Skip to content
Post Views: 3,696
13
காலையில் உறக்கம் கலைந்து எழுந்தமர்ந்த ரஞ்சன், எதிரே சோபாவில், சோர்வு மிகுதியால் இன்னும் உறக்கத்திலிருந்து மீளாது சுருண்டு படுத்து உறங்கிக் கொண்டிருந்த நிலாவைப் பார்த்தான்.
“வெயில் முகத்துல அடிக்கிறது கூட தெரியாம எப்படித் தூங்குறா பாரு கும்பகர்ணி…” என்று முனகிக் கொண்டே எழுந்தவன்,
தன் காலைக் கடன்களை முடித்து வந்த பிறகும் நிலா எழாதைக் கண்டு, சோபாவின் ஒரு மூலையில் இருந்த திண்டை எடுத்து, தூரமாக நின்று கொண்டு அவள் முகத்தின் மீது எறிந்தான்.
Advertisement
பின் ஏதும் அறியாததுபோல் ஆடியோ ப்ளேயரை ஆன் செய்து பாடலின் சத்தத்தை அதிகமாக வைத்தான்.
திடீரென்று ஏதோ வந்து விழுந்ததால் திடுக்கிட்டு கண்விழித்த நிலா, பதறிப் போய் எழுந்தமர்ந்தாள்.
அவன் வேண்டுமென்றேதான் அப்படிச் செய்தான் என்று புரிந்து கொண்டவள், நேராக எழுந்துச் சென்று ஆடியோ ப்ளேயரின் ஸ்விட்சை ஆஃப் செய்தாள்.
Advertisement
“ஏய் ஏன்டி ஆஃப் பண்ண?!” என்று அவன் கேட்க,
Advertisement
அவள் காதில் வாங்காமல் தனது உடைகளை எடுத்துக் கொண்டு குளியலைறைக்குச் செல்ல முனைந்தாள்.
“இன்னொரு முறை என் ஆடியோ பிளேயர்ல கை வச்சிப் பாரு?!” என்று மிரட்டியபடியே மீண்டும் ஆன் செய்து சத்தத்தை அதிகரித்தான்.
அதைக் கேட்டவள் வேண்டுமென்றே சென்று அதன் மேயின் ஸ்விட்சை ஆப் செய்தாள்.
Advertisement
“ஏய் என்ன காலையிலயே வம்பு பண்ணப் பார்க்கறியா?!” என்று அவன் அவள் கையை இறுகப் பற்ற, அவள் அதை விடுவிக்கப் போராடியபடியே,
“கையை விடு…!” என்று முறைத்தாள்.
“ஆமாம் இந்தம்மா பெரிய உலக அழகி.. ஆசையா கையப் பிடிச்சு இழுக்கறேன்..!” என்று அவன் நையாண்டி பேச,
“உலக அழகியக் கையப் பிடிச்சு இழுத்திருந்தா இந்நேரம் உன்னை உள்ள தூக்கி வைச்சிருப்பாங்க!” என்றவள், வெடுக்கென்று தன் மற்றொரு கையால் அவன் கையை நறுக்கென்று கிள்ள, அவன் அலறலுடன் அவள் கையை விடுவித்தான்.
அவள் ஏளனமாக ஓர் புன்னகையை வீசிவிட்டு அங்கிருந்து நகர, “பிசாசு பிசாசு..!” என்று வாய்விட்டு அவளைத் திட்டியவன், தங்கள் கடைக்குக் கிளம்பத் தயாரானான்.
அவன் தயாராகி வெளியே சென்ற சில நொடிகளில் அவளும் குளித்து தயாராகி வெளியே வந்தாள்.
“என்னடா ரஞ்சு… எங்க கிளம்பிட்ட?!” என்று காமட்சி பாட்டி கேட்க,
“என்ன பாட்டி இப்படிக் கேட்கறீங்க? கடைக்குப் போக வேண்டாமா?!” என்றான்.
“அதெல்லாம் தேவையில்லை! காலையில கிளம்பும்போதே, உங்க தாத்தா.. நீ ஒரு வாரத்துக்கு கடைக்கு வரவேண்டாம்னு சொல்லிட்டாங்க… இன்னிக்கு உங்க மாமியார் வீட்ல உங்க ரெண்டு பேருக்கும் விருந்து இருக்கு. அங்க கிளம்புங்க…!” என்றார் காமாட்சி.
“வாட் நானா?! அவங்க வீட்டுக்கா?!” என்று அவன் முகச் சுளிப்புடன் கேட்க,
‘ஏன் நீ என்ன? இங்கிலாந்து மகராஜாவா?!’’ என்று நிலா கடுப்புடன் அவன் முகம் பார்க்க,
“ரஞ்சு… அப்படியெல்லாம் பேசக் கூடாது!” என்றார் காமாட்சி.
“அச்சோ பாட்டி இந்த பார்மாலிடீஸ் எல்லாம் வேண்டாமே! எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்கலை!” என்று அவன் சலிப்புடன் அமர,
“ரஞ்சு.. பாட்டி சொன்னக் கேளுப்பா… உன்னை என்ன தினமுமா அவங்க வீட்டுக்குப் போக சொன்னோம் இன்னிக்கு ஒரு நாள் தானே?!” என்று ராதாவும் அவனை சமாதனம் செய்து அனுப்பி வைக்க முயன்றார்.
‘மூஞ்சியைப் பாரு சரியான GEM!’ என்று நிலா அவனை மனதுள் வசை பாடிக் கொண்டிருந்தாள்.
“ரஞ்சு இதெல்லாம் சம்பிரதாயம் ப்பா… போய்தான் ஆகணும்!” என்றார் கிருஷ்ணனும்.
“சரி” என்று சலிப்புடன் அவன் எழுந்துகொள்ள,
“அவளை அழைச்சிட்டுப் போடா…!” என்றார் ராதா.
அவளுக்கு சற்று தள்ளி நின்றிருந்த நிலாவின் அருகே சென்று அவள் மட்டும் கேட்கும் வகையில், “வந்துத் தொலை…” என்றான் சிரித்த முகத்துடன்.
“நீ முதல்ல போய்த் தொலை…!” என்றாள் அவளும் சிரித்தபடியே.
“ரகசியமா.. ம் ம்…!” என்று நிவி, நிலா காதருகே வந்து சிரித்துவிட்டுச் செல்ல,
‘இவ ஒருத்தி…!’ என்று நினைத்த நிலா, “ஈ.. ஈ..” என இளித்து வைத்தாள்.
நிலா தன் புகுந்த வீட்டினர் அனைவரிடமும் விடை பெற்று அவனுடன் தன் தாய் வீடு சென்றாள்.
இருவரும் ஒன்றாகச் செல்வதை பார்த்து மனம் நிறைந்த நிரஞ்சன்,
‘கடவுளே ரெண்டு பெரும் சீக்கிரமே ஒருத்தரை ஒருத்தர் மனசார ஏத்துகிட்டு சந்தோஷமா அவங்க வாழ்கையைத் துவங்கணும்’ என்று வேண்டினான்.
ஆனால் அங்கு ரஞ்சனோ வேண்டா வெறுப்பாக நிலாவின் வீட்டிற்குள் நுழைந்தான்.
நிலா ஆசையுடன் தன் தாய், தந்தை, தமக்கை, மாமா அனைவரையும் நலம் விசாரித்தபடி உள்ளே சென்றாள்.
அவர்களும் பதிலுக்கு அவர்களை நலம் விசாரித்து, “வாங்க மாப்பிள்ளை…! உட்காருங்க…” என்று அன்போடு வரவேற்று அமர வைத்தனர்.
‘என்னமோ ஒரு வருஷம் கழிச்சிப் பார்க்குற மாதிரி என்னாமா சீன் போடுறாங்கப்பா?!’ என்று அவன் நினைக்க,
“அதெல்லாம் மனுஷங்களுக்கு மட்டும்தான் புரியும்!” என்றாள் நிலா அவனின் முக பாவனைகளை அறிந்து.
“ஓ!” என்றவன், அவள் சொன்னதன் அர்த்தம் புரிந்து, “என்ன என்ன?!” என்று அவளை முறைக்க,
“நான் உங்க வீட்ல நல்ல பிள்ளையா நடந்துக்கற மாதிரி, நீயும் எங்க வீட்ல சமத்துப் பிள்ளையா இருப்பியாம் சரியா?!” என்றாள் மறுபடியும் மெதுவாக.
“இல்லன்னா என்னடி பண்ணுவா?!” என்று அவன் சற்றே குரல் உயர்த்த,
“இராமநாதன் தாத்தா… எப்போ வருவாங்க?!” என்றாள் அன்போடு அவனைப் பார்த்து.
தாத்தா என்றதும் அவன் கப்சிப் என்று வாய் மூடிக் கொள்ள, அவர்கள் இருவரும் தங்களுக்குள் பேசிக் கொள்வதை பார்த்து, மிகவும் மனம் மகிழ்ந்தனர் நிலாவின் குடும்பத்தினர்.
“ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா… உங்களை இப்படி சந்தோஷமா பார்க்கிறதுக்கு!” என்றார் வெங்கடேசன்.
“ம்” என்று அவள் மெல்ல சிரித்ததோடு,
“சிரி…!” என்றாள் அவனிடமும் மெதுவாக.
“ம்!” என்று அவனும் சிரித்து வைத்தான்.
கலையும், வேணியும் காலைச் சிற்றுண்டிக்காக தயாரித்து வைத்திருந்த உணவு வகைகளை எடுத்து வந்து பரிமாற,
“என்னம்மா பாத்திரமெல்லாம் புதுசா இருக்கு?!” என்றாள் நிலா ஆச்சர்யமாக.
“மாப்பிளைக்கு விருந்து பரிமாறனும் இல்ல… அவங்களுக்கு எப்படிப் பழையப் பாத்திரத்துல பரிமாறுறது? அதான் புதுசா வாங்கினேன்!” என்றார் வேணி.
“எதுக்கும்மா வீண் செலவு?! அவர் இப்பல்லாம் ரொம்ப நல்லவரா மாறிட்டார். அதனால இதையெல்லாம் எதிர்பார்க்க மாட்டார்” என்று தாயிடம் சொன்னவள்,
அவன் புறம் திரும்பி, “என்னங்க அப்படித்தானே?! நீங்க ரொம்ப…. மாறிட்டீங்கதானே…?!” என்றாள் குசும்புடன்.
“அ ஆமாம்?!” என்று அதற்கும் சிரித்து வைத்தவன், ‘இதுக்கெல்லாம் ஆமாம் சாமி போட வேண்டி இருக்கு! எல்லாம் என் தலையெழுத்து…!’ என்று முனகினான்.
“என்னங்க ஏதாவது வேணுமா?!” என்று அவள் பவ்யமாகக் கேட்க,
“ஒண்ணும் வேணாம்! நீ வாய மூடிக்கிட்டு சாப்பிடறியா?!” என்றான் கடுப்பாக.
“வாயை மூடிக்கிட்டு எப்படிங்க சாப்பிடறது?!” என்று பாவமாகக் கேட்டு மேலும் அவன் எரிச்சலைக் கிளப்ப,
‘அய்யோ சாவடிக்கறாளே..?!’ என்று அவன் தன் கை முஷ்டியை மடக்கி, தன் தலையருகே கொண்டு செல்லப் பார்க்க,
“க்கும்… எல்லாரும் பார்க்கறாங்க..!? என்றாள் சிரித்தபடி.
“ம்! ம்!” என்று தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டான் ரஞ்சன்.
முதலில் சாப்பிடவே தயங்கியவன், வேணியின் கைப்பக்குவம் மிகவும் அருமையாக இருந்ததால், “Awesome Aunty..!” என்று சொல்லி ரசித்து, ருசித்துச் சாப்பிட,
“வரவே அப்படி யோசிச்சான் இப்போ எப்படி மொக்குறான் பாரு!?” என்று நினைத்துக் கொண்டே நிலாவும் சாப்பிட்டாள்.
சாப்பிட்டு முடித்த பின் ரஞ்சன் உடனே கிளம்ப எத்தனிக்க, “என்னங்க மாப்பிள்ளை உடனே கிளம்பறீங்க?! மதியத்துக்கும் விருந்து ஏற்பாடெல்லாம் நடந்துகிட்டு இருக்கு!” என்று வெங்கடேசன் சொல்ல,
“அவருக்கு கடையில முக்கியமான வேலையை இருக்காம் ப்பா…! போயிட்டு மதியம் வந்திடுவார்!” என்று சமாளித்தாள் நிலா.
“ஆமாம் அங்கிள்… டோன்ட் மிஸ்டேக் மீ…! நான் கிளம்பறேன்…!” என்று அவன் விடைபெற, வேகமாக அவனருகே சென்ற நிலா,
“எல்லோர்கிட்டயும் சொல்லிட்டு கிளம்பு..!” என்றாள் மெல்லிய குரலில்.
“ஏய் என்னடி?! நானும் உங்க வீட்டுக்கு வந்ததுல இருந்து பார்க்கறேன், ரொம்பதான் ஓவரா போயிட்டு இருக்க?!” என்று அவன் துள்ள,
“தாத்தா… சாயந்திரம் வீட்டுக்கு வந்திடுவாரில்லை?!” என்றாள்.
‘வெறுப்பேத்தறாளே…!’ என்று நினைத்தவன், “எல்லோருக்கும் போயிட்டு வரேன்!” என்று நல்லபிள்ளை போல் அனைவரிடமும் விடை பெற,
“பை ங்க… மதியம் சீக்கிரமா வீட்டுக்கு வந்திடுங்க!” என்றாள் குரலில் அன்பைத் தேக்கி, கண்களில் அலட்சியத்தைக் காட்டி.
“ம்!” என்று தலையசைத்தவன்,
‘ப்பா… என்னாமா நடிக்கிறா?! ப்ஃராடு ப்ஃராடு!’ என்று திட்டியபடியே காரைக் கிளப்பினான்.
அவன் கார் செல்வதை பார்த்த காமாட்சி, நிலாவின் கைபேசிக்கு அழைத்து விவரம் கேட்க, ‘வேலையிருந்ததுனால நான்தான் போகச் சொன்னேன் பாட்டி. மதியம் வந்திடறேன்னு சொல்லிட்டுதான் போயிருக்கார். நீங்க வருத்தப் படாதீங்க..!” என்றாள்.
“முதலெல்லாம் கடைப் பக்கம் எட்டி கூட பார்க்க மாட்டான், அவன் பாட்டுக்கு ஒரு தனி போக்குல வாழ்ந்துகிட்டு இருந்தான். இப்போ என்னன்னா இப்படி?!” என்றவர், அவளிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு போனை வைத்தார்.
அன்று மாலை தங்கள் கல்லூரியை விட்டுக் கிளம்பிய நிரஞ்சன், தான் எப்போதும் செல்லும் காபி ஷாப்பிற்குச் சென்றான்.
காபியை ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருந்தவனுக்கு, ஏனோ திடீரென்று யாஷினியின் நினைவு வந்தது.
‘இந்த யாஷினி இப்பல்லாம் அடிக்கடி வந்து தொந்தரவு பண்றதில்லையே! ஒருவேளை அவங்க வீட்ல கல்யாணம் பேசி முடிச்சிருப்பாங்களோ?!’ என்று யோசனை தோன்ற,
‘சே சே அப்படி இருந்தா நேத்து கல்யாணத்துல அப்படி பேசியிருக்க மாட்டாளே…?! அவ இன்னமும் என்னைதான் நினைச்சிகிட்டு இருக்கா!’ என்றான்.
‘அப்போ அவ உன்னையே நினைச்சிக்கிட்டு இருக்கணும்னு நீ விரும்பற?!’ என்று அவன் மனம் குற்றப் பத்திரிக்கை வாசிக்க,
‘அதெல்லாம் இல்லை…!’ என்று அவன் மறுக்க, சரியாக அந்நேரம் அவன் எதிரே வந்தமர்ந்த யாஷினி,
“என்ன பத்திதானே பாப்பா நினைச்சிட்டு இருந்தீங்க?!” என்றாள் கண் சிமிட்டி.
“அ அதெல்லாம் இல்லையே..!” என்று அவன் தடுமாறுவதிலேயே அவள் கண்டு கொண்டாள்.
“என்ன பாப்பா பண்றது?! இப்பல்லாம் கொஞ்சம் கொஞ்சம் பிசியாகிட்டேன்! அதான் அடிக்கடி வர முடியறதில்லை!” என்று சோகமாகச் சொன்னவள், அவன் கையிலிருந்த கைப்பேசியைப் வெடுக்கென்று பிடுங்கினாள்.
“ஏய் என் மொபைலைக் கொடு!” என்று அவன் அவளிடமிருந்து வாங்க முயல, அவள் அவனுக்குப் போக்கு காட்டி, அதிலிருந்து தனது கைபேசிக்கு அழைப்பு விடுத்தாள்.
“ஏய் மொபைலைக் கொடுத்துடு!” என்று அவன் மிரட்ட,
“ஹப்பா.. என்ன… கோவம் வருது!? இந்தாங்க பிடிங்க… என் வேலை முடிந்தது! சில காரணங்களால, என்னால இப்பல்லாம் உங்களை அடிக்கடி வந்து பார்க்க முடியல! அதான் போன் நம்பர் எடுத்துக்கிட்டேன். டெய்லி போன் பண்ணுவேன்.. கண்டிப்பா எடுத்து பேசணும்! சரியா?! பை டேக் கேர்!” என்று விடை பெற்றாள்.
‘இவ எப்படி எப்பவுமே இப்படி துருதுருன்னு இருக்கா?! திடீர்னு வர்றா… படபடன்னு பேசறா…! கொலுசொலி போல சிரிக்கறா…! பட்டாம்பூச்சி மாதிரி பறந்து போயிடறா! இவ எப்பவுமே என்னோட இருந்தா எவ்ளோ நல்லாயிருக்கும்!’ என்று அவன் மனம் ஏங்கத் துவங்க,
“என்னை நினைச்சீங்களா?!” என்று கேட்டபடி மறுபடியும் அவனருகே வந்தமர்ந்தாள் யாஷினி.
அவன் எவ்வளவோ மறைக்க முயன்றாலும் அவன் இதழ் அவன் மனதை வெளிக்காட்டிவிட,
“அய்!! பாப்பா! சிரிச்சிட்டீங்க!!!” என்றாள் மிகுந்த குதூகலத்துடன்.
“நீ எப்பவுமே இப்படித்தானா?!” என்றான் சிறு புன்னகையுடன்.
“இல்ல இல்ல இப்படித்தான் எப்பவுமே?!” என்றாள் சீரியஸாக.
“ப்ச்!” என்று அவன் முறைக்க,
“சும்மா சொன்னேன் பா…!” என்றாள்.
“நான் எவ்ளோ திட்டினாலும் உனக்கு கோபமே வரலியா?!” என்றான்.
“ம்ஹும்..!” என்றாள் தேன் புன்னகையுடன்.
“ஏன்?!” என்று அவன் கேட்க,
“பிகாஸ் ஐ லவ் யூ!” என்றாள் அவன் கண்ணோடு தன் உயிர் கலந்து.
அன்று இரவும் நிலா பால் செம்புடன் அவர்கள் அறைக்குள் நுழைய, “ஏய் என்ன இதெல்லாம்?!” என்றான் ரஞ்சன் எரிச்சலுடன்.
“ம் ஆன்ட்டியைப் போய்க் கேளு…! அவங்கதான் கொடுத்துவிட்டாங்க! மூணு நாளைக்கு இப்படித்தான் கொடுப்பாங்களாம்! நீ குடிக்கறதுன்னா குடி..! இல்லாட்டி கீழ கொட்டு! அது உன் இஷ்டம்!” என்றவள், தன் பாட்டிற்கு டிவியை ஆன் செய்து டிமான் அண்ட் பூம்பாவை ஓட விட்டாள்.
“ஏய் அது என் டிவி…!” என்றான் ரஞ்சன்.
“அது நேத்திக்கு முன்தினம் வரைக்கும்! இப்ப என்னோடதும்!” என்றாள்.
“சே!” என்று சலித்துக் கொண்டவன்,
“எனக்குத் தூக்கம் வருது” என்றான்.
“நான் உன்னை தூங்க வேண்டாம்னு சொல்லலையே!” என்றவள் மீண்டும் பார்வையை டிவியில் பதிக்க,
“என் நிம்மதியைக் கெடுக்க வந்த கிராதகி..! எருமைமாடு மாதிரி வளர்ந்திருக்கு! இன்னமும் பொம்மை படம் பார்க்குது பாரு! இந்த லட்சணத்துல இதெல்லாம் டீச்சர் வேற! இதெல்லாம் பாடம் எடுத்து எங்கிருந்து பசங்க உருப்படப் போகுது!?” என்று புலம்பியவாறே முகம் வரை நன்றாக இழுத்துப்போர்த்திக் கொண்டு படுத்தான்.
‘அப்படி வாடா வழிக்கு!’ என்றவள், மென்சிரிப்புடன் டிவியை அணைத்துவிட்டு உறங்கச் சென்றாள்.
error: Content is protected !!