மித்ரனுக்கு நீருக்குள் ஆழம் செல்லச்செல்ல ரத்த அழுத்தம் உயர்ந்து மயக்கம் வந்திருந்தது. நீல் அங்கிருந்து தொலைத்தொடர்பு சாதனம் வழியாக “அவனுக்கு இரத்த அழுத்தம் ஏறிடுச்சு ….
அவ்வளவு தான்…
நீங்க சொன்ன வேலையை சரியா செய்யுங்க..
அவன அப்புறம் பார்க்கலாம்” என்றான் ஆதியின் காதுகளில்.
இதைகேட்டதும் கோபம் தலைக்கேறிய ஆதி அவன் பேச்சை மதிக்காமல் வேகமாக முன்னேறி மித்ரனிடம் சென்றான்.
“இங்க ரெண்டு உயிர் என் கையில் இருக்கு…!!” என்று அவன் செய்த கர்ஜனை ஆதியின் செவிகளை எட்டவில்லை.
நீருக்குள் சுயநினைவின்றி மூழ்கும் மனித உடலின் எடை அதிகரித்தே காணப்படும்.
ஆதியால் மித்ரனை தூக்கிக்கொண்டு நீந்த இயலவில்லை.இருவரும் நீருக்குள் மூழ்குவது நன்றாகத் தெரிந்தது.
அப்போது பேட்ரீசியோ இவர்களை நெருங்கி, மித்திரனின் நீச்சல் கவச உடையில் இருந்த ஒரு விசையை அழுத்தினார். சட்டென்று காற்றடைத்த நெகிழி குழாய் போல ஒன்று அவனை சூழ்ந்தது. மித்ரன் மூழ்காமல் மிதந்து மேலே சென்றான்.
◆◆◆
ஆதியிடம் இந்திரநீலத்தைத் தேடச் சொல்லி அனுப்பிவிட்டு பேட்ரீசியோ மேலே நீர்மட்டத்திற்கு நீந்திச்சென்றார். அங்கே சென்று அவன் உயிர்வளி கவசத்தை(oxygen mask) நீக்கினார்.
இத்தாலி மொழியில் “நீல் நாங்க ரெண்டு பேரும் மேல வந்துருக்கோம். எங்களுக்கு உதவி தேவை… ஆதி உனக்கு இந்திரநீலத்தை எடுத்துட்டு வருவான். இவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கான். இந்த நேரத்துல விளையாடாத… தயவுசெஞ்சு அந்த ஏணியை கீழ அனுப்பு…” என்று பேட்ரீசியோ கெஞ்சினார்.
நீல் அதற்கு “அதெல்லாம் தெரியாது.. இந்திரநீலம் என் கைக்கு வரணும்…” என்று சொல்லவும், கோதை அருகில் வந்து தானியங்கி ஏணி இறங்குவதற்கான விசையை அழுத்தினாள். நீல் திரும்பி கண்கள் சிவக்க அவளை முறைத்தான்.
“அப்பா… நமக்குத் தேவை இந்திரநீலம் மட்டும் தான். மித்ரன் எனக்கும் நண்பன் தான். நான் உங்க கூட இருந்து நம்ம கனவு நிறைவேற இதெல்லாம் செய்றேன். அதுக்காக அவன சாகடிக்க எனக்கு மனசு வரல….” என்று சொல்லிவிட்டு வேகமாக ஓடினாள்.
அந்த ஏணியின் வழியே அவள் இறங்கினாள். மித்ரனை அவளும் பேட்ரீசியோவும் சேர்ந்து தூக்கிக்கொண்டு வந்து கப்பல் தளத்தில் படுக்கவைத்தனர்.
இந்தியாவைப் போல் அல்லாமல் வெளிநாட்டினர் ஏதேனும் ஒரு உயிர்காக்கும் பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருப்பார்கள்.
பேட்ரீசியோ நீச்சலில் வல்லவர். அவர் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி பெற்றிருந்தார். நீரில் மூழ்கியவர்களுக்கு தரவேண்டிய முதலுதவிபற்றி அவர் நன்கு அறிந்திருந்தார்.
மித்ரனை அங்கே படுக்கவைத்ததும் முதலில் அவன் வயிற்றை அழுத்தி தண்ணீர் ஏதும் உள்ளே சென்றிருக்கிறதா என்று பரிசோதித்தார். பின்பு அவன் கவச உடையை கொஞ்சம் தளர்த்தி விட்டு கோதை தந்த இரத்த அழுத்தத்திற்கான மாத்திரைகளை மித்ரன் வாயில் போட்டு, அவன் கை கால்களை நன்றாக தேய்த்து விட்டார். இவற்றை பார்த்துக் கொண்டிருந்த இனியா மற்றும் அனன்யா அதிர்ச்சியில் உறைந்து அமர்ந்திருந்தனர்.
இருவருக்குமே அவன் நல்ல நண்பன். முதலில் பூம்புகாருக்கு வந்த பொழுது அனன்யாவுக்கு மித்ரனுடன் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் போகப்போக அவன் கோபத்திலும் முன்னெச்சரிக்கை குணத்திலும் நியாயம் இருப்பதாகவே அவளுக்குப் பட்டது.
இனியா அவனை தன் குழுவின் தலைவனாக மட்டுமின்றி நல்ல நண்பனாகவும் நினைத்திருந்தாள். அவனிடம் ஏதோ ஒரு ஈர்ப்பு இருந்தது இனியாவுக்கு.
அவனை இந்த நிலையில் பார்க்கும்போது மனம் மிகவும் வலித்ததுபோல் இருந்தது. கண்ணில் இருந்து நீர் நிற்காமல் அருவிபோல் பெருகிக்கொண்டிருந்தது.
சிறு தென்றல் அவளை தழுவிச் சென்றது. திரும்பிப் பார்த்தபோது மித்ரன் கண் விழித்திருந்தான். அவள் கண்களில் இப்போது புன்னகையுடன் கூடிய ஆனந்தக் கண்ணீர்…. !
மெல்லிய விசும்பலுடன் அவள் தேம்பும் சத்தம் மயங்கியிருந்த மித்திரனின் மூளைக்குள் ஏதோ மாறுதலை ஏற்படுத்தியது போலும். உடலில் உத்வேகம் பாய கண் விழித்தவன், இனியா இருந்த திசை பார்த்து புன்னகைத்தான்.
◆◆◆
இப்போது ஆதி மட்டும் அந்த அசாதாரண சூழ்நிலையில் தனித்துவிடப்பட்டிருந்தான். பயம் என்பது இல்லாவிட்டாலும் என்ன ஆபத்து வரும் என்பதை அவன் மூளை கணக்குப்போடத் தொடங்கியிருந்தது. சுவரில் பவளப்பாறைகள் உடைந்து காணப்பட்ட இடத்தை நோக்கி ஆதி நீந்திச் சென்றான்.
அப்போது ஒரு பெரு வெளிச்சம் அந்த இடத்தை நிரப்பியது. என்னவென்று திரும்பிப் பார்த்தபோது கப்பலில் இருந்து பெரிய மின்விளக்கு ஒன்று எரிந்துகொண்டிருந்தது. நீல் “இப்போ நீ இந்திரநீலத்தை எடுத்தால் மட்டுமே, நீங்க எல்லாரும் தப்பிக்க முடியும். மயங்கி இருக்க உன் நண்பனையும், புதுசா சேர்ந்த இந்த வெள்ளைக்கார நண்பனையும் காப்பாத்தணும்னா, நீ போ… நேரம் கடந்து கொண்டே இருக்கு… தாமதமாகும் ஒவ்வொரு வினாடியும் நாலுல ஒரு உயிர் போய்ட்டே இருக்கும்..” என்று அவன் காதுகளில் ஈயத்தை ஊற்றிக்கொண்டிருந்தான்.
ஆதி நீந்தி அந்த இடத்தை நோக்கிச்சென்றான். அப்பொழுது ஏதோ அசைவு தெரிய, ஆதி நகராமல் நின்றான். அந்த இடத்திலிருந்து ஒரு பெரிய கணவாய் மீன் நகர்ந்து ஓடிஒளிந்தது.
ஆக்டோபஸ் என்னும் கணவாய் மீன் தன் நிறத்தை அவ்வப்போது மாற்றிக் கொள்ளும் தன்மையுடையது.
தனக்கு ஆபத்து என்று தெரிந்தால் எதிரியின் மேல் நீல நிற திரவத்தைப் பீச்சியடித்து அவர்களைக் கொன்று விடும். அத்திரவத்தின் வீரியம் மிகக் கொடுமையானது. சுவற்றின் மேல் அதன் நிறத்திலேயே படிந்திருந்த அந்த கணவாய் மீன், தன் எட்டு கரங்களை விரித்தும் சுருக்கியும் அந்த இடத்திலிருந்து நகர்ந்து சென்றது.
ஆதி அசையாமல் நின்றதும் தனக்கு அவன் ஏதும் தொல்லை தர மாட்டான் என்று அதுவும் உணர்ந்தது போல. அது நகர்ந்த பின் அவ்விடத்தில் பளிச்சிட்டது இந்திரநீலம். ஆதி தன் கைகளை நீட்டி இந்திரநீலத்தை எடுத்தான். அவன் கண்கள் அதிலேயே நிலைத்திருந்தன…
◆◆◆
இத்தனை ஆண்டுகளாக நீ அமைதியாக துயில் கொண்டிருக்கிறாய்… ஆனால் உன்னை வைத்து உலக அமைதியை குலைக்க அவன் நினைத்திருக்கிறான். எப்படியாவது நீதான் எங்களையும் காப்பாற்றி உன்னையும் காத்துக்கொள்ள வேண்டும்.
இந்திரநீலத்தை அவன் சித்தராக உருவகப்படுத்தி அதையெடுத்து நெஞ்சோடு வைத்து வணங்கியபடி நீந்தி கப்பலை அடைந்தான்.
அவன் கப்பலில் ஏறி வந்த போது நீல் கண்களில் தெரிந்த பிரகாசம் பேராசையின் மொத்த வடிவமாக இருந்தது. அவனிடம் ஆதி இந்திரநீலத்தை எடுத்துக் கொடுத்தான்.
ஆதிக்கு அவன் முகம் எங்கேயோ பார்த்ததுபோல் தோன்றியது. இளவரசர் இவனை சிறைபிடித்து வைத்திருந்தபோது காண்பித்த அந்த ரோமானிய மந்திரியின் ஓவியத்தோடு அச்சுபிசகாமல் ஒத்துப்போனது அந்தக் குரூர முகம். ஆதி அச்சத்தில் உறைந்துபோனான்.
அவன் இந்திரநீலத்தைக் கொடுப்பதற்கும் சூரியன் மறைவதற்கு சரியாக இருந்தது.
நீல் தன் பையிலிருந்த மற்றொரு இந்திரநீலத்தையும் எடுத்தான். இரண்டு இந்திரநீலமும் நிலவின் கிரணங்களால் உயிர்பெற்று, ஒரு மின்னல் மின்னி அமைதியாகின.
இதுவரை இருந்ததைக்காட்டிலும் காற்று பன்மடங்கு வேகத்தில் சுழன்றடித்தது.
◆◆◆
சுழன்றடித்த காற்றின் வேகத்தை யாராலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அனைவரும் கப்பலின் தளத்தோடு ஒட்டி படுத்துக்கொண்டனர்.
இந்திரநீலக் கற்களை கையில் வைத்திருந்த நீல், அந்த சுழலின் நடுவில் இருக்க அவனைச்சுற்றி ஒரு குமிழ் உருவானது.
அது அப்படியே மேலெழுந்து இன்னும் வேகமாக பந்து போல் சுழலத் தொடங்கியது.
அப்போது ஒரு அசரீரி அங்கே ஒலித்தது.
காற்றின் வேகம் குறைந்து அந்த குமிழின் சுழற்சியும் நின்று அவ்விடம் அமைதியானது.
சித்தரின் குரல் எட்டு திசைகளும் அதிரும்படி ஒலித்தது.
“ இந்திரநீலமும் அதன் ஆற்றலும் என்னால் உருவாக்கப்பட்டவை. இயற்கையை மாற்ற நினைக்கும் மனிதனின் பேராசைக்கு ஒருபோதும் நான் துணைபோக மாட்டேன். உன் பேராசையை நீ விடுக்கும் வரை இக்குமிழுக்குள்ளேயே நீ இருப்பாய்.
கடந்த காலமும் நிகழ்காலமும் எதிர்காலமும் எதுவும் இல்லா வெளியில் நீ இருப்பாய். என்று உன்னிடம் இருந்து பேராசை விலகுகிறதோ, அக்கணமே குமிழ் உனை விட்டு விலகும்.
அதுவரை இச்சிறையிலேயே பசியும் பிணியும் மூப்பும் இன்றி நீ உயிரைப் பிடித்துக்கொண்டு வாழ்ந்திருப்பாய். ஜென்ம ஜென்மங்களுக்கும் இந்திரநீலத்தின் மீது ஆசை கொண்ட நீ அத்துடனேயே மடியாமல் உழன்றுகொண்டிருப்பாய்.
எப்போது உன் மனம் அமைதி அடைகிறதோ, அப்போது நீ இவ்வுலகில் நன்மை பயக்கும் ஒரு உயிராய் பிறப்பெடுப்பாய்…!” என்று சொல்லி அக்குரல் காற்றில் கரைந்து காணாமல் போனது.
சூழ்ந்திருந்த இருள் இன்னும் இன்னும் அதிகமானது.
அந்த காற்றுக் குமிழி கடலுக்கு அடியில் சென்று மறைந்தது.
அமைதியான அந்த கடல் பரப்பின் மேலே மிதந்துகொண்டிருந்த கப்பல்.
சிறிது நேரத்திற்கு அந்த இடத்தில் ஒருவரும் அசையவில்லை.
அனைவரும் அதிர்ச்சியில் உறைந்த நிலையில் இருந்தனர். கோதை கண்களிலிருந்து நீர் முதலில் வெளிவந்தது. நின்றுகொண்டிருந்தவள் தன்னையறியாமல் மண்டியிட்டு, முகத்தில் கைகளை மூடிக்கொண்டு தேம்பித் தேம்பி அழத் தொடங்கினாள். “அப்பா………!!!!!!!!!!!” என்று அவள் அலறும் சத்தம் கடலின் நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு நாலா புறமும் சென்றது.
ஆழிப்பேரலையின் தாக்கம் கோரமாக இருந்தது.
ஆனாலும் மீட்பு படையினர் பல கடற்கரைக் கிராமங்களில் மற்றும் நகரங்களில் இருந்த மக்களை முன்னெச்சரிக்கையோடு அப்புறப்படுத்தி விட்டனர். அதனால் உயிர்ச்சேதம் குறைவாகவே இருந்தது. பொருட்சேதம் மட்டும் கணிசமான அளவு இருந்தது.
எல்லாம் முடிந்து அவ்விரண்டு வாகனங்களும் வெவ்வேறு திசைகளில் பயணித்தன.
ஒன்றில் ஆதியும் அனுவும் மதுரையை நோக்கி தெற்கே பயணித்துக் கொண்டிருந்தனர்.
மற்றொன்றில் கோதை, மித்ரன், இனியா மூவரும் சென்னை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.
இக்கதையில் இனி நாம் இவர்களைச் சந்திக்கப் போவதில்லை….
◆◆◆
கடல் அலைகளின் கோரத்தாண்டவத்தையும் அதன் விளைவுகளையும் பார்த்துக்கொண்டே ஆதியும் அனுவும் தங்கள் சொந்தவூரை அடைந்தனர். ஆதி முதலில் அனுவை அவர்கள் வீட்டில் இறக்கிவிட்டான்.
அனன்யா வீட்டில் மிகவும் பயந்து இருந்தனர். அமெரிக்காவிலிருந்து அவள் அண்ணனும் அண்ணியும் திருமணத்திற்காக வந்திருந்தனர்.
அவர்களிடம் அறிமுகம் செய்துகொண்டு, பின் சிறிது நேரம் அவர்கள் எப்படி கடல் சீற்றத்திலிருந்து தப்பித்தார்கள் என்று சொல்லி அவர்கள் பயத்தை நீக்கினான் ஆதி.
அனன்யா அங்கு நடந்த அனைத்தையும் ஆவணப்படுத்தி தன் புகைப்படக் கருவியின் மூலம் எடுத்த படங்களையும் உட்புகுத்தி தன்னுடைய ஆய்வுக்கட்டுரையை முடித்து, அவள் கல்லூரியில் சமர்ப்பித்து விட்டாள்.
ஆதிக்கு புகைப்படங்களை மேம்படுத்தும் தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டம் பெறுவதற்காக கடலுக்கடியில் எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் பத்திரமாக வைத்துக் கொண்டாள்.
நாட்கள் நகர்ந்து நகர்ந்து அவர்கள் திருமண நாளும் நெருங்கியது.
மகிழ்ச்சியோடு இரண்டு குடும்பங்களும் சேர்ந்து அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்தனர்.
திருமணம் ஆண் பெண் இருவரின் வாழ்விலும் முன்னேற்றத்தைக் கொடுக்க வேண்டும் என்பது ஆதியின் மன எண்ணம். அவனுடைய வருங்கால மனைவிக்கு அவள் வாழ்வின் பெரும் கனவை நிறைவேற்றிகொடுத்து அவள் காதலைபெற்றுவிட்ட மகிழ்ச்சியில் இருந்தான்.
அனன்யாவுக்கோ தன் மனதில் தோன்றுவதை தான் உணரும் முன்பே கண்டுபிடித்துவிடும் நண்பன் கணவனாக வரப்போகிறான் என்னும் ஆனந்தம் ஊற்றெடுத்து திருமண வாழ்வை எதிர்நோக்க வைத்தது.
வந்தது அந்நாள்…. இருமனம் ஒரு மனமாகும் திருமணம்….
ஆயிரம் நல் உள்ளங்கள் வாழ்த்த, இணையேற்பு இனிதே நடைபெற்றது.
இருவரும் மாலை மாற்றி ஒருவருக்கொருவர் துணையாய் இருப்போமென்று உறுதியேற்றனர்.
அனன்யா கண்களில் கட்டி நின்ற கண்ணீரில், வலக்கண்ணிலிருந்து முதல் துளி கன்னங்களில் விழுந்தது. கலங்கியிருந்த கண்களில் கலைந்த மையை தன் கைக்குட்டை மூலம் சரிசெய்தான் ஆதி.
அது ஆனந்த கண்ணீர் என்றாலும், இந்தக்கண்கள் இதற்குமேல் கண்ணீர் சிந்தக்கூடாது என்பதுபோல் ஆதி பார்த்த பார்வையின் அர்த்தம் புரிந்து புன்னகைத்தாள் அனு..
அங்கே கூடியிருந்தவர்கள் தூவிய மலர்கள் இவர்கள் எண்ணங்களைக் கலைத்தபடி வந்து மழையாய் பொழிய இருவரும் அதில் நனைந்து இல்வாழ்விற்குள் அடிவைத்தனர்.
◆◆◆
இரண்டு வாரம் சென்று அவர்கள் திருமண காணொலி தகடு தரப்பட்டது.
அனுவையும் ஆதியையும் வளைத்து வளைத்து எடுத்த புகைப்படங்களின் மென்நகல்களும் தரப்பட்டன.
கூட்டத்தில் இருந்த முகங்களை இவர் இன்னார் என்று சொந்தங்களை ஆதியின் அம்மா அனுவுக்கு அறிமுகம் செய்துகொண்டிருந்தார்.
“இவரு யாரு..?
நம்ம பக்கத்து ஆளா தெரில…
உனக்கு தெரியுமா ஆதி?
உனக்கு தெரியுமாம்மா அனு…?” என்று ஒருவரை சுட்டிக்காட்டி அம்மா கேட்க…. அனுவும் ஆதியும் பயத்தில் உறைந்து போயிருந்தனர்.
அவர் காண்பித்த அந்த நபர்…..
நீல்…….!!!!!!
முற்றும்….