வைரம் , “மாமாஆஆஆ” என அலறிவிட
“நீ சும்மா இரு…. உன்னால சரியான நேரத்துக்கு ஒரு புள்ளையைப் பெத்துக் கொடுக்க முடிஞ்சிருந்தா இந்த பயலைத் தத்தெடுக்க வேண்டியதா போயிருக்காது… இன்னிக்கு என் குடும்ப வாரிசு இந்த அப்பன் ஆத்தா பெயர் தெரியாத வெறும்பயல்கிட்ட அடிவாங்குமா….?” என விசம் பொதிந்த வார்த்தைகளை உமிழ, அதன் வீரியம் தாங்காத ராஜா,
“தாத்தா…. கோவத்தில கண்டபடி பேசாதீங்க… அவ்வளவுதான்..” எனக் கை நீட்டி எச்சரிக்க
“என்னடா கோவம்….. நான் நிஜத்தை தான் சொல்றேன்… நீ அநாதை தான்……… எந்த குலத்தில எவளுக்குப் பொறந்தியோ……. சீ…. என்னை தாத்தான்னு உன் வாயால இன்னொரு வாட்டி சொன்ன… தொலைச்சிருவேன் டா..”
தீபனோ தனது தவறை உணர்ந்தவன் தாத்தா அண்ணனை மோசமாகப் பேச முடிவதை தாங்காமல், அதுவும் அவன் பொருட்டு இப்படி பேசுவது பிடிக்காதவன் ,
”தாத்தா… தப்பு என் மேல… அவனை எதுவும் சொல்லாதிங்க.” என வக்காளத்து வாங்க,
“இப்படி இருக்கறதால தான் டா உன்னோட எல்லாத்தையும் அவன் பறிச்சிக்கிறான்…. இந்த வீட்டோட மூத்த பிள்ளை நீதான்.. அவன் இல்ல.. முதல்ல வாயை மூடிட்டு இரு…” எனத் தீபனைத் திட்டினார்.
ராஜ்நந்தனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை அவனால் கிரகிக்க முடியவில்லை. அவனால் முதலில் நம்பமுடியவில்லை. நம்பினால் தானே அது குறித்து சிந்திக்க முடியும்.
சிந்தை அடைத்திருக்க, சிந்தனைகள் தடைப்பட்டிருக்க அதிர்வலைகள் முகமெங்கும் பரவ, பசுவைத் தேடும் கன்றென அவன் தாயைப் பார்க்க,
‘எந்த ரகசியம் தான் சாகும் வரையில் மகனுக்குத் தெரியக்கூடாதென நினைத்தாரோ அது உடைந்து விட’ வைரம் உடைந்தழ ஆரம்பித்தார்.
சுந்தரத்துக்கோ மகனையும் மனைவியையும் காண சகிக்கவில்லை. தந்தையையும் தடுக்கவியலா கையறு நிலையில் நின்றவர் மகன் நின்ற நிராதராவான நிலை நெஞ்சை உலுக்க,
“அப்பா.. போதும்பா… நிறுத்துங்க…… சும்மா எதையாவது உளறாதீங்க…” எனத் தந்தையை நிறுத்த
இத்தனை நாள் ராஜாவின் மீது கொண்ட கோபமனைத்தையும் கொட்ட கிடைத்த நேரத்தை வீண் செய்ய விரும்பாத ராஜகோபால், “என்னடா ரோட்ல கிடந்தவனுக்காகப் பெத்த அப்பனையே எதிர்த்துப் பேசுறியா…?”
“அப்பா… நீங்க சொல்லுங்க…. நான் உங்க பையன் தானே இவர் கோவத்துல தானே சொல்றார்…” என ராஜா தனது உரிமையை நிலை நாட்டிடும் வேகத்தில் கேட்க,
“சொல்லுடா… இவன் உன் புள்ளன்னு உன் அம்மா மேல சத்தியம் பண்ணு பார்ப்போம்……” என மகனுக்குக் கிடுக்குபிடிப் போட்டார் ராஜகோபாலன்.
“அவன் என்னடா சொல்றது…. இவங்களுக்கு கல்யாணம் ஆகியும் ரொம்ப வருசமா புள்ள இல்ல.. அதனால தான் உன்னைத் தத்தெடுத்தாங்க.. போதுமா.. நீ ஒரு அநாதை.. ஊர் பேர் உன்னை பெத்தவங்க பேரு கூடத் தெரியாத அநாதை போதுமா… நீ என்ன தைரியம் இருந்தா என் வீட்டு வாரிசை அடிப்ப… எல்லாம் இவங்க கொடுத்த இடம்…..” என சீற
ராஜ்நந்தன் கொஞ்சம் கொஞ்சமாய் உண்மையை உணரத் தொடங்கினான். உணரத் தொடங்கிய நொடி உள்ளமும் உடலும் உஷ்ணமாய் கொதிக்கத் தொடங்கியது. அவனால் அந்த உண்மையை ஏற்கப் பிடிக்கவில்லை.
பெரும் சுழலில் சிக்கியவன் ஒரு துரும்பாவது பற்றிக் கொள்ளக் கிடைக்குமா எனக் கடைசி நம்பிக்கையோடு பார்ப்பது போல், அவன் தன் தாயை நோக்கி, “அ…ம்..மா…நா…ன் உ…ன் பு…ள்ள..இ..ல்ல..யா…” என வார்த்தைகளை நெஞ்சம் வலிக்க வலிக்கக் கேட்க
வைரம் ‘இல்லை’ என்பதாய் தலையசைத்து விட்டு கதறியழ, இருந்த ஒரே பிடிப்பும் இல்லாமல் போக அந்த ஆண்மகன் வேரொடிந்து போன மரமானான். ஒரு வேளை வைரம் பொய்யாக ஆம் என்று கூறியிருந்தால் கூட அவன் நம்பிக்கை இழந்திருக்க மாட்டான்.
சுந்தரத்துக்கு வைரம் அத்தை மகள். இருவருக்குமே ஒருவர்பால் ஒருவர் அன்பிருந்தாலும் பெற்றோர் விருப்பப்படியே திருமணம் செய்தனர். ஆனால் திருமணமாகி சில வருடங்கள் ஆகியும் குழந்தைப் பேறு இல்லாமல் இருக்க, ஒரு ஜோசியரின் ஆலோசனைப்படி ஆசிரமத்திலிருந்து ஒரு ஆண் குழந்தையைத் தத்தெடுத்தனர். ராஜகோபாலுக்கு இதில் சிறிதும் விருப்பமில்லை. வைரம் ஒரு வேளை இவரது தங்கை மகளாக இல்லாமல் போயிருந்தால் மகனுக்கு இன்னொரு திருமணம் செய்து வைத்திருப்பாரோ என்னவோ..? ஆனால் தங்கை மகளாகப் போன காரணத்தால் இந்த சுவீகாரத்துக்கு ஒத்துக்கொண்டார்.
நந்தன் வைரத்தின் வாழ்க்கையைப் பிரகாசமைடையச் செய்தான். இரண்டு மாதக்குழந்தையாய் அவர்களிடம் வந்தவனை அவர்கள் பெற்ற மகனாகத்தான் வளர்த்தனர். சுந்தரமும் வைரமும் ராஜா ‘அம்மா அப்பா’ என்றழைத்த நாள் அடைந்த உவகைக்கு அளவே இல்லை. இத்தனை நாட்கள் சமூகத்தில் பட்ட கஷ்டங்கள், கூரிய பார்வைகள் அனைத்தும் தவிடுபொடியான உணர்வு.
அதன் பிறகு இரண்டு மகவுகள் வைரத்தின் மணி வயிற்றில் உதித்து அம்மா என்றழைத்த போது கூட முதல் முதலாக நந்தன் அழைத்த அந்த சொல்லுக்கு ஈடாகவில்லை. நந்தன் மிக மிக பொசஸிவ். தாயிடம் அவன் எப்போதுமே குழந்தையாகத் தான் இருப்பான். அப்படிப்பட்டவனுக்கு இது பேரிடியாய் அமைந்தது. எப்போதுமே ராஜாவுக்குக் கிடைக்கும் பாசம், மரியாதை அனைத்தையும் கண்டு தனது சொந்த ரத்தமான தீபனுக்குக் கிடைக்கவில்லையே என ராஜகோபாலுக்கு வருத்தம் அதிகம். அந்த வருத்தம் காலப்போக்கில் ராஜாவின் மீது வெறுப்பாய் மாறியது.
அவனை நொகடித்ததுப் பத்தாது என்று நினைத்தாரோ என்னவோ நொடிந்து போயிருந்தவனை, “இப்போ தெரியுதா உன்னோட தகுதி என்னன்னு…?….எதுக்காக பொறந்தியோ.. நல்ல பொறப்போ என்னமோ…. உன்னை பெத்தவ எப்படி பெத்தாளோ” என்று வார்த்தைகளில் வஞ்சம் தொனிக்கக் கேட்க,
சுந்தரத்துக்கும் கோபம் வந்தது, “அப்பா மரியாதையா பேசுங்கப்பா…உங்க வயசுக்கு இது அழகா…?” என எரிந்து விழ,
யாரென அறியாவிடினும் தனது பிறப்புக்குக் காரணமானவளை கொச்சைப்படுத்துவது பிடிக்காதவன் ராஜகோபாலனின் சட்டையைப் பிடித்து,
“இதுக்கு மேல பேசினா அவ்வளவுதான் உனக்கு மரியாதை…. என்னையோ என்னைப் பெத்தவளப் பத்தி பேச உனக்கு உரிமையில்ல….” என்று கர்ஜிக்க
“டேய்… அநாதைப் பய நீ… உனக்கு ஒரு அடையாளம் இல்ல… இன்சியல் இல்லாதவன் நீ.. என் சட்டையைப் பிடிக்கிற…..” என அவனைத் தள்ள, அவரது வயதுக்கு அவனை தள்ள முடியாமல் போக ராஜா அவரை உதறித் தள்ள அப்படியே சோபாவில் அவர் விழ,
தன் மேலயே கைவைத்துவிட்டான் என்ற ஆத்திரத்தில், “என்னையேவா தள்ளுற நீ…. அவ்வளவு துணிச்சலடா உனக்கு.. பாருங்க… நீங்க வளர்த்த கிடா என் மார்ல முட்டுறத……” என்று மகனையும் மருமகளையும் பார்த்து சொன்னவர் ராஜாவைப் பார்த்து
“முதல்ல வீட்டை விட்டு வெளியே போடா……. போ.. இனி இந்த வீட்டு வாசப்படியை நீ மிதிக்கக் கூடாது…..” என்று உத்தரவிட ,
அந்த நொடி தன்னை முழு அநாதையாக உணர்ந்தான் ராஜ்நந்தன்.
“அப்பா….. எதுக்கு இப்படி ப்ரச்சனை செய்றீங்க…நீங்க…விடுங்க….”
“என்னங்க…..நீங்க…. அவனும் நம்ம பேரன் தானே… இப்படி பேசாதீங்க…. ராஜா நீ உன் ரூம்க்கு போய்யா….” என வைதேகி சொல்ல
வைரமோ, “மாமா….. அவனை அப்படில்லாம் சொல்லாதீங்க……. என்னால தாங்க முடியல…..ராஜா….” எனப் பரிதவிப்போடு மகனைப் பார்க்க, அவனோ கண்ணில் நீர் வழிய வாசலை நோக்கி நடந்தான்.
வைரம் அவன் பின்னால் ஓட, சுந்தரமும் மகனின் பின் செல்ல,
“சுந்தர்…. நீ போனா… எனக்கு கொள்ளி போட பிள்ளை வேண்டாம்னு ஒதுக்கி வைச்சிடுவேன்…….. அநாதை பயப் பின்னாடிப் போன உன்னை பெத்த நான் அநாதை பொணமா தான் போவேன்….. அப்படி அவன் தான் முக்கியம்னா நீ உன் பொண்டாட்டியோட போ” என ராஜகோபால் மகனை எச்சரிக்க
“உன் பொண்டாட்டி இனிமே இந்த வீட்டுக்குள்ள வரக்கூடாது…. அவன் பின்னாடி போனா…”
சுந்தரம் பெற்று வளர்த்த தந்தையின் பேச்சை மீறவியலாது அப்படியே நிற்க, வைரத்தின் கையையும் அவர் பிடித்து நிறுத்தினார்.
“விடுங்க என்னை….. அவன் போறாங்க… என் புள்ளப் போறான்…” என அழ
“வைரம்……… அப்பாவோட கோவத்தை கிளறாத.. விடு… அவனை சமாதானம் படுத்திக்கலாம்……. சொன்னா கேளுமா…” எனத் தடுத்து விட, அந்த தெருவின் முனையில் நின்ற நந்தன் ஒரு முறை அவனது வீடாக இருந்த வீட்டைத் திரும்பிப் பார்க்க ஒரு ஜீவன் கூட இல்லை என்பதை ராஜாவால் தாங்க முடியவில்லை.
ஒரு மனிதனை செயலிழக்கச் செய்யத் தான் நேசிக்கப்படவில்லை புறக்கணிப்படுகிறோம் என்ற உணர்வே போதும். இங்கே ராஜா தனது குடும்பத்தாரால் புறக்கணிக்கப்பட்டான்.
அவனது மனச் செல்களின் ஒவ்வொரு துவாரமும் யாராவது அவனுக்காக அவன் பின்னால் வரமாட்டார்களா என ஏங்கிற்று.
அந்த ஆறடி ஆண்மகன் அன்புக்காய் ஏங்கினான்.
அப்படியே செல்கள் அனைத்தும் மரத்துப் போக நடந்தவன் ஒரு பஸ் ஸ்டாண்டில் போய் அமர்ந்தான். போகும் பேருந்துகளைப் பார்த்தவனுக்கு தான் எங்கிருந்து வந்தோம் எங்கே போகப் போகிறோம் என ஒன்றும் தெரியவில்லை. கையில் இருந்த அலைப்பேசியை அடிக்கொருதரம் திரும்பிப் பார்த்துத் தன்னை யாராவது தேடுகிறார்களா எனப் பார்த்தான்.
தூரத்தில் தெரிந்த இருளைப் போல் அவனது வாழ்வும் இருக்க, மனம் வலித்தது. ஒரு சம்ராஜியமே அழிந்து போக ஒரு போர் போதும் என்பதை போல் அவனது வாழ்வின் அனைத்து சந்தோசங்களும் அழிந்து போக அந்த ஒரு நாள் காரணமாய்ப் போனது.
ஒரு பூவுக்குக் கூட தான் பூத்த செடி இதுதான் என அடையாளம் இருக்கும். எறும்புக்குக் கூட புற்று இருக்கும். ஆனால் அவனுக்கோ அவனது அடையாளம் என்பதே இல்லை. வெறும் மனிதனாக, அதுவும் இத்தனை ஆண்டுகள் ஒரு குடும்பத்தில் வாழ்ந்து ஓர் அடையாளத்தோடு முகவரியோடு சமூகத்தில் இருந்து இப்போது அனைத்துமே பொய் என்பதை அவனால் தாங்கவியலவில்லை.
நமக்கு யாரும் இதுதான் உன் குடும்பம் எனச் சொல்லிக் கொடுப்பதில்லை அல்லவா..? பிறந்த கணம் முதல் நாம் நம்புவது நம்மை பெற்றவர்களைத் தானே..!!
இன்று அந்த நம்பிக்கை பொய்யாய் போன வலி ரணமாய் வலித்தது. அதை விட அதிகமாய் வீட்டை விட்டு வந்தும் கூட இன்னும் யாரும் அவனைத் தேடாதது அவனை நரகத்தில் தள்ளியது.
வலிக்க வலிக்க நீ ஒரு அநாதை. உனக்கான இடம் இதில்லை என்று ராஜகோபால் சொல்லிய சொற்கள் அவனது நெஞ்சை அறுத்தன.
விசத்தை விட மிகவும் கொடியவை வீரியம் கொண்ட வார்த்தைகள் அன்றோ? ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் என்பது எத்துனை தூரம் உண்மை..? இன்று அநாதை என்ற ஒற்றைச் சொல் ராஜாவை உயிரோடு கொன்றது.
தன்னைத் தேடக் கூட ஒரு ஜீவனில்லையா? தான் பிறக்கும்போதும் தனிதான். இனி இறக்கும்போதும் தனிதானா? எனக்காக யாருமே இல்லையா?ஒரு உயிர் கூட எனக்காய் எனக்காக மட்டும் துடிக்கவில்லை? என்று எண்ணங்கள் ஏவுகணையின் ரேஞ்சில் போக அப்படியே அந்த பஸ் நிறுத்தத்தின் தூணில் சாய்ந்தமர்ந்தான்.
அந்த கொடிய நாள் நிறைவுற்று அடுத்த நாளின் விடியல் வர, “அண்ணா..எழுந்திருங்கண்ணா….அண்ணா…” என்ற ரகுவின் குரலில் எழுந்தான் ராஜா.
ரகு ராஜாவின் பள்ளியில் ஜூனியர். அவன் ஒரு அநாதை என்பதால் அவனை தத்தெடுத்து அவனது கல்விக்கு உதவுமாறு கேட்டான் ராஜா. சுந்தரமும் மகனது நற்செயலை பாராட்டி அந்த உதவியை செய்தார். இப்போது ஒருவருடமாக ராஜாவே ரகுக்கான ஃபீஸை கட்டுகிறான். கல்லூரி செல்வதற்காய் ரகு பேருந்து நிறுத்துமிடம் வர அங்கே கசங்கிய ஆடையுமாக, மழையில் நனைந்திருந்த ராஜாவைக் கண்டவன் பதறிப் போய் அவனை எழுப்ப,
“அம்மா…” என்றபடி கண்விழித்தான் ராஜா. சிறிது நேரத்துக்கு பின் தான் காதில் கேட்ட இரைச்சல் நிதர்சனம் உணர்த்த ,
“என்னாச்சுண்ணா….?” என்றான் ரகு. ராஜாவின் நிலை அவனுக்கு புதிராய் இருந்தது.
“எல்லாமே முடிஞ்சிடுச்சு.. ரகு…. நானும் உன்னை மாதிரி…..எனக்கும் யாருமே இல்லடா….யாருமில்ல..” எனக் கண்ணீர் விட
“அய்யோ என்னதுண்ணா இது… அழாதீங்க… ப்ளீஸ்… என்னாச்சுண்ணா...”
ராஜா நேற்றைய சம்பவங்களைச் சொல்ல, ரகுவுக்குமே அதிர்ச்சி. அநாதையாகப் பிறந்த கணம் முதலே வாழ்வது வேறு. இப்படி அநாதையாக ஆக்கப்படுவது வேறல்லவா?
பாற்கடலில் இருந்தவனுக்குப் பாலைவனம் நரகமல்லவா? பாலைவனத்தில் இருப்பவன் பசுஞ்சோலைக்குப் போனால் அது வேறு.. ஆனால் பசுஞ்சோலையில் இருந்தவனுக்குப் பாலைவனத்தைக் காட்டினால் அது கொடுமையிலும் கொடுமையல்லவா?