மதுரை அண்ணா நகர்…
வித்யா காலேஜுக்கு ரெடியாகி கொண்டிருந்தார்.
“என்னம்மா அப்பா சீக்கிரமே போயாச்சா !!! நான் வேணா உங்கள கொண்டுவந்து விடவா ?!!!”என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தான் ஆதர்ஷ்.
ஆறடி உயரம். மிதமான உடற்பயிற்சி செய்த உறுதியான உடற்கட்டு. பணிவும் பரிவும் நிறைந்த கண்களும் பொறுமையான சுபாவமும் கொண்டவன்.
“ ஆதர்ஷ் ஒரு நிமிஷம் இங்கே வா…. உன்கிட்ட ஒன்னு பேசணும்.”
“ சொல்லுங்க மா என்ன விஷயம்…”
“ அது ஒன்னும் இல்லடா… உன் ஃப்ரண்ட் மித்ரன் இருக்கானே, அவனுக்கு போன மாசம் பொண்ணு பாத்தாங்களே என்ன ஆச்சு…?”
“ அவன் அதுக்குள்ள கல்யாணமா அப்படின்னு யோசிக்கிறான். இன்னும் கொஞ்சநாள் லைப் என்ஜாய் பண்ணலாம் அப்படின்னு நினைக்கிறான்.”
இவன் மனசுல என்ன கணக்கு வச்சிருக்கான் தெரியலையே என்று நினைத்துக்கொண்டு… “ லவ் கிவ் ஏதும் பண்றானா டா…”
“ அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா…” என்று சொல்லிவிட்டு சத்தமேதும் தராத தன் கைபேசியில் மும்முரமாக எதையோ தேடிக்கொண்டிருந்தான்.
“ நீ யாரையும் விரும்புறியா தம்பி !! அப்படி ஏதும் இருந்தால் சொல்லிடு” என்று கேட்ட வித்யாம்மா மனதில் ஆயிரத்தெட்டு கேள்விகள்.
“ ஏம்மா உங்களுக்கு மருமகள கொண்டு வரணும்னு ஆசை வந்திருச்சா..!!” என்றுவிட்டு புன்னகைத்தான். இந்த புன்னகையில் ஏதும் குறிப்பு இருக்கிறதா ?
“எல்லாருக்கும் அது இருக்கதானே செய்யும்… எனக்கு இருக்காதா..! உனக்கு ஏதும் எதிர்பார்ப்புகள் இருந்தா சொல்லிடு தம்பி” கொஞ்சம் குழம்பியவராய் அம்மா கேட்க…
“பாருங்கம்மா… நீங்க பார்த்து முடிவு பண்ணிக்கோங்க… எனக்கு ஒன்னும் பெருசா ஆசை எல்லாம் இல்லை”இப்போதும் அவன் பார்வையெல்லாம் கைபேசியில் தான் இருந்தது.
“என்னப்பா இப்படி சொல்ற… கல்யாணம் பண்ணி வாழ போறது நீதானே” என்றார் தன்பேச்சில் கவனம் செலுத்தாத மகனை நொந்துகொண்டபடி.
“அம்மா எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லம்மா… அப்படி வச்சிகிட்டு இருந்தா தான் வாழ்க்கை கஷ்டமா இருக்கும்… டோன்ட் வரி… நான் ரெடி ஃபார் மேரேஜ்…” சிரித்துக்கொண்டே சொன்னான்.
இதைக்கேட்டதும் அம்மா மனம் கொஞ்சம் ஆசுவாசம் கொண்டது. தானாக ஒட்டிக்கொண்டது புன்சிரிப்பு.
“நம்ம சித்தி நேத்து குலதெய்வம் கோயிலுக்கு போனாங்க. அங்க அவங்க நம்ம சொந்தகாரங்க ஒருத்தர பார்த்திருக்காங்க.
அவங்க பொண்ணு பார்க்க நல்ல லட்சணமா இருக்காளாம்… தஞ்சாவூர்ல பி.எச்.டி பண்ணிட்டு இருக்காளாம்…”
திருச்சி என்று சொன்னதும் அவன் கண்ணுல ஒரு சின்ன ஒளி வந்துட்டு போனத அவங்க கவனிக்காம விடுவாங்களா….
“ நீ பாத்துட்டு சரின்னு சொன்னேனா மேல பேசலாம்… என்னன்னு யோசிச்சு சொல்லு” என்று சொல்லிவிட்டு தன் கைப்பையோடு எழுந்தவர் கையைப்பற்றி அமர வைத்து…
“ என்ன பாதியிலேயே விட்டு போயிட்டீங்க… எங்க போய் பார்க்கிறதுனு சொல்லுங்க…” கண்ணடித்தான்.
“இப்போவேயா…. ” என்று சொல்லிவிட்டு கடகடவென சிரித்தவாறு “நாளையோட ஆடி முடிஞ்சுடும். வர்ற ஞாயிற்றுக்கிழமை நல்ல நாளா இருக்குன்னு… கோவில்ல பாக்கலாம்ன்னு இருக்கோம்..இப்போ என்ன காலேஜில் கொண்டுவந்து விட்டுடு” என்று சொல்லிக்கொண்டே வாசல் நோக்கி நடந்தார்.
◆◆◆
அனன்யா வீடு….
ஆதர்ஷ் பொன்மாறன்…
அந்த பெயரை பத்து தடவை சொல்லிப் பார்த்துக்கொண்டாள்.
எப்படியோ அவன் முகநூல் பக்கத்தை தேடி ஒரு வழியாக கண்டுபிடித்துவிட்டாள்.
அந்த புகைப்படத்தை பார்த்ததும் அவளுக்கு அப்படியே ஒரு நிமிடம் மண்டைக்குள் கொசுவர்த்திச் சுருள் சுற்ற ஆரம்பித்தது….
“ நல்லா மாட்டிக்கிட்ட டி…” தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்……
நான்கு வருடங்களுக்கு முன்பு……
அவள் மாஸ்டர்ஸ் படித்தது திருச்சியில் பெரிய தேசிய கல்லூரி…
ஆண்டுக்கு ஒருமுறை அங்கே கலை நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். நாடு முழுவதும் இருந்து பல மாணவர்கள் வருவது உண்டு..
எங்கே என்ன அநியாயம் நடந்தாலும் அங்கே முதலில் போய் நியாயத்தை நிலைநாட்ட வேண்டும் என்பது அவளுக்கு சிறுவயதிலிருந்தே உள்ள கெட்ட பழக்கம்.
ஆனால் அவளுக்கே அன்று விதி ஒரு கணக்குப் போட்டு வைத்திருந்தது.
◆◆◆
அந்த விழாவின் இரண்டாம் நாள்….
அவள் தனியே நடந்து சென்று கொண்டிருந்தபோது ஒரு பேப்பர் ராக்கெட் வந்து அவள் தலையில் விழுந்தது.
அது வந்த திசையில் இருந்த கேன்டீன் வாசலில் கூட்டமாக நிறைய பையன்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அருகில் ஒருவன் கைகளில் நிறைய A4 காகிதங்களை வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தான்.
இவள் பரபரவென பக்கத்துல போய் “ஹேய்….நீ பேப்பர் வச்சிருந்தா போறவரவங்க மேல எல்லாம் ராக்கெட் விடுவியா !!!” என்று சீறினாள்.
“ எதுக்கு என்கிட்ட இப்படி வந்து பேசுறீங்க… நான் உங்க மேல ராக்கெட் வீசலயே” பொறுமையாகக் கேட்டான் அவன்.
“தப்பு பண்ண யாரும் பண்ணேன்னு ஒத்துக்க மாட்டாங்க… நான் நேரா போய் உங்க கல்லூரி எதுன்னு கேட்டு புகார் செய்யப்போறேன், எந்த போட்டியிலயும் கலந்துக்க விடாம செய்றேன் பாரு….!!!” ஒற்றை விரலை நீட்டி மிராட்டலாய் அவள் பேச …
உடனே அருகில் இருந்து சில பையன்கள் ஓடி வந்து ”சாரி சார்… நாங்க தான்… அந்த பக்கம் உள்ள தோழியைக் கூப்பிட ராக்கெட் விட்டோம்” என்று சங்கடமாய் நெளிந்தார்கள்.
“ சரி விடுங்க … தெரியாம தானே… நான் ஒன்னும் தப்பா எடுத்துக்க மாட்டேன் “ என்றான் இவளைக் கண்டுகொள்ளாமல்.
“என்னது சார் ஆஆ…..” அவள் மன்னிப்பு கேட்கும் விதமாய் பார்த்துவிட்டு அங்கிருந்து வேகமாய் நகர்ந்துவிட்டாள். எதுவும் பேசத் தோன்றவில்லை. சங்கடமாக உணர்ந்தாள் மனதுக்குள்.
அவன் மாணவர்களை கல்லூரி பொறுப்பில் அழைத்து வந்ததாலும், அவளும் விழா அமைப்பு குழுவில் இருந்ததாலும் அடிக்கடி இருவரும் பார்க்க நேர்ந்தது.
ஒவ்வொரு முறையும் அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைப்பதும், நமக்கு எதுக்கு வம்பு என்று விலகுவதுமாகவே இருந்தாள்.
ஆனால் அவன் இவளைப் பார்த்ததாகவே தெரியவில்லை.
அன்று இரவு விடுதியில்….
“எப்போதுமே அவசர புத்தி நினக்கு… கையில பேப்பர் வச்சிருந்தார் சரி…. அவர் தான் வீசுனார்ன்னு நீ எப்படி முடிவு செஞ்சது…!!!” தோழி ரேஷ்மா கடிந்துகொண்டாள்.
“இல்லடி… உனக்கு தான் தெரியுமே நான் எவ்ளோ கோவக்காரின்னு… என்னால முடில மச்சி… அநியாயம் எதிர்ல நடந்தாலே பொறுத்துக்க மாட்டேன்… எனக்கே நடந்தா…!!! அதான் கண்ண மறச்சிடுச்சு..!!!” பாவமாய் சொன்னாள் அனன்யா…
“எடீ… எவ்வடாயிலும் நன்னாயிட்டு சிக்குனா நினக்கு அறியும் …!!” இது ரேஷ்மா.
◆◆◆
“ஏண்டி…. எவ்ளோ நேரமா கழுதை மாதிரி காட்டு கத்து கத்துறேன்… காது கேக்கலையா உனக்கு…. சாப்பிட வா சீக்கிரம்…” அம்மாவின் குரல் கேட்டு தன்னிலை உணர்ந்து நினைவுக்கு வந்தாள்.
“ஆஆம்ம்மா… வரேன்…” இவளும் இங்கிருந்தே கத்தினாள்..
பின்னணி இசையில் பழைய கால படங்களில் வரும் சோக இசை டோய்ங்ங்ங்ங் என்று மண்டைக்குள் ஒலித்தது….
சிக்கிட்டேன் டி… சிக்கிட்டேன்… என்று வாய்க்குள் சொல்லிக்கொண்டே ரேஷ்மாவுக்கு தொலைபேசியில் அழைத்தாள்.
◆◆◆
“ உன் நாக்கு ஏதும் கருநாக்கா டீ… நாலு வருஷம் ஆனாலும் நீ சொன்னது அப்டியே நடக்குது”
“ஏன் டீ… ஏதும் குழப்பமா ???“
“போன வாரம் கோவிலுக்கு போனேன்னு சொன்னேன்ல அங்க ஒரு ஆண்ட்டி கிட்ட எங்கம்மா என் வாழ்க்கையே அடகு வச்சுட்டாங்க டீ…!!!! அந்த ராக்கெட் பையன் இருக்கானே… அவன முகநூலில் காமிச்சு… இதான் மாப்பிள்ளை அப்டின்னு சொல்றாங்க…”
“அடிப்பொளி….!!!!
அவரா….?? செம்மயா இருக்குமே பொருத்தம்…
உன் அவசர புத்திக்கு அப்படி பொறுமையான ஆளுதான் சரி…
ராக்கெட் பையன்னு அத்தோட முடிச்சிட்ட… மிச்ச கதை எல்லாம் ஞாபகம் இல்லையா…!!! ஆய்வு கட்டுரைக்காக போனப்போ நடந்தது மறந்துபோச்சா ???”
” பாவம் டீ அந்த ராக்கெட் !!!” அனன்யா சொல்ல….
“அது நடந்து ரெண்டு வருஷமாச்சு… ரொம்ப தான் பாவப்படற…
இதுவரைக்கும் என்ன பிரமாதம்….
ஒருவேள உனக்கு கட்டிவச்சுட்டா, அப்றம் தான் அவரு உண்மையா பாவம்…. “ சொல்லிவிட்டு கடகடவென சிரித்தாள்.
“கடுப்பேத்தாம வைடீ” அழைப்பை துண்டித்துவிட்டு அம்மாவிடம் போனாள்.
ரேஷ்மாவுக்கு தெரியும் இவள் இப்படித்தான் என்று… கோவம் இருக்கும் இடத்துல தான் குணம் இருக்கும்.
அனன்யாவுக்கு இது அப்படியே பொருந்தும். அவளே மறுபடி கூப்பிடுவாள். ஆதலால் திரும்ப அழைக்காமல் விட்டுவிட்டாள் .
◆◆◆
“அம்மா…. அம்மா… சோறு போடுங்கம்மா… “ என்று அரபிக் கடலோரம் பாட்டை வார்த்தைகள் மாற்றி முணுமுணுத்துக்கொண்டே வந்து அமுதாவை இடித்தாள்…
“தடிமாடு… கூப்பிட்டு எவ்ளோ நேரமாச்சு… இந்தா தோசைய சாப்பிடு” அம்மா கடுப்பான குரலில் பேசிவிட்டு போனார்….
அனன்யா – அம்மா மன்னிச்சூ….. நான் ரேஷ் கிட்ட பேசிட்டு இருந்தேன்… !! என்ன மா தட்டு மேல இன்னொரு தட்டு…. ஓஹோ… தோசையா…??
அமுதா – ம்ம்ம்ம்… சொல்லுவடீ… சொல்லுவ…. ஊத்தி அரைமணி நேரம் ஆச்சு…. பொழுது விடிஞ்சு பொழுது போறது கூட தெரியாம அளக்குறீங்க… அப்படி என்ன தான் டீ பேசுவீங்க !!!!!
அனன்யா – இது வாலிப வயசு… அப்படித்தான் இருப்போம்… உங்களுக்கு வயசாயுடுச்சு… புரியாது தாயே…!!
அமுதா அன்று வீட்டில் ஆடி அமாவாசை என்று வகை வகையாக சமையலுக்கு ஆயத்தம் செய்ததால், “உன்கிட்ட வாய குடுத்தா பேசிட்டே இருப்ப… எனக்கு வேலையிருக்கு போ…” என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.
சாப்பிட்டு முடித்துவிட்டு இதேபோல் வாயாடிக்கொண்டே வேலைகளையும் பகிர்ந்துகொண்டாள்.
அவள் மகிழ்ச்சியாகவும் இருந்தாள், அதேசமயம் திருமணம் ஆனால் சுதந்திரம் போயிடும்னு பயமும் இருந்தது…
ஒரு விதமான ரோலர்க்கோஸ்டர் மனநிலை அது….
சமயத்தில் “ நான் பண்ண மொக்கை பிரச்னையெல்லாம் அவன் பெருசுபடுத்தல… முறைக்ககூட இல்ல… கல்யாணம் பண்ணாலும் இப்படி பாத்துகிட்டா நல்லா இருக்கும்…” என்று மனம் சொல்லும்போது மிதக்கும் உணர்வும் வரும்….
“ பாக்க நல்லா தான்யா இருக்கான்… ம்ம்ம்… பாத்ததும் புடிக்கும் எல்லாருக்கும்… “
வேறொரு நேரம் “இதுகிட்ட பேச தேவயில்லைன்னு கூட விலகியிருக்கலாம்…!!!” என தனக்கு தானே சொல்லிக்கொண்டாள்.
“இல்லன்னா வேற யாரையும் விரும்புறானோ என்னவோ..!!! “ இந்த எண்ணமே அவளுக்கு சோர்வு தந்தது.
இப்படி யோசித்துக்கொண்டே அவள் தூங்கிப்போனாள்.
மறுநாள் காலையில் காபியோடு அம்மா இன்னொன்றும் தந்தார். அது ஞாயிற்றுக்கிழமை கோவிலில் பையனைப் பாக்கப்போறோம் எனும் செய்தி……
அனன்யா அப்பாவும், பையனோட அப்பாவும் பேசினார்களாம். பாத்துட்டு பிடிச்சுருந்தா மத்தது பேசிக்கலாம் என்று எண்ணமாம்.
காலை டிபனுக்கு செய்தவற்றை டைனிங் டேபிளில் வைத்துவிட்டு அம்மா அப்பா அவள் மூவரும் சாப்பிட்டபோது……
“பாரு டா…ஏன் உம்முன்னு இருக்க… போய் பாப்போம்…. உனக்கு பிடிச்சா தான் எதுவும் நடக்கும்… இதுக்காக மனசை குழப்பிக்காத… சரியா !!!” அப்பா சொன்னார்.
“ம்ம்ம்ம்….” கொஞ்சமாக புன்னகை எட்டிப்பார்த்தது.
இதுதான் அவள் அப்பா…
அம்மாவுக்கு எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் சாப்பிட்டு எழுந்துவிட்டார். உள்ளுக்குள் கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னு வேண்டுதல் மட்டும் இருந்தது….
நாட்கள் வேகமாய் நகர்ந்தன… அன்று காலை எழுந்தபோது ஞாயிற்றுக்கிழமை என்று சொன்னது கைபேசி திரை…….