காதல் 3:
நாட்கள் அதன் வேகத்தில் செல்ல, முப்பதாவது நாளும் முடிந்திருந்தது. அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு மாறிக் கொண்டிருந்தனர். மனதில் இருக்கும் ரணத்தை வெளியே காட்டிக் கொண்டிருந்தால் மட்டும் இறந்தவர்கள் திரும்பி வரவா போகிறார்கள்? காலம் அதன் போக்கில் அவர்களை இழுத்துக் கொண்டது.
அன்று காலையிலிருந்தே கோபமாக இருந்தாள் மகா பத்ரா. எல்லாம் பாண்டியன் மீது தான்.
“அப்பா, இன்னும் எத்தனை நாளைக்கு நான் இங்கயே இருக்க முடியும். இதுக்கு மேல ஆபீஸ்ல லீவு போட முடியாது. நான் உடனே கிளம்பியாகணும்..” என்றாள், பிடிவாதமாய்.
“நான் சொன்னா சொன்னது தான் மகா. வேலையை விட்டுரு..” என்றார் பாண்டியன்.
“எப்படிப்பா? உங்களால இப்படி பேச முடியுது. நினைச்ச உடனே வேலையை விட முடியாது. அப்படி விட்டா, மூணு மாச சம்பளத்தையும் நான் மொத்தமா குடுத்துட்டு வரணும். இதுல லோன் வேற இருக்கு. எப்படி முடியும்..?” என்றாள் மகா.
மகள் ஒருமாசம் விடுமுறையில் இருக்கிறாள் என்று அவர் நினைத்திருக்க, அவள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்து கொண்டு தான் இருந்தாள்.
“எவ்வளவு குடுக்கணும்ன்னு சொல்லுமா.. குடுத்துடுலாம். ஆனா, இனி வேலைக்குப் போக வேண்டாம்..” என்றார் உறுதியாய்.
அவர் அப்படி சொல்லவும் மகாவிற்கு கண்கள் கலங்கிவிட்டது. நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பதற்காகவே நன்றாக படித்தாள் அவள். அவள் நினைத்த மாதிரி வேலையும் கிடைத்து, ஒரு வருடமாக வேலைக்கு சென்று கொண்டிருக்கிறாள். இப்போது அவள் கனவு எல்லாமே கலைந்ததைப் போல் இருந்தது.
“இந்த விஷயத்துல என்னோட முடிவும் மாறாதுப்பா. கண்டிப்பா நான் போவேன். என்னால இங்கயெல்லாம் இருக்க முடியாது..” என்றாள்.
“கல்யாணத்தை பண்ணிக்கிட்டு, உன்னோட விருப்பம் எப்படியோ, நீ அப்படி இருந்துக்க மகா…” என்றார்.
“எப்படி? இங்க இருக்கானே அவனை கட்டிகிட்டா..? என் வாழ்க்கை விளங்குன மாதிரித்தான். இதுக்கு நீங்க உங்க கையாலையே எனக்கு விஷத்தைக் குடுத்து சாகடிச்சிடலாம்..” என்றாள் கோபமாய்.
“என்ன வார்த்தைடி பேசிட்டு இருக்க..? ஒருத்தியைத் தூக்கிக் கொடுத்தது பத்தாதா..?” என்று கமலா ஒரு பக்கம் அழ ஆரம்பிக்க,
“விஷத்தை வாங்கிட்டு வரேன் கமலா. ஒன்னு இவ கல்யாணம் நடக்கணும். இல்லையா, குடும்பத்தோட போய் சேர்ந்துடலாம்..” என்று துண்டை உதறி தோளில் போட்டவர் வெளியே சென்று விட்டார்.
“அப்பாவுக்கு இப்படி கூட பிளாக்மெயில் பண்ணத் தெரியுமாம்மா..? அக்காவுக்கும் இப்படித்தான் கல்யாணம் பண்ணி வச்சிங்களா..? அதான் அவ அப்படி ஒரு முடிவைத் தேடிகிட்டாளா..?” என்றாள் அழுகையும், கோபமுமாக.
“அப்படியெல்லாம் பேசாதடி..! அப்பா திடீர்ன்னு இப்படி சொல்றாருன்னா, கண்டிப்பா அதுல ஒரு காரணம் இருக்கும் மகா. இல்லைன்னா, இப்படியெல்லாம் அவர் பேச மாட்டார்டி. பேசாம சரின்னு சொல்லிடு. கல்யாணத்தை பண்ணிட்டு என்னமும் பண்ணுடி..” என்றார் கமலா.
“வளர்த்த ஆட்டை அலங்கரிச்சு, கழுத்தை வெட்டனும்ன்னு முடிவு பண்ணிட்டிங்க.. நிறுத்தவா போறீங்க? அடுத்த பலியாடு நான் தான். என்ன செய்யணுமோ செய்ங்க. ஆனா ஒன்னு, நான் கண்டிப்பா வேலைக்குப் போவேன். இதை மட்டும் உறுதியா சொல்லிடுங்க..” என்ற மகா பத்ராவின் முகத்தில் என்ன இருந்தது என்று அவரால் கணிக்க முடியவில்லை.
வெளியே சென்ற பாண்டியன் நேராக சென்றது பிரகதீஸ்வரனின் தோப்பிற்கு தான். தேங்காய்களை கணக்குப் பார்த்து லோடு ஏற்றி அனுப்பியவன், தூரத்தில் வந்த பாண்டியனைப் பார்த்து, புருவம் இடுங்க யோசனைக்கு உள்ளானான்.
‘இவர் எதுக்கு நம்மளைத் தேடி வராரு..?’ என்று மனதிற்குள் நினைத்தவன், அவர் வந்ததைப் பார்க்காதவன் போல் திரும்பிக் கொள்ள,
அவன் பார்த்ததையோ, பிறகு திரும்பிக் கொண்டதையோ பாண்டியன் கவனிக்கவில்லை. அவரின் நினைவில் இருந்த விஷயமெல்லாம் வேறு. நேராக அவனை நோக்கி வந்தவருக்கு, அதுவரை இருந்த வேகம் சட்டென்று மறைந்து போனது. ஏதோ ஒரு தயக்கம். வயதையும் மீறிய சில குற்ற உணர்ச்சிகள்.
‘எதுக்கு வந்திருக்காரு..?’ என்ற யோசனையுடன் இருந்தவன், அவர் வந்ததை கவனிக்காதவன் போல், திரும்பாமல் இருந்தான்.
“என்னங்கண்ணா இந்த பக்கம்..?” என்ற சபரியின் குரலில் திரும்பினார் பாண்டியன்.
சபரிக்கு அப்படி ஒரு அதிர்ச்சி. அவரை ஈஸ்வரனின் இடத்தில் வைத்து பார்த்ததில் வந்த அதிர்ச்சி தான் அது.
“அது ஒண்ணுமில்ல சபரி. ஈஸ்வரன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும், அதான்..” என்று அவர் கொஞ்சம் தயங்க..
அதற்கு மேல் ஈஸ்வரனால் திரும்பாமல் இருக்க முடியவில்லை. திரும்பி, அவரைப் பார்த்தும் பார்க்காதவன் போல் நின்றான்.
“பேசாதவங்க காத்து எல்லாம், நம்ம தோட்டத்துல அடிக்குது மாமா..? என்ன விஷயமாம்..?” என்றான் ஈஸ்வரன்.
“இதை நேராவே என்கிட்டே கேட்கலாம் ஈஸ்வரா..! எனக்கு உன்கிட்ட தான் பேசணும்..” என்றார் பாண்டியன்.
“நீங்க பேசிட்டு இருங்கண்ணா..! நான் உங்களுக்கு இளநீர் வெட்டிட்டு வரேன்..” என்ற சபரி அங்கிருந்து நகர, அவனிடம் எப்படி பேசுவது என்று தெரியாமல் தயங்கினார் பாண்டியன்.
அவர்களை விட்டு தூரம் சென்ற சபரிக்கும் அதே குழப்பம் தான்.
‘இப்ப எதுக்காக அண்ணன் இங்க வந்திருக்காரு..? ஈஸ்வரன் எதுவும் கோபமா பேசிடுவானோ..? அப்படியே பேசிட்டாலும் நான் என்ன செய்ய முடியும்..? ஒரு பக்கம் அண்ணன்.. இன்னொரு பக்கம் மச்சினன்.. யாருக்கு சப்போர்ட் பண்ணி பேசுறது..’ என்று சபரி அவர்களைப் பார்த்தவாறு யோசித்துக் கொண்டு நிற்க,
அங்கே தூரத்தில், ஈஸ்வரனிடம் எதையோ தீவிரமாக பேசிக் கொண்டிருந்தார் பாண்டியன். அவரின் ஒவ்வொரு பேச்சுக்கும் அவனின் முகம் பல உணர்வுகளைக் காட்டிக் கொண்டிருந்தது. கடைசியாக பாண்டியன் அவனின் கையைப் பிடித்து அழுதே விட்டார். அவ்வளவு நேரம் இரும்பாய் நின்றவன், அவரின் அழுகையில் கொஞ்சம் கரைந்தான் என்று தான் சொல்ல வேண்டும். சபரிக்கு வார்த்தைகள் கேட்கா விட்டாலும், நடந்ததை பார்த்துக் கொண்டு தான் நின்றான்.
இளநீயை வெட்டிக் கொண்டு சபரி அருகில் செல்ல, பாண்டியன் அப்படியே பேச்சை நிறுத்திவிட்டார்.
“இதை குடிங்க அண்ணா..!” என்று சொல்ல,
“பரவாயில்லை சபரி, இருக்கட்டும்..” என்று மறுத்தார் பாண்டியன்.
“குடிங்க..! எனக்கு ஒரு வாரம் டைம் வேணும். யோசிச்சு சொல்றேன்..” என்றான் ஈஸ்வரன்.
“யோசிச்சு நல்ல முடிவா சொல்லு ஈஸ்வரா..” என்ற பாண்டியன் கிளம்பிவிட்டார். அவர் நடையில் தளர்வு இருந்ததைப் போல் இருந்தது.
“என்ன விஷயம் ஈஸ்வரா…? எதுக்காக வந்துட்டு போறார்..?” என்றான் சபரி.
“உங்க அண்ணன் தான மாமா..? அவர்கிட்டயே நீங்க கேட்டிருக்கலாமே..?” என்றான் கடுப்புடன்.
“ஏன்? உன்கிட்ட கேட்டா சொல்ல மாட்டியா..?” என்றான் சபரி.
“அவரோட ரெண்டாவது பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கனுமாம். அதைத்தான் சொல்லிட்டு போறார்..” என்றான் ஈஸ்வரன்.
“நிஜமாவா ஈஸ்வரா..? அண்ணனே அப்படி சொன்னாரா..?” என்றான் சபரி நம்ப முடியாமல்.
“அதென்ன மாமா ‘அண்ணனே’ ன்னு வியப்பா சொல்றிங்க..?” என்று ஈஸ்வரன் எரிச்சலுடன் கேட்க,
“என்னால இன்னமும் நம்ப முடியலை ஈஸ்வரா. அதான் அப்படி கேட்டேன்.” என்றான் சபரி.
“இது நடக்க வாய்ப்பேயில்லை மாமா. அதான் யோசிச்சு சொல்றதா சொல்லி அனுப்பியிருக்கேன்..” என்றான்.
“ஏன் மாப்பிள்ளை நடக்காது..?இந்த விஷயம் நடந்தா ரெண்டு குடும்பத்துக்கும் நல்லதுங்கும் போது, நீ ஏன் சம்மதிக்கக் கூடாது..” என்றான் சபரி.
“நீங்க புரியாம பேசுறிங்க மாமா. உணர்ச்சி வசப்பட்டு எடுக்குற எந்த முடிவுமே சரியா இருக்காது. அதுமட்டுமில்லாம, இப்பதான் கல்யாணம் அப்படிங்கிற பேர்ல ஒன்னு நடந்து, அதுக்கப்பறம் என்னனென்னவோ நடந்து முடிஞ்சுடுச்சு. அந்த ரணமே இன்னும் எனக்குள்ள ஆறாம இருக்கு. மேலும் என்னை நானே புண்ணாக்கிக்க விரும்பலை மாமா..” என்றான் தெளிவாய்.
“ஊருக்குள்ள பேசுற பேச்செல்லாம் உண்மைதான்னு,இப்படியே இருந்து நிரூபிக்க போறியா மாப்பிள்ளை..?” என்றான் சபரி.
“யாருக்கும் என்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை மாமா..” என்றான் கோபமாய்.
“உன்னை இத்தனை வருஷம் வளர்த்த உங்கம்மாவைப் பத்தி உனக்கு கவலையில்லை. அவங்க மனசுல எவ்வளவு வலி இருக்கும். அது உனக்குப் புரியுதா இல்லையா..?” என்றான்.
“அவங்க வலி புரிஞ்சதால தான் நான் கல்யாணத்துக்கே சம்மதிச்சேன். ஆனா, என்ன நடந்துச்சுன்னு பார்த்திங்கல்ல. மறுபடியும் முதல்ல இருந்தா… என்னால முடியாது..” என்றான் ஈஸ்வரன் தெளிவாக.
“முடியாதுன்னா, இப்பவே அவர் முகத்துக்கு நேராவே சொல்லியிருக்க வேண்டியது தானே. எதுக்கு யோசிச்சு சொல்றேன்னு சொன்ன..?” என்றான் சபரி.
“அவர் என் கையைப் பிடிச்சுகிட்டு அழும் போது, அவரை அதுக்கு மேலயும் கஷ்ட்டப்படுத்த வேண்டாம்ன்னு நினைச்சேன்..” என்றான்.
“இது ஒன்னு போதும் மாப்பிள்ளை. இந்த கல்யாணத்தை நான் நடத்திக் காட்டுறேன்..” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட சபரி, அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
பாண்டியன் வந்து பேசிச் சென்றதையே மனதில் அசைபோட்டுக் கொண்டிருந்தான் ஈஸ்வரன். விரும்பத் தகாத சில காட்சிகள் அவன் நினைவிற்கு வர, அதை முயற்சி செய்து விரட்டியடித்தான். இதையெல்லாம் யோசித்துக் கொண்டே அவன் பைக்கை ஒட்டிக் கொண்டிருக்க, வளைவில் திருப்பும் போது, எதிரே வந்த ஸ்கூட்டியின் மீது வண்டி மோதப் போக, சுதாரித்து கடைசி நிமிடத்தில் சடன் பிரேக் போட்டான்.
“ஏய் அறிவில்ல..? டேர்னிங்ல இண்டிகேட்டர் போடணும்ன்னு தெரியாதா உனக்கு..?” என்று ஏகத்தும் கத்தியவள் வேற யாருமில்லை, மகா பத்ரா தான்.
“சாரி..! ஆனா, நீயும் ஹாரன் அடிச்சிருக்கணும்..” என்றான் ஈஸ்வரனும் விடாமல்.
“ஹோ..! நீ இண்டிகேட்டர் போடாம வந்தது தப்பில்லை. நான் ஹாரன் அடிக்காம வந்தது தான் தப்புன்னு சொல்றியா..?” என்றாள் கோபமாய்.
“நான் அப்படி சொல்லலையே. என்னோட தப்புக்கு நான் சாரி சொன்னதா நியாபகம்..” என்றான் அவனும் விடாமல்.
“அதுக்காக நானும் சாரி சொல்லனும்ன்னு எதிர்பார்க்குறியா..?” என்றாள் விடாமல்.
அவளை மேலும் கீழும் பார்த்தவன், பேசாமல் வண்டியை ஸ்டார்ட் செய்ய,
“நான் பேசிட்டே இருக்கேன். நீ பேசாம கிளம்பிட்டு இருக்க..?” என்றாள் ஆத்திரத்துடன்.
“நாய் தான் குரைக்குதுன்னா நானும் சேர்ந்தா குரைக்க முடியும்..?” என்று எகத்தாளமாய் சொன்னான் ஈஸ்வரன்.
“என்ன பார்த்தா நாய் மாதிரி இருக்கா உனக்கு..? கொஞ்சம் கூட மட்டு மரியாதை இல்லாம பேசிட்டு இருக்க..?” என்று ஏகவசனத்தில் பேச ஆரம்பிக்க,
“மரியாதையைப் பத்தியெல்லாம் யார் பேசுறதுன்னு விவஸ்தை இல்லாம போய்டுச்சு..” என்றவன், மீண்டும் கிளம்ப ஆயத்தமாக,
“ஒரு நிமிஷம்..!” என்றாள்.
“என்ன?” என்பதைப் போல் அவன் பார்த்து வைக்க,
“நான் உன்னைப் பார்க்கத் தான் வந்தேன்..” என்றாள்.
“நீங்க வந்து பார்க்குற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லையே..?” என்றான் இடக்காய்.
“நம்ம பேசுனதை எல்லாம் மறக்காம வச்சிருப்பான் போலயே..?” என்று மனதிற்குள் நினைத்தவள்,
“எங்க அப்பா, ஏதாவது உன்கிட்ட வந்து பேசுனா.. முடியாதுன்னு சொல்லிடு..” என்றாள் மொட்டையாய்.
“உங்கப்பா, என்கிட்டே வந்து என்ன பேசப் போறார்..?” என்றான் தெரியாதவன் போல்.
“அது..கல்யாண விஷயமா பேச வருவார்.உனக்கு சம்மதமில்லைன்னு சொல்லிடு.” என்றாள்.
“யாரோட கல்யாண விஷயம்..?” என்றான் ஈஸ்வரன்.
‘பொறுமையை ரொம்ப சோதிக்கிறானே..?’ என்று நினைத்தவள்,
“என்னோட கல்யாண விஷயம் தான்..” என்றாள்.
“உன்னோட கல்யாண விஷயத்தை எதுக்காக என்கிட்டே பேச வரணும்..? அதுவும் இத்தனை நாள் இல்லாம..?” என்றான்.
“அதைத்தான் நானும் சொல்றேன். அவர் எதுக்கு உன்கிட்ட பேச வரணும்? அப்படியே வந்தாலும் முடியாதுன்னு சொல்லிடு.” என்றாள்.
“காரணம் தெரிஞ்சுக்கலாமா..?” என்றான் ஈஸ்வரன்.
“காரணம் வேற உனக்கு சொல்லனுமா..? உன் பொண்டாட்டி ஒரு நாள் ராத்திரிலேயே செத்துட்டாளே..! இந்த ஒரு காரணம் பத்தாதா..?” என்றாள் இடக்காய்.
அவள் அப்படி சொன்னவுடன், கோபத்தில் கனன்ற உணர்வுகளை கஷ்ட்டப்பட்டு கட்டுப் படுத்தினான் ஈஸ்வரன்.
“உன்னை மாதிரி ஒருத்தியை கல்யாணம் பண்றதுக்கு, கல்லைக் கட்டிட்டு கிணத்துல குத்திச்சு செத்துடலாம்..” என்றவன், விருட்டென்று வண்டியைக் கிளப்பிக் கொண்டு போக, அவன் வண்டி ஏற்படுத்தி சென்ற புழுதி அந்த இடத்தை கலங்க செய்ய, அவன் வார்த்தைகள் அவள் மனதை கீறிவிட்டிருந்தது.
வீட்டிற்கு சென்று பைக்கை நிறுத்தும் போதே, அவன் முகம் கோபமாக இருக்க, அதைப் பார்த்த மஞ்சரிக்கு காரணம் புரியவில்லை.
“என்னாச்சு ஈஸ்வரா..? எதுக்கு இவ்வளவு கோபமா வர்ற..?” என்றாள்.
“ஒன்னுமில்லைக்கா. அம்மா எங்க?” என்றான்.
“சமயலறையில இருக்காங்க..” என்றாள்.
நேராக வசுந்தராவிடம் சென்றவன்,
“பாண்டியன் மாமா வந்து கல்யாணம் விஷயமா எது பேசுனாலும் முடியாதுன்னு தெளிவா சொல்லிடுங்க..” என்று சொன்னவன், பட்டென்று அங்கிருந்து நகர்ந்துவிட்டான்.
அவருக்கு தலையும் புரியவில்லை,வாலும் புரியவில்லை. புரியாமல் முழித்துக் கொண்டு நிற்க,
“என்னம்மா..? எதுக்கு கோபமா வந்தான்..? என்ன சொல்லிட்டு போறான்..?” என்றாள் மஞ்சரி.
“ஒன்னும் புரியலை மஞ்சு. பாண்டியன் மாமா கல்யாண விஷயமா பேசினா முடியாதுன்னு சொல்லிடுங்கன்னு சொல்லிட்டு போறான்..” என்றார் வசுந்தரா.
“பாண்டியன் மாமாவா..?” என்ற மஞ்சரிக்கு அப்படி ஒரு திகைப்பு.
“அதாண்டி எனக்கும் ஒன்னும் புரியலை. என்ன விஷயமா இருக்கும்..?” என்ற வசுந்தரா புரியாமல் நின்றார்.
“எனக்கென்னமோ பாண்டியன் மாமா, நம்ம தம்பிகிட்ட வந்து பேசியிருப்பார்ன்னு தோணுதும்மா. இல்லைன்னா, இவன் இப்படியெல்லாம் சொல்ல மாட்டானே..?” என்றாள் மஞ்சரி.
“அப்படியும் இருக்குமோ..? அப்படி பார்த்தாலும் அது நல்ல விஷயம் தானே..? அதுக்கெதுக்கு இவன் இவ்வளவு கோபப் படுறான்..?” என்றார் வசுந்தரா.
“எது நல்ல விஷயம்..? அந்த வாயாடி நம்ம வீட்டுக்கு வர்றதா..? அம்மா, அப்படி ஒரு விஷயம் மட்டும் நடந்துச்சு, இனி எனக்கு பிறந்த வீடே இல்லைன்னு நான் முடிவு பண்ணிக்கிறேன்..” என்றாள் கோபமாய்.
“இப்ப எதுக்கு இப்படி பேசுற மஞ்சு..?உன் தம்பிக்கு ஒரு நல்லது நடந்தா, அதுல உனக்கும் சந்தோசம் தான..” என்றார்.
“எனக்கும் சந்தோசம் தான். ஆனா, அது அந்த வாயாடி கூட நடந்தா கண்டிப்பா சந்தோஷம் இல்லை, துக்கம் தான். நான் சொன்ன மாதிரி நம்ம காயத்ரியே அவனுக்கு பொருத்தமா இருப்பா..” என்றாள் மஞ்சரி.
“வசுந்தரா, அந்த பாண்டியன் பொண்ணுக் குடுக்க தயாரா இருந்தா, பேசி முடிச்சுடு..” என்றார் ராக்கு.
“அத்தை நிஜமாத்தான் சொல்றிங்களா..?” என்றார் வசுந்தரா.
“நிஜம்மாதான் சொல்றேன். என்ன, அவளுக்கு வாய் கொஞ்சம் ஜாஸ்தி. ஆனா, அவ அக்காவை விட இவ தான் இன்னும் மூக்கும் முழியுமா இருப்பா.” என்றார் ராக்கு.
“ஆனா, ஈஸ்வரன்..” என்று வசுந்தரா இழுக்க,
“அவன் அப்படி தான் பேசுவான் வசுந்தரா. அவனை சம்மதிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு. நீ, ஆக வேண்டிய வேலையைப் பாரு..” என்றார் ராக்கு.
“இங்க ஒருத்தி குத்துக்கல்லாட்டம் இருக்கேன். என்னை வச்சுகிட்டே நீங்க எல்லாத்தையும் பேசி முடிக்கிறிங்களா..? அப்போ எனக்கு என்ன மதிப்பு இருக்கு இங்க..? இனி நான் இந்த வீட்டுப் படியை மிதிக்கவே மாட்டேன்..” என்ற மஞ்சரி, அங்கிருந்து கோபமாக சென்று விட்டாள்.
அறைக்குள் சென்ற ஈஸ்வரனுக்கோ,
“பொண்ணா, இல்ல வேற எதுவும்மா..? என்னா வாய்..? வாயைத் திறந்தா மூடவே மாட்டா போல..” என்று எண்ணியவனுக்கு எரிச்சல் மட்டும் தான் மிஞ்சியிருந்தது. அவனுடைய முடிந்த கல்யாணத்தைப் பத்தி யார் பேசினாலும், ஒரு முறைப்புடன் விலகி விடுபவனுக்கு, ஏனோ மகா பேசியது மட்டும் நினைவிலேயே நின்று அவனை தூண்டிவிட்டுக் கொண்டிருந்தது.
“எப்படி அவ பேசலாம்..?” என்ற எண்ணம் தான் அவனுள் மேலோங்கியிருந்தது.
அங்கே மகா பத்ராவும் இவன் பேசியதைத் தான் நினைத்துக் கொண்டிருந்தாள்.
‘அவனுக்கு என்னைப் பார்த்தா நாய் மாதிரியா இருக்கு..? எவ்வளவு நெஞ்சழுத்தம் அவனுக்கு..? அவன் முகரக்கட்டைக்கு இந்த மகா கேட்குதா..?’ என்று மனதிற்குள் குமைந்து கொண்டிருந்தாள்.
“மகா, நீ அடிக்கடி ஒரு விஷயத்தை மறந்துடுற..? உங்கப்பா தான் வழியப் போய் அவங்ககிட்ட பேசியிருக்காரு. அவன் இல்லை..” என்று அவளின் மனசாட்சி மீண்டும் அவளுக்கு நினைவு படுத்தியது.
“ஏங்க ஒரு மாதிரி இருக்கீங்க..?” என்று கமலா கேட்க, அது வரை எரிச்சலில் இருந்தவள், காதைத் தீட்டிக் கொண்டு கேட்கலானாள்.
“ஈஸ்வரன்கிட்ட பேசிட்டேன் கமலா..” என்றார்.
“என்ன சொன்னான்..?” என்றார் கமலா.
“சாதகமா எந்த பதிலையும் சொல்லலை. ஒரு வாரம் டைம் வேணும்ன்னு சொல்லியிருக்கான்..” என்றார்.
“என்னது? இவன் யோசிச்சு சொல்லி, நான் வாக்கப்படுற நிலைமையிலா இருக்கு என்னோட நிலை..?” என்று வெகுண்டவள்,
“அப்பா, இதெல்லாம் தேவையா..? அவன் இப்படி உங்களை அவமானப்படுத்தியிருக்கான். அது புரியாம, நீங்க என்னடான்னா இங்க வந்து பதில் சொல்லிட்டு இருக்கீங்க..?” என்றாள் கோபமாய்.
“ஈஸ்வரன் என்னை அவமானப்படுத்துற மாதிரி எதுவுமே பேசலை மகா. சொல்லப் போனா, நான் பேசுனதுல கால்வாசி பேசியிருந்தா கூட, எனக்கு மனசு ஆறியிருக்கும். ஆனா, ஈஸ்வரன் எதுவுமே பேசாம பெருந்தன்மையா நடந்துகிட்டது தான் எனக்கு இன்னமும் குற்ற உணர்ச்சியா போய்டுச்சு..” என்றார் பாண்டியன்.
“உங்களை நல்லா சோப்பு போட்டு அனுப்பியிருக்கான். அதைப் புரிஞ்சுக்காம அவன் புராணம் பாடிட்டு இருக்கீங்க..” என்று சிலுத்துக் கொண்டவள்,
“அப்பா, நான் சென்னை கிளம்பவா..?” என்றாள்.
“என்னோட முடிவுல எந்த மாற்றமும் இல்லை மகா. இந்த கல்யாணம் நடந்தே தீரும். இனி இந்த பேச்சை விட்டுட்டு, கொஞ்சம் பெரியவங்ககிட்ட எப்படி பேசுறதுன்னு கத்துக்கோ..” என்றார்.
“நீங்க இப்படி டோட்டலா மாறுவிங்கன்னு நான் நினைக்கலைப்பா..” என்றாள்.
“என்னம்மா செய்றது?காலம் நமக்கு எல்லாத்தையும் கத்துக் குடுத்துடுதே..” என்றவருக்கு பழைய நியாபகங்கள். போட்டோவில் சிரித்துக் கொண்டிருந்த நிவேதா தான் அதற்கு சாட்சி. போட்டோவில் இருந்த அவள் புன்னைகை முகம், சில வருடங்களுக்கு முன்பு வரை, இதை விட அதிக புன்னகையுடன் காட்சியளித்த முகம் தான்.
அதற்குள் மகாவின் போனிற்கு அழைப்பு வர, எடுத்துப் பேசியவளின் முகம் மாறியது. கோபத்தில் முகம் சிவக்க, பேசிவிட்டு வைத்தாள்.
“யாரும்மா..?” என்றார் பாண்டியன்.
“எல்லாம் அந்த பொம்பளை தான்ப்பா..” என்றாள்.
“யாரு..?” என்றார் மீண்டும்.
“என்னப்பா? அதுக்குள்ளே மறந்துட்டிங்களா..? நிவேதா மாமியார் தான்ப்பா..” என்றாள்.
“என்னவாம்..?” என்றார் கமலா.
“ம்ம்..! கேஸை வாபஸ் வாங்கனுமாம். இல்லன்னா, நிறைய பின் விளைவுகளை நம்ம சந்திக்க வேண்டியது வருமாம்..” என்றாள் கோபமாக.
“உங்க அக்காவே போய்ட்டா..! இனி அவங்க எப்படி போனா நமக்கென்ன..? பேசாம கேசை வாபஸ் வாங்கிடுங்க..” என்றார் கமலா.
“என்னம்மா பேசுற..? நம்ம எதுவும் பண்ண மாட்டோம்ன்ற தைரியம் தான் அவங்களுக்கு. அதான், அவங்களை இப்படி பேச வைக்குது. கேஸை வாபஸ் எல்லாம் வாங்க வேண்டாம்ப்பா. அக்கா சாவுக்கு ஞாயம் கிடைக்கிற வரைக்கும் விட மாட்டேன்..” என்றாள்.
“முதல்ல உன்னோட கல்யாணம். அப்பறம் தான் எல்லாமே..” என்றார் பாண்டியன்.
அதுவே அவளுக்கு பிரச்சனையாக மாறப் போவது பற்றி தெரியாமல்.
தங்க நிற பட்டு சேலையில் இருந்தவளின் கழுத்தில் தாலியைக் கட்டினான் பிரகதீஸ்வரன். மாப்பிள்ளையின் கம்பீரத்துடன் இருந்தவனுக்கு, முகத்தில் மட்டும் ஏனோ மகிழ்ச்சி இல்லை.
மகா பத்ராவோ அவஸ்தையுடன் அமர்ந்திருந்தாள். அவள் கழுத்தில் தாலி ஏறிய அடுத்த நிமிடம், பட்டென்று எழுந்து விட்டான் ஈஸ்வரன்.
“என்னாச்சு ஈஸ்வரா..?” என்று அனைவரும் பதற,
“இந்த நிமிஷத்துல இருந்து இவ என்னோட பொண்டாட்டி. நான் இவளை என்ன வேணும்ன்னாலும் பண்ணுவேன். கேட்க, யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை..” என்று கணீர் குரலில் சொன்னவன், அவள் கழுத்தில் இருந்த மாலையைப் பிடித்து தரதரவென்று இழுத்துக் கொண்டு போனான்.
“டேய் விடுடா..! விடுடா..என்னை..” என்று மகா கத்திக் கொண்டே பின்னால் செல்ல,
“ஏய் மகா..! என்ன ஆச்சு..? எதுக்கு கத்திட்டு இருக்க..?” என்ற கமலாவின் அசைப்பில், கண்ணைத் திறந்தாள் மகா பத்ரா.
“கனவா..?” என்றவளின் முகம் முழுவதும் வியர்வையில் குளித்திருந்தது.
“என்னாச்சு மகா..?” என்றார் கமலா.
“ஒண்ணுமில்லைம்மா..! ஏதோ கனவு..” என்றபடி மீண்டும் படுத்தவளுக்கு, தூக்கம் மட்டும் ஏனோ தொலைதூரம் போயிருந்தது.