வேகமாக சென்ற வைத்தியர் முதலில் குடிலுக்கு தான் சென்றார். மணி ஒன்பதரை ஆகி இருந்தது. இந்நேரம் மாதவன் தனக்காக மூலிகை வாங்கும் இடத்தில் காத்திருப்பானா என்பது அவருக்கு சந்தேகமே. அதே நேரம் அவர் சுற்றி பாரஸ்ட் கேட் வழியே சென்றால் இன்னும் ஒரு மணி நேரம் நடக்க வேண்டும். அதற்கு அவர் உடலில் வலு இல்லை.
“கடவுளே அந்த பையன் அங்கே இருக்க வேண்டும்”, என்ற வேண்டுதலோடு நடக்க துவங்கினார். சிறிது தூரம் ஓடவும் செய்தார்.
அவர் வேண்டியது போல “என்ன இன்னும் அவரைக் காண வில்லையே? அவருக்கு மூலிகை வேண்டாமா?”, என்ற எண்ணத்தோடு அமர்ந்திருந்தான் மாதவன்.
அப்போது அங்கே மூச்சிரைக்க வந்து நின்றவரைக் கண்டு திகைத்து போனவன் “ஐயா என்ன ஆச்சு? எதுக்கு இப்படி வந்து நிக்குறீங்க?”, என்று கேட்டான்.
“வனமங்கைக்கு ஆபத்து தம்பி. அவளை காட்டுல விட்டுட்டு வந்துட்டாங்க”, என்று ஆரம்பித்து சுருக்கமாக அனைத்தையும் சொன்னவர் “அவளை போய்க் காப்பாத்துங்க. ஏதாவது ஆயுதம் எடுத்து வச்சிக்கோங்க. கூடவே இந்த பையையும் வச்சிக்கோங்க”, என்றார். வனமங்கையை எந்த இடத்தில் விட்டுவிட்டு வந்தார்கள் என்ற வழியையும் சொன்னார். அதைக் காண தானே அவர் சென்றது.
அனைத்தையும் கேட்டுக் கொண்டவன் அந்த பையை வாங்கிக் கொண்டு ஓடத் துவங்கினான். பின் ஒரு நொடி நின்றவன் அவசர அவசரமாக மூலிகைகளைப் பறித்து அவர் பக்கம் தூக்கி எரிந்து விட்டு ஓடி விட்டான். ஏனென்றால் அந்த மூலிகை இல்லை என்றால் மற்றொரு உயிரும் பாதிக்கப் படுமே.
“வெற்றி” என்ற அலறலுடன் ஓடி வந்த மாதவனைக் கண்டு அங்கிருந்த அனைவரும் திகைத்தார்கள். வீட்டுக்குள் இருந்த பெண்கள் கூட வெளியே வந்து விட்டார்கள்.
“சார், என்ன ஆச்சு?”, என்று வெற்றி பதற “வண்டியை எடுங்க”, என்றான்.
என்ன ஏது என்று கேட்காமல் அவன் வண்டியை எடுக்க “ராம் உங்க கன் தாங்க. என்னோடது என் வீட்ல இருக்கு. இந்தாங்க சாவி. அதை எடுத்துக்கொங்க”, என்று சொன்னான்.
ராமும் தன்னுடைய துப்பாக்கியை எடுத்துக் கொடுக்க அவசரமாக வண்டியில் ஏறி அமர்ந்தான். மாதவனின் மனதைப் போல ஜீப்பும் பறந்தது. போகும் போது எல்லா விவரத்தையும் வெற்றியிடம் சொன்னான் மாதவன். அதைக் கேட்டு அதிர்ந்து போன வெற்றி “நான் முன்னாடியே சொன்னேனே சார்?”, என்றெல்லாம் குத்திக் காட்ட வில்லை.
“மூணு மணி நேரம் தான் சார் ஆகிருக்கு. வனமங்கைக்கு எதுவும் ஆகிருக்காது. நாம கண்டிப்பா காப்பாத்திறலாம்“, என்று ஆறுதல் சொன்னான்.
வைத்தியர் சொன்ன பாதையில் சென்றாலும் அந்த இடத்தைக் கண்டு பிடிப்பது கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. ஒற்றையடிப் பாதைகள் மட்டுமே அங்கே இருக்க ஜீப்பிலும் தொடர்ந்து போக முடியாத நிலை.
ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி கீழே இறங்கிய மாதவன் “இந்த இடத்துல இருந்து பக்கத்துல தான்னு சொன்னாங்க. நான் போய்க்கிறேன். நீங்க வர வேண்டாம்”, என்றான்.
“சார் தனியா எல்லாம் நீங்க போக வேண்டாம். நானும் வரேன்”
“எனக்கு ஏதாவதுன்னா அது என் காதலுக்காக என் உயிர் போனதா இருக்கும் வெற்றி. ஆனா உங்களை நம்பி உங்க குடும்பம் இருக்கு. எனக்காக உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா என்னாலயே என்னை மன்னிக்க முடியாது. இப்ப திரும்பி போங்க. இன்னைக்குள்ள நாங்க வரலைன்னா நாளைக்கு காலைல மத்தவங்களையும் கூட்டிட்டு எங்களைத் தேடி வாங்க”
“சார்”
“நான் தாமதிக்கிற ஒவ்வொரு நொடியும் மங்கைக்கு ஆபத்து வெற்றி”
”சாரி சார், நீங்க போய்ட்டு வாங்க. அவளுக்கு ஒண்ணும் ஆகிருக்காது. என் துப்பாக்கியையும் வச்சிக்கோங்க”, என்று சொல்லி வெற்றி கொடுத்த அடுத்த நொடி அந்த காட்டுக்குள் பாய்ந்திருந்தான் மாதவன்.
காலையில் கிட்ட தட்ட பத்து பேர் அந்த வழியில் நடந்திருந்ததால் புல் எல்லாம் மடங்கி தன்னாலே ஒரு பாதை உருவாகி இருந்தது. அதை குறி வைத்தே நடந்து சென்றான். அவனுக்கே காட்டின் அடர்த்தி பீதியை கிளப்பியது. பயம் அவன் உயிரைக் கவ்வியது.
அந்த வனாந்தரத்தில் தனிமையை உணரத் துவங்கினாள் வனமங்கை. சுற்றி இருந்த அமைதி அவளை அதிகம் பாதித்தது. பகலே இப்படி இருக்கிறது என்றால் இரவில் என்ன நடக்குமோ என்று பயமாக இருந்தது.
அதிகமான பயத்தில் மயக்கமும் விழிப்பும் கலந்த நிலையில் இருந்தாள். எங்கே எழுந்து சென்றால் ஏதாவது விலங்குகள் வந்து விடுமோ என்று எண்ணி பயந்து போய் அமர்ந்திருந்தாள்,
சரக் சரக் என்று சருகுகள் அசையும் சத்தம் கேட்க தலையைத் திருப்பி பார்த்தாள். அங்கே இரண்டு பாம்புகள் ஜோடி போட்டுக் கொண்டு ஊர்ந்து சென்றது. அதைப் பார்த்து பாம்பு என்று அலறப் போனவள் நிலைமை உணர்ந்து அசையாமல் இருந்தாள். இருந்தாலும் மோப்ப சக்தியை வைத்து தன் பக்கம் வந்து விடுமோ என்று பயமாக இருந்தது. கூடவே அந்த பாம்புகளைக் கண்டு அவளுடைய துணையான மாதவனின் நினைவும் வந்தது. அவன் என்னைத் தேடுவானா? இன்று காலையில் என்னை பெண் கேட்க வருவானா? வருபவனுக்கு என் நிலைமை தெரிந்தால் என்னவாகும்? என்று சிந்தித்தாள்.
இனி என்னை அவனால் காணக் கூட முடியாது என்ற உண்மையை அறிவானா என்று எண்ணினாள். அவளது விழிகள் கொஞ்சமாக மூடிக் கொள்வதும் சோர்வாக திறந்து கொள்வதுமாக இருந்தது.
முதலில் என்ன ஆகுமோ என்று எண்ணி அழுதவள் இப்போது அழுகையைக் கை விட்டுவிட்டாள். அழுது கொண்டே இருந்தால் அவள் உடலில் உள்ள நீர்ச்சத்து போய் விடும் என்பதால் அழுகையை அடக்கிக் கொண்டாள். அவளது தலையே அவளுக்கு பாரமாக இருக்க சுற்றி முற்றி பார்த்தவள் லேசாக பின்னால் நகர்ந்து மரத்தில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.
பாதை மாறிச் சென்ற மாதவன் ஒரு இடத்தில் மங்கை மங்கை என்று கத்திக் கொண்டிருக்க அவளோ வேறு ஒரு இடத்தில் இருந்தாள். பாதை மாறி வந்தது கூட தெரியாமல் அந்த வனாந்தரத்தில் கத்திக் கொண்டிருந்தான் மாதவன். பாதுகாப்புக் கருவிகளோடு வந்த அவனுக்கே இப்படி என்றால் வனமங்கை என்ன ஆவாளோ என்று அவன் உள்ளம் நடுங்கியது.
“காலம் முழுக்க உன்னை கைக்குள் வச்சு தாங்கணும்னு நினைச்சேனே டி? ஆனா இப்படி ஆகிருச்சே? எங்க டி இருக்க?”, என்று அவன் கதற அவன் குரல் அவளுக்கு கேட்கவே இல்லை.
கையில் கட்டியிருந்த வாட்சில் மணியைப் பார்க்க அது பதினொண்ணறை என்று காட்டியது. ஒரு மணி வரை அந்த வனப் பகுதியிலே சுற்றியவனுக்கு அதன் பிறகு தான் பாதை மாறி விட்டோமோ என்ற சந்தேகமே வந்தது.
அந்த புல் தடத்தை நோக்கி ஓடினான்.
உச்சி வெயில் மண்டையை பிளந்தாலும் மரங்கள் அடர்ந்த காடு வனமங்கையை வெயிலில் வாட்ட வில்லை. அரை மயக்கத்தில் அவள் அமர்ந்திருக்க யாரோ இளைப்பது போல சத்தம் கேட்டது. உடலை அசைக்காமல் தலையை மட்டும் திருப்பி பார்த்தாள். அவளுக்கு சற்று தள்ளி நின்றிருந்த பெரிய யானையைக் கண்டு அவள் உச்சி முடி பயத்தில் நட்டுக் கொண்டது. அதைக் கண்டு அவள் மயங்கி விழாதது ஆச்சர்யம் தான்.
அதுவோ அவளையே பார்த்தது. வனமங்கைக்கு அதிர்ச்சி என்று சொன்னால் அது சாதாரணம். பேரதிர்ச்சி என்பது தான் சரியாக இருக்கும்.
ஏதாவது செய் என அவளது மூளை அவளுக்கு கட்டளை இட்டாலும் அவளது புலன்கள் அனைத்தும் அதைச் செய்ய முடியாமல் தளர்ந்து போய் இருந்தது. ஒற்றை யானையின் பலனை அவள் கேள்விப் பட்டிருக்கிறாள். கிட்டத் தட்ட மதம் பிடித்தது போன்று தான் செயல்படும்.
மற்றொரு யானையிடம் தோற்றுப் போய் தான் ஒற்றை யானை தனியே வரும். அப்படி இருக்க தோற்றுப் போன வலியில் கோபத்தின் உச்சத்தில் இருக்கும். அதை எதிர்க் கொண்டால் வனமங்கை காணாமல் போய் விடுவாள்.
சில நொடிகள் அதையே பார்த்த படி அசையாமல் இருந்தவள் லேசாக எழுந்து நின்றாள். அதுவும் அவளை நோக்கி சற்று அசைந்தது. அந்த நொடியில் மரண பயம் என்றால் என்ன என்று உணர்ந்தாள்.
அதனிடம் அகப்பட்டால் அவள் நிலை அவ்வளவு தான் என்று அவளுக்கு தெரியுமே. கால்களை அசைத்து அங்கிருந்து ஓட முயன்றாள். அது அவளை நெருங்க ஒரு அடி எடுத்து வைக்க அடுத்த நொடி பின்னங்கால் பிடறியில் பட அங்கிருந்து ஓடத் துவங்கினாள்.
ஓட்டம் என்றால் அப்படி ஒரு ஓட்டம். அதுவும் அவளை துரத்திக் கொண்டு வந்தது. எவ்வளவு தூரம் ஓடினாள் என்று அவளுக்கே தெரியாது. அப்போது ஒரு மிக பெரிய புதர் தெரிய அதற்குள் பதுங்கிக் கொண்டாள். சிறிது நேரம் அப்படியே அசையாமல் இருந்தாள். மோப்பம் பிடித்து விடுமோ என்று பயமாக இருந்தது.
ஆனால் விரட்டி வந்த யானையோ வேறு பாதையில் செல்ல தப்பித்தாள் வனமங்கை. ஆனால் அவளுக்கு அது தெரியாததால் அது வந்து விடுமோ என்று அவள் அப்படியே அசையாமல் அமர்ந்திருந்தாள். அப்போது அவள் இடையில் எதுவோ ஊர்வது போல இருக்க கையால் பிடித்து தூரத் தூக்கிப் போட்டாள்.
அது கொஞ்சம் பெரிய சைஸில் இருந்த புளு. கருமை நிறத்தில் நெலுநெலுவென்று நெளிந்து கொண்டிருந்தது. அதைக் கண்டு அருவருப்பும் குமட்டலும் சேர்ந்து கொள்ள அந்த இடத்திலே வாந்தி எடுத்தாள். அவள் கண்களில் கண்ணீர் அருவியாக பொழிந்தது.
அசையக் கூட முடியாமல் தளர்ந்து போய் தரையில் அமர்ந்தவளின் உதடுகள் “மாதவன்”, என்று அவன் பெயரை உச்சரித்தது. அவன் தன்னைக் காக்க வர மாட்டானா என்று எண்ணி அவளது கடை விழியோரம் கண்ணீர் வடிந்தது.
சிறிது நேரம் கழித்து அவள் காலில் எதுவோ ஏற மீண்டும் அந்த இடத்தில் இருந்து ஓடத் துவங்கினாள். என்ன ஏது என்று கூட பார்க்க வில்லை. வெட்டாந்தரையே இல்லாமல் எங்கே பார்த்தாலும் புற்களும் செடிகளும் மரங்களுமாக இருக்க அவளுக்கு வாழ்க்கையே வெறுத்துப் போனது.
“கடவுளே அவங்க என்னை கொண்டு வந்து இங்க விட்டதுக்கு கொன்னு போட்டுருக்கலாமே?”, என்று அவளால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.
ஒவ்வொரு நொடியும் உயிரோடு வதை பட்டுக் கொண்டிருக்கும் உணர்வை அடைந்தாள்.
“ஏன் எனக்கு இப்படி ஒரு நிலைமை?”, என்று அந்த கடவுளிடம் மனதால் உரையாடினாள்.
வனமங்கையை இறக்கி விட்ட இடத்துக்கு வந்து விட்டான் மாதவன். ஆனால் அவள் தான் அங்கே இல்லையே. யானை துரத்தியதில் எந்த பக்கம் ஓடினாள் என்று கூட அவளுக்கு தெரிய வில்லை. அந்த இடத்தைச் சுற்றி மங்கை மங்கை என்று கத்திய படி தேடத் துவங்கினான்.