காதல் 4:
டைமண்ட் டவர்ஸ் முன்னால் தன் காரை சர்ரென்று நிறுத்திய நந்தன், காரின் கதவைத் திறந்து வெளியே நின்றான். தன் அலைபேசியை எடுத்து ராஜதீபனுக்கு அழைக்க நினைக்க, அவனது அலைப்பேசி தான் ஸ்வப்னாவின் புண்ணியத்தில் ஸ்வாகா ஆகிவிட்டதே..!
அந்த கோபத்தில் காரை உதைக்க, அப்போது பார்த்து ரகு வர, அவனிடம் ,
“நான் அவன் கிட்ட பேசனும்… போன் தா…..” எனக் கேட்க….,
‘எங்கே தன் போனையும் உடைத்து விடுவானோ என்று பயந்தவன் ,
“சார்…. கண்டிப்பா… அவர் இப்படி செஞ்சிருக்க மாட்டாரு… வேண்டாம் விட்டுடலாம்…” எனப் பொறுமையாகச் சொல்ல
நந்தனோ, “விடுறதா… இனிமே எதையும் நான் விடத் தயாரா இல்லடா…. எனக்குன்னு இருக்கறது இந்த மரியாதை தான்.. அதிலேயே கைவைக்க நினைச்சா… நான் மனுசனா இருக்க மாட்டேன்... அவன் செய்யல… ஆனா ஆள் வைச்சு செஞ்சிருக்கான்… நான் போன வாரம் அந்த ஹோட்டலை வாங்கினேன்ல… அதான்… அந்த கடுப்புல செஞ்சிருப்பான்… இப்போ நீ போன் செய்றியா இல்ல…. நானே நேரா போய் அவன் சட்டையைப் பிடிக்கவா..?” எனக் கோபத்தில் கத்தினான்.
நந்தன் சினிமா பாடகன் மட்டுமில்லை… ஒரு நல்ல வியாபாரியும் கூட.. தனது வருமானத்தையெல்லாம் பல வகைகளில் முதலீடு செய்துள்ளான்… இந்த எட்டு வருடத்தில் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் அவன் ஆயிரம் பாடல்கள் பாடி விட்டான்…. இப்போது ஹிந்தியிலும் பாடுகிறான். எந்த கெட்டப் பழக்கமும் இல்லாமையால் அவனால் வருமானத்துக்குத் தக்க நன்றாய் வாழ முடிந்தது. இதைத் தவிர அவன் தனியாக கச்சேரிகள், கான்சர்ட் என்று நடத்துவான். பணம் பெருக்கும் பல வழிகளை அறிந்திருந்தான் அந்த பாடகன்.
நந்தனின் கோபத்தை அறிந்தவன் ரகு…. எப்போதுமே அமைதியாக இருக்கும் நந்தன் கோபம் வந்தால் மட்டும் ருத்ரமூர்த்தியாக மாறி விடுவான்… கோபம் வந்தால் அவனின் சொல், செயல் எதுவும் அவனுக்கு நினைவில் இருக்காது…. இந்த கோபம் கூட இந்த சில ஆண்டுகளில் தான்.. அதற்கு முன் அவன் கோபப்படும்படியான சம்பவங்கள் எதுவும் அவன் வாழ்வில் நடக்கவில்லை.
நந்தனின் கோபம் குறையாததைக் கண்டவன், உடனே ராஜதீபனுக்குப் போன் செய்தான். அந்த பக்கம் தீபன் போனை எடுத்து ,
“சொல்லு ரகு..” என
“சார்…. உங்களை நந்தன் சார் பார்க்கனுமாம்… இப்போவே உடனே…” எனப் படபடக்க
“என்னாச்சுடா…? எதாவது ப்ராப்ளமா….? சூடா இருக்கானா அவன்..?”
“சூடாவா…. எரிமலை எப்ப வெடிக்கும்னு தெரியல…. ஆனா எப்போவேணும்னா வெடிக்கும்.. அந்த நிலைமை போதுமா….” என மெதுவாகச் சொல்ல,
“என்னாச்சு… அவன் கோவப்படுற அளவுக்கு…..?”
“ஏய்… அவனால என்னைப் பார்க்க முடியுமா முடியாதாடா….?” என நந்தன் கோபமாய் சீற
“சார்.. ஒரு நிமிசம்.. இதோ..” என்ற ரகு தீபனிடம் ,
“என்ன சார் கேட்டுச்சா..?” என
“ம்ம்.. சரி.. அவனை விஐபி லிஃப்ட்ல வரச் சொல்லு… தர்ட் ஃப்ளோர்க்கு வாங்க... அங்க எங்க பெர்சனல் ரூம் இருக்கு…” என்று சொல்ல, அதை ரகு நந்தனிடம் சொல்ல இருவரும் மூன்றாம் மாடி சென்றனர்.
அந்த அறையில் அவர்களுக்கு முன் தீபன் காத்திருந்தான்.
உள்ளே நுழைந்த நந்தன் ராஜதீபனைப் பார்த்து, “உனக்கு வெட்கமா இல்ல… என்னோட அடையாளத்தைக் கேவலம் ஒரு பொண்ணை வைச்சு களங்கம் செய்யப் பார்க்கிற…?” எனக் கேட்க
“நீ என்ன சொல்ற…. புரியல தெளிவா சொல்லு…” என
“அந்த வெங்காயத்தை நீயே சொல்லுடா ரகு…. அதைத் திரும்ப என்னால சொல்ல முடியாது…” என்று நந்தன் எரிச்சலாக மொழிய, ரகுவும் பத்திரிக்கைச் செய்திப் பற்றிச் சொல்ல
“இதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்… நீ பேமஸான ஆளு… அதான் உன்னைப் பத்திக் கிசுகிசு எழுதியிருக்காங்க… இதெல்லாம் சகஜம் தான.? இதுல நான் எங்கிருந்து வந்தேன்… ஒன்னு அந்த நடிகையைப் போய் கேளு, இல்லை அவளைப் பேட்டி எடுத்த ரீப்போர்ட்டரைக் கேளு… அந்த பத்திரிக்கையோட எடிட்டரைக் கேளு… இப்படி சம்பந்தமே இல்லாம என்னைக் கேட்டா… எனக்கு எப்படி தெரியும்……..?” என நிதானமாய் தீபன் கேட்க,
இதே சாதாரண சூழ் நிலையாய் இருந்திருந்தால் கூட நந்தன் யோசித்திருப்பான். ஆனால் அவனோ கோபத்தின் கோரப்பிடியில் அல்லவா இருந்தான்..? காலையிலேயே இந்த செய்தியைப் பார்த்த அதிர்ச்சி, அந்த அதிர்ச்சி தந்த ஆத்திரம், சாப்பிடாமல் வேறு இருந்ததால் அவன் மிகவும் கொதி நிலையில் இருந்தான். நிதானம் சிறிதுமில்லாமல் சீறினான் அவன்… இனிமையான குரலுக்கு சொந்தக்காரன் அவன் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்… சிங்கத்தின் கர்ஜனைப் போல் இருந்தது அவனது குரல்….
“சம்பந்தம் இருக்குடா..” என்றான் அழுத்தமாக,
“அந்த பேட்டியை எடுத்தவ… உன் ஆபிஸ்ல வேலைப் பார்க்கிறா.. அப்போ நீ சொல்லித்தானே… அவ செஞ்சிருப்பா… இத்தனை வருசம் நடக்காதது இப்போ நடந்திருக்குன்னா காரணம் நீ இல்லாம யாருடா..?”
ரகு அந்த பத்திரிக்கையை தீபனிடம் நீட்ட, அதை வாங்கிப் பார்த்தவன் ,
“இந்த பேட்டிக்குக் கீழ ராணி அப்படின்னு தானே போட்டிருக்கு.. என் ஆபிஸ்ல அப்படி யாருமே இல்ல… உன்னை அப்படி அவமானப்படுத்தனும்னு எண்ணம் எங்களுக்கு இருந்திருந்தா இத்தனை வருசம் சும்மாவா இருந்திருப்போம்.. சும்மா வாய் இருக்குன்னு என்ன வேணும்னாலும் பேசக்கூடாது மிஸ்டர்.நந்தன்.” என்று கொஞ்சம் கோபமாய் சொல்ல
“அந்த ராணி யாரு தெரியுமா… உன் ஆபிஸ் ஸ்டாஃப் மதுரவசனி….” என்று சொல்ல ராஜதீபனின் முகம் அதிர்வைக் காட்டியது. அந்த அதிர்ச்சியின் காரணம் வேறு என்று அறியாத நந்தன் ,
“என்ன சார் ஷாக்… உண்மையை ஒளிச்சு வைக்க முடியாதுடா” என நக்கலாய்ப் பேச
“இப்பவும் சொல்றேன்… நான் அப்படி செய்யல…. நீ சண்டைப் போட வேண்டியது அந்த ஸ்வப்னாவை இல்லை… அந்த எடிட்டரத்தான்…. கோபத்தைக் கொஞ்சம் குறைச்சிட்டு யோசி ப்ளீஸ்..”
“அந்த ஸ்வப்னாவை நான் திட்டிட்டேன்.. அவ லூசு.. ஆயிரம் சொல்லுவா.. அதுக்காக என்னைப் பத்தி இப்படி தப்பா எழுதலாமா..?” என மீண்டும் அவன் ஆரம்பத்துக்கே வந்து நிற்க
“இப்போ என்னை என்ன செய்ய சொல்ற..?”
“அந்த மதுரவசனியை வர சொல்லு…..”
“நான் மதுக்கிட்ட இப்படி உன்னைப் பத்திப் போட சொல்லலடா.. நம்பு…….”
“நான் என்னையே நம்ப மாட்டேன் தீபன்… உலகத்தில எதுவுமே நம்பிக்கையான விசயம் கிடையாது… எல்லாமே ஒரு நாள் பொய்யாகிடும்… அதை வலிக்க வலிக்க அனுபவிச்சவன் நான் டா…. அதனால் நீ என்னை ஏமாத்த நினைக்காம அவளை வரச் சொல்லு..” என்று நந்தன் பிடிவாதமாய் நிற்க
“சரி.. இரு..” என்றவன் மதுவை போன் செய்து மேலே வரச் சொன்னான். அவளும் போக ,
“நந்தன் சார் உங்ககிட்ட பேசனுமாம் மது…” என்று தீபன் சொல்ல
“அவனை வெளியே போக சொல்லு….. ரகு.. நான் இவ கிட்டத் தனியா பேசனும்..” என்றதும் ராஜதீபனும் ரகுவிடம் கண் காட்டி விட்டு வெளியே செல்ல ,
“ஏய்!! நீதான இந்தப் பேட்டி எடுத்தது…?” என்று எடுத்த எடுப்பிலியே பத்திரிக்கையை அவள் முன்னால் இருந்த டேபிள் மீது விட்டெறிந்தான்.
தீபன் எதுக்குத் தன்னை அழைத்தான் என்று தெரியாமல் அவள் வந்து நிற்க , பாடகன் நந்தனைப் பார்த்த இனிய அதிர்ச்சி, ஆனால் அதை அனுபவிக்க முடியாமல் எப்போதும் கேட்கும் அவனது குரலின் இனிமைக்கும், இப்போது இருக்கும் கோபக்குரலுக்கும் முகத்தின் இறுக்கத்துக்கும் சம்மந்தமில்லாமல் இருக்க மதுரவசனி நன்றாக குழம்பினாள்.