மூன்று நாட்கள் கழித்து குச்சியை அவர்கள் வீட்டில் விடச் சென்றார்கள் வனமங்கையும் மாதவனும். குச்சியை வீட்டில் விட்டுவிட்டு தேனப்பனிடமும் சொல்லி விட்டு வைத்தியரைக் காணச் சென்றார்கள்.
அவரும் அவர்களை புன்னகையுடன் வழி அனுப்ப கிளம்பும் முன் அவர் கையில் ஒரு பையைக் கொடுத்தான் மாதவன்.
“என்ன தம்பி இது?”, என்று வியப்பாக கேட்டார் வைத்தியர்.
“இது உரம். நீங்க அன்னைக்கு கேட்டீங்கல்ல? அந்த மூலிகை அந்த ஆத்தோரம் மட்டும் தான் வளருதுன்னு. அதுக்கு தீர்வு தான் இது. நீங்க இந்த மண்ணுல இந்த உரத்தைக் கலந்து அந்த மூலிகையை நட்டு வச்சுப் பாருங்க. ஏன்னா ஒவ்வொரு நாளும் நீங்க அங்க போய் அலைய முடியாதுல்ல? வளருதான்னு பாருங்க. அப்படி இல்லைன்னா அடுத்த முயற்சி எடுப்போம். அது வரைக்கும் வெற்றி உங்களுக்கு மூலிகை பறிச்சு தருவார்”, என்றதும் ஏதோ மிகப் பெரிய சொத்து கிடைத்தது போல அவர் முகம் மலர்ந்து போனது.
“ஐயா, நீங்க செஞ்சதை விட பெரிய உதவியை நான் செய்யலை. எங்களால உங்களையும் ஊரை விட்டுத் தள்ளி வச்சிட்டாங்களே? அதை நினைச்சா தான் கஷ்டமா இருக்கு”
“அட போங்க தம்பி நீங்க வேற? நேத்து ராத்திரி ஏழு மணிக்கு பாம்பு கடிச்சதுன்னு தூக்கிட்டு வந்தாங்க. வந்தது யாருன்னு நினைச்சீங்க? ஊர்த் தலைவரே தான். நான் வைத்தியம் பாக்க மாட்டேனு சொல்ல அவங்க சொன்னதையே மறந்து என் காலுல விழுந்து கெஞ்சி யாரையும் ஊரை விட்டுத் தள்ளி வைக்கலைன்னு சொன்னாங்க. அப்புறம் தான் உசுரையே காப்பாத்தினேன். நேத்தே தேனப்பனை இங்க வரச் சொல்லி கூப்பிட்டேன். கொஞ்ச நாள் கழிச்சு வறேன்னு சொல்லிட்டார். குச்சிக்கு மட்டும் ஏதாவது வாழ ஏற்பாடு பண்ணச் சொன்னார். நாளைல இருந்து குச்சிக்கு சித்த மருத்துவம் சொல்லிக் கொடுக்க போறேன். எனக்கு பிறகு இந்த கலைகள் அழியக் கூடாது பாருங்க”, என்று அவர் சொன்னதும் நிம்மதியுடன் அங்கிருந்து கிளம்பினார்கள்.
பின் வீட்டுக்கு வந்து பேகை எடுத்துக் கொண்டு கிளம்பும் போது தான் வனமங்கையின் உடையைப் பார்த்தான். இப்படியே போனால் ஊரில் அனைவரும் அவளை காட்சிப் பொருளாக ஆகுவார்கள் என்பதால் “ஒரு நிமிஷம் இரு இதோ வரேன்”, என்றான்.
“என்ன ஆச்சுங்க?”
“உன் கெட்டப்பை மாத்தணும்”
“அப்படின்னா?”
“நீ சேலை கட்டிருக்குறதை மாத்தணும். ஊர்ல இருக்குறவங்க ஒரு மாதிரி பாப்பாங்க. ஏய் என்ன முகம் ஒரு மாதிரி போகுது? பாப்பாங்கன்னு தான் சொன்னேன். நீ அழகா இல்லைன்னு சொல்லவே இல்லை. ஒரு நிமிஷம் இரு. நான் சேலை கட்ட யாரையாவது கூட்டிட்டு வரேன்”
“யாரோ, அவங்களே கட்டி விடுவேன்னு அன்னைக்குச் சொன்னாங்க?”, என்று அவள் எங்கோ பார்த்துக் கொண்டு சொல்ல “ஏய் நீ இப்படி எல்லாம் பேசுவியா டி?”, என்று கண்கள் மின்னக் கேட்டான்.
“உங்க கிட்ட மட்டும் தான் இப்படி பேசத் தோணுது”, என்று அவள் வெட்கத்துடன் முணுமுணுக்க “எனக்கும் அது தான் டி வேணும். ஆனா கல்யாணம் வரைக்கும் உன் கிட்ட இருந்து தள்ளி இருக்கணும்னு நினைக்கிறேன். ஒரு வித விரதம்னு வச்சிக்கோயேன். இப்ப நான் கட்டி விட ஆரம்பிச்சு ஏதாவது ஆச்சுன்னா அவ்வளவு தான். இரு நான் வேற ஆளையே கூட்டிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டுச் சென்றான்.
அவன் வீட்டை விட்டு வெளியே வரும் போது மரத்தடியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள் வெண்ணிலா. அவளைக் கண்டவன் “போயும் போயும் இவ கிட்ட உதவி கேக்கணுமா? அதுக்கு நானே கட்டி விட்டுருவேன். இப்ப என்ன பண்ண?”, என்று அவன் எண்ணும் போதே அங்கே வந்தனா வந்தாள்.
அவளைக் கண்டதும் “வந்தனா”, என்று அழைத்தான்.
“என்னண்ணா?”
“ஒரு நிமிஷம் இங்க வந்துட்டு போ மா”
“இதோ வரேன். ஏதாவது செய்யணுமா அண்ணா?”
“வனமங்கைக்கு நம்ம சைட் சேலை கட்டுற மாதிரி கட்டி விடுறியா? ஊருக்கு கிளம்பனும். பிளீஸ்”
“இவ்வளவு தானா? செய்னா செய்யப் போறேன். இதுக்கு எதுக்கு பிளீஸ் எல்லாம் கேக்குறீங்க அண்ணா? நான் பாத்துக்குறேன்”
“அந்த கவர்ல இருக்குறதுலே நல்ல புடவையா எடுத்து கட்டி விடு மா”
“நீங்க கவலையே படாதீங்க. அண்ணியை இன்னும் அழகா காட்ட வேண்டியது என்னோட பொறுப்பு”, என்றதும் சிரித்தவன் வெண்ணிலா முன்பு நிற்க மனதில்லாமல் அன்னம்மாவிடம் சென்று பேசிக் கொண்டிருந்தான்.
உள்ளே வந்த வந்தனாவைக் கண்டு திகைத்தாள் வனமங்கை. ஆனால் “அண்ணி, உங்களை சூப்பரா கிளப்பி விடணும்னு அண்ணா ஆர்டர் பண்ணிருக்காங்க. வாங்க கிளம்பலாம்”, என்று வந்தனா சாதாரணமாக பேச வனமங்கையும் அவளைக் கண்டு புன்னகைத்தாள்.
“அண்ணா, அண்ணியை சூப்பரா கிளப்பி விட்டுட்டேன். வாங்க வந்து பாருங்க”, என்று வந்தனா சத்தம் கொடுக்க ஆவலுடன் வந்த மாதவன் அவள் தோற்றத்தில் மெய் மறந்து நின்று விட்டான்.
அவன் பார்வை அவளையே முழுங்குவதைப் போல இருக்க அவளுக்கு தான் வெட்கமாக இருந்தது. “ஐயோ என்ன இவங்க எல்லார் முன்னாடியும் இப்படி பாக்குறாங்க?”, என்று திணறிப் போனாள் வனமங்கை.
“அண்ணா, நாங்களும் இங்க தான் இருக்கோம். கொஞ்சம் கண்ணை இந்த பக்கமும் நகர்த்துங்க”, என்று வந்தனா சிரிக்க அசடு வழிந்தான் மாதவன்.
“தேங்க்ஸ் மா, ரொம்ப அழகா இருக்கா”
“அவங்க எப்படி இருந்தாலும் நீங்க அப்படி தான் சொல்லுவீங்க. ஆனா உண்மையிலே அண்ணி ரொம்ப அழகு. ஊருக்கு போனதும் திஷ்டி சுத்திப் போடுங்க. நாங்க எல்லாம் மணிக்கணக்கா மேக்கப் போட்டாலும் இவ்வளவு அழகா இருக்க மாட்டோம்”
“அதெல்லாம் நீயும் அழகு தான் வந்தனா. அவ ஒரு மாதிரி அழகுன்னா நீ வேற மாதிரி அழகு”
“ஐஸ் வைக்காதீங்க அண்ணா, ஐஸ் வாங்கித் தாங்க”
“கல்யாணத்துக்கு வா, டிரீட்டே வச்சிறேன்”
“வீட்ல கேக்குறேன் அண்ணா”
“சரி மா கிளம்புறோம்”, என்றவன் அங்கிருந்த அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினான். ஆனால் வெண்ணிலா புறம் மட்டும் அவன் திரும்பவே இல்லை. வனமங்கை தான் அனைத்தையும் மறந்து “போயிட்டு வரேன்”, என்று வெண்ணிலாவிடம் சொன்னாள். அவள் அப்படிச் சொன்னதில் வெண்ணிலாவுக்கு குற்ற உணர்வாக இருந்தது. அவளைக் காயப் படுத்திய வெண்ணிலாவை மன்னிக்கும் வனமங்கையின் குணத்தைக் கண்டு வியந்தாள்.
அன்னம்மா இருவரையும் ஆசீர்வதிக்க மற்ற நண்பர்கள் அனைவரும் சேர்ந்து அவர்களுக்கு கிஃப்ட் வாங்கிக் கொடுத்தார்கள். பின் வெற்றி ஜீப்பை எடுக்க இருவரும் அதில் ஏறிக் கொண்டார்கள். பஸ் ஸ்டாண்ட் வந்ததும் வெற்றியின் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்ட மாதவன் மனதார அவனுக்கு நன்றி சொன்னான்.
“விடுங்க சார், உங்க குணத்துக்கு நான் செஞ்சதெல்லாம் கொஞ்சம் தான்”, என்றான் வெற்றி.
“கல்யாணத்துக்கு வாங்க வெற்றி”
“வர முடியுதான்னு பாக்குறேன் சார். ஆனா கண்டிப்பா அப்ப அப்ப கால் பண்ணுறேன் சார். பிரியா இருக்கும் போது பேசுங்க. தங்கச்சி, சார் கூட நீ சந்தோஷமா இருக்கணும் மா. மிகப் பெரிய கண்டத்துல இருந்து தப்பிச்சிருக்க. நீ உனக்கு ஒண்ணும் வராது. அப்புறம் சார், அம்மாவைக் கேட்டதா சொல்லுங்க”, என்று விடை கொடுத்தான் .
பஸ்ஸில் ஏறி அமர்ந்ததும் வனமங்கை மீண்டும் அவன் வீட்டை எண்ணி பயப்பட “உன்னை எங்க அம்மா திட்டுறாங்களா, கொஞ்சுறாங்களான்னு நேர்ல பாத்து தெரிஞ்சிக்கோ”, என்று சொல்லி விட்டான் .
அதிகாலையில் அவர்கள் சென்று இறங்கிய போது அவர்களை அழைக்க கிருஷ்ணன் வந்திருந்தான். “இது தான் என்னோட மாமா”, என்று சொல்லி வனமங்கைக்கு அறிமுகப் படுத்தி வைத்தான்.
“நல்லா இருக்கியா மா? நடந்ததை எல்லாம் கேள்விப் பட்டேன். இனி உனக்கு எந்த குறையும் வராது”, என்று சொல்லி கிருஷ்ணன் சிரிக்க அவனை உடனே வனமங்கைக்கு பிடித்து விட்டது. குச்சி மீது எந்த அளவு பாசம் வைத்திருந்தாளோ அதே போல சகோதரப் பாசம் அவன் மீதும் எழுந்தது.
காரில் போகும் போது “கல்யாணம் என்னைக்கு மாமா?”, என்று கேட்டான் மாதவன். ,
“நாளான்னைக்கு காலைலே ஏழு மணிக்கு மாப்பிள்ளை. அன்னைக்கு தான் நல்ல நேரம் இருக்குனு சொல்லிட்டாங்க. இப்ப நேரா உங்க பெரியப்பா வீட்டுக்கு தான் போறோம். கல்யாணம் முடிஞ்ச பிறகு தான் தங்கச்சி நம்ம வீட்டுக்கு வரும். அது வரைக்கும் அங்க அங்க தான் இருக்கணுமாம்”, என்று சொல்ல மாதவனை பயத்துடன் பார்த்தாள் வனமங்கை.
அவன் ஆறுதலாக அவள் கையை அழுத்திக் கொடுக்க “பயப்படாத மா. இணைக்கும் நாளைக்கும் தான். அப்புறம் நம்ம வீட்டுக்கு வந்துரலாம். அங்கயும் நம்ம ஆட்கள் தான் இருப்பாங்க”, என்று கிருஷ்ணன் சொல்ல கொஞ்சம் தெளிந்தாள். இருந்தாலும் அவள் பயம் முழுவதுமாக நீங்க வில்லை. புது இடத்தில் மாதவனும் இல்லாமல் எப்படி சமாளிப்போம் என்று அவளுக்கு பயமாக இருந்தது.
சொன்னது போல அவனுடைய பெரியப்பா வீட்டுக்கு தான் சென்றார்கள். அவள் பக்கம் கார் கதவை திறந்தது கீதாவே தான். இறங்கிய வனமங்கை கீதாவை பயப் பார்வை பார்க்க “எப்படி இருக்க மா? உள்ள வா”, என்று அழைத்தாள். கீதா அவளை கொஞ்சவும் இல்லை. அதே நேரம் திட்டவும் இல்லை. அவள் என்ன நினைக்கிறாள் என்று வனமங்கைக்கு தெரியவில்லை. அதனால் “நல்லா இருக்கேன்”, என்று சொல்லி கொண்டு மாதவனை மறந்து கீதாவின் பின்னே சென்றாள்.
போகும் அவளையே அவன் பார்த்த படி இருக்க “என்ன மாப்பிள்ளை தங்கச்சி அத்தையைப் பாத்ததும் உன்னைக் கண்டுக்காம போகுது?”, என்று கேட்டான் கிருஷ்ணன்.
“அம்மா என்ன சொல்வாங்களோன்னு பயந்துட்டே இருந்தா அதான் அவங்களைப் பாத்ததும் அவ எல்லாரையுமே மறந்துட்டா. சரி மாம்ஸ் அவளைக் கொஞ்சம் பாத்துக்கோங்க”
“உள்ள வா மாப்பிள்ளை. அப்புறமா அங்க போகலாம். உன் அக்கா இங்க தான் இருக்கா”
“என்னது அக்கா இங்க இருக்காளா?”
“ஆமா, பின்ன வனமங்கையை இங்க தனியாவா விட முடியும்? அத்தை நம்ம கூட வந்துருவாங்க. அதனால வனிதா இங்க அவளுக்கு துணையா இருப்பா”
“அக்கா இருந்தா சந்தோஷம் தான்”
“சரி சரி வாங்க. என் சிங்க குட்டியை பாத்துட்டு அங்க போகலாம்”, என்று சொல்ல அக்கா மகனைக் காண ஆர்வமாகவே உள்ளே சென்றான்.