வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்(ள்)
நலன் மருத்துவருடன் வெளியேறிவிட அங்கிருந்த மெர்சி பிள்ளைகளை அழைத்துச் சென்றாள். ஆழ்ந்த் யோசனையுடன் நிமிர்ந்தவன் தனக்கு எதிரில் அமர்ந்திருந்த குமாரசாமியைக் கண்டதும் அவன் உள்ளம் குற்றயுணர்சியில் குறுகியது. பின்னே இத்தனை வருடங்களில் பவித்ராவுடன் மீண்டும் பேசிவிடுமாறு நவிரனை எத்தனை முறை வற்புறுத்தி இருப்பார். அவனும் தான் பலமுறை பவியை மன்னித்து அவரிடம் பேச முயற்சித்துள்ளான். ஆனால் அவன் மனம் மாறி பவியிடம் நெருங்குவதற்குள் அந்த முகமும் அது உதிர்த்த வார்த்தைகளும் அவன் சிந்தைக்குள் புகுந்து அவனை முற்றிலும் மாற்றிவிடும்.
அப்போது உள்ளே வந்த நலன் குமாரசாமியை நெருங்கி,"அப்பா, அம்மாக்கு ஒன்னும் இல்லை. நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க ப்ளீஸ். இந்த முறை நாம ஷில்லாங் போறோம். அடுத்த வாரத்துலயே இதுக்கு நான் அரேஞ் பண்ணுறேன். நத்துக்கும் சம்மர் வெகேஷன் வரப்போகுது. நாம எல்லோரும் ஃபேமிலியா வெளிய போய் ரொம்ப வருஷம் ஆகுது. எனக்கென்னமோ நாம குடும்பமா ஒரு ட்ரிப் போனாலே அம்மா பழையபடி ரெக்கவர் ஆகிடுவாங்கனு எனக்குத் தோணுது. அதும் அம்மாக்கு ரொம்ப பிடிச்ச மேகாலயாவுக்குப் போனா அது அவங்களுக்கு மனரீதியாவும் நல்ல மாற்றம் கொண்டு வரும்னு எனக்குத் தோணுது. நீங்க என்னப்பா சொல்றிங்க?" என்று அவரின் பதிலுக்காகக் காத்திருக்க,
"நீ சொன்ன ஃபேமிலில உன் தம்பியும் இருக்கானில்ல?" என்றவர் சிறிது மௌனம் காக்க, இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த நவிரனுக்கு ஏதோ ஒன்று அவன் மனதை சுருக்கென்று குத்தியதைப்போல் ஒரு வலி உண்டானது.
இப்போது நலன் அவருக்கு என்ன பதில் சொல்லுவான்? அவர்களுடன் நவி வரவேண்டும். அதும் பவித்ராவின் இன்றைய நிலைக்கு முழுக்க முழுக்க காரணமானவன் நவிரன் தானே? முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்ற பழமொழிக்கு இணங்க காயப்படுத்தியவனுக்குத் தான் அந்தக் காயத்தின் ஆழம் தெரியும். ஆனால் இங்கே காயப்படுத்தியவனும் ஒரு காயப்பட்டவன் என்பது தான் பிரச்சனை. இன்னும் காயப்படுத்தியவனே அவன் காயத்திற்கு மருந்திட முடியாமல் தவிக்கும் வேளையில் அவன் காயப்படுத்தியவருக்கு எப்படி அவன் மருந்திடுவான்? ஒருவரின் காயத்திற்கு இன்னொருவரிடம் தான் மருந்திருக்கிறது என்று நலன் மற்றும் குமாரசாமி இருவரும் நன்கு அறிவார்கள். குமாரசாமியின் முகம் கவலையை வெளிப்படுத்த அதைக் காணப் பிடிக்காத நலன்,
"நீங்க, அம்மா, நான், மெர்சி, நத்து, நிலன் அவங்களோட சித்தப்பா சித்தி இது தான் நம்ம குடும்பம். அண்ட் நாம எட்டுப் பேரும் தான் ஷில்லாங் போகப்போறோம். இந்த எட்டுப் பேர்ல இருந்து யாரும் மிஸ் ஆகக் கூடாது. இதுல யாருக்கு விருப்பம் இல்லாட்டியும் எனக்கு அது அவசியமில்லை..." என்று நவிரனுக்கும் கேட்கும்படி கோவமாகவே உரைத்தான் நலன்.
"அம்மாவோட உடம்பு சரியாகறதும் சரியாகாததும் உங்க கடைசிப் பையன் கையில தான் இருக்கு. அவனை அவன் வைஃப்போட ட்ரிப்புக்கு ரெடி ஆகச் சொல்லுங்க..." என்று சொன்ன நலன் அங்கிருந்து சென்றுவிட்டான்.
நவிரன் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தான். இவன் அழைத்தால் அவள் வருவாளா? முதலில் இவன் அழைப்பானா? அதற்கு முதலில் அவள் எங்கு இருக்கிறாள் என்று தெரியவேண்டுமே. அவள் தற்போது எங்கு இருக்கிறாள் என்று எப்படித் தெரிந்துகொள்வது? நேற்றிரவு தாமதமாக வந்ததும் இன்றைய காலையில் திடுக்கிட்டு விழித்ததும் அவன் தலையில் மைக்ரேனாக உருமாறியிருக்க அவனது வலது பக்கத்தின் தலை விண்ணென்று இருந்தது. இந்தச் சூழலில் அவளைப் பற்றி யோசித்தவனுக்கு மேலும் தலையில் பாரம் கூட மீண்டும் தன் அறை நோக்கிச் சென்றான்.
தன் அறைக்குச் சென்றவன் மாத்திரை போட்டுக்கொண்டு அந்தக் கட்டிலில் சரிந்தான். எதேர்ச்சையாகத் திரும்பியவனுக்கு அவன் அறையில் மாட்டப்பட்டிருந்த அவன் திருமணப் புகைப்படம் கண்ணில் பட்டது.
ஆஸ்திரேலியா செல்லும் வரை அவனுக்கு அவன் திருமணத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏதும் இருந்ததில்லை. ஆனால் அதையெல்லாம் அங்கே அவன் கண்டவள் மாற்றி எழுதத் தொடங்கினாள். அப்போது அவனுக்குள் அவன் திருமணத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பு எழத்தொடங்கியது. அவனுடைய கற்பனைகளுக்கு முற்றிலும் மாறாக அரங்கேறியது தான் அவன் தற்போது காணும் அப்புகைப்படம்.
தலைவலி, உறக்கமின்மை, அதீத வேலை பளு அதன் பொருட்டு அவனுக்கு உண்டான களைப்பு அத்துடன் பவியின் இன்றைய நிலை என்று ஒன்று மாற்றி ஒன்று அவன் உடலை மட்டுமின்றி அவன் உள்ளத்தையும் வீழ்ச்சியின் உச்சத்திற்கே அழைத்துச் சென்றது.
விளையாடிக் கொண்டிருந்த நற்றிணையின் செவியில் தன் தந்தை சொன்னதெல்லாம் தெளிவாகவே விழுந்தது. கம்பீரமாகப் பார்த்துப் பழகிய தன் பாட்டியை இந்த நிலையில் காண அவளுக்குச் சகிக்கவே இல்லை. ஆனால் இதற்கெல்லாம் ஒரு மார்க்கத்தை தன் தந்தை உரைத்ததும் துளியும் தாமதிக்காமல் குமாரசாமியின் அலைபேசியை எடுத்துக் கொண்டு கார்டெனுக்கு விரைந்தவள் தன் சித்தியின் எண்ணிற்கு அழைத்துவிட்டாள். அழைப்பு இன்னும் ஏற்கப்படாமல் இருக்க தவித்தவளை மேலும் தாமதிக்க விடாமல் அழைப்பை ஏற்றாள் அவள் சித்தி.
அழைப்பு ஏற்கப்பட்டதும் அதற்கு வீடியோ கால் ரெக்வஸ்ட் கொடுத்த நத்துவின் அலைபேசி தொடுதிரையில் வெள்ளை நிற ஏப்ரனில் தலையில் தொப்பியுடன் வந்து விழுந்தது அஞ்சனாவின் பிம்பம். காலையில் பணி நிமித்தமாய் கிச்சனுக்குள் இருந்தவள் தன் மாமனாரின் எண்ணைப் பார்த்ததும் பதறி அட்டென்ட் செய்ய அதில் தெரிந்த நத்துவின் முகம் அவளுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸாக இருந்தது.
"ஏ நத்து பாப்பா! வாட் எ ப்ளசென்ட் சர்ப்ரைஸ். எப்படி இருக்க?" என்று கேட்டதும் நற்றிணையின் கண்கள் கலங்கியது.
"என்னாச்சு டா நத்துமா? ஏன் அழறீங்க?" என்று கேட்டவளுக்கு காலையில் நடந்ததை ஒன்று விடாமல் ஒப்பித்து இறுதியாக தன் தந்தை சொன்னதையும் சேர்த்துச் சொல்லிவிட்டாள்.
பவித்ராவுக்கு உடல்நிலை சரியில்லை என்று முன்பே அஞ்சு அறிவாள் என்றாலும் தற்போதைய அவரின் இந்த நிலைக்கு தானும் ஒருவகையில் காரணம் என்ற உண்மை அவளைச் சுட்டது.
"ஏன் சித்தி நீங்க எங்களை விட்டுட்டு தனியாப் போயிட்டீங்க? திரும்ப நீங்க எங்க கூட இருக்கவே மாட்டிங்களா? உங்களுக்கும் சித்தப்பாவுக்கு தானே சண்டை. இதுல எதுக்கும் என்னையும் நிலனையும் பனிஷ் பண்றீங்க. பாட்டி ரொம்ப பாவம். எனக்காக நீங்க இங்க திரும்ப வருவீங்களா ப்ளீஸ் சித்தி" என்று வாஞ்சையுடன் கேட்கும் இந்தக் குழந்தைக்கு என்ன பதில் சொல்வதென்று புரியாமல் திண்டாடினாள் அஞ்சனா.
"ஷில்லாங் போனா பாட்டிக்கு நல்லாகிடும்னு அப்பா தாத்தா கிட்டச் சொன்னாங்க. ஆனா அதுக்கு நீங்களும் எங்க கூட வரணுமாம். நீங்க ஓகே சொன்னா நாம எல்லோரும் ஒண்ணா டூர் போலாம். போலாமா?" என்று கேட்கும் இவளுக்கு பதில் சொல்வதைக் காட்டிலும் பவித்ராவுக்கு என்ன ஆகியிருக்கும் என்று அஞ்சனா யோசிக்க,
"சித்தி, அப்போ நீங்க எங்களோட வரமாட்டீங்களா?" என்றவளின் இரைஞ்சலில் நடப்புக்கு வந்தவள்,
"அம்மா எங்க இருக்காங்க நத்துமா? நீ அவங்ககிட்ட போன் கொடு"
"நீங்க வர மாட்டீங்க. அதானே?" என்று நத்து கேட்டதும்,
'அது கூப்பிடுறவங்க கூப்பிடனும். அப்படியே அவங்க கூப்பிட்டாலும் நான் அவங்க அழைப்பை ஏற்கணும். எனக்குத் தெரிஞ்சு இது ரெண்டும் நடக்க வாய்ப்பே இல்லை...' என்று நினைக்கும் போதே,
'அப்போ பவித்ராவை நீ அம்மானு கூப்பிட்டதெல்லாம் வெறும் வாய் வார்த்தை தானா? அவங்க மேல உனக்கு எந்த அக்கறையும் இல்லையா?' என்று அவள் மனசாட்சி அவளைச் சீண்டியது.
"சித்தி... அஞ்சு சித்தி..." என்று மீண்டும் மீண்டும் அழைத்தவளின் குரலில் நிகழ்வுக்கு வந்தவள்,
"பாட்டி இப்போ எப்படி இருக்காங்க? நீ எனக்கு அவங்களைக் காட்டுறியா?" என்றதும் பவியின் அறைக்குச் சென்றவள் உறங்கும் அவரை அஞ்சனாவிற்குக் காட்டினாள்.
"என்னை மன்னிச்சிடுங்க அத்தை. நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். உங்க பையன் மேல இருந்த கோவத்துல உங்களைப் பத்தி யோசிக்காம நான் கிளம்பி வந்துட்டேன். கண்ணைத் திறங்க ப்ளீஸ். நான் உங்களைப் பார்க்கணும்..." என்ற அஞ்சனாவின் குரல் கேட்டதும் உறக்கத்திலிருந்த பவியின் முகத்தில் சிறு அசைவு தெரிய அந்நேரத்தில் அங்கே வந்த நலன்,
"நத்து யாரு போன்ல?" என்று அவன் கேட்க,
"அஞ்சு சித்தி தான்பா" என்று போனை அவனிடம் கொடுத்துவிட்டு அவள் வெளியேறினாள்.
"மாமா, அத்தை என்னாச்சு? ஏன் அவங்க இப்படி இருக்காங்க?"
"ஏன் உனக்குத் தெரியாதா? இதுக்கு நீயும் உன் புருஷனும் தான் காரணம்..." என்று தன் மனதில் பட்டதை நொடியும் யோசிக்காமல் நலன் பேசிவிட அங்கே அஞ்சனாவிற்குள் ஒரு குற்றயுணர்ச்சி எழுந்து அடங்கியது.
கிட்சனில் இருந்து அஞ்சனாவிற்கு அழைப்பு வர,"போய் உன் ஒர்க் பாரு அஞ்சனா. மத்ததெல்லாம் ஈவினிங் பேசிக்கலாம். அண்ட் சாரி. உன்னை ஹர்ட் பண்ணனும்னு நான் அப்படிப் பேசல..."
"எப்படினாலும் நீங்க சொன்னது சரி தானே? நான் ஈவினிங் உங்ககிட்டப் பேசுறேன் மாமா..." என்றவள் அழைப்பைத் துண்டித்து பணியில் கவனம் செலுத்தினாள். ஆனாலும் அவள் எண்ணமெல்லாம் பவித்ராவின் மீதே இருந்தது.
கணவன் மனைவி இருவரின் இந்தப் பிரிவுக்கு தானும் ஒரு வகையில் காரணம் என்று தெரியாமல் நலன் அவர்களைத் திட்டிக்கொண்டிருந்தான். என்ன தான் ஷில்லாங் செல்வதற்கு பவித்ராவின் நலனே(அவங்க பையன் நலன் இல்லை. இந்த இடத்துல நலன் 'சப்ஜெக்ட்' இல்ல 'வெர்ப்'... எனக்கே தெரியாம எப்படி நான் எழுதுற கதையில மட்டும் இங்கிலிஷ் தமிழ் பிசிக்ஸ் ஹிஸ்டரினு எல்லாம் கலக்குதுனு எனக்குப் புரியல. எழுதுற எனக்கே இப்படி இருக்குன்னா படிக்குற நீங்க உண்மையிலே பாவம் தான் மக்களே!?) பிரதான காரணம் என்றாலும் பவியின் நலனை சாக்காக வைத்து நவி மற்றும் அஞ்சுவின் நலனையும் கருத்தில் கொண்டு அதனால் இந்தக் குடும்பத்தின் நலனை எதிர்நோக்கினான் நலன் குமாரசாமி.(எத்தனை நலன்? ஷப்பா முடியல?)
இப்போது அஞ்சனா சென்னையில் இல்லை. சில காரணங்களால் சென்னையை விட்டு வெளியேறி பெங்களூரில் இருக்கும் ஒரு பிரபல நட்சத்திர விடுதியில் பணிபுரிகிறாள். அஞ்சனா இங்கே வேலைக்குச் சேர்ந்து சில மாதங்களே ஆகிறது. நடந்த சில களேபரங்களால் திருவண்ணாமலையை விட்டுச் சென்றவள் யாருக்கும் தெரியாமல் பெங்களூரு சென்று பணியில் சேர்ந்துவிட்டாள். நவிரன் அவளைப் பற்றிப் பெரியதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை. எப்படியும் அவள் எங்கு எப்படி இருக்கிறாள் என்று தந்தைக்கும் தமையனுக்கும் கட்டாயம் தெரியும் என்ற மிதப்பு தான் அவளைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆவலை அவனுக்குள் ஏற்படுத்தவில்லை. ஆனால் அவளிருக்கும் இடத்தை தான் அறிவேன் என்று ஒருமுறை நலனிடம் சவால் விட்டுவிட்டான். இப்போது அவளையும் ஷில்லாங்கிற்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்றால் இவனாக அவளை நேரில் சென்று அழைக்க வேண்டுமே? இல்லையென்றால் அவள் கட்டாயம் வரமாட்டாள் என்று நவி நன்கு அறிவான். அகம் பிடித்தவனுக்கு ஏற்ற அகம் பிடித்தவள்.
அங்கே அஞ்சனாவிற்கு ஏதேதோ நினைவுகள் எழுந்து அடங்கியது. நவிரனை விட்டுப் பிரிந்து வந்து இத்தனை நாட்கள் கடந்தும் கூட தனக்கொரு அழைப்போ இல்லை தான் எங்கு இருக்கிறேன் என்ற பதைப்போ துளியும் இல்லாமல் இன்னும் தானுண்டு தன் வேலையுண்டு என்று கவலைகளற்று ஒருவன் இருக்கிறானே என்றால் தன்னை ஒரு சக மனிதனாகக் கூட அவன் மதிக்கவில்லை என்று தானே அர்த்தம்? என்று அஞ்சனா நினைக்கும் போதே அவள் மனசாட்சி மீண்டும் ஒரு கேள்வியுடன் எட்டிப்பார்த்தது.
'அப்போ நவி உன்னைத் தேடி வரணும்னு நீ எதிர்பார்த்திருக்க? அதுக்காகத் தான் நீ இப்படி பெங்களூர்ல தலைமறைவா இருக்கியா?' என்று கேட்க அவள் முகமானது அதுவரை இல்லாத ஒரு கடுமையை வெளிக்காட்டியது.
யாரிடத்தில் யாருக்கொரு காதல் வருமோ?
பூமி எதிர்பார்த்து மழை தூரல் விழுமோ?
காதல் வர கால் விரல்கள் கோலமிடுமோ?
கை நகத்தை பல் கடிக்க ஆசை படுமோ?
எதுவுமே நடக்கலாம்
இறகின்றி இளமனம் பறக்கலாம்...
இதுவரை விடுகதை
இனிவரும் கதை ஒரு தொடர் கதை
வேண்டும் வசந்தம் வாசல் வரலாம்
ஊமைக்கொரு வார்த்தை வந்து பாடுகின்ற வேளை இது...
உனக்கு நான் பிறந்தவள்
மனமெனும் கதவை தான் திறந்தவள்
காதல் பிறந்தால் காவல் கடக்கும்
போட்டுவைத்த கோட்டுக்குள்ளே
காதல் என்றும் நின்றதில்லை....
(நா முத்துக்குமார் வரிகள்...)
காதலால் நிறைப்பாள்...