கண்களை திறந்த சித்தர், இவர்கள் மூவரையும் பார்த்து “நீங்கள் கண்களை மூடி ஆழமாக மூச்சை இழுத்து பிடித்துக்கொள்ளுங்கள்” என்றார். சொல்லிவிட்டு தன்னிரு கைகளையும் தலைக்குமேல் தூக்கி ஆசீர்வதிப்பதுபோல் வைத்தவுடன் காற்றின் வேகம் அதிகரித்து சூறாவளியானது.
சித்தர் ஏதோ இருட்டான அந்தரத்தில் நடந்து முன்னெச்செல்ல… இவர்கள் ஆழ்மனங்களும் அவர் பின்னே பறந்துகொண்டிருந்தன.
இந்திரநீலத்தைப் பயன்படுத்தி சித்தர் ஒரு வழியை உண்டாக்குவதும், சுரங்கம் போல் அந்த வழி நீண்டு நீண்டு வளர்ந்து ஒரு கடற்பரப்பில் முடிவதும் தெரிந்தது. அங்கே அமைதியான கடல் மடியில் அவர்கள் வந்த கப்பல் நின்றுகொண்டிருப்பதும் தெரிந்தது…..
இந்த காட்சிகள் சட்டென்று கலைந்தன… அவர்கள் மீண்டும் இதே நந்தவனத்தில் நிற்பதுபோலவும் ஆற்றின் அக்கரையில் நிற்கும் யார்மீதோ குறிவைத்து அம்பெய்துவிட்டு வெள்ளை அங்கி உடல்முழுதும் போர்த்தியணிந்த ஒரு உருவம் ஓடுவதுபோலவும் தெரிந்தது…. உருவ அமைப்பில் இருந்து அது ஒரு யவனர் என்பது கண்கூடாக புலப்பட்டது.
இது கண்டிப்பா பேட்ரிசியோ தான்… நம்மள நம்பவச்சு ஏமாத்திட்டார்… மித்ரன் மனம் நொந்துகொண்டான்…
திரைப்படம் போல் விரிந்த காட்சிகள் கலைய, மீண்டும் சுற்றம் சுழலத் தொடங்கியது….
◆◆◆
“இப்பொழுது உங்கள் கண்களை மெல்ல திறந்திடுங்கள்” எனும் சித்தரின் குரல் கேட்க மூவரும் கண் விழித்தனர். அவர்கள் கண்முன்னே மணிமேகலையும் இளவரசரும் கைகோர்த்து நின்றிருப்பதைக் கண்டு வியப்பில் வாயடைத்து வார்த்தைகள் வராமல் நின்றனர்.
“இது என்ன மந்திர தந்திரமா அதுக்குள்ள அடிபட்டு படுத்திருந்த இளவரசர், எதுவுமே நடக்காதது மாதிரி எந்திரிச்சு நிக்கிறாரு… மணிமேகலை எப்படி இங்கே வந்தீங்க..? எனக்கு ஒண்ணுமே புரியல கண்ணை கட்டி காட்டில் விட்டது மாதிரி இருக்கு” என்று அனன்யா உரக்க பேசிக்கொண்டிருக்க ஆதியும் மித்ரனும் இதுவும் சித்தரின் ஆற்றலால் நடந்தது என்பதை உணர்ந்து அமைதியாக இருந்தனர்..
மணிமேகலை அனன்யா தலையை வருடி “உன்னைப் பார்க்கும்வரை நான் மனதளவில் உறுதியானவள் என்றே நினைத்திருந்தேன். ஆனால் மன உறுதி ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என்பதை நான் உன்னைக்கண்டபின் தெரிந்துகொண்டேன். முகத்தை இறுக்கமாய் வைத்துக்கொண்டு மனதில் இருக்கும் ஆசைகளை மறைத்து வாழ்வது மட்டுமே மனவுறுதியல்ல… தன்னுடைய ஆசைகள் நியாயமாக இருப்பின் எப்பாடுபட்டாலும் அதை அடையும் குறிக்கோளுடன் இருப்பதுதான் மனவுறுதி. எனக்கு இப்படிப்பினையைக் கொடுத்ததற்கு என் வாழ்வு முழுவதும் உனை நினைத்து நன்றி சொல்லிக்கொண்டிருப்பேன்…” புன்னகையுடன் அவள் கண்களில் கட்டியிருந்த இரண்டு துளி கண்ணீர் கன்னங்கள் வழியே வழிந்து மின்னின.
“என்ன நடந்துச்சு மணிமேகலை…? நீங்க இங்க எப்போ வந்தீங்க…?” என்று அனன்யா கேட்கவும் மணிமேகலை “நான் இளவரசரின் உயிரைப் பறித்தேன் என்று எண்ணி சிறையில் அடைக்கப்பட்டேன். அறப்பணிகள் செய்து சிறைச்சாலையை அறச்சாலையாக மாற்றியதால் அரசியார் மனம் மாறினார். விடுதலை அடைந்தேன்….
சித்தரின் கருணையால் காயமுற்ற இளவரசர் நலம் பெற்றார். அவர் முழுமையாக குணமடைய ஒரு ஆண்டு பிடித்திருந்தது. அடுத்த இரண்டு ஆண்டுகள் வடக்கில் நாங்கள் வாழத்தேவையான ஏற்பாட்டை செய்துமுடித்தார் இளவரசர். நான் விடுதலை பெற்றதும் புகார் நகரிலேயே சில காலம் கழித்தேன்.
என்வாழ்வில் புதிய பாடங்களும் படிப்பினைகளும் பெற்றேன். மூன்று வருடங்கள் இப்படியே முடிந்துவிட்டன. இடையில் ஏராளமான மாற்றங்கள் நடந்தேறின..
ஆனால் மாறாத ஒன்று எங்கள் மனதின் அன்பு மட்டுமே… அது உன்னால் விளைந்தது அனன்யா… இளவரசர் உயிரோடு இருக்கிறார் எனும் உண்மை புகார் மக்கள் எவரும் அறியவில்லை. இப்பொழுது நாம் இருப்பது வடநாட்டில் ஒரு மலையடிவாரம்.
தமிழகத்திலிருந்து வடகிழக்கு வந்து நாங்கள் எங்கள் வாழ்வினை அழகாக அமைத்துக்கொள்ள விரும்பி இங்கேயே தங்கி விட்டோம்.
புத்தரையும் அவரின் போதனைகளையும் பரப்பி நாங்கள் இறுதிக்காலம் வரை மகிழ்ந்திருப்போம் இவ்விடத்தில்…” என்று சொல்லி புன்னகைத்தாள்.
அனன்யா அப்போதுதான் சுற்றும் முற்றும் பார்த்தாள். அவர்கள் இருந்தது செங்குத்தாக உயர்ந்த மலைகளில் இருந்த பகுதி. சுற்றிலும் வெண்பனி போர்த்திய மலைகள்… ஓங்கி உயர்ந்த ஊசியிலை மரங்கள்… பள்ளத்தாக்கு போன்ற அந்த இடம் முழுதும் வண்ண வண்ண மலர்கள் தங்கிய செடிகள் நிறைந்திருந்தது.
பனி அவர்கள் தேகத்தையும், இயற்கை அழகு கண்களையும் குளிர்வித்தன.
“இந்திரநீலத்தைக் காக்கும் பொறுப்பு இனி உங்களிடம்… அரசன் என்னும் செருக்கில் நான் நடந்த விதத்தை மறந்து, எனை காத்தமைக்கு நன்றி… ”
இளவரசர் ஆதியிடம் கைகூப்பி நன்றி கூறினார்.
“எல்லாமே இவளுக்காக தான்… ” என்று சொல்லி அனுவை பார்த்து புன்னகைத்தான். அவளுக்கு உணர்ச்சி மிகுதியில் கண்கள் பனித்தன.
பின்னர் இவர்கள் மூவரையும் மணிமேகலையிடமிருந்தும் இளவரசரிடமிருந்தும் விடைபெற்றுக் கொள்ளும் படி சொன்னார் சித்தர்.
◆◆◆
கண்களை மூடி மீண்டும் மூச்சை உள்ளிழுத்ததும் அவர்கள் மூவரும் அப்பொழுது தங்கள் கப்பலுக்கு வந்து விட்டனர்.
சித்தர் குரல் மூவருக்கும் அசரீரியாய் ஒலித்தது. “இன்னும் சில தொல்லைகள் உங்களை தொடரும்… அதனை மதியால் வெல்லுங்கள். எந்நிலையிலும் மன உறுதியை கைவிட்டு விடாதீர்கள்.. உங்களை நம்புங்கள்…”
“என்னடா இன்ஜினீரிங் காலேஜ் ப்ரொபசர் மாதிரி, பாதி சொல்லிட்டு மிச்சத்தை நீங்களே பாத்துக்கங்கன்னு போயிட்டாரு…?” மித்ரன் விரக்தியுடன் ஒரு பெருமூச்சுவிட்டான்.
அவர் விடை சொல்லாத புதிர்களில் முக்கியமானது… இப்போது இந்திரநீலம் எங்கே என்பது…
இவர்கள் இருந்த அறையின் கதவு அகலத் திறந்திருந்தது. அருகே சத்தம் கேட்டு திரும்பியபோது அந்த நடைபாதை வழியே பேட்ரீசியோ கடந்து சென்றுகொண்டிருந்தார்.
இவர்கள் அங்கிருப்பதை அறியாமல் அப்பாதை வழியே கடந்து சென்ற பேட்ரீசியோ, சற்று தூரம் சென்றபின் சந்தேகத்தின் காரணமாக மறுபடி வந்து உள்ளே எட்டிப்பார்த்தார். அங்கு யாரும் இல்லாததுபோல் தோன்றியது. நம் நண்பர்கள் மூவரும் உள்பக்கமாக ஒளிந்துகொண்டிருந்தனர். பேட்ரீசியோ உள்ளே வந்தவுடன் அந்த அறையின் கதவை சாத்திவிட்டு, பின்னாலிருந்து மித்ரன் அவர் கைகளை இறுக்கமாகப் பிடித்துக்கொள்ள…
அனன்யா அவரிடம் “எனக்கு உங்க மேல முதலிலிருந்தே சந்தேகம் இருந்தது. ஆனா இப்போ அது உறுதியாயிடுச்சு. நீங்கதான இளவரசரை அம்பு அம்பு வீசி கொலை செய்யப் பார்த்தது..?” என்று மிகுந்த கோவத்துடன் கேட்டாள்.
“நீ சொல்றது எதுவும் எனக்குத் தெரியாது… மைக்கேல் கிட்ட நீங்க இப்படி நடந்துகிட்டது பத்தி சொன்னா உங்க எல்லாரோட வேலையும் போயிடும்… தெரியும் தானே..…” என்று மிரட்ட முயன்ற பேட்ரிசியோ கை வலியால் கொஞ்சம் துடித்து தான் போனார்.
“நீங்க எப்படி கடந்த காலத்தில் இருந்து இங்கே வந்தீங்க..? இந்திரநீலம் எங்கேன்னு சொல்லுங்க…?” என்ற ஆதி அவரிடம் நெருங்கி மித்ரனை விலக்கிவிட்டான்.
மித்திரன் தன் சட்டைப்பையில் இருந்த பேனாவை எடுத்து அவர் கழுத்துக்கு அருகே வைத்து அழுத்தி, “ஆதி என்ன தடுக்காத… உண்மை அவ்ளோ சீக்கிரமா வெளிவராது…நடந்தது என்னன்னு சொல்லலைன்னா உங்கள விட மாட்டோம்…” என்று சீறவும்….
“எனக்கு இந்திரநீலத்தப்பத்தி தெரிஞ்சதும் அதை எப்படியாவது எடுத்துக்கணும், என்னோட வசம் ஆக்கணும்னு நான் நினைச்சது உண்மைதான்…. ஆனா எனக்கு அது ஒரு காட்சிப்பொருள் தானே தவிர, எந்த விதத்திலும் பயன்படப் போவதில்லை… நான் உங்கள தற்செயலா தான் பின்தொடர்ந்தேன்” என்று பேட்ரீசியோ பயத்தில் உண்மை பேசத்தொடங்கினார்.
“தற்செயலாக இங்கே வந்தேன்னு சொல்றீங்க… ஆனா இந்திரநீலத்தை பத்தி முன்னாடியே தெரியும்ன்னு சொல்றீங்க… இது எதுவும் என்னால நம்ப முடியல… நீங்க உண்மையை சொல்லலைன்னா உங்க கழுத்துல இறங்கிடும்…” மித்ரன் மிரட்டலான தொனியில் பேசினான்.
◆◆◆
கழுத்துக்கு மிக அருகில் பேனா முனை ஆயத்தமாக நின்றதும் விசும்பித் தள்ளிவிட்டு தப்பித்துக்கொள்ள நினைத்தார் பேட்ரிசியோ. ஆனால் மித்ரன் பிடி அவ்வளவு எளிதாக விடுவித்துக்கொள்ளும்படி இல்லை. பயந்துபோன பேட்ரிசியோ.. “நான் இந்திர நீலத்த பத்தி தெரிஞ்சு தான் உங்கள பின்தொடர்ந்து வந்தேன். ஆனால் அதன் சக்திகள் எனக்கு தெரியாது. விலைமதிப்புக்காகவே அதை அடைய நெனச்சேன். இரண்டில் ஒன்று எனக்குன்னு நாங்க முடிவு செஞ்சோம்”
“என்ன சொல்றீங்க நம்மகிட்ட ஒரே ஒரு இந்திரநீலம் தான இருக்கு… அந்த செய்யுளில் சொன்னதுபோல் இன்னொன்னும் இங்க தான் இருக்கா ?” என்று அனன்யா கேட்க…
அதற்குப் பேட்ரிசியோ.. “இந்த பயணம் எதுக்காகன்னு உங்களுக்கு முழுசா தெரியாது… வெறும் கடல் ஆராய்ச்சி பண்றதுக்கு மட்டும் யாராவது இவ்வளவு செலவு பண்ணி நீர்மூழ்கி கப்பல்லாம் எடுத்துட்டு வருவாங்களா….? நீங்க நினைக்கிற மாதிரி இது ஒன்னும் அரசாங்கத்தால் தானா ஏற்பாடு செய்யப்படல…”
இவற்றையெல்லாம் கேட்க கேட்க மலைப்பாக இருந்தது நம்மவர்களுக்கு…
தொடர்ந்து “இத்தாலியில் இருக்கும் அருங்காட்சியகம் ஒன்னுல நான் வேலை செஞ்சேன். விலை உயர்ந்த கற்களை சேகரிச்சு தந்துட்டு பகுதி நேரமா வேலை பாத்துட்டு இருந்தேன். அதுல வரலாற்று சிறப்புமிக்கதை எல்லாம் காட்சிக்கு வைப்பாங்க… மிச்சத்தை கண்காட்சிகளில் வித்துடுவாங்க…
அங்க ஒருத்தர் வந்து… இந்திரநீலம் பத்தி என்கிட்ட சொன்னார். அது இந்தியாவில் கடலுக்கடியில் இருப்பதாகவும், இருபது வருஷமா இதை தொடர்ந்து தேடிட்டு இருக்கதாவும் சொல்ல எனக்கும் ஆர்வம் வந்து அவரோட தேடலில் நானும் சேர்ந்துகிட்டேன்.
இந்த பூம்புகார் ஆராய்ச்சி ரொம்ப நாளா வெறும் வாய் வார்த்தையாவே இருந்தது… இந்தியாவில் அதிக பேருக்கு தெரியல இதன் முக்கியத்துவம்…. அதுபோக இந்த வரலாறு வெளிவந்தா அவங்க கட்டமைச்சு இருக்க வரலாறுகளோட அடித்தளம் தவிடுபொடியாகிடுங்கிற பயம் தான் ஆட்சியாளர்கள் இதுக்கு தடைபோடுவதன் உண்மையான நோக்கம்…
அதனால எனக்குத் தெரிஞ்ச இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள்கிட்ட ஆழ்கடல் ஆராய்ச்சி பத்தி சொல்லி, இது பெரிய வரலாறு… வெளில வந்தா உங்களுக்கும் புகழ் கிடைக்கும்னு பேசி இதுக்கான செலவுகளை ஏத்துக்க வச்சோம்.
அவங்க இந்திய அரசை அணுகி, மிக்க சிரமப்பட்டு தான் இந்த ஆராய்ச்சிக்கு அனுமதி வாங்கினாங்க.
20 வருஷத்துக்கு முன்னாடி இதே பகுதியில் ஆராய்ச்சி செய்த ஒரு வல்லுநர் குழுவில் இருந்த ஒருத்தர இதுக்கு தலைமையா எடுத்துகிட்டாங்க…
அவர்தான் மைக்கேல்.
ஆனா இதுக்கு நடுவுல ஒரு பெரிய விஷயம் நடந்துச்சு. என்கிட்ட இந்திரநீலத்தை பத்தி சொன்ன அந்த ஆள் திடீர்னு காணாம போயிட்டாரு.
இது நடந்து ஒரு மூணு நாலு வருஷம் இருக்கும். எங்கே போனார்ன்னு யாருக்குமே தெரியல.
நான் வேலையை உதறிட்டு அவரைப் பத்தி பல இடங்களில் விசாரித்தபோது, அவர் இந்தியா வந்ததாகவும் கடைசியில பூம்புகாருக்கு தான் வந்ததாகும் கேள்விப்பட்டேன்.
அவர் வந்த இடங்கள் பத்தி எல்லாம் விசாரிச்சு கண்டுபிடிச்சது இதுதான்.
இறுதியா அவர் ஒரு மீனவர அழைச்சிகிட்டு ஆழ்கடலுக்கு போனதாகவும் மறுபடியும் அந்த மீனவர் கரைக்கு திரும்பவே இல்லன்னும் எல்லாரும் சொன்னாங்க. இந்திரநீலத்தை தேடி வந்திருக்கிறார் கடலுக்குள்ள போனவர் திரும்பி வராமல் கடலில் மூழ்கிட்டார் போல.. சரி எதுக்கு பிரச்சினை.. நம்ம வேலைய பாப்போம்ன்னு மறுபடி இத்தாலியில் என்னோட வேலையை பார்த்துட்டு இருந்தேன்.
ஆனாலும் அந்த கல்… அப்புறம் காணாமல் போன அந்த ஆள் பத்தின ஞாபகங்கள் அப்பப்போ கனவுல கூட வரும்.
இந்த ஆராய்ச்சி குழு பத்தின பேச்சு ரெண்டு வருஷமா தான் நடக்குது. என்ன இதுல கலந்துக்க சொன்னாங்க. நானும் என்ன மர்மம்ன்னு பார்க்கலாம் அப்படின்னுதான் வந்தேன். அவரு இப்போ இல்ல… இருந்தாலும் அந்த இந்திரநீலம் கிடைச்சா நல்லதுதானேன்னு நினைச்சு வந்தேன்.
நீங்க இந்த உண்மையை மைக்கேல் கிட்ட சொன்னதால அவர் என்கிட்ட உங்களப்பத்தியும் இந்திரநீலம் பத்தியும் சொன்னார். அப்போதான் அது உங்ககிட்ட இருக்கது எனக்கு தெரிஞ்சுது.
இதை எடுத்துக்கணும்ங்கிற நோக்கத்தில் தான் இந்த அறைக்குள் வந்தேன். ஆனா விதி என்னையும் உங்களோட பழங்காலத்துக்கு அழைச்சிட்டு போயிடுச்சு…
ஆனா அங்க தான் எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது…” என்று சொல்லி நிறுத்தும்போது, அந்த நிகழ்வு இன்னும் கண்ணுக்குள்ள தெரிஞ்சது மாதிரி அவர் உடம்பு சிலிர்த்தது.
சிறிதுநேரம் அவர் ஆசுவாசப்படுத்திக்கொள்ள நேரம் தந்தனர். முதலில் மூர்க்கமாக அவரைக் கையாண்டாலும் இப்போது நாற்காலியில் அமர வைத்திருந்தனர்.
பின் பேட்ரீசியோ தொடர்ந்தார்…
“அங்கேயே இருக்கணும்னு சொன்னதும் எனக்குள்ள இருந்த ஆர்வம் வெளில போய் பாக்கணும்னு என்ன அரிக்க ஆரமிச்சதால உங்கள கூப்பிட்டு கடை வீதிக்கு போனேன்… அப்போ நான் அந்த கடையை நோக்கி போனதுக்கு காரணம் அந்த ரத்தினங்கள் இல்ல… அந்த வணிகன் தான்… என்கிட்ட இந்திரநீலம் பத்தி சொன்ன அதே ஆள் அங்க இருந்தார்… எனக்கு கையும் ஓடல… காலும் ஓடல… அவர் என்கிட்ட ஒரு காசு கொடுத்து இதை வச்சுக்க… செய்தி அப்புறம் வரும் இப்போ ஒன்னும் காமிச்சுக்காம போன்னு சொல்லிட்டார் ”
இப்போதும் அவருக்கு நடுக்கம் இருந்தது… ஆதிக்கு அவரின் நிலை புரிந்தது… அவனும் அந்த யவன வணிகரின் கண்ணிலிருத்த வெறியினை அன்றே கவனித்தான். முகத்தை துணிபோர்த்தி மறைத்திருந்தான். ஆனாலும் அந்த கோரப் பார்வையை ஆதியால் மறக்க முடியவில்லை.
“நீங்க தூக்கம் வராம வெளில போனதுக்கப்புறம் அவர் புத்த விகாரத்தின் சாளரம் வழியா ஏறி குதிச்சு உள்ளே வந்துட்டான்” என்று சொன்ன பேட்ரீசியோவிற்கு காட்சிகள் கண்முன்னே விரிந்தன.
…..
“நீங்க எப்படி இங்கே… உங்கள காணும்னு எவ்ளோ நாளா தேடினேன்… ” என்றார் பேட்ரீசியோ.
“இந்த அரசாங்கங்கள நம்பியிருந்தா வாழ்க்கையே முடிஞ்சு போயிடும்னு தோணுச்சு.
நீ சொன்ன வரலாறு, பூகோள கதை எதுவும் வேலைக்கு ஆகுற மாதிரி தெரியல. அதனால நான் இந்திரநீலத்தை தேடி இந்தியா வந்தேன். நடுகடலுக்குள்ள மூழ்கின பழைய இடிபாடுகளில் ஏதும் இருக்குமான்னு நீந்திப் பாக்க முடிவெடுத்து பூம்புகார்ல ஒரு மீனவன் உதவியோட அங்க போனேன்.
இந்திரநீலம் கடல் நீர் மட்டத்துக்கு கீழே இருக்க சுவரில் ஏதோ ஒரு பகுதியில் தான் புதைஞ்சு இருந்துச்சு.
ஒரு கல் எடுத்த அந்த மீனவனால இன்னொரு இந்திரநீலத்தை எடுக்க முடியல…
பகல்ல போன நாங்க, அதை தேடியெடுத்து முடிச்சப்போ இரவாகிடுச்சு.
முழு நிலவின் ஒளியால் இந்திரநீலம் ஒளிர்ந்தது…
திடீர்னு சுழல் காத்து மாதிரி புயல் வந்து எங்க படகை புரட்டி போட்டுடுச்சு. அலையும் எங்கள அலைக்கழிச்சு கடற்கரையில் கொண்டுவந்து மயக்கத்தில் தள்ளிடுச்சு..
அலையில் சிக்கியதால் இந்திரநீலம் என் கையிலிருந்து நழுவி கடலோட போச்சு… நாங்க கண் முழிச்சப்போ அது பழங்காலம்ன்னு தெரியவே ரொம்ப நாள் ஆகிருச்சு…” இவ்வாறு பேசிக்கொண்டு இருக்கும்போதே ஏதோ சத்தம் கேட்டது.
“வெளியில யாரோ வராங்க… எனக்கு நிறைய வேலையிருக்கு…
அந்த நாணயத்தை உன்கூட வந்தவன் கிட்ட குடுத்து நாளைக்கு ஆத்தங்கரைக்கு அழைச்சிட்டுவா… காரியத்தை கெடுத்துடாத…” என்றபடி அவன் வெளியேற முயன்றான்.
இதை விவரித்துக்கொண்டிருந்த பேட்ரீசியோ நடுங்கத் தொடங்கினார். உடல் முழுதும் வியர்த்துவிட்டது அவருக்கு.
அப்போ…. “என்னால முடியாது“ன்னு சொன்னேன். வெளியேற நெனச்சவர் திடீர்ன்னு
என் கழுத்த பிடிச்சு நெறிச்சுட்டார்.
அது மிகவும் இறுக்கமான பிடி… உயிர் பிழைப்பேன்னு நினைக்க முடியாத அளவுக்கு வலி….
நான் சத்தம் போட்டதும் ஆட்கள் வந்துட்டாங்க. ஆனா அவங்க வர்ரதுக்குள்ள அவர் ஓடி மறைஞ்சுட்டார்.
அப்பறம் அவரைப்பத்தி சொன்னா இந்திரநீலத்த எடுக்க வந்தது உங்களுக்கு தெரிஞ்சுடுமேன்னு… உங்கள குழப்ப, இத்தாலியின் பழைய செவிவழி கட்டுக்கதையை சொன்னேன். எப்படியாவது கதை சொல்லி ஆதியை ஆத்தங்கரைக்கு கூட்டிட்டு போய் இந்திரநீலத்த அடைய நெனச்சேன். ஆனா அனன்யா காச வாங்கினதும் நிலைமை வேற மாதிரி ஆகிடுச்சு…” என்று சொல்லி அவர்களை குற்றஉணர்வோடு பார்த்தார்.
“ஒரு நிமிஷம்..”ஆதி அவர் பேச்சில் ஏதோ ஒரு விடை கிடைத்ததுபோல் நெற்றியில் ஒற்றை விரல் வைத்து யோசிக்க…
“அப்போ அவர்கிட்ட இருந்து தொலைஞ்சு போன இந்திரநீலம் தான் நமக்கு கெடச்சுருக்கா……”என்று விழி விரித்து வியப்போடு அனு ஆதியை முந்திக்கொண்டு கேட்டாள்.
“ஆமா… அப்படித்தான் இருக்கணும்… எனக்கும் மைக்கேல் சொன்னபோது எப்படி உங்களுக்கு அது கெடைச்சுருக்கும்ன்னு வந்த குழப்பம், அவன் கிட்ட பேசினதும் தீந்துச்சு…” என்றார் பேட்ரீசியோ.
“அவர குழப்பாதீங்க ஆதி… நீங்க அங்க என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க…” மித்ரன் திசை மாறி சென்ற பேச்சை நேர்வழிக்கு கொண்டு வந்தான்.
“மித்ரன்… இதுவும் தேவையான விஷயம் தான்…”என்று சொன்ன அனு முகத்தை திருப்பிகொள்ள…
ஆதி அவள் தோளை தட்டி கோச்சுக்காத என்பதுபோல் கண்களால் சமாதானம் செய்ததால் கொஞ்சம் கோபம் குறைந்தது.
பேட்ரீசியோ தொடர்ந்தார்…. “அப்புறம்… மறுநாள் அனன்யா சித்தர பார்க்கப் போனபோது நானும் பின்தொடர்ந்து போனேன்.. ஆனா குறிப்பிட்ட தூரத்துக்கு மேல என்னால போக முடியல. பின்ன ஆத்தங்கரையிலேயே காத்திருந்தேன். சொன்னபடி அவனும் வந்தான்.”
◆◆◆