நினைக்கும் போதே முக்தி கிடைக்கும் என்று சொல்லப்படும் திருவண்ணாமலையில் பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பின் அம்சம் கொண்ட அக்னி வடிவாக ஈசன் காட்சியளிக்கிறார். இதுவரை தோன்றிய அனைத்து யுகத்திலும் இந்த மலையானது அழியாமல் இருப்பதாகவும் இந்த மலையே சிவனின் அம்சம் என்றும் சைவர்களால் நம்பப்படுகிறது. திருவண்ணாமலை போளூர் முதலிய சுற்றுவட்டாரத்தில் இருக்கும் மலைத்தொடர்களை பர்வத மலை என்று அழைக்கிறார்கள். இந்தப் பர்வத மலை என்பதன் தூயத் தமிழாக்கம் தான் நவிர மலை என்பது. ஜவ்வாது மலையில் உள்ள புதூர் நாட்டில் சங்ககாலப் பெயரான நவிரமலை என்னும் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோவில் நகரத்தில் வசித்து வந்த ஒரு வணிகரின் மகன் தான் குமாரசாமியின் தந்தையான லோகநாதன். திருவண்ணாமலை சுற்றுவட்டாரத்தில் கிடைக்கும் தானியங்கள் உணவுப் பொருட்கள் முதலியவற்றை மொத்தமாக வாங்கி விற்றவரின் மூத்த மகன் தான் குமாரசாமி. தன் தம்பிகளுடன் இணைத்து தந்தையின் தொழிலைச் செய்து வந்தவர் தொன்னூறுகளின் தொடக்கத்தில் அறிமுகமான டூ வீலர்களின் டீலர்ஷிப்பை பெற்றவர் அதை வாங்கும் வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஒரு ஃபைனான்ஸ் நிறுவனத்தையும் நிறுவினார். அன்றைய நேரத்தில் ஆடம்பரமாக நினைத்த டூ வீலர்களின் அபரிதமான வளர்ச்சியால் குமாரசாமியின் தொழிலும் வேகமாகவே வளர்ந்தது. டூ வீலர் டீலர்ஷிப் அதோடு நில்லாமல் ட்ராக்டர் மற்றும் கார் என்று வளர்ந்து இன்று திருவண்ணாமலையில் மூன்று ஷோ ரூம் சென்னையில் இரண்டு என்று ஆலமரமாக விரிந்து வேரூன்றிவிட்டது அன்று அவர் விதைத்த விதை.
மூன்று தம்பிகளில் ஒருவர் மட்டுமே குமாரசாமியின் ஆரம்ப காலத்திலிருந்து இன்றுவரை உறுதுணையாக இருக்கிறார். மற்ற இருவரில் ஒருவருடன் முற்றிலும் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட மற்றொருவர் ஏதேனும் தேவை என்றால் மட்டும் அண்ணனைத் தேடி வருவார். ஒரு சராசரி நடுத்தர குடும்பமாக இருந்த காலகட்டத்திலே இன்னொரு நடுத்தர குடும்பத்தில் இருந்து இந்தக் குடும்பத்திற்கு மூத்த மருமகளாக அழைத்துவரப் பட்டவர் தான் பவித்ரா. அந்தக் காலத்திலே கல்லூரி சென்று வேதியியலில் இளநிலை பட்டம் பெற்றிருந்தவருக்கு மேற்கொண்டு படிக்க ஆசை இருந்தாலும் குடும்பச் சூழ்நிலை அதற்கு வாய்ப்பளிக்கவில்லை.
சுமார் ஏழு வருட வித்தியாசம் இருந்தாலும் பார்த்த மாத்திரமே குமாரசாமியின் வாழ்க்கைத் துணையாகத் தோன்றியவர் இன்று முப்பத்தி ஐந்து வருடங்களையும் கடந்து அவருடனே பயணித்துக்கொண்டிருக்கிறார் பவித்ரா. அவர்களுக்குத் திருமணம் முடிந்து ஒன்றரை ஆண்டுகள் கழித்துப் பிறந்தவன் தான் நலன். பெயருக்கு ஏற்றாற்போல் அவன் பிறந்ததும் பவித்ராவின் வாழ்க்கையில் நிறைய நன்மைகளையும் மாற்றங்களையும் ஏற்படுத்தியவன். நலன் பிறந்ததும் பவித்ராவுக்கு ஏற்பட்ட போஸ்ட்பார்ட்டம் டிப்ரெஷனில்(குழந்தை பிறந்ததும் பெண்ணின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் உண்டாகும் மனஅழுத்தம்) இருந்து தன்னை மீட்டுக்கொள்ள தீவிரமாக நாவல் வாசிக்கத் தொடங்கியவருக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாவல் எழுத வேண்டும் என்ற விருப்பமும் எழுந்தது. அதற்குள்ளே இரண்டாவதாக கருவுற்றிருந்த பவித்ராவுக்கு நந்தினி என்றொரு மகளும் பிறந்தது. அதே நேரத்தில் குமாரசாமியின் தொழிலும் நல்ல மாற்றங்களைச் சந்திக்க தன்னுடைய முதல் சிறுகதையை அன்றைய பிரபல வாரப்பத்திரிகைக்கு எழுதி அனுப்பினார்.
அதற்குக் கிடைத்த ஏகபோக ஆதரவின் காரணமாக சிறுகதைகளில் இருந்து முன்னேறி முதல் நாவல் ஒன்றையும் எழுதி தனக்கென ஒரு அடையாளத்தை மெல்ல மெல்ல உருவாக்கிக்கொண்டிருந்தார்.
அடுத்த நான்கு ஆண்டுகளில் வாரப்பத்திரிக்கைகள் தங்கள் முகப்பு பக்கத்தில் பவித்ரா குமாரசாமியின் புதிய கதை விரைவில் நமது இதழில் தொடங்கவுள்ளது என்னும் அறிவிப்போடு தங்களுடைய வார சர்குலேஷனை உயர்த்திக்கொள்ளும் பொருட்டு அறிவிக்கும் அளவுக்கு அவருடைய எழுத்தும் புகழும் உயர்ந்துகொண்டே இருந்தது. எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது என்று நினைக்கும் நேரத்தில் தான் நந்தினிக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போக அப்போது தான் நந்தினி ஒரு ஸ்பெஷல் சைல்ட் என்னும் உண்மையே பவித்ராவுக்கும் குமாரசாமிக்கு விளங்கத்தொடங்கியது. இன்றளவுக்கு அன்று அவ்வளவு சயின்ஸ் வளராத காரணத்தால் அவளுடைய பிரச்சனையைப் புரிந்துகொள்ளவே காலதாமதம் ஆனது.
அடுத்த ஓராண்டு அவர்கள் அலைந்து திரிந்து நந்தினியைப் பற்றி எல்லாம் தெரிந்து கொண்ட நேரத்தில் அவள் தன் வாழ்வின் இறுதி நாட்களில் இருந்தாள். எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருக்கிறது என்று நினைக்கும் நேரத்தில் அவளின் இழப்பு அவர்களுக்குப் பெரும் இடியாக வந்துவிட பவித்ரா தான் மனதளவில் அதிகம் உடைந்து விட்டார். தங்களுடைய கேரீரில் சிலர் உச்சியில் இருக்கும் பொழுதே திடீரென்று காணாமல் சென்று விடுவார்கள். அப்படித்தான் பவித்ரா குமாரசாமி என்னும் எழுத்தாளரும் புகழின் உச்சியில் இருக்கும் வேளையிலே திடீரென்று மறைந்து விட மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக மன அழுத்தத்திற்குள் சென்று கொண்டிருந்தார் பவித்ரா.
நலனுக்கு அப்போது ஏழு வயது நடக்க தாங்கள் தொலைத்த அன்பு மகளை மீண்டும் பெற வேண்டி எடுத்த முயற்சியில் அவர்களுக்குக் கிடைத்தவன் தான் நவிரன். மகளாக இருக்க வேண்டும் என்று வேண்டியவர்களுக்கு மகன் தான் கிடைத்தான். இழந்த மகளுக்கும் சேர்த்து அதிக பாசத்துடன் வளர்த்தப்பட்டான் நவிரன். நவிரனுடன் சேர்ந்து காணாமல் போன பவித்ரா குமாரசாமி என்னும் எழுத்தாளரும் வளர்ந்தார்.
நந்தினியின் ஞாபகமாக அவளுடைய உடையெல்லாம் போடப்பட்டு விவரம் தெரியும் வரை ஒரு பெண்ணாகவே வளர்ந்தான் நவிரன். இதே நேரத்தில் தான் குமாரசாமியும் டூ வீலர் தொழிலில் இருந்து காருக்கு மாறினார்.
நவிரன் ஆறாம் வகுப்பு சேரும் போதே நலன் கல்லூரி படிகளில் கால் வைத்துவிட நவிரன் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது ஒருநாள் மாலையும் கழுத்துமாக வந்து நின்ற நலனைக் கண்டு பவித்ராவும் குமாரசாமியும் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட அரும்பு மீசை துளிர்த்த வயதிலே ஏனோ காதல் மீதான ஒரு வெறுப்பு நவிரனின் நெஞ்சில் ஆழமாக வேரூன்றிவிட்டது.
கோபத்தில் அவர்களை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன பவித்ராவின் சொல்லை மதித்து நலனும் மெர்சியும் வெளியேறிவிட்டனர். நலனின் சம்மதத்துடன் நலனுக்கும் குமாரசாமியின் நண்பன் மகளுக்கும் திருமணம் செய்ய முடிவெடுத்து இன்னும் ஒரு வாரத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த சூழலில் தான் நலன் மெர்சியை திருமணம் செய்து அழைத்து வந்திருந்தான்.
ஒரு காதல் தான் தங்கள் குடும்பத்தை இரண்டாகப் பிரித்தது என்பதைக் காட்டிலும் தன் அன்னையை இந்தக் காதல் அழவைத்து விட்டதென எண்ணம் நவிரனுக்கு ஆழப் பதிந்துவிட்டது.
குமாரசாமி பவித்ராவுக்குத் தெரியாது என்ற நம்பிக்கையில் தன் நண்பனின் மூலமாக நலன் மற்றும் மெர்சி ஆகியோருக்கு வேண்டிய உதவிகளை எல்லாம் செய்து வந்தார்.
பழைய நினைவுகள் பவித்ராவை மட்டுமின்றி அங்கிருந்த அனைவரின் நினைவுகளிலும் வந்து போக கடந்த முறை போல் காதல் மீதான தவறான கற்பிதம் ஏதுமின்றி இருந்தான் நவிரன். காதல் மீதான அவனது அபிப்ராயம் மாறியதில் அவன் அண்ணன் மற்றும் அண்ணியின் பங்கு இருந்தது என்றால் அது மிகையில்லை.
நற்றிணை பிறந்து இந்த ஒன்றரை ஆண்டுகளில் மூன்றாண்டு பிரிவை ஓரளவுக்குத் தான் நவிரனால் குறைக்க முடிந்தது. தனியாக வாழ்ந்து வந்த நலனையும் மெர்சியையும் மீண்டும் தங்களுடன் தங்க வைத்தவனால் இந்தக் குடும்பத்துடன் அதும் குறிப்பாக பவியின் உள்ளத்தில் இடம்பெற வைக்க முடியவில்லையே என்பது தான் உண்மை. இப்படியிருக்க தானும் ஆஸ்திரேலியா சென்று விட்டால் எங்கே அன்னைக்கு முன்பு போல் ஏதும் உடல் நிலை பாதித்துவிடுமோ என்ற அச்சமும் நலன் மற்றும் மெர்சியின் மீதிருக்கும் கழிவிரகமும் அவனை வாட்டியது.
கடந்த இரண்டு தினங்களாகவே இதற்கு எப்படியாவது ஒரு முடிவெடுக்க வேண்டும் என்று துடித்தவன் இன்றிரவு தாங்கள் செல்லவிருக்கும் டின்னரில் தன் திட்டத்தை நிறைவேற்ற சொன்னான்.
இப்போது யோசித்தாலும் தவறில் பெரும்பான்மை பங்கு நலனிடமும் சிறும்பான்மை பங்கு பவித்ராவிடமும் இருக்கிறது என்பதில் நவி தெளிவாகவே இருக்கிறான். பவித்ராவும் குமாரசாமியும் ஒரு போதும் டிமாண்டிங் பெற்றோர்களாக இருந்ததே இல்லை. பிள்ளைகளின் விருப்பத்திற்கு செவி கொடுத்து அதில் நியாயம் இருக்குமே என்றால் அதை நிறைவேற்ற அவர்களால் முடிந்த அளவு உதவுவார்கள். பவித்ரா இதுவரை எழுதியுள்ள நூற்றி தொன்னூறுக்கும் மேற்பட்ட நாவல்களில் எப்படிப் பார்த்தாலும் குறைந்தது நூற்றி ஐம்பது நாவல்களாவது காதலை மையப்படுத்தி இருக்கும். திருமணத்திற்கு முந்தைய காதல் திருமணத்திற்கு பிந்தைய காதல் ஒருதலை காதல் காதல் தோல்வி பார்க்காமலே வரும் காதல் விழி வழி நுழைந்த காதல் செவி வழி நுழைந்த காதல் என்று காதல் என்னும் மாவில் அவர் சுடாத தோசை இட்லி வகைகளே கிடையாது எனலாம். புளித்த மாவென்றாலும் அதில் ஆப்பம் பனியாரம் முதலியவற்றை செய்து அலங்காரப்படுத்திவிடுவார்.
அப்படிப்பட்டவருக்கு நலன் செய்தது ஒருவகை நம்பிக்கை துரோகமே! ஆனால் பவி ஒன்றை அறியவில்லை. ஒருவேளை நலன் மெர்சியை திருமணம் செய்யாமல் விட்டிருந்தால் அது தான் அவன் வாழ்வில் அவன் செய்த மிகப் பெரிய துரோகம் ஆகியிருக்கும். தன் கதைகளில் கதா பாத்திரங்களுக்கெல்லாம் எல்லாம் உணர்வளித்ததால் என்னவோ அவரிடம் உணர்வு வறட்சி ஏற்பட்டு விட்டதோ? இல்லை மகனின் மீது தான் வைத்திருந்த அசாத்திய நம்பிக்கை நொடியில் உடைந்து விட்டதால் ஏற்பட்ட விரக்தியோ? எதுவாக இருந்தால் என்ன? ஆஃப்ட்டர் ஆல் அவரும் மனிதர் தானே?
அன்று மாலை திட்டமிட்டப்படியே எல்லோரும் டின்னருக்கு செல்ல தாங்கள் வழக்கமாகச் செல்லும் அந்தப் பிரபலமான ரெஸ்டாரெண்டில் அந்த இருக்கை ரிசர்வ் செய்யப்பட்டிருந்தது.
உள்ளே சென்றவர்கள் உணவை ஆர்டர் செய்துவிட்டு சிறிதுநேரம் அமர்ந்திருக்க கைகழுவச் சென்ற பவித்ராவின் பின்னாலே சென்ற நவி,
"அம்மா நான் ஒன்னு கேட்டா செய்வியா?" என்றதும்,
"என்னடா புதுசா பெர்மிஷன் எல்லாம் கேக்குற?" என்றார் பவி.
"இவ்வளவு பிடிவாதம் வேண்டாம்மா. அண்ணி பாவம்மா. சின்ன வயசுல இருந்தே ஹோம்ல தான் வளர்ந்திருக்காங்க. படிச்சிட்டு இருக்கும் போதே பார்ட் டைமா டைப் ரைட்டிங் கத்துக்கிட்டு போராடி தான் டிகிரி எல்லாம் படிச்சிருக்காங்க. உன் மூத்த மகன் கேட்(cat- mba) எக்ஸாமுக்கு ப்ரிப்பேர் பண்ணுறேன்னு சென்னையில் அடிக்கடி லைப்ரரிக்கு போய் இருக்கான். அங்க தான் அண்ணியை முதன் முதலா பார்க்கவும் செஞ்சு இருக்கான். இது டெய்லி நடக்க கொஞ்ச நாளுக்குப் பிறகு அண்ணி கிட்ட அவனோட லவ்வையும் சொல்லி இருக்கான். ஆனா அவங்க இவனைப் பிடிச்சிருந்தாலும் இதெல்லாம் ஒர்க் அவுட் ஆகாதுன்னு அவாய்ட் பண்ணி இருக்காங்க. ஆனா தவறாம ரெண்டு பேரும் அதே லைப்ரரில ரெகுலரா மீட் பண்ணிட்டு மட்டும் இருந்திருக்காங்க. அப்போ தான் அவங்களுக்கு நம்ம ஃபேமிலி பத்தி எல்லாம் தெரிஞ்சிருக்கு. அது வரை அவன் மேல இருந்த எல்லா அபிப்பிராயமும் மாறி நம்ம வீட்ல இதுக்கு ஒத்துக்க மாட்டோம்னு நெனச்சு அவனைப் பிடிக்கலைனு சொல்லிட்டு வெளியூருக்குப் போயிட்டாங்களாம். இவனும் அவங்களை கொஞ்சம் கொஞ்சமா மறந்து டிகிரி முடிச்சு நம்ம பிசினெஸ் எல்லாம் பார்க்க ஆரமிச்சப்போ தான் நீயும் அவனுக்கு மேரேஜ் பண்ற பிளான் பத்தி ஒப்பினியன் கேட்டிருக்க. அவனும் உனக்கு ஓகே சொல்லிட்டான். விழுப்புரத்துல அப்பா ஒரு ஷோ ரூம் விலைக்கு வருதுனு இவனைப் போய் விசாரிச்சிட்டு வர சொல்லும் போது தான் அவங்களைத் திரும்ப பார்த்திருக்கான்..." என்றவன் இதுவரை கவனமாக கதை கேட்டுக்கொண்டிருந்த பவித்ராவைப் பார்த்து சிரித்து,
"நீயே ஒரு ரைட்டர். இதுக்குப் பிறகு என்ன நடந்திருக்கும்னு உனக்கே தெரியும். அண்ணியை எவ்வளவோ சொல்லி கன்வின்ஸ் பண்ணியும் அவங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கல. சோ வேற வழி இல்லாம நம்ம மேல அதும் குறிப்பா உன் மேல இருந்த நம்பிக்கையில அவங்களை மறுநாள் மேரேஜ் பண்ணிட்டு இங்க கூட்டிட்டு வந்திருக்கான். இது அவங்க பக்கத்துக்கு ஸ்டோரி. கண்டிப்பா இது தப்பா இருந்தாலும் அந்த நேரத்துல அவனுக்கு அது தான் சரியா பட்டிருக்கு. அந்தந்த நேரத்து நியாயங்கள் தான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறதுனு யாரோ அவங்களோட போன கதையில எழுதினதா ஞாபகம். அண்ணியை உன் கதை கிருஷ்ணப்ரியாவா மாத்திடாத ம்மா. ப்ளீஸ். இந்த நாலு வருஷத்துல இதை நெனச்சு நெனச்சே உனக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாம போயிடுச்சு. இப்போ நான் உன்னை விட்டு ரொம்ப தூரம் போகப்போறேன். ஐ ஜஸ்ட் வாண்ட் யூ டு பி இன் சேஃபர் ஹேண்ட்ஸ். நல்லா தீர்க்கமா யோசி. ஆனா இப்போ வந்து எனக்காக நீ அண்ணி பக்கத்துல உட்காரு. வா..." என்றவன் அவருக்கு முன்னே சென்று அதற்கேதுவாய் நலனுக்கும் மெர்சிக்கும் இடையில் ஒரு இருக்கையை காலியாக விட்டு தந்தையின் அருகில் சென்று அமர்ந்தான்.
அவனுக்குப் பின்னே வந்தவர் தனக்கான இருக்கையைக் கண்டு ஒரு நொடி தயங்கினாலும் பிறகு அங்கே சென்று அமர்ந்தார்.
காதலால் நிறைப்பாள்...
second epi சீக்கிரம் வந்திடுச்சினு யாரும் என்னை நம்ப வேண்டாம் மக்களே! மூணு எபிசோட் தான் இதுவரை எழுதியே இருக்கேன். படிச்சிட்டு உங்க மனசுல இருக்குறத அப்படியே கொட்டிட்டுப் போங்க??