*****
அங்கே ஹோட்டல் வாசலில் மகளை இறக்கிவிட்ட சண்முகம், “அப்பா பக்கத்துல இருக்க கொரியர் ஆபிஸ் வரைக்கும் போயிட்டு வரேன்டா! நீ சாப்பிட்டு முடிச்சுட்டு என் செல்லுக்கு கூப்பிடு… என்ன?” என்றதும், உள்ளே தன் தோழிகளை கண்களால் தேடிக்கொண்டே, “சரிப்பா” என்றாள் அஷ்டலட்சுமி.
சண்முகம் திரும்பி வந்த வழியே நடக்க, “அப்பாஆஆ? வண்டி எடுத்துட்டு போகலையா?” என்றாள் இவள் உரக்கவே!
“பக்கத்துல தானே? நான் நடந்தே போய்க்குறேன்” என்றவர் சென்றுவிட, ஒருவித துள்ளலுடன் அந்த கண்ணாடி கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள் அஷ்டலட்சுமி.
வேகமாய் தேடிய அவள் கண்களுக்குள் தன் தோழிகள் மூவர் அமர்ந்திருப்பது தெரிய, துரிதமாய் அவர்களை நெருங்கி, “ஹே! டாகீஸ்! எப்படிடி இருக்கீங்க?” என்று உற்சாகமாய் சிறுப்பிள்ளை போல கேட்க,
“உஸ்ஸ்! ஏண்டி இப்படி கத்துற?” என சுற்றும் முற்றும் பார்த்தபடி கேட்ட ஒருத்தி, “உட்காரு முதல்ல” என்றாள் சங்கடமாய்.
அவள் அப்படி பார்க்கவும் தன்னை சுற்றிலும் பார்வையை ஓட்டிய அஷ்டலட்சுமிக்கு அங்கிருந்த சிலர் தங்களை வேடிக்கையாய் பார்ப்பது தெரிய, அசடு வழியும் சிரிப்புடன், “சாரிடி” என இருக்கையில் அமர்ந்தாள் அவள்.
“இன்னும் நீ மாறவே இல்லல? அதே சின்னபிள்ளைத்தனமா விளையாட்டா சுத்திட்டு இருக்க” அவளுக்கு எதிரே இருந்த ஷீலா சிறு ஏக்கத்துடன் சொல்ல,
“அவளுக்கென்ன நம்மளை மாறி மாமியார் தொல்லை, பிள்ளைங்க கடமைன்னு பொறுப்பா இருக்கு? ஹேப்பிலி சிங்கிள்” பெருமூச்சோடு சொன்னாள் வர்ஷா.
ஏனோ தோழிகளின் பேச்சு அவளுக்கு ரசிப்பாய் இல்லை. வந்தபோது இருந்த உற்சாகம் சிறிது வடிந்துவிட்டதை போல இருந்தது.
“வீட்டுல மாப்பிள்ளை பார்க்குறாங்களா இல்லையாடி” முதலில் பேசியவள் இப்போது கேட்க, “ம்ம்ம்! பார்க்குறாங்க” என்ற அஷ்டாக்கு அதற்குமேல் பேச வரவில்லை.
சர்வர் வந்து ‘என்ன வேண்டும்?’ என கேட்க, ஆளாளுக்கு ஒவ்வொன்றாய் சொல்ல, இவள், ‘ஏதோ ஒன்று’ என விட்டேத்தியாய் சொல்லிவிட்டு வேடிக்கை பார்க்க தொடங்கினாள்.
அவள் அங்கே இருப்பதையே மதியாதவர்களாய் மற்ற மூவரும் தங்கள் சொந்த, சோக கதைகளை ஆளாளுக்கு எடுத்து விட, ‘ஒழுங்கா அம்மா பேச்சை கேட்டுக்கிட்டு வீட்டுலையே இருந்திருக்கலாம்’ என எண்ணிக்கொண்டு மொபைலை நோண்ட ஆரம்பித்தாள் அவள்.
திடீரென இவள் புறம் திரும்பிய ஷீலா, “நீ வரமாட்டன்னு நினைச்சோம்…” என சொல்ல, சுத்தமாய் அவளுக்கு மனதே விட்டு போனது.
வாட்சைப் க்ரூப்பில் ‘பொதுவாய்’ வந்த மெசேஜை பார்த்துவிட்டு தோழிகளை காண ஆவலாய் வந்தது பெரிய தவறோ என தோனிவிட்டது. வேண்டா விருந்தாளியாய்’ அமர்ந்திருப்பதாய் தோன்ற, அசௌகர்யமாய் நெளிய ஆரம்பித்தாள்.
“நாங்கல்லாம் கல்யாணம் ஆனவங்க! வீட்டுல புருஷனுக்கு ‘ஐஸ்’ வச்சுட்டு ரொம்ப நாளுக்கு பிறகு ஒண்ணா மீட் பண்ணிருக்கோம்! ஆனா, நீ எப்டி உன் அம்மாக்கிட்ட இருந்து தப்பிச்சு வந்த?”
அஷ்டா, “அப்பா தான் கூட்டிட்டு வந்தாங்க!”
ஷீலா, “அதானே பார்த்தேன்! குழந்தையை எப்டி தனியா விட்டாங்கன்னு” என்று சிரிக்க மற்ற இருவரும் ஜோடி போட்டு சிரிக்க, இவளுக்கு என்னவோ போல் ஆனது.
இடையே ஆர்டர் செய்ய உணவு வர, ஒருவருக்கொருவர் பகிர்ந்துக்கொண்டு பேச்சுடன் சேர்த்து உணவையும் உள்ளே தள்ளினர்.
“இந்நேரம், ஜோதி மட்டும் இருந்திருந்தா செம்ம ‘ஃபன்’னா இருந்துருக்கும்” வர்ஷா சொல்ல, அதை ஆமோதித்த மற்ற இருவரும், “அவளுக்கு இப்படி ஆகும்ன்னு யார் நினைச்சோம்?” என வருந்துவதைக்கண்டு,
“என்ன? என்ன ஆச்சு அவளுக்கு?” என்றாள் அஷ்டா.
“ரெண்டு வருஷம் முன்னாடி தான் மேரேஜ் ஆச்சு! இப்போ ஹஸ்பென்ட் பிடிக்கல, மாமியார் சரியில்லன்னு ‘டிவோர்ஸ்’க்கு அப்ளை பண்ண போறதா சொல்றா!”
“அச்சச்சோ!” என உண்மையிலேயே பதறிய அஷ்டா, “நான் கூட அவ மேரேஜ்க்கு போயிருந்தேனே! அந்த அண்ணாவை பார்க்க ஒன்னும் மோசமா தெரியல எனக்கு” என்று சொல்ல,
“யாரையும் பார்த்ததுமே சுயரூபம் தெரியாது” என்றாள் கவி.
“ஆரம்பத்துல எல்லாம் தணிஞ்சு தணிஞ்சு தான் போவானுங்க! ஒரு மூணு மாசம் போகட்டும், வண்டவாளம் எல்லாம் கொஞ்ச கொஞ்சமா வெளில வரும்! அதுலயும் ஒரு புள்ள பொறந்துட்டா போதும், நம்ம எல்லாம் அவங்களுக்கு துச்சம்” என வர்ஷா பொரிய,
“அதென்ன மூணு மாச கணக்கு…” புரியாமல் விழித்தாள் அஷ்டா.
அவளுக்கு விளக்கப்போன வர்ஷாவை தடுத்த ஷீலா, “இதெல்லாம் பெரியவங்க சமாச்சாரம்! உனக்கெல்லாம் சொன்னா புரியாது” என்றாள் இவளிடம்.
கவியும் வர்ஷாவும் நமட்டு சிரிப்பு சிரிக்க, “ஏன் புரியாது? எல்லாம் எனக்கு புரியும்” என வீம்பாக சொன்ன அஷ்டாவிடம்,
“புரியுற அளவுக்கு நீ இன்னும் வளரல பாப்பா! நீ தெரிஞ்சுக்க வேண்டியது நிறைய இருக்கு”
‘பாப்பா-வா?’ என வெதும்பிய அஷ்டா, “நான் பாப்பா ஒன்னும் இல்ல! எனக்கும் எல்லாமே புரியும்” என முறைப்பாய் சொல்ல,
“இதெல்லாம் புரிஞ்சுருந்தா நீ இவ்ளோ நாள் ‘சிங்கிள்’ளா இருந்துருக்க மாட்ட கண்ணு” என கவி சொல்ல, ‘கொல்’லென்ற சிரிப்புடன் ‘ஹை-பை’ கொடுத்துக்கொண்டனர் மூவரும்.
அதற்குமேல் அங்கே இருக்க முடியாமல் ‘கை கழுவும்’ சாக்கில் எழுந்து வேகமாய் ‘ரெஸ்ட்ரூம்’ நோக்கி சென்றாள் அஷ்டா.
கைகள் ஒன்றோடொன்று உரசி நீரில் நனைய, எதிரே இருந்த கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்துக்கொண்டே,
“எனக்கென்ன புரியாது? நான் என்ன சின்ன குழந்தையா? ஒரு கல்யாணம் ஆச்சுன்னா பெரிய ‘இவ’ன்னு நினைப்பா? ஏன் எனக்கெல்லாம் கல்யாணம் ஆகாதா என்ன? பாப்பா’வாம் பாப்பா” என வாய் அதன்போக்கில் புலம்பித்தள்ள,
ஐந்து நிமிடங்களுக்கு மேலாய் கையை நீரில் நனைய விட்டவள், ‘போதும்’ என திரும்பி வெளியே சென்றபோது, டைல்ஸ் தரையில் சிதறிக்கிடந்த நீரை கவனிக்காது காலை வைத்துவிட மறுநொடி புரிந்துப்போனது தாம் தரையில் விழுந்து புதையல் எடுக்கப்போவது உறுதி என!
பயத்தில் இருகைகளாலும் முகத்தை இறுக மூடிக்கொண்டு தான் விழப்போகும் மைக்ரோ நொடிக்காக அவள் காத்திருக்க, அப்படி எதுவும் நடக்காது, தரை நோக்கி பாதி சரிந்த உடலுடன் அப்படியே நின்றுவிட்டிருந்தாள் அவள்.
“ஹலோ… மேடம்….?”
ஒரு ஆடவனின் குரல் அருகே கேட்க, தான் விழுந்துவிடவில்லை என்று உணர்ந்தாலும், இயல்பாய் மூச்சுவிட அவளுக்கு சில நொடிகள் பிடித்தது.
அதற்குள் இரு சொடக்கு சத்தத்துடன், “ஹே, பாப்பா” என்ற வார்த்தைகள் அவள் செவி அடைய, வேகமாய் முகத்தில் இருந்து தன் கரத்தை எடுத்தவள், தன்னை தாங்கி பிடித்திருந்தவனை நொடியில் பிடித்து தள்ளி,
“யாரு பாப்பா? இல்ல, யாரு பாப்பான்னு கேட்குறேன்? என்னை பார்த்தா பாப்பா மாதிரி தெரியுதா?” என எகிறியவள்,
“வயசு இருவத்தி எட்டு ஆச்சு! எம்.பி.ஏ முடிச்சுருக்கேன்! அஞ்சடி ஆறு அங்குலம் இருக்கேன்! வெயிட்டு ஐம்பத்தி நாலு கிலோ! இப்ப சொல்லுங்க, உங்க ஊருல பாப்பா எல்லாம் இப்படி தான் இருப்பாங்களா? கல்யாணம் ஆகலன்னா எதுவுமே தெரியாதுன்னு நினைச்சுக்குவீங்களா?” என அவள் கேட்டுக்கொண்டே போக,
“ஹலோ வெயிட் வெயிட் வெயிட்!” என கையுயர்த்தி தடுத்தவன், “கை கழுவலாம்ன்னு வந்தேன், நீங்க விழ பார்த்தீங்க! உதவி செய்வோம்ன்னு தாங்கி பிடிச்சேன்! அதுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லலன்னா கூட பரவாலங்க! இப்படி பப்ளிக் பிளேஸ்ல இந்த திட்டு திட்டுறீங்க? கொஞ்சம் உங்களை சுத்தி பாருங்க, எல்லாரும் என்னை குறுகுறுன்னு பார்க்குறாங்க! இன்னும் கொஞ்சம் விட்டா ‘ஈஃப் டீசிங்’ன்னு நினைச்சு என் சட்டையை பிடிக்கக்கூட வந்துடுவாங்க” என அவன் சொன்ன பிறகே சுற்றும் முற்றும் பார்த்தவள், அவஸ்தையாய் தன் நெற்றியிலேயே தட்டிக்கொண்டாள்.
அதுவரை அவர்களை காட்சிப்பொருளாய் பார்த்துக்கொண்டிருந்தவர்களின் பார்வை வீச்சு தாங்காது, “சாரி” என மெல்லிய முனுமுனுப்புடன் வேகமாய் அங்கிருந்து ஓடினாள் அஷ்டலட்சுமி.
டீலர் ஒருவருடன் ‘பிசினஸ்-டின்னர்’ வந்திருந்த வீரகேசரி, ‘ஹே டாகீஸ்!’ என்ற அலறலுடன் அஷ்டா உள்ளுக்குள் நுழையும் போதே அவளை பார்த்துவிட்டிருந்தான்.
‘அட, நம்ம கிழிஞ்ச நோட்டு’ என நொடியில் அவளை அடையாளம் கண்டுக்கொண்டவனுக்கு, அதன்பிறகு எதிரே இருந்தவரிடம் பேசிக்கொண்டே உணவை உண்டாலும் கண்கள் அடிக்கடி அவளை தொட்டு மீண்டது.
தோழிகள் பேசிக்கொள்வது இவனுக்கு கேட்காவிடினும் அஷ்டாவின் முக மாறுதல்களை கண்டவன், ‘வந்தப்போ இருந்த சிரிப்பை காணோமே’ என எண்ணினான்.
அந்நேரம் அவள் அங்கிருந்து எழுந்து செல்ல, இவனும் கை கழுவும் சாக்கில் அங்கிருந்து நகர, அதன்பின் நடந்ததெல்லாம் நாம் அறிந்ததே!!!
வீராவிடம் இருந்து விலகி விறுவிறுவென தோழிகள் இருந்த இடத்திற்கு சென்ற அஷ்டா அமைதியாய் அமர்ந்துக்கொள்ள, அப்போதும் அவர்கள் தங்களுக்குள்ளாக எதையோ பேசி சிரித்துக்கொண்டிருந்தனர்.
சிறுது பொறுத்தவள் தான் அங்கே தனித்திருப்பதை போல தோன்ற, கைகடிகாரத்தில் நேரம் பார்க்க ஆரம்பித்தாள்.
மணி எட்டை கடந்து சென்றுக்கொண்டிருந்தது.
‘இதுக்குமேல லேட் பண்ணுனா நீலா திட்டுமே’ என தன் அன்னையின் அட்வைசுக்கு பயந்தவள் ‘கிளம்புவோம்’ என முடிவெடுத்து,
“சரிடி, நீங்க பேசிட்டு இருங்க, நான் கிளம்புறேன்” என சொன்னதும், மறுப்பேச்சின்றி “ஓகே” என சொல்லிவிட்ட தோழிகளை அதிருப்தியாய் கண்டாள் அவள்.
ஒரு பேச்சுக்காவது ‘இருந்துவிட்டு போ’ என சொல்லக்கூடாதா என்று தோன்றியது.
இருக்கையில் இருந்து எழுந்துகொண்டவள் அங்கிருந்து செல்ல விழைய,
“ஹே அஷ்டா, சீக்கிரமா கல்யாணம் செஞ்சுக்குற வழியை பாரு! இப்படியே வருஷத்தை கடத்திட்டு இருந்தா நேரா அறுபதாம் கல்யாணம் தான் நடக்கும் பார்த்துக்கோ” என்று நமட்டு சிரிப்பு சிரித்தாள் கவி.
அவளை ஒத்து ஊதியே, “பொண்ணுங்களோட மார்கெட் வேல்யூ எல்லாம் 25 வரைக்கும் தான்! அதுக்குபிறகு அப்டியே குறைஞ்சுட்டு போய்டும்! இதுக்குமேல நீ டிலே பண்ணா, தொப்பை வச்ச அங்கிளோ, இல்ல முடி கொட்டுன தாத்தாவோ தான் கிடைக்கும்!” என்று சொன்ன வர்ஷாவுக்கு ‘ஹை-பை’ கொடுத்த ஷீலா,
“எப்டிதான் வேலைக்கும் போகாம, கல்யாணமும் செஞ்சுக்குடுக்காம உன்னை இத்தனை வருஷமா வீட்டுல வச்சுருக்காங்களோ தெரியல எனக்கு! ரொம்ப கிரேட் தான் உன் பேரெண்ட்ஸ்! என்னை பெத்தவங்களும் இருக்காங்களே? நான் வேலைக்கு போறேன்னு சொல்ல சொல்ல கேட்காம கட்டி வச்சுட்டாங்க! இப்ப புள்ளை புருஷன்னு மெசின் மாறி ஓடிக்கிட்டு இருக்கேன்” என்றாள்.
அஷ்டாவுக்கு அங்கு நிற்கவே பிடிக்கவில்லை. ‘ஏனடா வந்தோம்?’ என கணக்கில்லாமல் தன்னைத்தானே நொந்துக்கொண்டாள்.
அதிலும் தனக்கு திருமணம் முடியவில்லை என்ற ஒரே விஷயத்தை கொண்டு இப்படி அவர்கள் கிண்டல் அடிப்பதில் எரிச்சல் தான் வந்தது அவளுக்கு.
ஒருவேளை தான் ஒரு வேலையில் இருந்திருந்தால் இவர்களின் இந்த ஏளன பார்வை தன் மீது விழுந்திருக்காதோ? என்று வேறு தோன்றியது.
ஷீலா, “எக்ஸ்பைரி ஆகுறதுக்குள்ள கல்யாணம் செஞ்சுக்க! நம்ம செட்’லையே நீ மட்டும் தான் இன்னும் கன்னியா……வே இருக்க!” என ரகசியமாய் அனுதாபம் போல சிரிக்க, மறுநொடி அங்கே நிற்காமல் விறுவிறுவென வெளியே வந்தவள், தன் தோழிகள் மீது காட்ட முடியாத கோபத்தை ‘கிக்கரில்’ காட்ட, ஒரே உதையில் உறுமிக்கொண்டு கிளம்பியது அவளது ஸ்கூட்டி ஸ்ட்ரீக்!