அத்தியாயம் 6
'ஐ லவ் யூ' சொன்னதும் சட் என்று நாக்கை கடித்துக் கொண்டாள் தேவி. தலை நாணத்தால் குனிந்தது. அவன் சிரித்தான். மெதுவாக அவள் பக்கம் வந்தான். அவள் கையில் இருந்த அவனது புத்தகங்களை எடுத்தான். அவனது முடி நிறைந்த கரம் அவளது கரத்தில் உரச, அவளது உடல் சிலிர்த்தது. சட் என்று அவனது புத்தகங்களை அவனிடம் கொடுத்து விட்டு அவன் கண்களைப் பார்த்தாள்.
யப்பா. அவளைப் பிய்த்து தின்று விடுபவன் போல் பார்த்தான் அவன். அவள் தலையை குனிந்து கொண்டே, 'சாரி. சீனியர்ஸ் ராக் பண்றாங்க. அதான்...'
'அப்போ உண்மையாய் இல்லயா?'
அவள் சட் என்று அவனைப் பார்க்க மைண்ட் வாய்ஸில் 'அம்மாடி..ம்ம்..ம்ம்.. இது தான் காதலா?... என்று பின்பக்கம் க்ரூப் டான்சர்ஸ் மார்புக் கச்சையும் பாவாடையும் அணிந்து லைனாக கோரஸ் பாடுவது போல் கேட்டது. சட் என்று இல்லை என்பது போல் தலை ஆட்டினாள்.
'அப்போ இது என்ன?' சரவணன் அவன் நோட்டில் கிழிக்கப்பட்ட பேப்பரைக் காட்டினான்.
லைனில் நிற்கும்போது முன்னால் நின்ற சரசுவுக்குத் தெரியாது அவன் போட்டோவும் ஐ லவ் யூ வாசகமும் அடங்கிய பேப்பரைக் கிழித்து தனது நோட்டிற்குள் வைத்துக் கொண்டது வெட்ட வெளிச்சமாகியது அவளை தலை குனிய வைத்தது.
சரசு பக்கத்தில் வந்து 'என்னடி காலைல தான் பாத்தோம். அவன் கிட்ட வந்து இந்த அக்டிவிடி பண்ண வேண்டியதாப் போச்சு. சாரி சொல்லிட்டு வாடி போலாம்' என்றாள்.
அவள் அவனைப் பார்த்து 'சாரி, நான் வரேன்.'என்று அவனது பதிலுக்கு காத்திராமல் சரசுவோடு ஓடினாள்.
அவன் அவளைப் பார்த்துக் கொண்டு நிற்க, ஷீபா வந்தாள்.
'என்ன சரவணா, சந்தோஷமா?'
சரவணன் திரும்பினான்.
'தேங்க்ஸ் ஷீபா.'
'ப்ரெண்ட்ஸுக்குள்ள நோ தாங்க்ஸ். நல்ல ஆளா தான் புடிச்சிருக்கே. பாத்தாலே தெரியுது நல்ல பொண்ணு தான்.'
'சும்மாவா. ஸ்கூல்லருந்தே காதல். ஒரு தலையாத்தான். கடைசி நம்ம காலேஜிலேயே ஜாயின் பண்ணுவான்னு நெனக்கல.'
'இனிம ஒரே டூயட் தான்.' ஷீபா சிரிக்க சரவணன் வெட்கத்தோடு சொன்னான்.
'அவளுக்கு புடிச்சிருக்குன்னு தான் நெனைக்கிறென். என் போட்டாவ எடுத்து வச்சிகிட்டா.'
'அப்ப புடிச்சிருக்குன்னு தான் அர்த்தம். கவலப்படாத. அவ ஒனக்குத் தான். கூட படிக்கிற அந்த சரசு தான் கொஞ்சம் ராங்கி மாதிரி இருக்கு.'
'நான் என்ன அவளயா கல்யாணம் கட்டப் போறேன்?'
'இருந்தாலும் அவளோட க்ளோஸ் பிரண்டாச்சே!'
'பாக்கலாம்.'
'சரிப்பா. ஜுனியர்ஸ் வெல்கம் பார்ட்டி. எனக்கு கொஞ்சம் வேல இருக்கு. நீ ஆடிட்டோரியம் வந்துரு.'
'சரி ஷீபா.'
ஆடிட்டோரியம் கலகலத்தது.
டான்ஸ், ஜோக்ஸ், பாட்டு என்று சீனியர்கள் ஜூனியர்ஸுக்கு கண்களுக்கு விருந்தளித்தனர்.
பெண்களுக்கு ஒரு ரோஜாப் பூவும், ஆண்களுக்கு ஒரு ரீபிள் பேனாவும் தந்து கை குலுக்கினர். காலையில் ராக் பண்ண சீனியர்கள் சிரித்தபடி கை குலுக்கி பூவும், பேனாவும் தந்தது அவர்களது இறுக்கத்தை தளர்த்தியது.
பின்னர் வகுப்புகள் ஆரம்பித்தன.
சரசுவும், தேவியும் ஒரே வகுப்பு என்பதால் அவளுக்கு பதற்றம் இல்லை. அவள் பெஞ்சில் உட்கார்ந்திருந்த வள்ளியும் அவர்களுக்குத் தோழியானாள்.
மதியம் டிபன் பாக்சை எடுத்துக் கொண்டு மரத்தடி ஒன்றின் அடியில் மூவரும் அமர்ந்தனர்.
'வள்ளி! நீ எங்க படிச்ச?'
அவள் ஒரு மெட்ரிகுலேஷன் ஸ்கூல் பேரைச் சொல்ல இருவரும் அதிர்ந்தனர்.
'அப்போ நீ இங்கிலீஷ் லிட்ரேச்சர் எடுத்திருக்கலாமே?'
'எனக்கு தமிழ் இலக்கியம் தான் புடிச்சிருக்கு. எங்க அப்பா என் விருப்பத்துக்கு எதிரே நிற்க மாட்டாரு.'
'பரவால்லயே'
'ஏன் தமிழ் மீடியத்துல படிச்சிட்டு இங்கிலீஷ் லிட்ரேச்சர் படிக்கிறப்ப இங்கிலீஷ் மீடியத்துல படிச்சிட்டு தமிழ் இலக்கியம் படிக்கக் கூடாதா?'
உடன் மறுத்தாள் தேவி.
'அப்படில்லாம் இல்ல. சும்மா கேட்டேன். இந்தா கொஞ்சம் அவியல் போட்டுக்க.'
'நீ கொஞ்சம் வடகம் எடுத்துக்க.'
சரசு கொஞ்சம் நார்த்தங்காய் ஊறுகாய் எடுத்து இருவரது ப்ளேட்லேயும் வைத்தாள்.
மூவருக்கும் ஒரே வேவ் லெங்க்த் என்பது புரிய வரவே நெருக்கம் ஏற்பட்டது.
மதியம் உள்ள வகுப்புகளும் துவக்க வகுப்புகளாக அமைய நான்கு மணிக்கு காலேஜ் முடிவடைந்தது.
சரசு 'நம்ம காலேஜ் லைப்ரரி நல்லா இருக்கும்னு சீனியர்ஸ் காலைல சொன்னாங்கள்ல போய் பாப்போமா ஒரு அர மணி நேரம்?' என மற்ற இருவரும் சம்மதித்தனர்.
லைப்ரரி தனி கட்டிடத்தில் இருந்தது. உள்ளே நுழைந்ததும் லைப்ரேரியன் ஒரு நோட்டை அவர்களிடம் காட்டி சைன் போடச் செய்தார்.
'புக்ஸ் நீங்க வீட்டுக்கு இப்ப எடுத்துட்டு போக முடியாது. இந்த வாரத்துல ஃபார்ம் ஒண்ணு தருவோம். அதுல ஹெச் ஓ டி சைன் வாங்கினா ஜாயின் பண்ணிரலாம். பதினஞ்சு நாள் ரெண்டு புத்தகம் வச்சுக்கலாம். ஒரே ஒரு தடவ ரினியூ பண்ணலாம்.'
பாத்த உடன் ப்ரெஷர்ஸ் என்றறிந்து சுருக்கமாக லைப்ரரி பயன்படுத்துவது பற்றி சொன்ன லைப்ரேரியன் மீது மரியாதை வந்தது.
'இப்ப நீங்க அந்த ரூமுல போய் படிக்கலாம். அங்க மாகஸின், பேப்பர் எல்லாம் இருக்கும்.'
தலையாட்டி விட்டு மூவரும் அங்கே போனார்கள். ஆங்காங்கே புது மாணவ மாணவியர் அதிகமாகவும், சீனியர்ஸ் குறைவாயும் மாகஸின்களிலும் பேப்பர்களிலும் ஆழ்ந்திருந்தனர். சிலர் கொண்டு வந்திருந்த பேப்பர்களில் நோட்ஸ் எடுத்தனர்.
சரசு ஃப்ரண்ட்லைன் எடுத்து படம் பார்த்தாள். வள்ளி இண்டியா டுடே எடுத்து லாஸ்ட் பேஜ் படித்தாள். தேவி தேவி வார இதழ் எடுத்து கோலங்களைத் தான் கொண்டு வந்த பேப்பரில் வரைந்து பார்த்தாள்.
அரை மணி கழிந்ததும் மூவரும் வாய் திறவாமல் ஒருவரது கைகளை அமுக்கி கண்களால் போகலாமா என்று கேட்டு தலை அசைத்து மெதுவாய் மாகஸின்களை அதற்குரிய இடங்களில் வைத்து விட்டு லைப்ரேரியனிடம் ஒரு தாங்க்ஸ் சாரை உதிர்த்து விட்டு வெளியேறினர்.
'பெரிய லைப்ரரிடி'
'ஆமாம் உள்ளயும் எட்டிப் பார்த்தேன். நெறய ரேக்ஸ் நெறய புக்ஸ் இருக்கு.'
'இனி டெய்லி லைப்ரரியில ஒரு அர மணி நேரம் இருந்துட்டுப் போலாமா?'
'கண்டிப்பா.'
மூவரும் பேசிக் கொண்டே காரிடாரில் நடந்து திரும்பவும் ஒரு அறையில் இருந்து பேச்சுக் குரல் கேட்டது. அது சரவணனது போல் இருக்கவே ஒரு நிமிடம் நின்ற தேவி மற்றவர்களைப் பார்த்து வாயில் விரல் வைத்தாள். மற்ற இருவரும் புரிந்து கொண்டு அமைதியாக சரவணனின் பேச்சுக்குரல் நன்றாகவே கேட்டது.
'ஆமாண்டா. புதுசு தான்.
வாழ்க்கைல ஒரு கிக் வேண்டாமா?'
'அதுக்கு காதல்ங்கற ஆயுதத்தை பயன்படுத்தலாமா?'
'புல்ஷிட். ஒரு பொண்ண நெனச்சுகிட்டு தாடி வளத்துகிட்டு தேவதாசா திரிஞ்சதெல்லாம் அந்தக்காலம். ஒரு 11 பஸ் போயிருச்சின்னா அடுத்த 11ல ஏறுரதில்லயா? காலத்துக்கு ஏத்த மாதிரி மாறிக்க வேணாமா?'
'இது பாவம் இல்லயா?'
'பாவம் புண்ணியம் பாத்தால்லாம் இந்த காலத்துல வாழ முடியாது. என் அழக பாத்து மயங்கி விழற விட்டில் பூச்சு சாவறதுக்கு எல்லாம் வருத்தப்பட்டுட்டு இருக்க முடியுமா என்ன?'
தேவிக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. அந்த வகுப்பின் கதவு லைட்டாய் சாத்தி இருக்க, கோபத்தோடு அதைத் திறந்து கொண்டு போனாள். அங்கே நடு நாயகமாய் சரவணன் நிற்க, அவன் எதிரே இன்னொரு மாணவன் நின்றிருந்தான். பக்கத்திலேயே ஷீபா, நந்தினி மற்றும் இரு பெண்கள். மாணவர்களும் ஒரு ஆறு ஏழு பேர் நின்றிருந்தனர்.
அவளை அங்கு எதிர்பார்க்காத சரவணன் 'ஙீ' என்று விழிக்க, அவனது அருகில் விடு விடு என்று சென்றாள் தேவி.
கையில் வைத்திருந்த நோட்டில் இருந்த காலையில் கிழித்த அவனது போட்டோவுடன் கூடிய ஐ லவ் யூ வாசக பேப்பரை எடுத்து நான்காய் எட்டாய் கிழித்து அவன் முன் வீசி விட்டு கண்களில் பெருகிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு வெளியேறினாள்.
பின்னால் 'தேவி' என்று கூப்பிடும் சரவணனது குரல் அவளுக்கு ஆனந்தத்திற்கு பதில் எரிச்சல் தந்தது.
(தொடரும்)