9
காஞ்சனாவின் பாட்டிக்கு அவர்கள் வாழ்ந்த ஊரைவிட்டு போக விருப்பமில்லை தான். ஆனாலும் மகனுக்காகவும் அவனின் சுயமரியாதைக்காகவும் அவரும் அவர்களுடன் புலம் பெயர்ந்தார்.
காஞ்சனாவின் தந்தைக்கு அவர் உதவி கேட்ட இடத்தில் உதவி கிடைக்கவில்லை என்றதுமே எடுத்த முடிவு தான்.
பணத்திற்கு தான் மதிப்பு என்று அப்போது தான் புரிந்து கொண்டார். பிச்சை போட்டது போட்டதாவே இருக்கட்டும், இனி இந்த பக்கம் வரவே கூடாது என்ற முடிவுடன் தான் அவர் ஊரைவிட்டே வந்தார்.
சென்னை அவருக்கு ரொம்பவும் புதிது. நண்பர் ஒருவர் அங்கிருக்க அவரை நம்பித்தான் வந்திருந்தார்.
சென்னை பாரிமுனையில் நகைக்கடை வைத்திருக்கும் ஒருவரிடம் தன் நண்பரை வேலைக்கு சேர்த்துவிட்டார் அவர்.
அன்றிலிருந்து அவர்கள் வாழ்க்கையில் அடுத்த அத்தியாயம் தொடங்கியிருந்தது. நம்பிக்கை ஒளி ஏற்பட்டிருந்த நேரம் விதி அதை அணைத்து சென்றது.
காஞ்சனாவின் தாய்க்கு உடல் நலம் குன்றியது. மருத்துவமனை வைத்தியம் என்று அவர் சம்பாத்தியம் செலவழிக்க சரியாக இருந்தது.
மகளுக்கு எப்படியாவது கை, காலை குணப்படுத்திவிடலாம் என்ற நம்பிக்கையோடு இருந்த மனிதருக்கு அடுத்தடுத்து நெருக்கடிகளே…
ஒரு கட்டத்தில் மனைவியை காப்பாற்ற அவர் பட்டபாடு எல்லாம் வீணாகிப் போக அவர் இறைவனடி சேர்ந்தார்.
அம்மனிதருக்கு வாழ்க்கையே வெறுத்து போனது அந்நொடி. இரு பிள்ளைகளை நினைத்தே தன் உயிரை கையில் பிடித்து வைத்திருந்தார். வயதான தன் தாயால் அவர்களை எப்படி பேணிப் பாதுக்காக்க முடியும் என்ற எண்ணமும் சேர்ந்தே தான் அவரை நடமாட வைத்தது.
இப்படியே நாட்கள் செல்ல ஆரம்பிக்க பிள்ளைகளை அரசு பள்ளியில் தான் சேர்த்து படிக்க வைத்தார். அவர்களும் வளர்ந்து ஆளாகியிருக்க காஞ்சனா பள்ளிப்படிப்பை முடித்தாள்.
கல்லூரிக்கு அடி எடுத்து வைக்க இருந்த வேளை காலன் அவளின் தந்தையின் உயிரை எடுத்து சென்றிருந்தான்.
தம்பியை படிக்க வைக்கும் பொருட்டு அவள் தந்தை வேலை பார்த்த கடையிலேயே சென்று வேலை கேட்க பல வருடம் அவளின் தந்தை உழைத்த உழைப்பிற்கு பலன் இருந்தது அங்கு.
அவர்களிடம் வேலை செய்ய ஆரம்பித்தாள். வேலைக்கு சென்றுக்கொண்டே தொலைத்தூரக் கல்வியில் பிகாம் முடித்தாள்.
தம்பியை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று அவள் கனவு கண்டிருக்க அவன் தமக்கையின் கஷ்டம் புரிந்து தன் கனவினை சுருக்கிக் கொண்டான்.
அவள் போலவே ஒரு டிகிரியை மட்டும் முடித்தவன், தொழில் வழி கல்வி ஒன்றை ஒரு வருடம் கற்றுத் தேர்ந்து வேலைக்கு செல்ல ஆரம்பித்திருந்தான்.
அதுவரை காஞ்சனாவின் நெஞ்சுக்குள் கனன்றுக் கொண்டேயிருந்தது ஒரு தீ. அது இப்போது கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
அவள் தெளிவாகவே திட்டமிட்டே தான் பழிவாங்க நினைத்திருந்தாள். அக்கா, தம்பி இருவரும் இப்போது நன்றாக சம்பாதித்தார்கள். அவர்கள் இருவரின் வருமானமே குடும்பத்திற்கு அதிகப்படியாகத் தான் இருந்தது.
மூவருமே சிக்கனமாகவே செலவழித்தனர். வீட்டில் இருந்த மற்ற இருவரையும் அழைத்து தன் முடிவை சொன்ன அன்று சின்ன களேபரமே வீட்டில் நடந்து முடிந்திருந்தது.
அமுதன் தன் தமக்கையின் முடிவை பூரணமாக ஆதரித்தான். ஆனால் அதை அவனே செய்ய வேண்டும் என்று எண்ணினான்.
காஞ்சனாவிற்குள் கனன்று கொண்டிருந்த நெருப்பு தம்பியின் முடிவை மறுத்தது. பாட்டி அவரை சமாளிப்பது தான் அவளுக்கு பெரும் கஷ்டமாகவே இருந்தது. காஞ்சனா இறுதியில் தன் மனதில் இருந்த பாரத்தை அவரிடம் இறக்கி வைத்து அவரை பார்க்க வயதான அப்பெண்மணி சோர்ந்து போயிருந்தார்.
“பாட்டி…”
“சொல்லும்மா…”
“எதாச்சும் சொல்லுங்க பாட்டி…”
“இனி நான் சொல்ல என்ன இருக்கு?? உங்க இஷ்டப்படி செய்ங்க, ஆனா இதுல யார் உயிருக்கும் எந்த கஷ்டமும் வரக்கூடாது. இதுவரைக்கும் போன உயிரே போதும்…”
“எனக்கு அதெல்லாம் தாங்க சக்தியில்லை, இந்த வயசுல நீங்க கஷ்டப்படுறது பார்க்கவும் எனக்கு வேதனையா இருக்கு…”
“நீ பழிவாங்கணும்ன்னு நினைக்கிறதும் நம்ம வீட்டு உயிர் தான்டா…” என்று மட்டும் சொன்னார்.
“நீங்க சரின்னு சொன்னதே எனக்கு போதும் பாட்டி…” என்றவள் மளமளவென்று திட்டங்கள் தீட்டினாள்.
“அக்கா எனக்கு நீயென்னவோ உன் வாழ்க்கையை பணயம் வைக்கறயோன்னு தோணுது. நானே பண்றேன்க்கா…”
“வேணாம் அமுதா… உன்னைவிட எனக்குள்ள அந்த வலி அதிகம் அதை எப்படி வலிக்கச் செய்யணும்ன்னு நான் முடிவு பண்ணி வைச்சிருக்கேன் அமுதா. நீ கவலைப்படாதே… என் வாழ்க்கையை பணயம் வைக்கறேன் தான் ஆனா நான் தோத்து போக மாட்டேன்…” என்றாள் உறுதியோடு.
தன் தந்தையின் இறப்புக்கு பின்னேயே அவள் அவ்வேலையை கொஞ்சம் கொஞ்சமாய் ஆரம்பித்திருந்தாள்.
அவர்கள் என்ன செய்கிறார்கள் அவர்களை எப்படி அணுக வேண்டும் என்று அணுவணுவாய் திட்டம் போட்டுத் தான் அவள் உள்ளேயே வந்தாள். அவளின் தாயின் வழியில் சொந்தமான மாமாவின் மூலமே ரத்தினவேலுவிடம் வேலைகேட்டு போனாள்.
நம்ம ஆளுங்க தான் கஷ்டப்படுற குடும்பம் வேலை போட்டு கொடுங்க என்று அவர் சொல்லியப்பின்னே தான் ரத்தினவேலுவின் மூலம் அவள் அங்கு வந்தது.
இதோ அவள் காத்திருப்பிற்கான பலன் அவளை விரைவில் வந்தடைய காத்திருக்கிறது.
“காஞ்ச்சு…”
‘தயவு செஞ்சு என் பேரை காஞ்சி போக வைக்கதடா…’ என்று மனதிற்குள் சபித்தாலும் வெளியில் அவனின் அந்த அழைப்பை விரும்பியவள் போல காட்டிக் கொண்டாள்.
அவன் நம்மளை கஞ்சு காஞ்ச்சுன்னு சொல்றானே, நாமளும் அவன் பேரை கொலைப்பண்ணா தான் தெரியும் அவனுக்கு என்று எண்ணி அவள் யோசித்து கண்டுப்பிடித்தது தான் விஷ்வா.
அந்த அழைப்பு அவனை சந்தோசப்படுத்தும் என்று தெரிந்திருந்தால் அப்படி அழைத்திருக்கவே மாட்டாள்.
“சொல்லுங்க விஷ்வா…” என்று வேண்டுமென்றே சொன்னாள்.
“என்ன சொன்னே??”
“சொல்லுங்க விஷ்வான்னு…” என்று அவன் முகம் பார்த்து நிறுத்திவிட்டாள்.
அவன் இப்போது எழுந்து அவளருகில் வந்து நின்றிருந்தான் இப்போது. அவ்வளவு நெருக்கமாய் வந்து நிற்பான் என்று அவள் எண்ணவில்லை.
“என்ன??”
“விஷ்வான்னு சொன்னே…”
“ஹ்ம்ம் ஆமா சொன்னேன், சொல்லக் கூடாதுன்னா இனிமே சொல்லலை…” என்றுவிட்டு முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டாள்.
அவன் அவள் முகம் நிமிர்த்தி “இனிமே இப்படி தான் கூப்பிடணும், நீ மட்டும்…” என்றான் சேர்த்து.
‘அடக்கடவுளே இவன் என்ன முட்டாளா…’ என்று எண்ணிக் கொண்டாலும் அவனிடம் அவளுக்கு காரியமாக வேண்டுமென்றால் அப்படியே தான் அவனை அழைப்பாள்.
“விஷ்வா நான் உங்ககிட்ட ஒண்ணு கொடுக்கணும்ன்னு ஒரு வாரமா நினைச்சுட்டு இருக்கேன்…”
“ஹேய் என்னது காஞ்ச்சு??” என்றவன் அருகில் வந்து அவள் தோளில் கைப்போட்டான்.
சங்கடமாய் உணர்ந்தாலும் அதை தட்டிவிட்டால் தப்பாக போகும் என்று பேசாமல் இருந்தாள்.
“நான் போய் அதை எடுத்திட்டு வர்றேன்…” என்றாள்.
“எடுத்திட்டு வரப்போறியா, நான் கூட நீ கொடுக்கப் போறியோன்னு நினைச்சேன்” என்று சொல்லி அவன் கன்னத்தை காட்ட அவள் கன்னக்கதுப்பு சிவக்க ஆரம்பித்தது.
அவனுக்கு முதுகுகாட்டி சென்றவள் அவனறியாது அதை மறைத்து வெளியேறினாள். அவள் ஹேண்ட்பேக்கில் இருந்த அந்த கழுத்தை ஒட்டிய செயினை எடுத்து வந்தாள்.
“இது… இது உங்களுக்காக தான்… நீங்க… போடுவீங்களா…” என்று அவன் முன்னே நீட்டினாள். செயினும் ஒரு சின்ன பென்டன்ட்டும் இருந்தது அதில். “இதெல்லாம் எதுக்கு காஞ்ச்சு??”
“ஏன் நான் இதெல்லாம் உங்களுக்கு தரக்கூடாது, எனக்கு அந்த தகுதி இல்லையா… இல்லை நான் வாங்கிக் கொடுத்து நீங்க போட்டுக்கறதான்னு…” என்றுவிட்டு நிறுத்திவிட்டாள்.
“ஹேய் நான் எதுக்கு சொன்னா, நீ என்ன சொல்றே?? உனக்கு எதுக்குடா செலவு நான் அதுக்காக தான் சொன்னேன்…”
“ஓ!! இந்த விஷயத்துல வரவு செலவு பார்ப்பாங்களா விஷ்வா…” என்றாள்.
“சாரிம்மா நான் பேசினது தப்பு தான்… அந்த தப்புக்கு நீயே தண்டனை கொடுத்திடு…”
“என்ன தண்டனை??”
“இதை என் கழுத்துல உன் கையால போட்டுவிடு… ஆனா இந்த டாலர் மட்டும் வேண்டாம், எனக்கு டாலர் போட்டா அவ்வளவா பிடிக்காது…”
“இதை நாங்க உங்க கழுத்துல போடுறது உங்களுக்கு தண்டனையா??”
“உன்னை பொறுத்தவரைக்கும் அது தண்டனை. ஆனா எனக்கு அது வரம், கூடவே ஒரு கிஸ்சும் சேர்த்துக் கொடுத்தா பிரமாதமா இருக்கும்…” என்று அவன் சொல்ல “உங்களை…” என்று பொய்யாய் அடிக்க கை ஓங்கினாள்.
“டாலர் வேணாமா உங்களுக்காக ஆசையா வாங்கினேன்…”
“அதை நான் உனக்கு ஒரு செயின் செஞ்சு தர்றேன் அதுல போட்டுக்கோ ஓகே வா…” என்று முடித்துவிட்டான் அவன்.
காஞ்சனா ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த அந்நாள் அடுத்த சில நாட்களிலேயே வந்தது.
“காஞ்ச்சு இன்னைக்கு எனக்கு மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. நெறைய டிசைன்ஸ் மைன்ட்ல ஓடுது. நான் அந்த ரூமுக்கு போறேன்…” என்றுவிட்டு எழுந்து சென்றுவிட்டான்.
கிட்டத்தட்ட இரண்டு மூன்று நாட்களாய் அவன் அந்த அறையில் தான் முழு நேரமும் செலவழிக்கிறான்.
டேவிட்டுக்கு இவர்கள் காதல் விஷயம் ஒரு நாள் தெரிந்து போனது. காஞ்சனா அதை யாரிடமும் சொல்ல வேண்டாமென்றிருந்தாள். விஸ்வா தான் பேச்சுவாக்கில் தன் நண்பனிடம் உளறிவிட்டான்.
டேவிட் நண்பனுக்காய் மகிழ்ந்து தான் போனானே தவிர வருத்தப்படவில்லை. ஏனெனில் இப்போது அவனுமே காஞ்சனாவை நல்ல மாதிரியாகத் தான் நினைத்துக் கொண்டிருந்தான்.
டேவிட் தான் இப்போது அவனறையில் இருப்பது. விஸ்வா காலையில் கடைக்கு வந்தால் வந்ததும் சிறிது நேரம் கணக்கு வழக்குகளை பார்ப்பதோடு சரி. அந்த அறைக்கு சென்றுவிடுவான். இரவு எட்டு மணியாகும் அவன் வீட்டிற்கு கிளம்ப, இதோ இரண்டு நாட்களாய் அங்கு தானிருக்கிறான்.
மாலை மங்கி இருள் கவிழத் தொடங்கியிருந்தது. காஞ்சனா வேலையை முடித்து வீட்டிற்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தாள்.
விஸ்வா அந்த அறையில் இருந்து வெளியில் வந்தான். “காஞ்ச்சு என்னோட டிசைன்ஸ் எல்லாம் பார்க்கறியா…” என்று அவளை மகிழ்ச்சியோடு அவளை அந்த அறைக்கு அழைத்துச் சென்றான்.
அங்கிருந்த அனைத்து டிசைன்ஸ் அவளுக்கு காண்பித்தான். கிட்டத்தட்ட இருபது மாதிரிகள் வரைந்திருந்தான் அவன்.
“நான் இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரமா கிளம்பட்டுமாடா ரொம்ப டயர்டா இருக்கு, நீ இதெல்லாம் போட்டோ எடுத்து சிஸ்டம்ல போட்டுடறியா…” என்றான் சோர்ந்த குரலில்.
“விஷ்வா இவ்வளவும் நீங்களேவா வரைஞ்சீங்க??”
“அதுல உனக்கென்ன சந்தேகம்??”
“சந்தேகம் இல்லை விஷ்வா சந்தோசமா தான் கேட்டேன்…”
“எல்லாத்துக்கும் காரணம் நீ தான்…”
“நானா எப்படி??”
“உன்னையே நான் எப்பவும் நினைச்சுட்டு இருக்கேன். உனக்கு எப்படியெல்லாம் நகை செஞ்சு போட்டா அழகா இருக்கும்ன்னு எனக்குள்ள கற்பனை தான்… தவிர அன்னைக்கு நீ எனக்கு செயின் வாங்கிக் கொடுத்தியா…”
“அப்போவே மனசுக்குள்ள தோணிச்சு, நீ என்னடா செஞ்சன்னு அதோட எபெக்ட் தான் இது…”
“இவ்வளவையுமா செய்யப் போறீங்க…”
“இல்லை…”
“அப்புறம் இவ்வளவு வரைஞ்சதுலாம்…”
“எனக்கு திருப்தியானா டிசைன் இது தான், இது மட்டும் தான்…” என்று சொல்லி அவன் எடுத்துகாட்டியது ஒரு தாலிக்கொடி.
அதன் முகப்பு தான் அவ்வளவு அழகு. இருவரின் பெயரின் முதல் எழுத்து அதில் பின்னிப் பிணைந்திருக்க இரு மயில்கள் அதை தாங்கிப் பிடித்திருப்பது போல வடிவமைத்திருந்தான்.
செயின் கூட வித்தியாசமான வடிவிலேயே செய்திருந்தான். அவ்வளவு கெட்டியாய் செய்ய வேண்டுமென்றால் குறைந்தது ஏழெட்டு பவுனாவது பிடிக்கும் என்பது அவளின் கணிப்பு.
அவன் காட்டிய அந்த மாதிரியை பார்த்தவளுக்கு உண்மையாகவே உள்ளே கனத்து போனது. விழியோரம் லேசாய் கரிக்கக் கூட செய்தது.
அதை கண்டுக்கொண்டவன் “ஹேய் என்னம்மா”
“இல்லை விஷ்வா ஒண்ணுமில்லை, எனக்கு பேச்சே வரலை…”
“நீ எனக்கு கிப்ட் பண்ணே… பதிலுக்கு நான் உனக்கு சிறப்பா என்ன செய்ய முடியும்ன்னு எனக்கு தெரியலை. நான் வாங்கிக் கொடுக்கப் போற கிப்ட் என்னைக்கும் உனக்கு மறக்க முடியாததா இருக்கணும்ன்னு தான் இதை உனக்கு செஞ்சேன்…”
“என்னாச்சு காஞ்ச்சு பிடிக்கலையா…”
“அப்படி நான் என்னைக்குமே சொல்ல மாட்டேன்…” என்று உணர்ச்சி குவியலாகவே சொல்லியிருந்தாள்.
“நான் வீட்டுக்கு கிளம்பட்டுமா காஞ்ச்சு” என்று அவள் கன்னம் தட்டினான்.
அதில் சுதாரித்தவள் நடப்புக்கு வந்தாள் “நீங்க கிளம்புங்க, இனி நான் பார்த்துக்கறேன்” என்று இருபொருள்பட சொல்லியிருந்தாள்.
அவன் சொன்னது போல போட்டோ எடுத்து சிஸ்டமில் பதிவேற்றியவள் அடுத்து அந்த கடைக்கு வரவேயில்லை.
அவசர வேலையாக பாட்டியை பார்க்க ஊருக்கு செல்வதாகவும் பத்து நாட்கள் கழித்து வருவதாகவும் அவனுக்கு போன் செய்து சொல்லியிருந்தாள்.
அன்று சென்றவள் தான் திரும்பி வரவேயில்லை. ஒரு மாதம் கடந்திருக்க இவன் அவளுக்கு அழைத்து ஓய்ந்து போனான்.
அவள் கைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவளைப்பற்றி அதிகமாய் தெரிந்து கொள்ளாமல் விட்டோமே, பாட்டி இருக்கிறார் என்று மட்டும் தானே சொல்லியிருந்தாள். அவரும் ஊரில் இருப்பதாக தான் சொல்லியிருந்தாள்.
டேவிட்டுக்கு நண்பனை பார்த்து சற்று வருத்தமாகவே இருந்தது. அவனும் விசாரித்து பார்த்துவிட்டான் அவளை பிடிக்கவே முடியவில்லை.
காலையில் அவன் கடைக்கு வந்திருக்க அவனுக்கு நோட்டீஸ் வந்திருப்பதாக கூறினார்கள். அதை பிரித்து பார்த்தவன் சொல்லவொணாத அதிர்ச்சி அடைந்தான்.
ஏனெனில் அவன் தற்போது வரைந்த மாதிரிகளுக்கு முழு காப்புரிமை தன்னுடையது என்றும் அதை தான் குறிப்பிட்ட நகைக்கடைக்கு மட்டுமே கொடுத்திருப்பதாக சொல்லி விஜயன் என்பவர் வக்கீலின் மூலம் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
விஸ்வா அவன் மாதிரிகளை சென்ற வாரம் தான் நகைகளாய் உருவாக்கி மாடல் போட்டோவை செய்தித்தாளில் விளம்பரம் செய்திருந்தான். அதை எதிர்த்து தான் அந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
அவன் இது போன்ற ஒன்றை சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை. அப்போது கூட அது காஞ்சனா தான் செய்திருப்பாள் என்று அவன் எண்ணவேயில்லை.
அன்று வீட்டினர் எல்லாரும் அவனை குழுமி ஆளாளுக்கு அவனை குடைந்து எடுத்தனர்.
அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அது வரைந்தது அவன் தான் என்ற ஆதாரம் வேண்டுமே.
அது இருந்தாலும் இப்போது அதற்கு காப்புரிமையை அவர்கள் வாங்கிவிட்டார்களே, அதற்கு அவன் இப்போது என்ன செய்வான்.
இப்படி இருந்த ஓர் நாளில் தான் அவளிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.
“ஹலோ…” என்ற அவள் குரல் கேட்டதுமே உடல் பரவசமடைந்தது அவனுக்கு.
“காஞ்ச்சு…” என்றான்.
“டேமிட் என்னை அப்படி கூப்பிடாதய்யா… ரொம்ப கேவலமா இருக்கு…”
அவளின் இந்த பேச்சைக் கேட்டு அதிர்ந்து விட்டான் அவன்.
“என்ன அதிர்ச்சியா இருக்கா… நானே தான் காஞ்சனாமாலாவே தான்…”
“எல்லாத்துக்கும் பின்னாடி இருக்கறதும் நானே தான்… எதுக்கு ஏன்னு உனக்கு தெரியாதுல, தெரிஞ்சுக்க ட்ரை பண்ணு, இல்லைன்னா இப்படி பைத்தியம் போலவே சுத்து…”
“உனக்கு ஒரு குட் நியூஸ் சொல்லத்தான் கூப்பிட்டேன்… என்னன்னு கேட்க மாட்டியா விஷ்வா…”
“வாயை மூடுடி, என் பேரை சொல்லக் கூட உனக்கு தகுதி இல்லை…”
“அய்யோ பார்றா சாருக்கு கோபம்லாம் வருது… சரி சரி என்ன விஷயம்ன்னு சொல்லிடறேன், அதையும் கேட்டுட்டு நல்லா டென்ஷன் ஆகு சரியா…”
“இன்னைக்கு நியூஸ் பேப்பர்ல நீங்க எங்களை ஏமாத்தின கதை எல்லாம் வந்திருக்கு, சூட சூட நியூஸ் அது தான்… என்ன உன் கடை பேரை மட்டும் போடலை, எந்த ஊர்ன்னு போட்டாச்சு, ரொம்ப பிரபலம்ன்னு மட்டும் போட்டிருக்கோம்…”
“எல்லாம் கரெக்ட்டா இருக்கான்னு பார்த்துக்கோ…”
“ஹேய் போனை வைக்காதே…” என்று எதிர்முனையில் கத்தினான் விஸ்வா.
“என்ன??”
“யார் நீ??”
“வில்லி…”
“ஹா… உண்மையை சொல்லு உனக்கு என்ன வேணும், பணமா??”
“அதை உன்னைக் கேட்டு தான் எடுக்கணும்ன்னு எனக்கு அவசியமேயில்லை…”
“இதுக்கு என்ன அர்த்தம்…”
“நீ கண்டுப்பிடிடா முட்டாள்ன்னு அர்த்தம்…” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள்.
விஸ்வாவிற்கு பைத்தியம் பிடிக்காத குறை தான். அவளால் தான் என்று வெளியில் சொல்ல முடியவில்லை அவனுக்கு.
ஒரு பெண்ணிடம் தான் ஏமாந்து நிற்கிறோம் என்பதை அவனால் ஒப்புக்கொள்ளவும் முடியவில்லை. அதை மற்றவர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டவும் அவன் விரும்பவில்லை.
அவள் சொன்னது போலவே செய்தித்தாளில் பிரபல நகைக்கடையின் டிசைன்ஸ் அனைத்தும் வேறு ஒருவருக்கு சொந்தமா… இது இன்று தான் நடக்கிறதா அல்லது இதுவரை அவர்கள் செய்தது அனைத்துமே அடுத்தவரின் உழைப்பை திருடியது தானா என்பது போன்ற வார்த்தைகள் அவனை அடியோடு சாய்த்தது.
கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் வரை அவன் முடங்கியே இருந்தான். அவன் அன்னை சகுந்தலா தான் அவனை அதில் இருந்து மீட்டு எடுத்தார்.
வீட்டினர் அனைவரும் அவனுக்கு பக்கப்பலமாய் இருக்க கொஞ்சம் கொஞ்சமாய் தன்னை மீட்டெடுத்தான். அன்றிலிருந்து தான் அவன் புதிதாய் எந்த மாதிரிகளையும் வரைவதேயில்லை.
அவனை வரைய வைப்பதற்கு தான் அவளும் விடாது முயன்றாள். தன் நினைவுகளில் இருந்து மீண்டாள் காஞ்சனா.
அவன் சுதாரித்துவிட்டான், இனி ஆட்டத்தை வேறு மாதிரி தான் ஆடவேண்டும் என்று அவள் எண்ணியிருக்க அவர்கள் இருவரையும் வைத்து விதி ஒரு ஆட்டத்தை ஆட ஆரம்பித்திருந்தது.
எந்தன் உள்ளம் எங்கும் அன்பு வெள்ளமே
சொந்தத்தில் பந்தத்தில் மோசத்தில் சோகத்தில்
வந்து நின்று உண்மைதனை இன்று உணர்ந்தேன்…