“ம்மா, வளைச்சு கட்டி ஊருல இருக்க அத்தனை பொண்ணோட ஜாதகத்தையும் உங்க முன்னாடி கொட்டிருக்கேன்! இதுக்கு மேலையும் வேற கேட்டா ‘நான் தான் என் பொண்டாட்டிக்கிட்ட சொல்லி பொம்பளை புள்ள பெத்துக்கணும்” என சோகம் போல சொல்லிக்கொண்டிருந்தார் தரகர்.
“ஜாதி தடையில்லைன்னு சொல்லியும் நீங்க பெருசா ஒன்னும் கொண்டு வர மாட்டேங்குறீங்களே?” அவர் கொடுத்த போட்டோக்களை எல்லாம் பார்த்துக்கொண்டே சொன்னார் விஜயா.
“ஜாதி தலையில்லைன்னு நீங்க மட்டும் சொன்னா போதுமா? பொண்ணு வீட்டுக்காரங்களும் அப்படி நினைக்கணும்ல?” என்ற தரகர்,
“திருச்சிக்குள்ளையே வேணும்ன்னு வேற கேட்குறீங்க? தேடி பொறுக்கி கொண்டு வந்தா, பாதியை நீங்க வேண்டாங்குறீங்க! மீதியை உங்க பையன் வேண்டாங்குறாரு! அதையும் மீறி போனா, பொண்ணு வீட்டுல வேண்டாம்ன்னு சொல்லிடுறாங்க” என்றார் அலுத்துப்போன குரலில்.
சுடசுட பில்ட்டர் காப்பியை டவராவில் கொண்டு வந்து அவர் முன் வைத்த வீரா, நமட்டு சிரிப்போடு அங்கிருந்து நழுவிக்கொள்ள பார்க்க, “டேய் கண்ணா, நீ ஒருமுறை இந்த போட்டோ எல்லாம் பார்த்துடேன் டா” என்றார் விஜயா அவனிடம்.
“நீங்களே பாருங்கம்மா!”
“ஏன்டா இப்டி சொல்ற?”
“உங்களுக்கு தேவை நல்ல குடும்பமும், செவ்வாய் தோஷ ஜாதகமும் தானே? முதல்ல அது ஒத்து வர பொண்ணா பாருங்க! அதுக்கு பிறகு என் போட்டோவை அவங்களுக்கு குடுங்க! பொண்ணுக்கு ஓகே’ன்னா எனக்கு மறுபேச்சே இல்ல! கல்யாணத்துக்கு நான் ரெடி” என்றுவிட்டு தோட்டத்தை நோக்கி சென்றுவிட்டான்.
செல்லும் அவனை ஆச்சர்யமாய் பார்த்தார் விஜயா.
‘நிஜமாவே நம்ம காட்டுற பொண்ணை கட்டிக்க முடிவு பண்ணிட்டான் போலயே’ என சந்தோஷமாய் நினைத்தார்.
தன்னையே பார்த்துக்கொண்டிருந்த தரகரிடம், விஜயா, “பாருங்க! அம்மா காட்டுற பொண்ண கட்டிக்குறேன்னு திடமா சொல்லிட்டு போற பையனுக்கு, நான் எப்பேர்ப்பட்ட பொண்ண பார்க்கணும்? இந்த காலத்துல எந்த புள்ளங்க வீட்டுல பார்க்குற வரை சும்மா இருக்கு? மீசை அரும்புனதுமே காதல்’ன்னு சொல்லிட்டு வந்துள்ள நிக்குதுங்க?” என்று பெருமையாய் பீத்திக்கொள்ள,
“அதே தாங்கம்மா! நம்ம பையன் தான் தங்கமாச்சுங்களே!” என தரகரின் வாய் சொன்னபோதிலும் மனமோ, ‘காலாகாலத்துல லவ்வு கிவ்வு செஞ்சு தொலைச்சுருந்தா இந்தம்மாக்கிட்ட இப்படி நான் மாட்டிக்கிட்டு முழிக்குற நிலைமை வருமா?’ என வீராவை எண்ணி பொருமிக்கொண்டிருந்தது.
“அதனால தரகரே! நீங்க என்ன பண்றீங்க? அடுத்த முறை வரப்போ நல்லா படிச்சு, நல்ல குடும்பமா, கண்ணுக்கு நிறைவா, எல்லாத்துக்கு மேல செவ்வாய் தோஷ ஜாதகமா பார்த்து எடுத்துட்டு வாங்க! இப்போ கிளம்புங்க” என்றுவிட, பெரிய கும்பிடாய் போட்டவர், விறுவிறுவென நடையை கட்டினார்.
****
மதிய நேரம் தாண்டி மாலை எட்டிப்பார்க்கும் நேரம் தனது அறையில் இருந்து நீண்ட கொட்டாவியுடன் வெளியே வந்தாள் அஷ்டலட்சுமி.
கூடத்தில் அமர்ந்து மறுநாள் சமையலுக்கு வேண்டி கீரை ஆய்ந்துக்கொண்டிருந்த நீலா, வெளியே வந்த மகளை தாராளமாய் முறைத்துக்கொண்டு மறுக்கண்ணில் கடிகாரத்தை பார்க்க, அன்னையின் பார்வையை கண்டுக்கொண்டாலும், அதை சட்டை செய்யாதவளாய் தனது பாட்டியின் கழுத்தை கட்டிக்கொண்டு அவரருகே அமர்ந்துக்கொண்டாள்.
மங்களம், “என்னடி தங்கம்? ரொம்ப அசதியோ இன்னைக்கு?”
இன்னுமொரு கொட்டாவியை அரைகுறையாய் விட்டவள், அதோடே, “ம்ம்ம்” என்று சொல்ல, “அப்ப இன்னும் சித்த தூங்கிருக்கலாம்ல கண்ணு?” என்றார் மங்களம், பேத்தியின் தலை கோதிக்கொண்டே.
நீலாவிற்கு வாய்வரை வார்த்தை வர துடித்தது. பகலில் தூங்குவதே அவருக்கு பிடிக்காது எனும்போது மாலை ஆறடிக்கும் வரை நன்கு உறங்கிவிட்டு முகம் கூட கழுவாது அப்படியே வந்து அமர்ந்திருக்கும் மகளை கண்டிக்க தோன்றினாலும், அவளுக்கு சப்போர்ட்டாக வந்துடும் மாமியாரையும் கணவரையும் எண்ணி கோபத்துடன் கீரையை கிள்ளிப்போட்டுகொண்டிருந்தார் அவர்.
“ம்ச்! பசி வந்துடுச்சு அப்பத்தா” முகத்தை சுருக்கி பாவமாய் அவள் சொன்ன தோரணையில் இளகிப்போன மங்களம், “ஏய் புள்ள பசிக்குதுங்குதுல? பார்த்துட்டு அப்படியே இருக்க? போய் எதாவது செஞ்சு எடுத்தா…போ” என விரட்டினார் மருமகளை.
மகளை முறைத்தபடி, “போய் முகத்தை கழுவிட்டு வந்து உட்காரு முதல்ல” நீலா அதட்ட,
“பசிக்குதுன்னு சொல்ற புள்ளைக்கிட்ட போய் அதை பண்ணு இதை பண்ணுன்னு சொல்லிக்கிட்டு இருக்க? முதல்ல பசி அடங்கட்டும், அப்பறம் என் தங்கம் எல்லாம் செய்யும்” என்றார் மங்களம்.
“இல்லத்த, விளக்கு வைக்குற நேரம் இப்படி தலைவிரி கோலமா இருந்தா நல்லா இருக்கா?” பொறுமையாய் நீலா சொல்ல முயன்றும்,
“சொல்றதை செஞ்சு பழகு நீலா” என மருமகளைத்தான் அதட்டினார் அந்த பாசக்கார பாட்டி.
இதற்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்பதை போல கால் மேல் கால் போட்டு ஆட்டிக்கொண்டே டிவியில் பார்வை வைத்திருந்த மகளை முறைத்துக்கொண்டே நீலா உள்ளே செல்ல,
“அப்பா இன்னும் வரலையா அப்பத்தா?” என வாசலை பார்த்துக்கொண்டே கேட்டாள் அஷ்டலட்சுமி.
“இப்ப வந்துடுவான்டா” என மங்களம் சொல்லி முடிப்பதற்குள் வாசல் கதவை திறக்கும் சத்தம் கேட்டது.
“வந்துட்டான் பாரு” என மங்களம் சொல்ல, உள்ளே நுழைந்த சண்முகம் வழக்கத்தை விட சற்று சோர்வாகவே இருந்ததை போல இருந்தது.
“என்ன சண்முகம்? கல்யாணம் எல்லாம் நல்லவிதமா முடிஞ்சுதா? நம்ம குடும்பமா வரலன்னு எதுவும் வருத்தப்பட்டாங்களா?” என திருவாரூர் அருகே தனது சொந்த கிராமத்திற்கு ஒரு திருமணத்திற்க்காக சென்று வந்த மகனிடம் விசாரணையை ஆரம்பித்தார் மங்களம்.
கையில் இருந்த அலைபேசியில் தட்டிக்கொண்டே, மறுக்கையில் அன்னை கொடுத்து சென்ற தின்பண்டத்தை கொறித்துக்கொண்டிருந்த மகளை பார்த்து பெருமூச்சு விட்டவர், “நல்ல விதமா முடிஞ்சுதும்மா” என்றார்.
“எதுவும் நல்ல வரன் இருக்கா நம்ம பாப்பாக்கு? பார்த்தியா?”
எந்த திருமணத்திற்க்கு பத்திரிக்கை வந்தாலும் தவறாமல் கிளம்பி செல்லும் சண்முகம், சொந்தத்தில் மகளுக்கு ஒரு வரன் அமையுமா? என சல்லடை போட ஆரம்பிப்பார். அதைக்கொண்டு மங்களம் கேட்க,
சண்முகம், “பார்த்தேன் ம்மா! ரெண்டு இடம் ஒத்து வரப்போல இருந்துச்சு! நம்பர் வாங்கி வச்சுருக்கேன்! இந்த வாரத்துல பேசி பார்ப்போம்!” என்றார்.
அதுவரை அங்கிருந்த அஷ்டலட்சுமி, வேகமாய் எழுந்து தனது அறைக்குள் சென்றுவிட, அவளை பார்த்துக்கொண்டே, “கல்யாண பொண்ணுக்கு நம்ம பாப்பாவை விட நாலு வயசு கம்மி! இவ செட்டு எல்லாம் கைல ஒன்னு இடுப்புல ஒண்ணுன்னு இருந்தாங்க… நம்ம பாப்பாக்கு மட்டும் எந்த வரன் வந்தாலும் தட்டிக்கிட்டே போகுது!” என மெல்லிய குரலில் வருத்தமாய் சொன்னார் சண்முகம்.
“அதுக்கேன் சண்முகம் வருத்தப்படுற? ஆண்டவன் இன்னும் நம்ம பிள்ளைக்கு கல்யாண பிராப்தம் குடுக்கல! படைச்சவனுக்கு தெரியாதா? எப்போ என்ன செய்யணும்ன்னு? நீ கலங்காம இரு! நம்ம பிள்ளையை தலைல தூக்கி வச்சு தாங்குற மாதிரி ஒருத்தன் வரானா இல்லையான்னு பாரு” என திடமான குரலில் ஆறுதலாய் சொன்னார் மங்களம்.
“நம்ம சொந்தத்துக்குள்ளையே சொல்லிவச்சு பார்க்குறத விட, வெளில நாலு இடத்துல புள்ள ஜாதகத்தை குடுத்து பார்த்தா என்னன்னு தோணுதும்மா!” சண்முகம் சொல்ல,
“வெளில யார்க்கிட்ட குடுப்ப நீ?” என குழப்பமாய் கேட்டார் மங்களம்.
“வரன் பார்த்து குடுக்குற ஆபிஸ் எல்லாம் இருக்குல? தகவல் மையம்’ன்னு சொல்லுவாங்களே? அங்க குடுத்து காசை கட்டுனா, நமக்கு தோதான வரன் வரப்போ தகவல் குடுப்பாங்க” என்றதும்,
“ஓஹோ! நல்லதா தானே இருக்கு! செஞ்சுடேன் அப்படியே” என்றார் மங்களமும்.
சண்முகம், “நீ என்ன சொல்ற நீலா?”
அதுவரை இருவரின் பேச்சையும் மௌனமாய் கேட்டுக்கொண்டிருந்த நீலாவிடம் கடைசியாய் ஒப்புதல் கேட்பதை போல விஷயம் பகிரப்பட, “சரி” என தலையாட்டினார் அவரும்.
உள்ளிருந்து வெளியே வந்த அஷ்டலட்சுமி, வெளியில் செல்வதற்கு ஏதுவாய் கிளம்பி வந்திருக்க, அதைக்கண்டதும், “எங்கடி கிளம்பிட்ட?” என முகத்தை சுருக்கினார் நீலா.
“என் பிரென்ட் ஷீலா ‘சங்கீதா’ஸ்’ல இருக்கா! என்னையும் கூப்பிட்டா, நான் போயிட்டு வரேன்” என சொன்னதும், சினத்தில் சிவந்த முகத்துடன்,
“இருட்டி போன நேரத்துல தடிமாடு மாதிரி ஊரை சுத்துறேன்னு வந்து நிக்குற? எங்கயும் போக தேவ இல்லை! உள்ள போடி” என்றார் நீலா, விட்டால் அடித்து விடுவதைப்போல.
மறுநொடி, “அப்பாஆஆஆ….” கண்ணைக்கசக்கிக்கொண்டு அவர் அருகே சென்று சிணுங்கினாள் பெண்.
சண்முகமும் மனைவிக்கு ஒத்துப்போவதைப்போல, “இந்த நேரத்துல எதுக்குடா வெளில போற? நாளைக்கு போலாம்டா” என்றதும்,
கணவனின் ஆதரவு கிட்டிய தெம்பில், “காலம் கெட்டுக்கடக்கு! பகல்ல வெளில போற பொண்ணுக்கே பாதுகாப்பு இல்ல! இவ என்னடான்னா ராத்திரில ஊர சுத்துறாளாம்!” என்று மேலும் திட்ட, வராத கண்ணீரை வந்ததை போல கண்ணைத்துடைத்தாள் அஷ்டலட்சுமி.
தனது ஒரே பேத்தி கண்ணை கசக்கியதும் மனது பொறுக்காத மங்களம், “அழுகாத தங்கம், உன் நல்லதுக்கு தானே சொல்றாங்க?” என தாடைப்பிடித்து கொஞ்ச,
“போங்க அப்பத்தா! என் பிரென்டுக்கிட்ட நான் உடனே வரேன்னு ஜம்பமா சொல்லிட்டேன்! அவளும் எனக்காக அங்க ஹோட்டல்ல காத்துக்கிட்டு இருப்பா! இப்பப்போய் ‘நான் வரல’ன்னு சொன்னா அசிங்கமா இருக்காதா?”
“அதை ‘வரேன்’னு சொல்றதுக்கு முன்னாடி யோசிச்சுருக்கணும்” என்று முறைத்த நீலா, “எல்லாம் உன் இஷ்டத்துக்கு முடிவெடுத்து ஆட வேண்டியது… உன்னை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்கங்குற கொழுப்பு தானே?” என மிரட்ட,
அதுவரை மனைவி திட்டுவதை பொறுத்துக்கொண்டு அமர்ந்திருந்த தந்தைக்கு, அதற்குமேல் தாளவில்லை.
“போதும் விடு நீலா” என்றார் சண்முகம் கடினமாய்.
மனைவியை விட்டு மகளிடம் திரும்பிய சண்முகத்தின் முகம் நொடியில் இளகியது.
“போயே ஆகணுமாடா?” என வாஞ்சையாய் அவர் கேட்க, “நான் வரேன்னு ‘ப்ராமிஸ்’ பண்ணிட்டேன்ப்பா! எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க'” என்றாள் அவள்.
“சரி வா, அப்பா கொண்டு போய் அந்த ஹோட்டல்ல விடுறேன்! சீக்கிரமா சாப்பிட்டு முடிச்சுட்டு திரும்ப அப்பாக்கு கூப்பிடு, நானே வந்து கூட்டிட்டு போறேன், சரியா?” என கேட்க,
“அச்சோ… என் ஸ்வீ…..ட் டேடி” என அவர் கன்னம் கிள்ளியவள், “வாங்கப்பா போலாம்” என துள்ளிக்குதித்து வாசலுக்கு சென்றுவிட்டாள்.
“அவ இஷ்டத்துக்கு எல்லாம் வளைஞ்சு போறது கொஞ்சமும் சரி இல்லங்க” என்ற மனைவியின் ஆற்றாமை குரலுக்கு அங்கே பதிலின்றி போனது.