“வேண்டாம் மாப்ள! இது சரி வரும்ன்னு எனக்கு தோணல” என உறுதியாய் மறுத்துக்கொண்டிருந்தார் சண்முகம்!
“முதல்ல இந்த மாப்பிள்ளையை விடுங்க மாமா! வீரா’ன்னே சொல்லுங்க” என அதட்டலாய் சொன்னான் வீரா.
“மாப்ள?” என மீண்டும் அவர் தொடங்க…
“வீர்….ர்..ரா” என அழுத்தி அவன் சொன்னதும், “சரி வீரா! என்னதான் நம்ம சொந்தமா இருந்தாலும் காசு உள்ளுக்குள்ள வந்துட்டா பின்ன உறவுல சிக்கலா போய்டும்!” என்றார் சண்முகம்.
“என்ன மாமா பேசுறீங்க? நான் உங்கக்கிட்ட அப்படி என்ன கேட்டுட்டேன்? என்கிட்ட இருக்க வண்டில ஆறு சும்மா இருக்கு! நீங்க பொறுப்பெடுத்து பார்த்துக்கோங்கன்னு தானே சொன்னேன்” என்றான் ஆதங்கமாய்.
“சும்மா இருக்குன்னு சொல்றது நம்புற மாதிரி இல்லையே!” என்றார் சண்முகம் கண்கள் இடுக.
“சும்மான்னா….” என இழுத்த வீரா, ‘என்ன சொல்லலாம்?’ என யோசிக்க,
“மாமனாருக்கு தொழில்ல உதவி செய்யுறதுன்னு முடிவு செஞ்சுட்டு வந்துட்டு, இப்போ நான் கேட்கவும் என்ன சொல்லி என்னை சம்மதிக்க வைக்குறதுன்னு யோசிக்குறீங்க… அதானே?” சரியாய் கேட்டார் சண்முகம்.
மறுக்காமல் ஒத்துக்கொண்டான் வீரா.
“உங்களுக்காக நான் புதுசா எதையும் வாங்கி குடுக்கல மாமா! என்கிட்ட இருக்குறதை குடுக்குறேன்! யாருக்கோ வாடகைக்கு தரதை, நான் உங்ககிட்ட குடுக்கப்போறேன், அவ்ளோதான்! அதுவுமில்லாம எனக்கு இதெல்லாம் ஒரு ஆளா பார்த்துக்க சிரமமா இருக்கு! எனக்கு கொஞ்சம் உதவி செய்யலாம்ல?”
அப்போதும் அவர் அமைதி காக்க, “நீங்க இதை கவனிச்சுக்கிட்டா நான் புதுசா ஒரு பிசினஸ் பண்ணலாம்ன்னு யோசிச்சேன் மாமா! கிட்டத்தட்ட அது முடியுற நிலைமைல தான் இருக்கு! நீங்க நான் கேட்டு மறுக்க மாட்டீங்கன்னு நம்புனேன்! இப்போ என்னன்னா இவ்ளோ யோசிக்குறீங்க!?”
வார்த்தைகளில் கிலோ கணக்கில் தேன் தடவி அவன் கேட்க, மறுக்க தான் தோன்றுமா மாமனாருக்கு?!
இருந்தாலும் சற்று யோசித்தார். தயக்கமாய் கூட இருந்தது மருமகனிடம் எப்படி வாங்குவது என்று!!!
இன்னமும் அவர் யோசிப்பதை கண்டவன்,
“நான் என் அப்பாவை பார்த்தது இல்ல மாமா! சொல்லப்போனா அவரோட இருந்த நினைவுகள் கூட என்கிட்ட இல்ல… அப்பா பாசம் எப்டி இருக்கும்? அப்பான்னா எப்படி நடந்துப்பார்? அப்பாவோட வழிகாட்டல் எப்படிபட்டது? இது எதுவும் தெரியாது எனக்கு…
ஓரளவு விவரம் தெரிய ஆரம்பிச்சதுல இருந்தே, ரொம்ப பொறுப்பா இருக்க வேண்டிய சூழ்நிலை! என்னதான் பணகஷ்டம் இல்லன்னாலும், பரசுராம் அங்கிள் என்னை ‘டேக்கேர்’ பண்ணிக்கிட்டாலும், என் மனசுல என் அப்பாவுக்கான இடம் வெறுமையா தான் இருந்துச்சு மாமா!
எவ்ளோ காஸ்ட்லியா நான் ஷர்ட் எடுத்து போட்டாலும், எனக்குன்னு யாராவது உரிமையா நின்னு வாங்கி குடுக்க மாட்டாங்களா? என் தேவையை இன்னொருத்தர் கவனிக்க மாட்டாங்களான்னு ஏக்கமா இருக்கும்!
பொண்டாட்டி வந்தா இந்த ஏக்கம் போகும்ன்னு நினைச்சுட்டு இருந்தேன்! ஆனா, அஷ்டா மூலமா எனக்கு ‘அப்பா’ மாதிரி நீங்க கிடைச்சுருக்கீங்க மாமா!
நீங்க அஷ்டா மேல வச்சுருக்க பாசம், அக்கறை எல்லாம் எனக்கும் வேணும்ன்னு தோணுது தெரியுமா?
உங்களுக்கு எதாவது செய்யணும்ன்னு தோனுச்சு மாமா!
நீங்க குடுத்த எதையுமே நான் வேண்டாம்ன்னு மறுக்கலை தானே? இனியும் நான் மறுக்க போறது இல்ல! என் மாமா எனக்கு செய்யுறதை நான் சந்தோஷமா வாங்கிப்பேன்!
ஆனா, அதே மாதிரி நான் என் மாமாவுக்கு உரிமையா செய்யுறதையும் அவர் சந்தோஷமா ஏத்துக்கணும்! அவ்ளோ தான் என் ஆசை!!!”
வெளிப்படையாய் அவன் மனதில் உள்ளதை கொட்டிவிட, இதற்குமேலும் மனமிறங்காமல் இருக்க முடியுமா என்ன?
‘நீங்க என் அப்பா!’ என அவன் சொன்ன பிறகும், தயங்கினால் அது அவனை அவமதிப்பது போல என்று நினைத்த சண்முகம், எவ்வித தயக்கமும் இன்றி, அவன் கொடுத்ததை வாங்கிக்கொள்ள முன்வந்தார்.
அவன் கொடுத்த ஆறு ‘ஈச்சர்’ வண்டிகளை, தன்னிடம் இருந்த நான்கு குட்டி யானை(டாடா ஏசிஇ)யுடன் சேர்த்து தொழிலை கவனிக்க முடிவு செய்தார் சண்முகம்.
மாமனாரை தனித்து சந்தித்து பேசியவன், வந்த காரியம் செவ்வனே முடிந்ததும் திருப்தியாய் கிளம்பினான் அங்கிருந்து.
****
விஜயா முகத்தை தூக்கிவைத்துக்கொண்டிருந்தார். வீரா, “ம்மா, இப்போதைக்கு ஹனிமூன் எல்லாம் வாய்ப்பே இல்லம்மா” என பொறுமையாய் எடுத்துக்கூற,
“இப்போ போக வேண்டியதுக்கு இப்போ தான்டா போகணும்! ரெண்டு புள்ள பொறந்த பின்னாடியா போவ? ஏண்டா இப்படி கொஞ்சம்கூட கூறே இல்லாம இருக்கவன்?”
விஜயா அவன் கூச்சப்படுகிறானோ என்று நினைத்து சொல்ல, “பத்து நாள் நான் கிளம்பிட்டா நீங்க எப்படி தனியா இருப்பீங்க வீட்டுல?” என்றான் அவன்.
‘அடச்சை, இவ்ளோதானா?’ என்று நினைத்த விஜயாவும், “எனக்கென்ன வேற போக்கெடமா இல்ல? அதான் இப்போ என் அண்ணன் வீடு இருக்கே! ஜம்முன்னு போய் அங்க தங்கிப்பேன்” என்றார்.
அஷ்டாவின் வீட்டை தான் சொல்கிறார் என தெரிந்ததும், “போறதுன்னா இப்போ கூட போங்க! நானே கொண்டுப்போய் விடுறேன்… அதுக்கெதுக்கு நான் ஹனிமூன் போகணும்?” என்று கேட்க,
‘அய்ய… என்ன இந்தபய இப்படி இருக்கான்? இதுக்கு மேல இந்த விஷயத்தை எப்படி பேசுறது?’ என ஆயாசமாய் நின்றிருந்த விஜயா, இருவரையும் வேடிக்கைப்பார்த்துக்கொண்டு அஷ்டா நிற்பதை கண்டதும் சங்கடமாகி போனார்.
‘இது சரியா வராது!’ என்று நினைத்தவராய், “எனக்கு பணம் வேணும்” என்றார் மொட்டையாக.
“பர்ஸ்’ல இருக்கும் எடுத்துக்கோங்க!” என்றான் உடனேயே.
“எனக்கு நாற்பதாயிரம் வேண்டும்!” விஜயா சொன்னதும், அஷ்டா ‘ஆ… அவ்ளோவா?’ என திகைத்துப்போய் வீராவை பார்க்க, அவனோ அலட்டாமல், “பீரோல இருக்குமா… எடுத்துக்கோங்க” என்றுவிட்டான்.
விஜயா கேட்ட பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு சென்றார். வாசல் தாண்டி செல்லும் அன்னையை பார்த்துக்கொண்டே தன் உணவை முடித்துக்கொண்டு எழுந்துவிட்டான் வீரா.
‘ஏன்? எதுக்கு?ன்னு கூட கேட்க மாட்டாரா?’ என்றிருந்தது அஷ்டாவுக்கு.
அவள் மனதில் இது சிறு வடுவாய் உறுத்தியது.
****
வழமையான ஒரு காலை நேரம், அஷ்டா எழுந்து குளித்துவிட்டு அறையை விட்டு வருகையில் தாயும் மகனும் அருகருகே அமர்ந்து எதையோ விவாதிப்பது போல தோன்றியது.
வீரா தன் புருவ முடிச்சை தேய்த்துவிட்டபடி கண்மூடி சோபாவில் அமர்ந்திருந்தான். அருகே இருந்த விஜயா ஏதோ யோசித்துக்கொண்டிருக்க, வீராவை பார்த்தபடியே, “குட் மார்னிங் அத்தே” என்றாள் அஷ்டா.
“வாம்மா” என்றவரின் குரலில் சுரத்தே இல்லை.
தினமும் ‘மைலோ’வை அத்தையோ வீராவோ தான் கலந்து கொடுத்தனர் என்பதால் யாரேனும் அதை பற்றி கேட்பர் என காத்திருந்தாள்.
ஆனால் அவர்கள் ஏதோ சிந்தனையில் இருப்பது போல பட, “அத்தே, நான் மைலோ போட்டு குடிச்சுக்கவா?” என்றாள் அவருக்கு அவர் வேலையை நியாபகப்படுத்தும் பொருட்டு.
அவரோ, “ஹான், போட்டுக்கோடா! பால் அடுப்பு மேல இருக்கு” என்றுவிட்டார்.
‘ஹான்?’ என விழித்தவள், ‘ஒழுங்கா போட்டு குடுங்கன்னே கேட்டுருக்கலாம்’ என தன்னையே நொந்துக்கொண்டு அடுக்களைக்குள் செல்ல, வெளியே இருவரும் பேசிக்கொள்வதில் கவனத்தை வைத்தபடியே, பல முயற்சிகளுக்கு பின் அடுப்பை பற்ற வைத்து பாலை சூடாக்க ஆரம்பித்தாள்.
“ரொம்ப பணம் தேவைப்படுதாடா?” கரிசனையுடன் கேட்டுக்கொண்டிருந்தார் விஜயா.
“ம்ம்ம்!” மூடிய கண்களை திறவாமலே சொன்னான் வீரா.
“நான் வேணுன்னா அந்த நாற்பதை கொடுக்கவா?”
தீவிரமான சிந்தனையில் இருந்தவன், அவர் இப்படி சொன்னதும் பக்கென சிரிக்க ஆரம்பித்துவிட்டான்.
சிரிப்பினூடே, “ஐயோ ம்மா! எனக்கு ரெண்டு சி வேணும் ம்மா! அப்படி இப்படின்னு போட்டு எல்லாம் ரெடி பண்ணிட்டேன் ஆனாலும் ஒரு ‘கால் சி’ இடிக்குது! வெளில கேட்டா உடனே கிடைக்கும் தான்! ஆனாலும் முடிஞ்சவரை நம்ம கைல புரட்டலாம்ன்னு பாக்குறேன்!!” என்றான்.
“‘சி’ன்னா கோடி’யாடா?” நம்பமாட்டாத ஆச்சர்யத்தோடு கேட்டார் விஜயா.
வெளியே விஜயா அதிர்ந்ததை விட, அதை ஒட்டுக்கேட்டுக்கொண்டு உள்ளே நின்றிருந்த அஷ்டா தான் நெஞ்சுவலி வரும் அளவுக்கு அதிர்ந்துப்போனாள்.
‘கோ…ஓஓஓ….டி யா?’ திக்கென்று இருந்தது அவளுக்கு.
வீரா அன்னை கேட்டதற்கு, ‘ஆமாம்’ என்றதும், “புது தொழில்ன்னு சொல்ற? எதுக்குடா இவ்ளோ காசை போடணும்? இதுவரை நீ அகலக்கால் வச்சதே இல்லையே?” என பயத்துடன் வினவினார் விஜயா.
“இது அகலக்கால் எல்லாம் இல்லம்மா! ரொம்ப நாளா நான் செய்யணும்ன்னு யோசிச்சுட்டு இருந்தது தான்! மலிவு விலைக்கு வருது இப்போ! அதான் வாங்கி போடலாம்ன்னு பேசிருக்கேன்!”
அஷ்டா, ‘கோடி கோடியா என்னத்த வாங்கப்போறாங்க?’
விஜயா, “தியேட்டர் தொழில் பத்தி என்னடா தெரியும் நமக்கு?”
அஷ்டா, ‘ஹோஓஓ!!! தியேட்டரே வாங்குற அளவுக்கு அவ்ளோ பெரிய அப்பாட்டக்கரா இவங்க!’
“அம்மா? ஆரம்பத்துல ஒன்னும் தெரியாம தான் இருக்கும்… போக போக எல்லாம் தெரிஞ்சுடும்! சிட்டிக்கு நடுல ஃபோர் ஸ்க்ரீன் தியேட்டர்… இதை விட்டா இப்படி ஒரு விலைக்கு கிடைக்கவே கிடைக்காது! வாங்கி போடுவோம்! ஒத்து வரலன்னா பின்னாடி பார்த்துப்போம்! எப்படியும் லாபம் தான் நமக்கு”
வீரா உறுதியாய் பேசுவதை கேட்ட விஜயா அமைதியாய் எழுந்து தன் அறைக்குள் சென்றார்.
வீரா தன் மொபைலில் என்னவோ செய்துக்கொண்டிருக்க, திடீரென்ற இவ்வமைதியில் உள்ளுக்குள் நின்றிருந்த அஷ்டாவுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
‘என்ன பேச்சையே காணோம்?’ என்ற எண்ணத்தோடு மெதுவாக வந்து அவள் வெளியே எட்டிப்பார்க்க, சரியாய் அந்நேரம் நிமிர்ந்து பார்த்தான் வீரா.
திருடனுக்கு தேள் கொட்டியதை போல திடுக்கென்றிருந்தது அவளுக்கு.
அவன் புருவத்தை உயர்த்தி கண்களால் ‘என்ன?’ என்று வினவ, “இல்ல… உங்… உங்களுக்கு குடி…க்க கொண்டு வரவான்னு!!!” சட்டென வாயில் வந்ததை உளறி சமாளித்தாள் அவள்.
முதன்முதலில் தன்னை மனைவி உபசரித்து கேட்கிறாள் என்றதுமே குஷியாகி போனது அவனுக்கு.
“கொண்டு வாங்களேன்! குடிப்போம்!” என்று உற்சாகமாய் அவன் சொல்ல,
‘அடப்பாவி! ஒரு பேச்சுக்கு தானே கேட்டேன்!?’ என அவள் மனம் மௌனமாய் குமுறிக்கொண்டிருந்தது.
ஆனாலும் வெளியே, “என்ன கொண்டு வரட்டும்?” என்று அஷ்டா கேட்டதும், அவள் முக மாறுதல்களை எல்லாம் ஒன்று விடாமல் கவனித்துக்கொண்டிருந்தவன், வேண்டுமென்றே அவளை சீண்டிவிட வேண்டி,
“ஹாட்டா ஒரு க்ளாஸ் பால்… டிரஸ் போடாம கொண்டு வாங்க!!!” என்றதும், “என்ன?” என்று விதிர்த்துப்போய் விலுக்கென்று நிமிர்ந்தாள் அஷ்டா.
அவள் சீற்றத்தை மானசீகமாய் ரசித்த வீரா, தன் சிரிப்பை விழுங்கிக்கொண்டு, “அதாங்க! பாலாடை… பால்…. ஆடை… ட்ரெஸ்…. பால் மேல ட்ரெஸ் இல்லாம…. அப்படி கேட்டேன். எனக்கு ஆடையே பிடிக்காது” என்றான் அப்பாவி போல முகத்தை வைத்து.
அவள் இன்னமும் முறைப்புடன் நிற்க, “ஏங்க முறைக்குறீங்க? உங்களுக்கு எதுவும் தப்பா தோணுச்சா என்ன?” என்றான் ஒன்றும் தெரியாதவன் போல.
அதற்கு மேல் அங்கே நின்று முறைக்க முடியாது, ‘ச்சீ பேச்சை பாரு’ என முனகிக்கொண்டு கிச்சனுக்குள் ஓடிவிட்டாள் அவள்.
மனைவியின் ஓட்டத்தை கண்ட வீரா, வாய்விட்டே சிரிக்க, அவன் முன்னே ஒரு பெட்டியுடன் வந்து நின்றார் விஜயா.
“என்னம்மா இது?” அவர் கையில் இருந்ததை சுட்டிக்காட்டி கேட்டான் வீரா.
அதை திறந்து அவன் முன்னிருந்த மேசையில் வைத்த விஜயா, “இதெல்லாம் என்னோட நகை டா, சும்மா தானே பீரோல வச்சுருக்கேன்! இதை வச்சு எதுவும் புரட்ட முடியுதா பாரேன்” என்றார்.
சில நிமிடங்கள் நகையையும் அன்னையையும் மாற்றி மாற்றி பார்த்த வீரா, விஜயாவின் கரத்தை பிடித்து தன்னருகே அமர்த்திக்கொண்டான்.
உள்ளுக்குள் இருந்த அஷ்டா, பாதி தலையை வெளியே நீட்டி பார்த்துக்கொண்டிருந்தாள்.
“என்னடா?”
“ம்மா! என்கிட்டே காசு இல்லாம இல்ல! நம்ம வாங்கி போட்டுருக்க இடத்துல எதாவது ஒன்ன கைமாத்தி விட்டா கூட என்னோட தேவைக்கு மிஞ்சின பணம் ரெடியாகிடும்! நான் அந்தமாதிரி எதையும் யோசிக்காம கைல இருக்குறதை வச்சு தேத்த முடியுதான்னு பார்த்தேன் அவ்ளோதான்!” என்றவன்,
“இந்த நகை எல்லாம் என் அப்பாவும், நானும் உங்களுக்காக ஆசையா வாங்கினது! போட்டுக்குறீங்களோ இல்லையோ! நீங்க இருக்க வரைக்கும் இது எல்லாமே உங்களுக்கு தான்! நகையை வச்சு சமாளிக்குற அளவுக்கு நம்மளுக்கு ஒரு கஷ்டமும் வரல இன்னும்! வரவும் வராது! புரிஞ்சுதா?” என்றான் சிறுப்பிள்ளைக்கு சொல்வதை போல.
தலையை ஆட்டி ஆட்டி கேட்டுக்கொண்டாலும், மகன் பார்த்துக்கொள்வான் என அசட்டையாய் விட மனம் வராது போக, “இருந்தாலும் டா….” என அவர் மறுக்க ஆரம்பித்தபோது,
“ஆஆஆஆஆ….. அம்மா…….” என்ற அலறல் ஒலித்தது அடுக்களையில் இருந்து.