1.1. முன்கதை சுருக்கம்
அவன் தன் உடலிலும் வேட்டியிலும் ஒட்டிக்கொண்டிருந்த ஈர மணலை உதறியபடி எழுந்தான்.
“குப்பன் சொன்னான்னு நான் காலையிலேயே இந்த ஆளோட வந்தது எவ்வளவு தப்பா போச்சு… கண்ணத் தொறந்து முழிச்ச மொத ஆளும் அவன்தான். இனி ஒரு தரம் அவன பார்த்தா இந்த இக்கட்டுல மாட்டிவுட்டதுக்கு ஒரு புடி புடிச்சு தான் அனுப்பனும்” என்று நினைத்துக்கொண்டான்.
ஆனால் மீண்டும் ஒருமுறை குப்பனை சந்திக்கும் வாய்ப்பு அவனுக்கு வரப்போவதேயில்லை என்பதை அவனறியான்.
“இந்த வெள்ளைக்காரன் வந்ததுலேருந்து மொறப்பாவே இருந்தான். மயக்கத்துல கூட அவன் மூஞ்சப் பாரு சிடுசிடுன்னு…” வாய்விட்டு புலம்பினான்.
வெள்ளைக்காரன் பாம்புபோல் நெளிந்துவிட்டு…. ஒரு வினாடியில் அலறிக்கொண்டு எழுந்தான். எழுந்து பரபரப்பாக அவர்கள் இருந்த இடம் முழுவதும் துழாவினான்.
அவன் பரபரப்பைப் பார்த்ததும்தான் முதலாமவன் சிறிது நேரத்திற்கு முன் நடந்தவற்றையுணர்ந்து அதிர்ந்தான்.
அன்று அதிகாலையில் குப்பன் வந்து “ஒரு பெரிய கை சிக்கிருக்கு… நீ சும்மா ஒரு தபா கூட்டிட்டு போயிட்டு வா… அவன் சொல்ற எடத்துல ஒரு முங்கு முங்கி எந்திரி. ஒரு மணி நேரம்தான் நிறைய காசு தேறும்… பிரசவத்துக்கு ஊருக்கு போன பொண்டாட்டி, புள்ள பெத்து வந்தா.. அத காப்பாத்த துட்டு வேணாமா ?” என்றான்.
செயற்கை முத்துக்கள் மற்றும் சிப்பி வளர்ப்பு வந்தபிறகு ஆழ்கடலில் மூழ்கி முத்துக் குளிப்பவர்களின் கிராக்கி குறைந்து விட்டது. வரும் வருமானம் இருவருக்கே போதவில்லை.
குப்பன் சொன்ன இறுதி வாக்கியம் இவனை தலையாட்ட வைத்தது. அவனும் வந்தான்.
ஆனால் இதுபோன்ற சிடுசிடு பேர்வழியை இதுவரை சந்தித்ததில்லை. வெள்ளைக்காரனிடம் ஏச்சு வாங்க பயந்து, மறுக்காமல் அவன் சொல்லுமிடமெல்லாம் பகல் முழுவதும் படகில் சுற்றி அலைந்தான்.
நண்பகலுக்கு மேல் ஓர் இடத்தில் அவன் கை காட்ட அங்கே குதித்து நீந்தி ஆழம் வரை சென்றான். அப்போது, தான் கண்ணில் கண்டவற்றை அவனால் நம்ப முடியவில்லை.
கடலுக்கடியில் கட்டிடங்கள் ! அதுவும் அரண்மனை போல் பெரும் சுவர்கள் ! அங்கே ஓரிடத்தில் கடலுக்கே நீல நிறத்தை வாரி வழங்கிக் கொண்டிருந்த அந்த சுடர்மிகு கல்லைக் கண்டான். நீருக்குள் மூழ்கியிருந்த அவன் கைகள், தானாக கும்பிடும் தொணியில் சேர்ந்தன. அனிச்சையாய் நீந்தி அவன் அதன் அருகில் செல்ல, குழந்தை போல கல்லை வாரி எடுத்தான்.
நீருக்குள் எடையிழந்த அவன் தேகம் போல் மனமும் எடை இழந்தது. பின் நீந்தி நீர்ப் பரப்புக்கு மேலே வந்து சேர்ந்தான். தான் கண்டெடுத்த பொக்கிஷத்தை அவனிடம் கொடுத்தால், இது என்னவாகும் என்று மனம் அடித்துக்கொண்டது.
ஆனால் அந்த வெள்ளைக்காரன் சொல்லித்தானே குதித்தோம் ! அதனால் தானே இது கிடைத்தது ! என தன்னைத்தானே சமாதானம் செய்துகொண்டு கல்லை அவனிடம் தந்தான்.
பிற்பகலில் தொடங்கிய தேடல் முடிந்து இருட்டிய பின்னரே கல்லுடன் அவன் தோணியில் ஏறினான். சலனமின்றி தெளிவாய் இருந்த கடல் பரப்பு அதிர்வது போல் தோன்றியது.
முழுநிலவு தெரிந்த வானம் சட்டென இருட்டி, சூறைக்காற்றுடன் சேர்ந்து அச்சுறுத்தியது. வானைப் பிளந்துகொண்டு மின்னல் ஒன்று வந்து மறைந்தது. அலைகள் இவர்கள் இருவரையும் நீருக்குள் தள்ளின.
மேற்சொன்னவை தவிர வேறு எதுவும் நினைவில் இல்லை இவனுக்கு. வெள்ளைக்காரன் பேசிய ஐரோப்பிய மொழி ஆங்கிலம் இல்லை. அவன் தீவிரமாக தேடுவது அந்த கல்லைத்தான் என்பது புரிந்து போனது.
இருவருக்கும் மொழி ஒரு தடையாயிருந்த காரணத்தால் கல்லைக் காணாமல் ஆத்திரம் கொண்டவன்,தன் கழுத்தை நெரிக்க முற்பட்டபோது மீனவன் தப்பியோடினான்.
அவன் கோவம் இவனுக்கு அச்சமூட்டியது. கரை வந்ததும் தன் ஊர் என்று நினைத்தவனுக்கு, இங்கே திக்குதிசை புரியவில்லை. தற்போது நடந்தவற்றை உணரவே நாட்கள் அல்ல, வருடங்கள் ஆகும் என்பதை அவன் அறியான்.
அங்கே நடப்பவையனைத்தையும் விண்மீன்களும் பால்நிலவும் பார்த்தும் பார்க்காமல் இருந்தன. மக்கள் போராட்டங்களின்போதும் தன்வேலையை மட்டுமே செய்யும் பிரபலங்கள் போல, காவி வண்ண சூரியனின் ஒளியை வாங்கி, இரவுக்கு வெள்ளி வண்ணம் பூசிக்கொண்டிருந்தது வெண்ணிலா.
அந்த இடம் அவன் இடம் தான். ஆனால் அவன் அறிந்த இடமல்ல. இவனுக்கும் இனி தொடரப்போகும் கதையின் மாந்தருக்கும் எவ்வித தொடர்புமில்லை. ஆனால் இவன் இன்று அசைந்திராவிட்டால், சில வருடங்களுக்குப் பின் “அனு” அசைந்திருக்க வாய்ப்பில்லை.
◆◆◆
இப்போ கீழடி அகழ்வாய்வுகளுக்குப் பிறகு மக்கள் நிறைய தொன்மையை பத்தின விஷயங்களை தெரிஞ்சுக்க தொடங்கி இருக்காங்க…
ஆனால் அனன்யாவுக்கு அதில் சின்ன வயதில் இருந்தே பெரும் ஆர்வம்…வறலாறுன்னா உயிர வித்துட்டு படிப்பா… புத்தகங்கள் எப்போதும் அவளுக்கு நண்பர்கள்…
பாத்தா எல்லாருக்கும் பிடிக்கும் முகம். கோதுமை நிறமும் ஐந்தரை அடி உயரமும், தெளிவான அவள் முகம் போலவே எண்ணமும் கொண்டவள் அனன்யா. பார்க்கும் யாரையும் ஒருநிமிடம் கட்டிபோட்டுவிடும் கண்கள் அவளுடையது. ஏதோவொரு விஷயத்தை செஞ்சு முடிக்கணும்னு ஆர்வம் கண்ணுல எப்போதும் இருக்கும்.
அவ தன்னோட முனைவர் பட்டத்தை தொல்லியல் துறையில தான் வாங்கணும்னு பிடிவாதமா தமிழ் பல்கலைக்கழகத்துல சேர்ந்துட்டா…
வாய் லொட லொடன்னு பேசும்… எங்க அவ இருந்தாலும் எல்லாருக்கும் தெரிஞ்சுடும்…. ஆனால் படிப்பும் நல்லா வரும்…
தன்னுடைய ஆய்வுக்கட்டுரைக்காக அவ கூடவே படிச்சுட்டு இப்போ வேற கல்லூரியில் வேலை பார்த்துட்டு இருக்க ரேஷ்மாவை எப்போதும் கூட்டிட்டே சுத்துவா…. ரேஷ்மா கேரளாவிலிருந்து வந்து படித்தவள். ஒரே அறையில் தங்கிய இருவரின் எண்ண ஒற்றுமை, மொழியைத் தாண்டி சீக்கிரமே நட்பாக்கியது.
இப்போ கூட அவங்க ரெண்டு பேரும் தான் பூம்புகார் வந்திருக்காங்க…
அனன்யா அவ்ளோ சிறப்பான பூம்புகார் காலப்போக்கில் சிதைஞ்சு இருக்கத பாத்து ரொம்ப வருத்தப்பட்டா…..
அங்குள்ள அருங்காட்சியகம், ஒரு பழங்கால கோவில், கண்ணகி மணிமண்டபம் மற்றும் சில இடங்களையும் பார்த்துவிட்டு, கடற்கரையில் அரைமணிநேரமாக ஆடிக்கொண்டிருத்தபோது அவள் காலில் ஏதோ தட்டுப்பட்டது.
முதலில் சிப்பி அல்லது கிளிஞ்சலாக இருக்கும் என்று நினைத்து பொருட்படுத்தவில்லை இவர்கள். ஒரு இரண்டு நிமிடம் காற்றும் அலைகளும் ஓய்ந்து விட சட்டென்று அந்தக்கல் அனன்யாவின் கண்ணில் பட்டது.
அதைக் கையில் எடுத்ததும் ஏதோவொரு உணர்வு… மகிழ்ச்சி என்று ஒரு சொல்லில் நிறுத்திவிட முடியாது…
“இது மாதிரி ஒரு பொருளை பாத்ததே இல்லடீ… பாக்க எவ்ளோ அழகா இருக்குல்ல….!!!” என ரேஷ்மா சொன்னது தான் தாமதம்….
அனன்யா குடுகுடுவென ஓடிப்போய் நான் தரமாட்டேன் என்பது போல பாவனை காட்டினாள்.
“ஹேய்… ஹேய்… அனன்யா ஓடாத இப்படி… நான் ஒன்னும் வாங்கிக்க மாட்டேன்..!!! நில்லுடீ!!!” சொல்லிக்கொண்டே பின்னால் ஓடினாள் ரேஷ்மா….
“முடியாது டீ… செம்ம அழகா இருக்கு பாரேன்… “ சொல்லிக்கொண்டு தோழியைப் பார்த்துக்கொண்டு பின்னால் நகர்ந்தாள்… சூரிய ஒளியில் அந்த நீலக்கல் மிகவும் அற்புதமாய் தெரிந்தது…
அவளிடமிருந்து அதை வாங்கிவிடும் எண்ணத்தில் ரேஷ்மா நெருங்க… அனன்யா கல்லைத் தராமல் தொலைவில் வீசினாள்….
அப்போது பெரிய அலையொன்று கரை நோக்கி நகர்ந்து வரத்தொடங்கியதைப் பார்த்து பயந்து இருவரும் மேடான இடத்தை அடைவதற்குமுன் அலை வந்து அவர்களை நனைத்துவிட்டது….
கல் எங்கே போனதென்று தெரியவில்லை… ஆனால் அப்போது ஆண்கள் நான்கு பேர் இவர்களை நெருங்கி வருவது கண்டு அனன்யாவும் ரேஷ்மாவும் பயந்து ஓடத்தொடங்கினார்கள்….
அலைவந்து நனைத்த மாத்திரத்தில் நான்கு பேர் அவர்களை நோக்கி கத்திக்கொண்டே ஓடி வந்தனர்…..
◆◆◆
அனன்யா கல்லை தராமல் தொலைவில் வீசியபோது அது பத்தடி தள்ளி நின்று கடலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஐந்து இளைஞர்களில் ஒருவன் மேல் விழுந்தது….
இவர்கள் இருவரும் கல்வீசிவிட்டு அலையில் விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்த்த அடிப்பட்டவனது நண்பர்கள்,அதனால் தான் கோபத்துடன் சத்தம்போட்டபடி அனன்யா மற்றும் ரேஷ்மாவை நோக்கி ஓடிவந்தனர்.
“என்னடா இப்படி சின்ன பிள்ளைங்க மாதிரி பண்றீங்க !! வேணும்ன்னு செஞ்சதில்லை !! இதுக்கு போய் ஏன் கோபப்படனும் ” கல்லடி வாங்கியவன் அவர்கள் பின்னே ஓடிவந்து தன் நண்பர்களைப் பிடித்து நிறுத்தினான்….
ஓடிக்கொண்டிருந்த அனன்யா நின்று மூச்சிரைக்க திரும்பிப்பார்த்தாள். ரேஷ்மாவும் திரும்பினாள்…. அப்போது தான் அவர்களுக்கு உயிர் வந்தது….
அப்பாடி என்று நிதானித்து பெண்கள் இருவரும் அவன் முகத்தை உற்று நோக்கினர்….
நெற்றியில் கொஞ்சமாக ரத்தம்… அவள் வீசியெறிந்த கல்லின் கைங்கரியம் என்று புரிந்தது. இன்னும் சற்று கூர்ந்து பார்த்துவிட்டு ஆச்சர்யத்தில் ஒன்றாக இருவரும் கூவினர்….
“ஹேய் ராக்கெட்….!!!!”
கூட இருந்த அவன் நண்பர்கள் இதில் இன்னும் கடுப்பாக… அவன் அவர்கள் கோபத்தை தணிக்கும் பொருட்டு ஏதோ பேசிக்கொண்டிருந்தான்…
சரி இந்த சூழ்நிலையில் பெண்களுடன் வம்பு வேண்டாமென்று விலக்கிவிட்டு, அனன்யா மற்றும் ரேஷ்மாவை பார்த்து அங்கிருந்து போகும்படி சைகை செய்தான்.
இருவரும் வேகமாக நடையைக் கட்டி பேருந்து நிலையம் அடைந்தனர்….
“ச்ச ச்ச…. அந்த கல்லு கடற்கரை கிட்டேயே இருக்கு மச்சி….!!!! வாடி போயி தேடிட்டு வருவோம்” என்று அனன்யா சொல்லிவிட்டு ரேஷ்மாவை பார்ப்பதற்கு முன்…
அவள் கைப்பையோடு பேருந்து அருகில் போக நடந்துகொண்டிருந்தாள்…..
விர்ரென்று போய் தடுத்த அனன்யா… “சொல்லிகிட்டே இருக்கேன் நீ பாட்டுக்கு போற” என்றாள் சீரலாய்….
“உன்கூட வந்தா இனி நீ என்ன உருப்படியா ஊரு போய் சேர விட மாட்ட போல…!! அவசரப்படாதன்னு எத்தன தடவ சொன்னாலும் புத்தில ஏறவே மாட்டேங்குது….!!! அந்த கல்ல வீசனும்னு என்ன அவசியம்…!! வீசிட்டு நாம ஏன் இப்படி ஓடி ஒளியனும் !!! எல்லாமே உன் அவசரம்” மிகக்கோவமாக சொன்னாள் ரேஷ்மா.
“சாரி டீ….!!! நான் தெரிஞ்சு செய்யல… !!” அனன்யா பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னதும் ரேஷ்மா மனம் மாறி “உன் சாரியை தூக்கி குப்பையில் போடு…!!! வந்து தொலை ப்ராந்து…!!!” அவளைப் பார்த்து செல்ல கோவத்தோடு சொல்ல இருவரும் புன்னகைத்துக்கொண்டே பேருந்தில் ஏறியமர்ந்து அந்த நாள்முழுதும் நடந்தவற்றை பேசிச்சிரித்தபடி ஊர்வந்து சேர்ந்தனர்.
இருவரும் அவரவர் விடுதிக்கு வந்தாச்சு… அதுக்கப்புறம் ராக்கெட் பையன் பற்றிய நினைப்பே இல்லை… இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன இப்படியே…
1.2. இது என்ன மாயம் !!
அது மதுரையின் புறநகர் பகுதி…
மேலூர் தாண்டி விக்ரம் ஹாஸ்பிடல் அருகில் வீடு..
அப்பா ஒரு அரசாங்க உயர்பணியில் இருப்பவர். அம்மா இல்லத்தரசி.
எப்போதும் 6 மணிக்கெல்லாம் எழுந்து விடுவாள். இன்று என்ன இவ்வளவு நேரம் தூக்கம்…
அன்று காலை 8 மணிக்கு அவள் அப்பா அம்மா இருவரும் அறைக்கு வந்து கதவு தட்ட முயன்றபோது கதவு தாழிடப்படாமலேயே இருந்தது.
அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த மகளின் தலையணைக்கு அருகில் ஒரு மரப்பெட்டியை வைத்து விட்டு சத்தம் செய்யாமல் சென்று விட்டனர்.
கொஞ்சம் புரண்டு படுத்தவள், கையில் ஏதோ தட்டுப்பட அதை திறந்து பார்த்தாள்.
அது ஒரு அழகான வேலைப்பாடுகள் கொண்ட மரப்பெட்டி.
சென்ற மாதம் பொருட்காட்சி சென்றபோது அவள் வேண்டும் என்று கேட்டு அம்மா வாங்கித்தர முடியாது என்று சொல்லிவிட்டார்.
ஆனால் இன்று அதே பெட்டி… பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்னும் வாசகத்துடன் பக்கத்து அறையின் சாவி வைக்கப்பட்டிருந்தது.
தூக்கக் கலக்கத்தோடு அடுத்த அறைக் கதவைத் திறந்ததும் அட்டைப்பெட்டி ஒன்று அங்கே வைக்கப்பட்டிருந்தது.
உள்ளே பார்க்கும் ஆவலில் கிட்டத்தட்ட குதித்துக் கொண்டே சென்றாள்.
திறந்தால் அவள் கேட்ட அதே விலையுயர்ந்த புகைப்படக் கருவி. எப்போதுமே அவள் கேட்கும் எதையும் உடனடியாக வாங்கித் தருவதில்லை அவள் வீட்டில்…
ஆனால் இந்த முறை மனதில் நினைத்தது எல்லாமே வந்து கண்முன் நிற்கிறது. யோசித்துக் கொண்டே வெளியில் வந்தாள்.
“ அம்மா, நடக்கறது எல்லாம் பாத்தா.. எனக்கு ஒன்னும் சரியா படலையே…!!!” என்றாள் சந்தேகப் பார்வையோடு…
மகளை பார்த்து புன்னகையுடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு… “அதெல்லாம் ஒண்ணும் இல்ல… உனக்கு பிடிச்சதை செஞ்சா அதுலகூட குத்தம் கண்டுபிடிப்பியா…??” என்று குறைப்பட்டுக் கொண்டார் அமுதாம்மா.
“எனக்கு பாத்தா அப்படி தெரியலையே…”
“போன வாரம் நம்ம குலதெய்வ கோவிலுக்கு போனோம் இல்ல…. அங்க கூட நம்ம ஒரு ஆன்ட்டி பார்த்தோமே..” என்றாள் அம்மா.
“ஆமா… அந்த குண்டு ஆன்ட்டியா !!! ஏதோ மொக்க போட்டுட்டு இருந்தாங்களே….” என்றாள் சலிப்புடன்.
“நீயும் சொந்தக்காரங்க கிட்ட பேசமாட்ட… பேசினாலும் கிண்டல் பண்ணுவ !! எப்படி நாலு பேர தெரியும் இது மாதிரி இருந்தா…??“
“ மம்மி…இதெல்லாம் உன்னோட வச்சுக்கோ !!!” என்றாள் அவர் பேச்சை சட்டைசெய்யாமல்.
“ சரி போடி நீயும் உன் கொள்கையும்… அவங்களோட அக்கா ஹிஸ்டரி ப்ரொபசர் ஆம்… அவங்க வீட்டுக்காரர் பிசிக்ஸ் ப்ரொபசர் ஆம்”
“ மேல சொல்லு மேல சொல்லு…. நீ எதுக்கு வர அப்படின்னு எனக்கு தெரியாதா அமுதா ??”
“ஏய் போடி நான் உன்கிட்ட சொல்லல… என்னங்க நீங்க கேளுங்க… இது ரொம்ப நல்ல சம்மந்தம் எப்படியாவது முடிச்சுடலாமே ??”
“ தகப்பா அம்மா பக்கம் சாயாத… நான் டாக்டரேட் வாங்கி தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்லிட்டேன்… ”
“ நீ பி.எச்.டி முடிகிற வரைக்கும் என்னால பொறுமையா இருக்க முடியாது….. இப்பவே 27 ஆச்சு… இதுக்கு மேல நல்ல மாப்பிள்ளை கிடைக்காது…”
“மா… ஏன் இப்படி படுத்துற… “
“சரி இதுதான் கடைசி… இனிமே நான் உனக்கு மாப்பிள்ளை பார்க்க மாட்டேன்… இந்த இடம் செட் ஆகாம இருந்தால் உன் விருப்பப்படி நீ போ…”
“ஆஹான்…. அதெல்லாம் முடியாது… நீ மட்டும் மாப்பிள்ளைய வரச்சொல்லிப்பாரு…
அப்புறம் தெரியும் என்ன பத்தி…
பொண்ணு பார்க்க யார் வந்தாலும் கல்ல விட்டு அடிச்சிடுவேன்… உயிருக்கு உத்திரவாதம் இல்லை… சொல்லிட்டேன்…”
“பெரிய குஷி பட ஜோதிகா… இன்னும் ஏன் சின்ன பிள்ளை மாதிரி அடம் பிடிக்கிற ?? பார்த்தா உனக்கே பிடிக்கும்… நானும் அண்ணனும் பேஸ்புக்ல பார்த்துட்டோம்…”
“ஹேய் அவன் அமெரிக்கால இருந்தாலும் வேற பொழப்பே இல்லையா… பொண்டாட்டி புள்ள எல்லாரையும் விட்டுட்டு உங்க கூட சேர்ந்து எனக்கு ஆப்பு வச்சுட்டு இருக்கானா.. நான் அண்ணி கிட்ட பேசிக்கிறேன்”
“ சரி என்னமோ பண்ணு…. பையனோட ஃபேஸ்புக் ஐடி ஆதர்ஷ் பொன்மாறன்”
“ஆஹான்னானா… இப்படி எல்லாம் சொல்லிட்டா நாங்க பாத்துருவோமா… அஹெம்… அஹெம்… தண்ணிய குடி…”
இதைகேட்டதும் அம்மா முணுமுணுத்துக்கொண்டே கிச்சனுக்குள் போய் வேலையில் மூழ்கிவிட்டார்…
“ சரி பாப்போமே… பார்த்தவுடனேயே காதலா வரப்போகுது…. நமக்கும் அதுக்கும் எப்பவுமே செட்டாகாது…” என்று நினைத்துக்கொண்டாள்…
வெளியில் வேண்டாம்னு சொல்லிக்கிட்டாலும், ஒரு ஆர்வம் உள்ளே இருந்தது.
காதல் தப்புன்னு வாய் சொல்லும்… ஆனா காதலித்து வரும் தோழிகளைப் பார்த்தால் கொஞ்சம் பொறாமையா இருக்கும்.
அவள் தன் கைபேசியை எடுத்து ஆதர்ஷ் பொன்மாறன் என்னும் பெயரை முகப்புத்தகத்தில் தேட ஆரம்பித்தாள்.