அவரும் கேட்டுக் கொள்வார், குழந்தைகள் பிறந்தது அவரின் முன்னேற்றம் எல்லாம் தெரியும். யாரிடமும் பகிர்ந்திராத பெருமையும் கூட, ஏன் நாச்சியிடம் கூட சொன்னதில்லை. ஆனால் ஊருக்கு வருவதற்கு அனுமதி கொடுக்கவேயில்லை.
அவருக்கே அவரின் காலம் முடியப் போகிறது என்று தெரிந்ததோ என்னவோ அவராய் அன்பழகனை வரச் சொல்ல, அவரும் மனைவி, மகள், மகன் மருமகளோடு பேரனோடு வந்தார். அப்போது பேத்தி பிறக்கவில்லை. வீட்டில் அனைவரும் முகம் திருப்ப, ராயர் மகளிடம் கூட தனிமையில் பேசவில்லை. அன்பழகனிடம் பேசினார்.
ராயரின் உயிர் இவர்களுக்காக காத்திருந்ததோ என்னவோ?
“என்னை நீங்க மன்னிக்கவே மாட்டீங்களா? என்னை பார்க்க வரச் சொல்ல இவ்வளவு நாளா?” என்று அன்பழகன் கேட்க,
“என் வீட்டு லட்சுமியை நீ கூட்டிட்டு போயிட்ட, நான் மட்டும்னா மறந்து கூப்பிட்டிருப்பேன். நமக்குள்ள மன்னிப்பு வார்த்தையெல்லாம் தேவையில்லை அன்பு. ஆனா இவங்க எல்லோரும் கஷ்டப்பட்டாங்க, படறாங்க. இதுல உன்னை எப்படி கூப்பிட முடியும்? இவங்களையும் நான் பார்க்கணுமில்லை” என்று பேசினார்.
“நீங்க கூப்பிட்டு இருக்கணும் ஐயா, நான் இருந்திருந்தா எதுக்கு இங்க எல்லோருக்கும் கஷ்டம் வரப் போகுது, அவன் தலையை சீவி நான் உங்க காலுல வெச்சிருக்க மாட்டேன்”
மென்னகை புரிந்தவர் “அதுக்கு தான் உன்னை வரவிடலை. என்ன எல்லோரையும் கரை சேர்த்துட்டோம், பொண்ணுங்களும் பெரிய குடும்பம் வசதிகள்ன்னு நல்லா இருக்காங்க, பசங்களும் நல்ல வேலை நல்ல சம்பாத்தியம் வெளிநாட்டு வாழ்க்கைன்னு இருக்காங்க, இன்னும் ஒருத்தன் இருக்கான், அவனுக்கு தான் நான் எதுவுமே செய்யாம போகப் போறேன், இனி விவசாயம் வாய்ப்பில்லை, அவனுக்கு படிப்புமில்லை, அது தான் கவலையா இருக்கு” என்று மனக் குறையை சொன்னார்.
அவர் மனக்குறையை தான் சொன்னார் நிச்சயம் அங்கையை பெண் கேட்கவில்லை. அவரின் செல்ல பேரன் ராஜராஜன். ஆசை ஆசையாய் சோழ மன்னனின் பெயரை வைத்தார். அன்பழகன் தான் “என் வீட்டு லக்ஷ்மியை உங்க பேரனுக்கு கல்யாணம் பண்ணி வைங்க ஐயா, உங்க வீடு பழைய படி தழைஞ்சிடும்” என்று சொல்ல,
அவருக்கு அப்போதும் யோசனை தான்!
“இவன் படிக்கலை, நம்ம புள்ள படிச்சிருக்கு, வாழ்க்கை முறையும் வேற, இவங்களுக்குள்ள ஒத்து வருமா?” என்று யோசித்த போது, நிச்சயம் ஒத்து வரும் என்று சொன்னார். இதற்கு ராஜராஜனை அப்போது கவனித்து கூடப் பார்த்திருக்கவில்லை.
ராயர் தான் “உன்னோட ஆசைன்னு தெரிஞ்சா யாரும் ஒத்துக்க மாட்டாங்க, நான் என்னோடதுன்னு சொல்றேன்” என்று சொல்லிவிட
தாத்தாவினது என்று சொன்னால் தன் மகள் ஒத்துக் கொள்ள மாட்டாள் என்று மகளிடம் உண்மை சொல்லி சம்மதம் கேட்டார்.
அந்த நேரத்தில் “சரி” என்று சொன்னவளுக்கு அதன் பிறகு பிடிக்கவேயில்லை.
ராஜராஜன் வீட்டிலும் கடும் எதிர்ப்பு. இங்கே இவர்களின் வீட்டில் ராஜலக்ஷ்மி ஒத்துக் கொள்ளவேயில்லை, மகளை அழைத்துக் கொண்டு ஊருக்கு கிளம்ப முற்பட, அன்பழகனுக்கும் அவருக்கு கடும் வாக்குவாதம். அதனை கொண்டு இந்த இரண்டு வருடமாய் பிரிவு.
ராஜராஜன் என்ற ஒருவன் தன் மகளுக்கு பொருத்தமாய் இருப்பானா என்று அந்த சில மணிநேரங்கள் யோசிக்கவில்லை. அதன்பின்பு இப்போது வரை, இனி யோசித்தாலும் பிரயோஜனமில்லை என்று விட்டுவிட்டார்.
திருமணம் முடிந்த சில மணி நேரங்களில் ராயர் தவறி விட, இப்படியாக தான் அந்த திருமணம் நடந்தது.
இரண்டு நாட்களுக்கு முன் விடியற்காலையிலேயே மனோ அழைத்து ராஜராஜன் சொல்லியதை எல்லாம் சொல்லியிருக்க, மங்கை அப்படி ஒரு அழுகை அழுதிருக்க , என்னவோ ராஜலக்ஷ்மியின் நினைவும் அதிகமிருக்க வந்திருந்தார்.
அவர்கள் கிளம்புவதை மனோ சொல்லவில்லை .. அவர் வருவார் என்று அவன் நினைக்கவில்லை.
இப்போது அந்த நிலத்தை தான் பார்த்திருந்தார். இப்படி தண்ணீர் நிறுத்தி அந்த நிலம், அதனால் விவசாயமின்றி வறண்டு விட்டதை இன்னும் கூட ஜீரணிக்க முடியவில்லை. பார்வையை ஓட்டினார், அங்கிருந்த சிறிய அளவிலான சிவன் கோவில் தெரிந்தது.
எவ்வளவு புத்திசாலி அந்த ஆத்மன் வேறு எதுவாக இருந்தாலும் ராயர் தகர்த்திருப்பார், சிவனை கொண்டு வந்து நடுவில் விட்டு விட்டான். அவர் சிறந்த சிவ பக்தர். அதனால் சிவன் கோவில் இடிப்பதற்கு அவர் எப்படி ஒத்துக் கொள்வார்.
இப்போது தான் அவர் இல்லையே..
மனோ சொல்லாமல் கொள்ளாமல் ஊருக்கு சென்றிருக்கிறான் என்றால் ஏதாவது நிச்சயம் செய்வான் என்று தெரியும், பார்ப்போம் என்று நினைத்தவர்,
அங்கிருந்த பசுமையின் புறம் பார்வையை திருப்ப அங்கே ஒரு இடத்தினில் கூட்டமாய் ஆட்கள்,
“நான் என்ன தவறு செய்தேன்? தனி மனித தவறுகள் ஊர் கலவரமாய் மாறியிருக்க, நான் ஏன் நிற்க வேண்டும், நான் ராயரின் வளர்ப்பு” என்று தனக்குள் சொன்னவர் வேகமாய் தண்ணீர் தொட்டியில் இருந்து இறங்கி வீட்டினுள் வந்து,
“அம்மு நான் போய் என்னன்னு பார்த்துட்டு வர்றேன்” என்று சொல்லிச் செல்ல,
“பா, நீங்க வர வேண்டாம் சொன்னாங்க”
“மேஜர் ஜெனரல் என் அப்பான்னு பெருமையா சொல்வ, நான் இந்த பிரச்னையை தவிர்த்து வீட்ல இருக்கணுமா?” என்று கேட்க,
“போங்கப்பா” என்று விட்டாள் அவள். ஆனாலும் மனது முழுக்க பயம். அடிதடி ஆகிவிடுமோ என்று. அவர் நடக்க கூட அவரின் பாதுகாப்பு வீரன் , அவனின் ஆயுதம் இப்போது கையினில் இல்லை.
சின்ன பிஸ்டல் தானே அவனின் உடையுனில் மறைந்திருக்க, அவர் நடக்க சற்று இடைவெளி விட்டு அவன். சிறிது தூர நடை ஆட்கள் கூடி இருக்கும் இடம் வந்து விட,
சுவாமிநாதன் பேசிக் கொண்டிருந்தார். “சரி செஞ்சிடலாம், பிரச்சனை வேண்டாம், நாமளா போக வேண்டாம்” இப்படியாக.
“எத்தனை நாள் விடறது. இவனுங்க நினைச்ச நேரத்துக்கு தண்ணியை நிறுத்துவானுங்களா, நீங்க ஊம்ன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க, அந்த பயலுவள வகுந்துடுறோம்”
“உங்க நிலமே தரிசா கிடைக்கு, எங்க கிட்ட விடுங்கய்யா” என்று சிலர் பேச, அன்பழகனை பார்த்ததும் அங்கே அப்படியே பேச்சு தடைபட்டது .
அது ஊர் எல்லை, கூட ஆண் பெண் என்று பேதமில்லாமல் ஒரு நூறு பேருக்கு மேல் இருப்பர். இவரை பார்த்ததும் அங்கே அப்படி ஒரு அமைதி. புது ஆட்களுக்கு தெரியாது பழைய ஆட்களுக்கு தெரியும் தானே. ஆங்காங்கே ஒரு சலசலப்பு இவர் யார் என்பது பற்றி.
சற்றும் யோசிக்கவில்லை ராஜராஜனின் அருகில் தான் வந்து நின்றார். இதுவரை அவருக்கும் ராஜராஜனுக்கு இடையில் பேச்சுக்கள் இருந்ததா என்று கூட ஞாபகமில்லை. இன்று அவன் வந்து “வாங்க” என்று சொல்லி பேசியது தான் அவரிடம் இணக்கமாய் பேசியது.
அவன் மரியாதையில்லாமல் பேசினால் கூட பொறுத்து தான் போவார். ராயரின் பேரன் கூடவே மகளின் கணவனும் அல்லவா.
அங்கே அப்பா கிளம்பவுமே, “பாட்டி நாமளும் போகலாம், நாமளும் போகலாம்” என்று நாச்சியை நொச்சி அங்கையும் கிளம்பியிருக்க, வாசுகியும் தில்லையும் அசையவில்லை. சுவாமிநாதனுக்கு அது பிடித்தமில்லை வீட்டு பெண்கள் பொதுவில் வருவது.
ஆனால் அங்கையை போக வேண்டாம் என்று அவர்கள் சொல்லவில்லை. அங்கே போய் எதுவும் பேசிவிடக் கூடாது என்று மட்டும் தில்லை சொன்னார்.
போலிஸ் ஸ்டேஷனில் அவள் பேசிய பேச்சை தான் ராஜராஜன் அம்மாவிடம் சொல்லியிருந்தானே.
இவர்கள் கூடி நிற்பதை பார்த்ததுமே ஆத்மனுக்கு செய்தி சென்று விட, அவரும் ஊர் எல்லைக்கு ஆட்களை திரட்டி வந்தார்.
அவரும் வர.. அங்கையும் வர.. இருவரும் எதிர் எதிர்,
அங்கே எல்லோரையும் விட முறைத்து நின்றது அவர்கள் இருவருமே!
ஆக்கமும் எழுத்தும்
மல்லிகா மணிவண்ணன்
Last edited: