கதிருக்கு தன் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் கொண்டு வருவது பெரும் போராட்டமாக இருந்தது. அவன் கண் மூடி தன்னைச் சமன்படுத்த முயன்றான். அப்போது கீழிருந்து லக்ஷ்மி அவர்களை அழைக்கும் குரல் கேட்க,
வேகமாக எழுந்த கதிர் முகம் கழுவி, வேறு உடை மாற்றியவன் “நான் கீழப் போறேன். நீ சீக்கிரம் ரெடியாகி வா சந்தியா…” என்று சொல்லி சென்றான்.
சந்தியாவும் அழுதது தெரியாமல் இருக்க, ஒரு குளியல் போட்டு. வேறு புடவை கட்டி பளிச்சென்று கீழே செல்ல. அவளை ஆசையாகப் பார்த்த லக்ஷ்மி, அவளுக்குத் தலை நிறையப் பூவை வைத்துவிட்டார். கதிரும், சந்தியாவும் ஒருவரை ஒருவர் பார்ப்பதை தவிர்த்தனர்.
சந்தியா எல்லோருக்கும் காபி கொண்டு வந்து கொடுக்க. ஹாலில் கதிர் அருகில் அமர்ந்திருந்த சுபாஷ் “என்ன மாப்பிள்ளை மாடியில கபடி விளையாண்ட சத்தம் கேட்டது….” என்று கிண்டலாகச் சிரிக்க,
தானும், சந்தியாவும் மாடியில் ஓடியதை தான் சொல்கிறார் என்று புரிந்த கதிர். புன்னகையை மட்டும் பதிலாகத் தர, சந்தியா வெட்கத்துடன் அங்கிருந்து நகர்ந்தாள். அதன்பிறகு கதிரும், சந்தியாவும் இயல்பாக இருந்தனர். மாலை சொந்த பந்தம் எல்லாம் ஒவ்வொருவராகக் கிளம்பி செல்ல. இரவு உணவிற்குக் குடும்பத்தார் மட்டுமே இருந்தனர்.
இரவு உணவுக்கு என்ன செய்வது என்று பேச்சு வந்த போது. “வீட்டுக்கு புதுசா வந்த மருமக தான் சமைக்கணும்...” என்று சுபாஷ் சொல்ல, சந்தியா அதிர்ந்தாள்.
பின்னே அவளுக்குச் சாப்பிட மட்டும் தான் தெரியும். அவள் வீட்டில் அம்மாவும், அப்பத்தாவுமே எல்லா வேலைகளையும் செய்வார்கள்.சந்தியா முழிப்பதை பார்த்து சிரித்த கதிர் “நீங்க தாங்குவீங்க மச்சான்...” என்றான் மொட்டையாக.
“ஹே! என்ன வச்சு காமெடி பண்றியா. மொட்டையா தாங்குவேன்னு சொன்னா எதுக்கு, என்ன தாங்குவேன்? அதைச் சொல்லு முதல்ல…” என்று சுபாஷ் கேட்க,
“ஹே! உன் பொண்டாட்டிய பத்தி பேசும் போது. என்னை எதுக்கு வம்பிழுக்கிற…?” என்று காவேரி சண்டைக்கு வர,
“ஆமாம் மாப்பிள்ளை பொதுவுல இப்படி உண்மையெல்லாம் சொல்லக்கூடாது. எதோ எங்க அம்மா இருக்கிறனதுனால என்பாடு ஓடுது…” என்று சுபாஷ் உண்மையைப் போட்டு உடைக்க,
“ஓ, இது தான் நீங்க நல்லா இருக்கக் காரணமா…” என்று கதிர் போலியாக வியக்க, அதைக் கேட்டு மற்றவர்கள் சிரிக்க, காவேரி சுபாஷை முறைத்தாள்.
குடும்பத்துடன் சேர்ந்து பேசி எல்லோரும் சந்தோஷமாக உணவு அருந்தினர். பெரியசாமிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மகன், மகளோடு புது வரவான மருமகன், மருமகள் மற்றும் பேரனையும் சேர்ந்து பார்ப்பத்தில் உண்டான மகிழ்ச்சி.
இரவு உணவிற்குப் பிறகு சந்தியாவின் தலையில் மேலும் கொஞ்சம் பூவை வைத்த லக்ஷ்மி அவள் கையில் பால் செம்பை கொடுத்து
“சீக்கிரம் நம்ம வீட்டுக்கு. பேரனோ, பேத்தியோ வரட்டும்...” என்று வாழ்த்தியவர், எதேட்சையாகத் திரும்பி பார்க்க. அங்கே கதிர் அவரைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தான்.
ஐயோ! இவன் இருக்கிறதை பார்க்காம வாய் விட்டுட்டோமே என்று நினைத்த லக்ஷ்மி வேகமாக அங்கிருந்து செல்ல. அதைப் பார்த்து சந்தியாவிற்குச் சிரிப்பு வந்தது கதிர் மாடி ஏற, சந்தியாவும் அவனைப் பின் தொடர்ந்து சென்றாள்.
அறைக்குள் வந்ததும், சந்தியா கதிரிடம் பாலை கொடுக்க. அதை வாங்கி ஒரு வாய் பருகியவனின் முகம் அஷ்ட்டகோணலாக. பாலை சந்தியாவிடம் நீட்டினான்.
எதுக்கு இப்படி மூஞ்சிய சுளிக்கிறாங்க என்று நினைத்த சந்தியா அதை வாங்கிக் குடிக்க. அது பால் போல் இல்லை. பாயசம் போல் இருந்தது. பாலோடு முந்திரி, பிஸ்தா இன்னும் என்னன்ன சேர்க்க முடியுமோ எல்லாவற்றையும் லக்ஷ்மி அதில் சேர்த்திருந்தார்.
“எங்க அம்மாவுக்கு இந்தப் பாலை குடிச்ச தெம்போட, நாம முதலிரவு கொண்டாடி, நாளைக்கே அவங்கக்கிட்ட புஷ்ட்டியா ஒரு பேரனை குடுத்திடம்னும்னு திட்டம். அது தான் இப்படி….” என்று கதிர் சிரிக்காமல் சொல்ல, அதைக் கேட்ட சந்தியா விழுந்து, விழுந்து சிரித்தாள்.
அவள் சிரிப்பதை பார்த்தபடியே கதிர் கையில் ஒரு தலையணையும், போர்வையையும் எடுத்தவன் “சரி நீ இங்க தூங்கு, நான் மாடிக்கு போறேன்...” என்றதும், முகம் மாறிய சந்தியா “நீங்களும் இங்கயே தூங்குங்க மாமா….” என்றாள்.
தன் தலைக்கு மேல் இரண்டு கைகளையும் தூக்கி கும்பிட்ட கதிர் “அம்மா! தாயே! ஆள விடு. பொண்டாட்டிய பக்கத்தில வச்சிக்கிட்டு ஒன்னும் பண்ணாம தூங்குற அளவுக்கு நான் நல்லவன் இல்லை.” என்று மேல் மாடிக்கு சென்று விட, சந்தியா கட்டிலில் தனியாகப் படுத்தாள்.
மறுநாள் காலை எழுந்த கதிர், சந்தியா இருவருமே அமைதியாக இருந்தனர். அதற்கு காரணம் இன்று இரவு அவர்கள் ஊருக்கு கிளம்புகின்றனர். அதோடு நாளை பிரிந்து அவரவர் பாதையில் செல்ல வேண்டுமே என்ற கவலை.
பதினோரு மணி போல் அவர்கள் அறைக்கு வந்த சந்தியா, கசகசப்பாக இருக்கிறது என்று அவள் நகைகளைக் கழட்டியவள்
அவள் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் “உனக்குத் தேவையான நகைய மட்டும் எடுத்துக்கிட்டு, மிச்சத்த உங்க வீட்லயே குடுத்திட்டு வான்னு சொன்னேனே…” என்றான் கதிர். அவள் அணிந்திருந்த அதிகபடியான நகைகளைப் பார்த்து.
“ஆமாம் சொன்னீங்க தான். ஆனா, அம்மா தான் மறு வீட்டுக்கு போகும் போது எல்லாத்தையும் தான் எடுத்துக்கிட்டு போகணும்னு சொன்னாங்க.” என்றாள் சந்தியா.
“அப்ப நான் சொன்னதுக்கு மதிப்பு இல்லை. நான் அவ்வளவு சொன்ன பிறகும், நீ எல்லா நகையையும் எடுத்துட்டு வந்திருக்க. ஏற்கனவே உங்க அப்பா என்னை மதிக்க மாட்டேங்கிறார். இனி உன் நகைக்காகத் தான் உன்னைக் கல்யாணம் பண்ணினேன்னு சொன்னாலும் சொல்லுவார்…” என்று கதிர் கோபமாகப் பேச,
“ஏன் மாமா நீங்களா கற்பனை பண்ணிட்டு பேசுறீங்க. அப்பா அப்படியெல்லாம் நினைக்க மாட்டார்.” என்று சந்தியா தன் தந்தைக்குப் பரிந்து பேசியதும், கதிரின் கோபம் எல்லையைக் கடந்தது.
“உங்க அப்பாவை பத்தி தான் பேசுற…” என்று சந்தேகமாகக் கேட்டவன் தொடர்ந்து
“ஆமாம், அவர் ரொம்ப நல்லவர். நான் தான் கெட்டவன். என்னை உங்க அப்பாவுக்குச் சின்ன வயசில இருந்து தெரியும். நானும், நீயும் ஒரே ஊர்ல தான் இருந்தோம், எத்தனை தடவை நான் உன் பின்னாடி சுத்துறத உங்க அப்பா பார்த்தார். என்னைப் பத்தி நல்லா தெரிஞ்சிருந்தும், என்னை எதோ பொம்பளை பின்னாடி சுத்துறவன் மாதிரி உங்க அப்பா பேசலை. சரி கல்யாணம் நிச்சயம் ஆன பிறகாவது சும்மா இருந்தாரா.
வேணும்னே என்னை மண்டப வாசல்ல வச்சு அவமானப்படுத்தல. என் பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு. அவர் என்னை அலட்சியபடுத்தின போது எல்லாம். போய்யா நீயும் வேண்டாம், உன் பொண்ணும் வேண்டாம்னு தான் நினைப்பேன். ஆனா உன்னை விட முடியலை. அதோட உன் இடத்தில வேற எந்தப் பெண்ணையும் என்னால நினைக்க முடியலை. அதனால தான் அவர் செஞ்ச அவமானத்தை எல்லாம் பொறுத்துக்கிட்டேன். ஆனா நான் இனியும் அப்படியிருப்பேன்னு எதிர்பார்க்காத….”
“நான் அவர் மேல ரொம்ப மரியாதை வச்சிருந்தேன். ஆனா அதை அவர் காப்பாத்தல. இனி அவரா தன் தவறை உணர்ந்து வராம, நான் உங்க வீட்டு வாசப்படி மிதிக்க மாட்டேன். நான் நேத்தே உங்க வீட்டுக்கு வந்திருக்க மாட்டேன் தான். ஆனா, சொந்த, பந்தம் முன்னாடி எனக்கு அவரை விட்டு கொடுக்க மனசு வரலை. இனி நீ தான் புரிஞ்சு நடந்துக்கணும் சந்தியா…” என்ற கதிர் அந்த அறையை விட்டு வெளியே செல்ல, சந்தியாவுக்கு எதோ புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது. கதிருக்கும், துரைக்கும் இடையே நடக்கும் போரில் மத்தளம் போல் இரண்டு பக்கமும் அடிவாங்குவது சந்தியா தான்.
மதிய உணவு முடிந்ததும் அறைக்கு வந்த கதிர் அங்கே சந்தியா தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருப்பதைப் பார்த்தவன் “நீ உங்க வீட்டுக்கு போகலை…” என்றான் சாதாரணமாக.
“எப்படிப் போறது. கல்யாணம் ஆன ரெண்டாவது நாளே தனியா வந்தா என்ன நினைப்பாங்க…?” என்ற சந்தியா கண் கலங்க.
“சரி வா நான் உன்னை உங்க வீட்ல விடுறேன். ஆனா உள்ள எல்லாம் வர மாட்டேன்.” என்று கதிர் சொன்னது, சந்தியாவுக்குக் கோபத்தை வரவழைத்தாலும் வேறு வழியில்லாமல் அவனுடன் சென்றாள்.
அவள் வீட்டுக்குச் செல்வதற்கு முன் பெரியசாமியிடம் சென்ற சந்தியா “கதிர் மாமா நகைகளை எங்க வீட்ல வைக்கச் சொல்றாங்க மாமா. நான் எங்க வைக்கட்டும்…?” என்று அவரிடமும் ஒரு தடவை கேட்க,
“அவன் சொல்றதும் சரி தான் மா. எனக்கும் உடம்பு முடியலை. நகையைப் பத்திரமா பாதுகாக்க எல்லாம் முடியாது. நீ உங்க வீட்லயே வச்சுக்க….” என்று பெரியசாமியும் சொல்லிவிட, சந்தியா நகைகளை எடுத்துக்கொண்டு கதிருடன் சென்றாள்.
அவளை வாசலில் இறக்கி விட்ட கதிர் “திரும்ப வரும் போது. உங்க அம்மாவோட வந்திடு...” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.
சாப்பிட்டு விட்டு சந்தியாவைப் பார்க்க போவோமா. அவள் இங்கு வருவாளா என்று யோசித்துக்கொண்டிருந்த வேதவல்லி சந்தியாவே வந்ததும் சந்தோஷமாக வரவேற்றார்.சந்தியா மட்டும் தனியாக வருவதைப் பார்த்து “எங்க,மா உன் மாப்பிள்ளை கூட வரலை…” என்று அப்பத்தா கேட்க,
“வந்தாங்க அப்பத்தா… அவங்க தான் கொண்டு வந்து விட்டாங்க. எதோ வெளிய போற வேலை இருக்குன்னு போயிட்டாங்க.” என்று சந்தியா சமாளிக்க, அதை யாரும் நம்பவில்லை. வேதவல்லி துரையைக் குற்றம் சாட்டும் பார்வை பார்த்தார்.
சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த சந்தியா தன் கைப்பையில் வைத்திருந்த நகைகளை எடுத்து கொடுக்க “இதை ஏன் இங்க கொண்டு வந்த…?” என்று வேதவல்லி அதிர்ச்சியடைய,
“இல்லம்மா. நான் இன்னைக்குச் சென்னைக்குப் போறேன். காலேஜ்க்குக் கொண்டு போக முடியாது இல்ல. அதனால் தான் பெரிய மாமாவும், கதிர் மாமாவும் நம்ம வீட்லயே வச்சுக்கச் சொன்னாங்க.” என்று சந்தியா தயங்கி, தயங்கி சொல்ல,
“கல்யாணத்துக்குப் பாத்திரம், பண்டம் எதுவும் வாங்க வேண்டாம், பின்னால பார்த்துக்கலாம்னு சொன்னாங்க. இப்ப போட்ட நகையையும் திருப்பித் தந்தா இங்க மட்டும் வேற யாரு இருக்கா. ஒத்த பெண்ணைப் பெத்து வச்சிக்கிட்டு, அதுக்குச் சீர் செய்யக் கூட முடியாத அளவு, நாங்க வக்கத்து போயிட்டோமா…” என்று வேதவல்லி சொல்லி அழ,
“அப்படி இல்லம்மா. என்னை இந்த நகைய போட்டுக்க வேண்டாம்னு யாரும் சொல்லலை. நான் இங்க வரும் போது போட்டுக்கிறேன் சரியா….” என்று சந்தியா சமாதானம் செய்தாள்.
“உன் மகளுக்கு எப்பவும் அப்பன் வீட்டை விட. மாமன் வீடு தான் உசத்தி. அவ அவங்களுக்குத் தான் பரிந்து பேசுவா…” என்று துரை கிண்டலாகச் சொல்ல,
துரையின் பேச்சில் கோபம் கொண்ட சந்தியா “ஆமாம் அப்படித் தான் வச்சுக்கோங்க. நீங்க என்னை வீட்டை விட்டு போன்னு கழுத்தை பிடிச்சு தள்ளின போது. எனக்குக் கல்யாணம் பண்ணி போறதுக்கு மாமா வீடு இருந்துச்சு. ஆனா மாமா இனி என்னை வேண்டாம்னு தள்ளினா. நான் எங்க போறது…? அதனால நான் என் புருஷனுக்குத் தான் பரிந்து பேசுவேன்.” என்றாள் பதிலுக்கு ஆத்திரமும் அழுகையுமாக.
அவள் பேச்சு எல்லோருக்கும் வருத்தத்தைத் தந்தது. “அப்படியெல்லாம் பேசக் கூடாது. இது எப்பவும் உன் வீடு தான். நீ நம்ம வீட்டுக்கு வந்து போய் இருக்கணும்...” என்று சந்தியாவிடம் சொன்ன அப்பத்தா
“என்ன வீட்டுக்கு வந்த பிள்ளைக்குச் சாப்பிட ஒன்னும் கொடுக்காம உட்கார்ந்திருக்க…” என்று தன் மருமகளையும் அதட்டினார்.
வேதவல்லி எழுந்து சென்று சந்தியாவிற்குப் பலகாரம் செய்தவர். அதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, அதோடு சந்தியா கொடுத்த நகையில் பாதியையும் எடுத்துக்கொண்டு, அவளையும் அழைத்துக்கொண்டு தன் அண்ணன் வீடு நோக்கி சென்றார்.