இந்திர நீலக்கல்லை அவர்கள் தங்கியிருந்த விடுதி, முதன்முதலில் கண்விழித்த அந்த கடற்கரை, பின் அவர்கள் சென்ற நாளங்காடி என்று அனைத்து இடங்களிலும் தேடியும் கிடைக்காமல் மணிமேகலையின் இருப்பிடம் விசாரித்து அங்கு வந்து சேர்ந்தான் மித்ரன்.
காலையிலிருந்து எதுவும் சாப்பிடாத காரணத்தாலும், அலைந்த களைப்பினாலும் வாசல் வரை வந்தவன்.., அதற்குமேல் உள்ளே நுழைய முடியாமல் படியிலேயே அரை மயக்கத்தில் அமர்ந்திருந்தான்.
தகவல் தெரிவிக்கப்பட்டதும் உள்ளே இருந்து மணிமேகலை மற்றும் சுதமதி முதலில் வெளியில் வந்தனர்.
உள்ளே அனுவும் ஆதியும் மித்ரனை இவ்வளவு நேரம் காணாததால் மிகவும் கலக்கமுற்றிருந்தனர்.
வெளியில் யாரோ வந்திருப்பது தெரிவிக்கப்பட்டதும் முதலில் சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும் பின்னர் மித்ரனாக இருக்குமோ என்ற எண்ணம் இருவருக்கும் ஒரே நேரத்தில் தோன்றியது.
சட்டென தோன்றிய உந்துதலின் பேரில், இவர்களும் அந்த புத்த விகாரத்தின் வாயிலுக்கு வந்தனர். அங்கே மித்ரன் மயங்கிச் சரிந்திருப்பது கண்டு ஆதி அதிர்ந்தான்.
உடனே அருகில் சென்று அமர்ந்து கொண்டு அவன் தலையை தூக்கி தன் மடியில் வைத்து தண்ணீர் கொண்டுவருமாறு அங்கிருந்தவர்களிடம் பணித்தான்.
தண்ணீர் கொண்டுவர சிலர் உள்ளே சென்றனர்.
மித்ரன் அமர்ந்திருந்த இடத்திலிருந்து நான்கு படிகள் கீழே மணிமேகலை வைத்திருந்தது போன்ற பேழை ஒன்று இருந்ததை யாரும் கவனிக்கவில்லை.
தண்ணீர் தெளித்து, மித்ரன் மயக்கம் தெளிந்தவுடன் ஆதி அவனிடம் நடந்தவற்றை விசாரித்தான்.
இந்திரநீலக்கல் கிடைக்கவில்லை என்றதும் மித்ரனுக்கு ஏற்பட்ட அதே பய உணர்வு ஆதிக்கும் ஏற்பட்டது.
அனன்யாவிடம் இருந்த கல் பற்றி, ஆதி அப்போது அறிந்திருக்கவில்லை.
அனன்யா அருகில் வந்து “இதோ அந்த கல்லு மாதிரி இங்க ஒன்னு இருக்கு…!!!!!!! ஆனா அது நாம வச்சிருந்த கல் தானான்னு எனக்கு தெரியல…!!!! கொஞ்சம் வேற மாதிரி இருக்கு….!!!!” என்றாள்.
மணிமேகலை கண்ணில் அந்த பேழை பட்டுவிட, அவள் அதனை எடுத்து திறந்து பார்த்ததாள். அப்போது, அதனுள்ளே இதுவரை அனன்யா ஆதி இருவரும் வைத்திருந்த கல் இருந்தது.
அனன்யா அருகில் சென்று பார்த்துவிட்டு “மித்ரன்… நீங்க கல் கிடைக்கலைன்னு சொன்னீங்க…!!! ஆனா இது எப்படி இங்க வந்துச்சு…???!!! நீங்க எடுத்துட்டு வரலையா இத…??? என்று கேட்க, இதையறிந்த அனைவரும் குழம்பினர்.
“இங்க என்ன நடக்குதுன்னு யாராவது எனக்கு தெளிவா சொல்லுங்க…!!!!
இங்க ஒரு கல் இருக்குது…!!!
நாம வச்சிருந்ததா நெனச்சு தேடிப் போன இடத்தில இல்லாம, இப்போ அதே கல் இங்கே எப்படி வந்துச்சு…!!!
தலையே சுத்துது எனக்கு…!!!!
எதுவுமே புரியல…!!!” என்று மித்ரன் பெருமூச்சுவிட்டான்.
மணிமேகலை அங்கிருந்த மற்ற துறவிகளிடம் “இவரை அழைத்துச் சென்று உணவு பரிமாறுங்கள்… ஓய்வெடுக்க வையுங்கள்… சிறிது நேரம் கழித்து அனைத்தையும் தெரிந்து கொள்வோம்….!!! பசியோடு இருப்பவரை கேள்விகளால் துளைத்து எடுக்காதீர்கள்….!!!” என்றாள்.
இப்புதிர்களின் விடை என்னவென்று அறிய வேண்டும் என்றும் மித்ரன் மனதில் தோன்றினாலும் மணிமேகலையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அவன் உள்ளே சென்றான்.
ஆனால் அனன்யா மற்றும் ஆதர்ஷ் இருவரும் குழப்பத்திற்கு விடை காண வேண்டும் என்ற ஆவலில் வெளியில் சென்று இதற்கு முடிவு கிடைக்குமா என்று அறிந்து வர தீர்மானித்தனர்.
விடை மணிமேகலையிடம் தான் இருக்கிறது என்பதை அவர்கள் அறியவில்லை.
புத்த விகாரத்தில் மணிமேகலையிடம் அனுமதி பெற்று மித்ரன் ஓய்வெடுக்கட்டும் என்று அவனை அங்கேயே விட்டுவிட்டு அனன்யா வெளியில் வர, ஆதி ஒரு அழகான வெண்புரவி மீது அமர்ந்திருந்தான்( புரவி என்றால் குதிரை ).
அவன் அமர்ந்திருந்த விதமும், அந்த முன் மாலை நேரமும், சூரியக்கதிர்களின் மயக்கும் மஞ்சள் நிறமும் அவனை மிகவும் கம்பீரமாகக் காட்டின. அனன்யா “இவன் இந்த காலத்துல பொறந்திருந்தா… ராஜாவா தான் இருந்திருப்பான்…!!!” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.
தன்னுடைய வருங்கால கணவனுடன் இந்த மாலை கடற்காற்றின் இனிமையை ரசிக்கப்போகிறோம் என்று மனம் துள்ளிக்கொண்டிருந்தது.
“ அடியே அப்பட்டமா வழியுதுன்னு தெரிய போகுது… கொஞ்சம் தொடச்சுக்கோ….” மனசாட்சி மறுபடியும் எச்சரித்தது.
“ என்ன ஒய்யாரமா உக்கார்ந்துருக்கீங்க… குதிரை தள்ளி கிள்ளி விட்டுடபோகுது இறங்குங்க…!!!” தன் உணர்ச்சிகளை மறைத்துக்கொண்டு அவனை கேலி செய்தாள் அனு.
“ஹா… ஹா… உங்களுக்கு தடகளம் தெரியும்ன்னு சொன்னீங்க… எனக்கு குதிரை ஏற்றம் தெரியும்…. அதையும் தெரிஞ்சுக்கோங்க… சரி இப்ப வந்து ஏறி உட்காருங்க… நாம ரெண்டு பேரும் இதுலதான் வெளில போறோம்…!” என்றான் ஆதி முகம் முழுதும் படர்ந்த புன்னகையுடன்.
அவளுக்கு அதனை நம்பவே முடியவில்லை “குதிரைல நாம போக போறோமா…? என்ன சொல்றீங்க… எப்படி நான் வரது… நான் எல்லாம் யார் கூடயும் பைக்லகூட போகமாட்டேன்… குதிரையில எப்படி…?” என்றாள் என்ன பதில் சொல்வதென்று புரியாமல்.
ஆனால் ஏன் இன்னும் கமிட் ஆகலன்னு கேட்கும் தோழிகளிடம்… “என்னை ராஜகுமாரன் வந்து குதிரையில் தூக்கிட்டு போயிடுவான்… எனக்கு இங்க உள்ள பசங்கள பிடிக்கல… அவங்களுக்கும் என்ன பிடிக்கல…” என்று கதை அளந்தது நினைவு வர சிரிப்பு வந்தது.
“ரொம்ப பண்ணாத அனு… நீ வெளியில் வரும்போது குதிரையை பார்த்தவுடன் உன் முகத்தில எவ்வளவு சந்தோஷம் இருந்ததுன்னு நான் பார்த்தேன். ஒழுங்கா வந்து ஏறு செல்லக்குட்டி…” என்று சொன்னான் ஆதி.
“அட மக்கு பையா… உன்னை தான் பாத்தேன்…” அனன்யா உள்ளுக்குள் சிரித்துக்கொண்டாள்.
அது தெரியாத ஆதி “நான் உங்கள பத்திரமா கூட்டிட்டு போயிட்டு திருப்பி அழைச்சிட்டு வந்துருவேன் மகாராணி… நம்பி வாங்க…” என்றான், பம்முவது போல் பாவனை செய்து.
உன்ன நம்பாம வேறயார நம்ப போறேன் என்று அவள் எண்ணினாள்.
இவன் செய்கைகளும் பேச்சுகளும் என அனைத்தும் இனம் புரியாத மகிழ்ச்சியை கொடுத்தன. பொங்கி வந்த வெட்கத்தையும் படபடப்பையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு அவன் கைபற்றி குதிரை மேல் ஏறினாள் அனன்யா…..
இந்த செல்லம்… குட்டி… எல்லாம் எப்படி வந்து ஒட்டிக்கொண்டன என்று ஆதி தனக்குள்ளே வியந்துகொண்டான்.
“கொஞ்சம் அதிகமாக பேசிட்டாம்.. இனி குறைச்சுக்கனும்… இவ எப்போ எப்டி மாறுவான்னு தெரியாது” என்று ஆதியின் மூளை சொன்னது. இருந்தாலும் பேசு பேசு என்று மனம் அரித்தெடுத்தது.
அந்த குதிரை மெல்ல மெல்ல நடந்து சென்றது…. கடற்கரை ஓரம் சிறிது தூரம் சென்று மருவூர்ப்பாக்கத்தில் இரத்தின வணிகர்களிடம் இந்திரநீலம் பற்றி விசாரித்து விட்டு திரும்பி விட வேண்டும் என்று நினைத்தே அவன் புத்தவிகாரத்தில் குதிரையை வாங்கினான்.
ஆனால் அவர்கள் மனங்கள் வந்த வேலை மறந்து, காற்றோடு மிதந்துகொண்டிருந்தன. வேறு எந்த நினைவும் இன்றி இதயங்கள் அன்பில் திளைத்திருந்தன….
குதிரை மின்னல் ஒன்று பளிச்சிடவும் சற்று மிரண்டு குலுங்கியது…
ஆதி குதிரையை நிறுத்த முயன்றபோது அனு கீழே விழப்போனாள்… அவள் ஆதியை அச்சத்தில் இறுக பற்றிக்கொண்டாள்.
குதிரை நின்றுவிட்டது… ஆனால் மனமெனும் குதிரை நிற்குமா…
மேகங்கள் போல் தேகங்கள் தொட்டுக்கொள்ள, நெஞ்சில் மின்னல் வெட்ட அங்கே காதல் மழை….
வானிலும் மின்னல் மழைக்கான அறிகுறி தென்பட்டது….
◆◆◆
அவர்கள் மேல் மழைத்தூறல் பட்டவுடன் இருவரும் சுயநினைவுக்கு வந்தனர்.
வானில் திரண்ட மேகங்கள் மழையை சிறிது சிறிதாக நிலத்தில் விதைத்துக் கொண்டிருந்தன.
இவர்கள் புத்த விகாரத்தில் இருந்து கிளம்பி அரை மணி நேரம் இருக்கும். குதிரை மெதுவாக நடந்து வந்ததால், வெகு தூரம் சென்றிருக்கவில்லை.
அதனால் ஆதி மருவூர்ப்பாக்கம் செல்லும் எண்ணத்தைக் கைவிட்டான். புத்த விகாரத்தை நோக்கி குதிரையை திருப்பி, காற்றினைக்கிழித்து மின்னலுடன் போட்டிபோட்டு அப்புரவி புத்த விகாரத்தை அடைந்தது.
அனன்யா இனிமையிலிருந்து தனிமைக்கு போகவேண்டும் என்று எண்ணி கொஞ்சம் சோர்ந்து போனாலும், அன்றைய நினைவுகள் அவளுக்கு வாழ்நாள் முழுவதும் போதும் எனும் நிறைவு இருந்தது.
அவன் நெருக்கம், மின்னல் மழை, கடற்காற்று, புரவிப்பயணம்…. எல்லாம் கனவிலும் கதைகளிலுமே நடக்கக்கூடியவை.
அவளால் நேராக ஆதியின் கண்களைப்பார்க்க முடியவில்லை. உணர்ச்சிகள் கடலலைகள் போல் மேலும் கீழும் விழுந்து எழுந்து அடங்கின. மனதில் உண்டான ரசாயன மாற்றங்கள் அவளை ஆர்ப்பரித்து ஆகாய உச்சிக்கு கொண்டு சென்றும், ஆழ்கடல் அமைதியை தந்தும் இம்சித்தன.
இவர்கள் வந்த திசையிலேயே தூறல் அடித்ததால், அனன்யா மீது மழைத்துளிகள் விழாமல் ஆதியை மட்டும் நனைத்திருந்தன.
இவர்கள் வந்ததும் பஞ்சவாசப் புகை போட்டு தலையின் ஈரத்தை போக்கிவிட மணிமேகலை பணியாளர்களுக்கு அறிவுறுத்தி இருந்தாள். அவர்களும் அதன்படியே செய்தனர்.
“இது ரொம்ப நல்லாருக்கு… என்ன மருந்து..?”என்று ஆதி கேட்டான்.
“பஞ்சவாசம் என்பது ஏலக்காய், தக்கோலம் (அசைவத்தில் சேர்க்கப்படும் அன்னாசிப்பூ/star anise), இலவங்கம் (கிராம்பு), சாதிக்காய், கற்பூரம் எனும் ஐந்து மூலிகைகள் சேர்த்து போடப்படும் புகை ஆதி.. முன்னாடி சாம்பிராணிக்கு பதில் இத பயன்படுத்திருக்காங்கன்னு படிச்சுருக்கேன்” என்று அனன்யா சொன்னாள்.
“அடேங்கப்பா…. என்ன கேள்விகேட்டாலும் பதில் சொல்லிடுற…இந்த ஊரப்பத்தி கரைச்சு குடிச்சுருப்ப போல…..” என்று ஆதி வியந்து கேட்டதற்கு அனு ஒரு புன்னகையையே பதிலாகத்தந்தாள்.
அனன்யாவுக்கு மணிமேகலையின் அறையில் ஒரு பகுதி தரப்பட்டது. ஆதி, மித்ரன் இருவரும் ஆண்கள் தங்கும் பகுதியில் இருந்தனர். மித்ரன் ஓய்வெடுத்து உணவருந்தி சற்று களைப்பு நீங்கி எழுந்தான்.
◆◆◆
மித்ரன் அந்த இரண்டாவது பேழை பற்றியும் அதில் இருந்த கல் பற்றியும் மணிமேகலையிடம் “உங்களுக்கு இது பற்றி ஏதேனும் தெரியுமா…? நாங்க அந்த இந்திர நீலக் கல்லை எங்களுக்கு கொடுக்கப்பட்ட அறையில் வச்சிருந்தோம்… நான் அங்க போய் பாத்தப்போ எதுவுமே இல்ல… ஆனா இங்க வந்த பிறகு இந்த புத்த விகாரத்தின் வாசலில் ஒரு மரப்பெட்டியில் வைத்து அந்தக் கல்லை இங்கே கொண்டு வந்தது யார்…?” என்று கேட்டான்.
“ஆம்…. நானறிவேன்… நீங்கள் உங்கள் உடைமைகளை பயணியர் சத்திரத்திலேயே வைத்துவிட்டு வந்திருப்பீர்கள். நாள்தோறும் அவ்விடங்கள் தூய்மை படுத்தப்படும்… அவ்வாறு செய்யும்பொழுது, இந்தக் கல்லை அங்கிருப்பவர்கள் எடுத்திருப்பார்கள்…. விருந்தினர் மாளிகைகளில் விடப்படும் பொருள்கள் அரசு கருவூலத்தில் சேமிக்கப்பட்டு அவர்கள் வந்து மறுபடி கேட்டாராயின் திருப்பி கொடுக்கப்படும்….”என்று நிறுத்தினாள்.
“பாருங்க எவ்ளோ சிஸ்டமேட்டிக்கா இருக்குல்ல” என்று மித்ரன் புருவங்களை உயர்த்தினான்.
“இந்தக் கல் இளவரசர் பார்வைக்கு சென்றிருக்கவேண்டும். விருந்தினர் தங்குமிடங்கள் இளவரசர் ஆளுகையின் கீழ் வருபவை… அதுமட்டுமன்றி அனன்யா என்னைப் போலவே இருப்பதால் இதை நான் மாறு வேடம் பூண்டு அங்கே எடுத்து வந்து, விட்டுச் சென்று இருப்பதாய் அவர்கள் எண்ணியிருக்கக்கூடும்… ஆதலால் மீண்டும் அதனை என்னிடமே சேர்ப்பிக்க இவ்விடம் கொண்டுவந்து வைத்திருப்பார்கள்…” என்று மணிமேகலை விளக்கினாள்.
“அப்போ அவ்ளோதானா… நாங்க ஊருக்கு போறதுக்கு இந்த கல் எங்களுக்கு எப்படி உதவும்… இதை மட்டும் தான் நாங்க நம்பியிருக்கோம்….. எங்களுக்கு வேற வழி இல்ல…. நீங்க சொல்ற கதை ரொம்ப சாதாரணமா முடிஞ்சிருச்சு… பெரிய மந்திரம் மாயம் ஏதாவது இருக்கும்னு நினைச்சேன்… இனிமே அங்க போகவே முடியாதா…??” என்று கேட்ட அனன்யா கவலையும் குழப்பமும் என கலவையான உணர்வுகளை முகத்தில் வெளிப்படுத்தினாள்.
“இன்னும் முழுமையாக அறிந்து கொள்ளாமல் பேச வேண்டாம்…
என்னிடம் இருப்பது போன்ற கல் இளவரசரிடமும் ஒன்று உண்டு.
இவ்விரண்டு கற்களையும் அருகருகில் வைக்கும்பொழுது நாம் நினைத்த இடங்களுக்கு செல்லலாம்…
‘நாம் இருவரும் வேறு எங்காவது உலகத்திற்கு சென்றுவிடலாம்….. என்னோடு வந்து விடு’ என்று முன்பு என்னிடம் இருக்கும் பேழையை இதேபோல் வாசலில் வைத்துவிட்டுச் சென்ற போது இளவரசர் எழுதிய குறிப்பில் இருந்தது.
ஆனால் அது எல்லா நேரமும் செயல்படாது குறிப்பிட்ட சில வேளைகளில் மட்டும் தான் செயல்படும். அது குறித்த உண்மை இளவரசருக்கு மட்டுமே தெரியும். நாட்டில் வேறெவரும் இது பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை.
நீங்கள் வேறு எங்கேயும் விசாரிப்பது இளவரசருக்குத் தெரிந்தால் என் துறவரம் கலையும் நிர்பந்தம் உருவாகும்… எனவே தயைகூர்ந்து இதை மறந்து விடுங்கள்…” என்றாள்.
“எத மறக்க சொல்றீங்க… நாங்க ஊருக்கு போறத மறக்க சொல்றீங்களா…” என்று மித்ரன் இடைமறித்துக் கேட்டான்.
அப்போது ஆதி “நானும் அனுவும்…. கப்பல்ல நடுகடலுல இந்த கல்ல கையில் பிடிச்சுருந்தோம். அப்படியிருக்கும்போது தான் ஏதோ ஒன்னு நடந்ததால நாங்க இங்கே வந்தோம்….மறுபடியும் அதைப்போல நாங்கள் செஞ்சு பார்க்கிறோம்…!!! என்ன ஆகுதுன்னு பார்ப்போம்…!!!!” என்று கூறினான்.
“அதனால் மட்டும் நடந்ததில்லை இந்நிகழ்வு என்பதை நீங்கள் முழுவதுமாக புரிந்து கொள்ளுங்கள்…. இதற்கு வேறு உபாயம் இருக்க வேண்டும்… சரியான வழியினை அறிந்து செயல்படுங்கள்…” என்றாள் மணிமேகலை. (Ultram)
“கையில் வெண்ணையை வச்சுக்கிட்டு நெய்க்கு அலையற மாதிரின்னு எங்க ஊர்ல பழமொழி சொல்லுவாங்க… அதுமாதிரி கல் கிடைச்சிருச்சு.. அவங்க ரெண்டு பேரு கையிலயும் வச்சு நாங்க முயற்சி பண்ணி பாக்குறோமே… ஏன் தடுக்குறீங்க…” என்றான் மித்ரன்.
அனன்யாவுக்கு மணிமேகலை சொல்வதில் நியாயம் இருப்பதாகவே பட்டது.
ஆனாலும் ஆதியும் மித்ரனும் அடம் பிடித்ததால் அவள் அவர்கள் சொன்ன வழியினைப் பின்பற்ற ஒப்புக் கொண்டாள். அவளுக்கு இந்த இடம்விட்டுச் செல்வதற்கு முழுமையாக மனம் வரவில்லை.
அன்றிரவு, கப்பலில் இவர்கள் இருவரும் எப்படி அமர்ந்திருந்தார்களோ, அதேபோல் மண்டியிட்டு அமர்ந்து கொண்டு இருவரும் கைகளைப் பற்றிகொண்டு இந்திர நீலக்கல்லை நடுவில் வைத்திருந்தனர்.
மித்ரன் ஆதியைத்தொட்டபடி அவனையொட்டி நின்றிருந்தான். சில நொடிகள் கழிந்திருக்க, மின்னல் ஒன்று மேலிருந்து கீழாக வானத்தைக் கிழித்துக் கொண்டு வளரத் தொடங்கியது…..
◆◆◆