இந்நேரம் சந்தியாவின் திருமணம் பற்றி நிறையப் பேருக்குத் தெரிந்திருக்கும். யார் என்ன கேட்க போகிறார்களோ என்று நினைத்தபடி சந்தியா தன் அறைக்குச் சென்றாள்.சந்தியாவைப் பார்த்ததும் அனு தன் மகிழ்ச்சியை வெளிபடுத்தினாள். சிறிது நேரம் அனுவுடன் பேசிவிட்டுச் சந்தியா கல்லூரிக்குக் கிளம்பத் தயாரானாள். ரயிலில் ஏறியதும் கதிர் சந்தியாவிற்கு அழைத்துச் சொன்னான். அதிகம் பேசவில்லை. திரும்ப இரவு அழைப்பதாகச் சொல்லி வைத்துவிட்டான்.
காலை உணவு அருந்த சென்ற சந்தியாவைப் பார்த்ததும், அவள் விடுதி தோழிகள் ஒரே கேலியும், கிண்டலும் தான். சந்தியாவிற்கு எதைப் பற்றியும் யோசிக்கவே நேரம் இல்லை. கல்யாணத்தைப் பற்றி விசாரித்தவர்களுக்குப் பதில் சொல்லி விட்டு கல்லூரிக்குக் கிளம்பி சென்றாள்.
கல்லூரி திறந்து பத்து நாட்கள் ஆகியிருந்ததால். நடத்தியிருந்த பாடங்களைப் பற்றிச் சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது. சந்தியா அனுவுடன் கல்லூரி பாடங்களைப் பற்றிப் பேசியபடி வர, அவள் எதிரில் புன்னகையுடன் சித்தார்த் வந்து நின்றான். சித்தார்த்தை பார்த்ததும் சந்தியாவின் முகமும் மலர்ந்தது. அனு முன்னே வகுப்புக்கு சென்றுவிட்டாள்.
“ஹாய் கல்யாணப் பொண்ணு. எப்படி இருக்க…?” என்று சித்தார்த் சந்தியாவிற்குக் கை கொடுக்க,
அவன் கையைப் பற்றிக் குலுக்கிய சந்தியா “நீயே சொல்லு எப்படி இருக்கேன்…?” என்றாள் பதிலுக்கு.
சித்தார்த் அவளை நன்றாகப் பார்த்தான். காட்டன் சுடிதாரில், நெற்றி வகுட்டில் சிறிதாகக் குங்குமம் வைத்து, இன்னும் அவள் முகம் கல்யாணக் களை மாறாமல் இருந்தது. அதையே அவளிடம் சொன்னவன் “எப்படி உங்க மாமாவை விட்டுட்டு வந்த…?” என்றான் அடுத்தக் கேள்வியாக.
“வேண்டாம் சித்தார்த் இப்ப அவங்களைப் பத்தி எதுவும் ஆரம்பிக்காத. பிறகு நான் இப்படியே பெங்களூர் கிளம்பிப் போனாலும் போய்டுவேன். நான் காலேஜ் வராத போது நடத்தினது எல்லாம் நீ தான் சொல்லித்தரனும். வா…” என்று அவனை அழைத்துக்கொண்டு அவள் வகுப்பு நோக்கிச் சென்றாள்.
செல்லும் வழியில் சித்தார்த் “சந்தியா நான் உன் கல்யாணத்துக்கு வந்துட்டு. மீனாட்சி அம்மன் கோவில் போனேன் தெரியும் இல்ல. அங்க உன்னை மாதிரியே ஒரு பெண்ணைப் பார்த்தேன்.” என்றதும். சந்தோஷப்பட்ட சந்தியா “உண்மையாவா. என்னை மாதிரியே இருந்தாளா…” என்று ஆர்வமாகக் கேட்க,
“உன்னை விட அழகா இருந்தா….” என்றான் சித்தார்த் வீம்புக்கு.
அவனைப் பார்த்து முறைத்த சந்தியா “நான் ஒன்னும் அழகுன்னு சொல்லிக்கிட்டது இல்ல. நீ தானடா என்னை மாதிரி இருந்தான்னு சொன்ன. அது தான் கேட்டேன்.” என்றாள்.
“ஹே கோவிக்காத சந்தியா. சும்மா உன்னை வம்பிழுக்கச் சொன்னேன். அந்தப் பொண்ணு உன்னை மாதிரின்னா, அவளும் உன்னை மாதிரியே வாயத் திறந்தா மூட மாட்டேங்கிறா. அதைச் சொன்னேன். பக்கத்தில இருந்த பெண்ணோட பேசிக்கிட்டே கோவில் வந்தவ, கோவிலை விட்டு வெளிய போற வரை ஒரே பேச்சு தான். சுத்தி யாரையும் பார்க்கலை. என் கடமை பேசுவதே அப்படிங்கிற மாதிரி ஒரே பேச்சு தான்.”
“ஓ! நீ சைட் அடிக்கிறத அவ கண்டுக்கலையாக்கும். உனக்கு அந்தக் காண்டு…” என்று சந்தியா சரியாகச் சொல்லிவிட, சித்தார்த் அசடு வழிந்தான்.
“யாருடா அந்தப் பொண்ணு…? நீ இவ்வளவு கவனிச்சு பார்த்திருக்கேன்னா உனக்குப் பிடிக்காமயா பார்த்திருப்ப…”
“ஹே நீ பாட்டுக்கு கற்பனைய வளர்த்துக்காத. அவ உண்மையிலேயே உன்னை மாதிரி தான் இருந்தா. அதனால தான் அவளைக் கவனிச்சுப் பார்த்தேன். வேற ஒன்னும் இல்லை…” என்று சித்தார்த் மழுப்ப, சந்தியா அவனை நம்பாமல் பார்த்தாள்.
சந்தியா தன்னையே பார்ப்பதை உணர்ந்த சித்தார்த் “I like her போதுமா. ஆனா யாருன்னு தெரியலை. நான் கோவில்ல இருந்து வெளிய வந்து பார்த்த போது. அவ எந்தப் பக்கம் போனான்னு தெரியலை….” என்றான்.
“அனு, ஸ்ரீஜாவுக்குவாவது அந்தப் பெண்ணைக் காட்டினியா…” அவர்களைக் கேட்டால், அந்தப் பெண்ணைப் பற்றி விவரம் எதுவும் தெரிய வருமா என்ற எண்ணத்தில் சந்தியா கேட்க,
“என்னடா பிடிச்சிருக்குன்னு சொல்ற. ஆனா யாருன்னு தெரியலை…” என்று சந்தியா வருந்த,
“ஹே நோ பீலிங்க்ஸ். லைக்னு தான் சொன்னேன் லவ்னு சொல்லலை. விட்டுட்டு…” என்று சந்தியாவைச் சமாதனம் செய்யச் சொன்னானா இல்லை, தன்னையே சமாதானம் செய்து கொண்டானோ தெரியவில்லை.
மதிய இடைவேளை வரை தொடர்ந்து வகுப்புகள் இருந்ததால். களைத்துப் போய்ச் சந்தியா சாப்பிட அமர்ந்தாள். உணவருந்தி முடித்ததும் மற்ற நண்பர்கள் சென்று விட, சந்தியா, சித்தார்த், அனு மற்றும் ஸ்ரீஜா அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
சந்தியா பாடத்தில் எதோ சந்தேகம் கேட்க, சித்தார்த் அதைப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது சந்தியாவை மெதுவாகச் சுரண்டிய அனு அவள் திரும்பியதும் “என்ன நடந்துடுச்சா…?” என்று கிசுகிசுப்பாகக் கேட்க, சந்தியாவிற்கு ஒன்றும் புரியவில்லை.
அவள் “என்னது…?” என்று புரியாமல் கேட்க, தலையில் அடித்துக்கொண்ட அனு, சந்தியாவை அவள் அருகில் அழைக்க, ஸ்ரீஜாவும் நெருங்கி அமர்ந்தாள்.
“அது தான்டி அது நடந்துச்சா…” என்று அனு கண் சிமிட்டி கேட்க, சந்தியாவிற்கு அந்த அது எது என்று தெரியாமல் கோபம் வர,
அனு தலையில் கைவைத்துக் கொண்டு அமர்ந்து விட “அது தான்கா ஃபர்ஸ்ட் நைட், அது நடந்துடுச்சான்னு கேட்கிறாங்க. இல்ல அனு அக்கா….” என்று ஸ்ரீஜா பட்டென்று போட்டு உடைத்து விட, அதைக் கேட்டு சந்தியாவின் முகம் உடனே சிவந்தது.
சித்தார்த் காதில் விழுந்து விட்டதோ என்று பதற்றத்துடன் சந்தியா அவனைப் பார்க்க, அவன் புத்தகத்திலேயே கவனமாக இருந்தான்.சந்தியா ஹப்பாடா! என்று நிம்மதி பெருமூச்சு விட்டவள் திரும்பி அனுவையும், ஸ்ரீஜாவையும் பார்த்து முறைக்க, அவர்கள் இருவரும் சாரி என்றனர்.
அவர்கள் பேசியது சித்தார்த் காதில் விழத்தான் செய்தது. அதனால் மேலும் அங்கிருந்து சந்தியாவைச் சங்கடப்படுத்தாமல் “நீங்க பேசிட்டு வாங்க. நான் க்ளாஸ் போறேன்…” என்று கிளம்பிவிட்டான்.
சித்தார்த் சென்றதும் அனு மேலும் சந்தியாவை விசாரணை செய்ய “ஒன்னும் நடக்கலை போதுமா…” என்று சந்தியா சொன்னதை நம்பாமல். அனு மேலும் நோண்ட, பொறுக்க முடியாத சந்தியா அங்கிருந்து எழுந்து ஓடி விட்டாள்.
அப்போது அவளுக்குத் தெரியவில்லை, அனு கேட்டது எல்லாம் ஒன்றுமே இல்லை. இனி தான் கேட்க வேண்டியது நிறையஇருக்கும் என்று. கதிர் ஒரு மணி போல் தன் நண்பர்களுடன் தங்கி இருக்கும் வீட்டிற்கு வந்தவன், குளித்து வெளியில் சென்று சாப்பிட்டு விட்டு அங்கிருந்தே அலுவலகமும் சென்று விட்டான்.
சந்தியாவிற்கு இப்போது வகுப்பு நேரம் என்பதால், தான் வந்து சேர்ந்ததைப் பற்றி அவளுக்குக் கைப்பேசியில் தகவல் மட்டும் அனுப்பிவிட்டு. அவன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தான். மாலை ஹாஸ்டல் வந்த சந்தியாவை அங்குத் தங்கியிருக்கும் மற்ற பெண்கள் கேலியும், கிண்டலும் செய்ய, சந்தியாவும் புன்னகையுடன் அமர்ந்திருந்தாள்.
சற்று நேரம் சென்று அவர்கள் பேச்சு எல்லை மீற ஆரம்பிப்பது போல் இருந்ததும், சந்தியா அங்கிருந்து எதோ ஒரு காரணம் சொல்லிவிட்டு நகர்ந்து விட்டாள்.அவளுக்குத் திருமணம் ஆனது கொஞ்சம் பேருக்கு தான் தெரியும் அதற்கே இந்த நிலைமை. அவள் ஹாஸ்டல் வார்டனும், இன்னும் சில பேராசிரியர்களும் அவள் திருமணத்தைக் குறித்து அவளிடம் விசாரிக்கத் தான் செய்தனர்.
நல்லா படிக்கிற பொண்ணு. படிப்பை மட்டும் விட்டுடாம படிச்சு முடிச்சிடு என்பதே அவர்கள் கோரிக்கையாக இருந்தது. சந்தியாவும் சரி என்று தலை ஆட்டிவிட்டு வந்திருந்தாள்.அவர்கள் கல்லூரியில் திருமணமான பெண்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் பெரிய படிப்புகள் படித்துக் கொண்டிருந்தனர். பெரியவர்கள் அதனால் அவர்களிடம் வம்பு வளர்க்க யாருக்கும் தைரியம் இல்லை. சந்தியா சின்னப் பெண் என்பதால் அவளை ரொம்பவும் கேலி செய்தனர்.
அன்று இரவு சந்தியா அவள் அறையில் புத்தகங்களுக்கு நடுவே அமர்ந்திருந்த போது கதிர் அவளை அழைத்தான். அப்போது நேரம் பத்து மணி.
“ஹாய் மாமா. வீட்டுக்கு வந்துட்டீங்களா…”
“இல்லை. இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் கிளம்ப. நீ தூங்கிட போறியோன்னு கால் பண்ணேன்…”
“ஏன் இவ்வளவு நேரம் ஆகுமா எப்பவும் கிளம்ப. இல்லை இன்னைக்குக் காலையில லேட்டா வந்ததுனாலயா….”
“இல்லை நான் எப்பவுமே காலையில பொறுமையா தான் வருவேன். காலையில் எழுந்து ஜாகிங் பண்ணிட்டு. எதாவது டிபன் நானே செஞ்சு சாப்பிட்டிட்டு பத்து, பத்தரை போலத் தான் ஆபீஸ் வருவேன். அதனால நைட் டிராபிக் எல்லாம் குறைஞ்சதும் மெதுவா கிளம்பி போவேன். நான் நைட் சீக்கிரம் வீட்டுக்கு போய் என்ன செய்யப் போறேன் சொல்லு? அதே நீ இருந்தா ஆறு மணிக்கே வந்துடுவேன்…” என்று கதிர் சிரிப்புடன் சொல்ல,
“வந்துடுடி ரொம்பக் கஷ்டமா இருக்கு. மூனு நாளா நீ என் பக்கத்திலேயே இருந்துட்டு, இப்ப தனியா இருக்கனும்னு நினைச்சாலே பிடிக்கலை. இதுக்குத் தான் கல்யாணத்தைத் தள்ளி வைக்கலாம்னு சொன்னேன், உங்க அப்பா கேட்டாரா…” என்று கதிர் ஆரம்பிக்க,
“போதும் ஆரம்பிக்காதீங்க. நடக்கணும்னு இருந்துச்சு நடந்துடுச்சு. அவ்வளவு தான்.” என்று சந்தியா சொல்லிக்கொண்டிருக்கும் போதே சீனியர்ஸ் அவள் அறைக்கு வருவதைப் பார்த்தவள் “நாளைக்குப் பேசுறேன் மாமா…” என்று வைத்து விட்டாள்.
சந்தியாவிற்குச் சீனியர் மாணவர்களிலும் நிறைய நண்பர்கள் இருந்தார்கள். ஆனால். அவர்கள் எல்லாம் படிப்பு முடித்துச் சென்று விட்டனர். இப்போது கடைசி வருடத்தில் இருக்கும் மாணவ, மாணவிகள் ரொம்பவும் அடாவடியாகப் பேசுவார்கள்.ஒரு முறை சண்டை போட்டுவிட்டால், பார்க்கும் போது எல்லாம் வம்புக்கு இழுப்பார்கள் என்று சந்தியா வாய்க் கொடுக்காமல் ஒதுங்கி தான் போவாள்.
அறைக்கு வந்தவர்கள் சந்தியாவைக் கலாட்டா செய்ய, சந்தியா கடவுளே எனக்குப் பொறுமைய கொடு என்று வேண்டியபடி உட்கார்ந்திருந்தாள். நல்ல வேளையாக வார்டன் அந்த நேரம் வந்து விட, அதனால் மற்றவர்கள் எழுந்து வெளியே செல்ல, சந்தியா வேகமாக எழுந்து கதவை தாழ் போட்டு விட்டு வந்தாள்.
அனுவிற்கு சந்தியாவைப் பார்க்க பாவமாக இருந்தது. அன்றிலிருந்து சந்தியா அவர்களிடம் தனியாக மாட்டிக் கொள்ளக் கூடாது என்று முடிவெடுத்தாள்.மறுநாள் கல்லூரிக்கு வந்த சந்தியா நெற்றி வகுட்டில் குங்குமம் கூட வைத்துக் கொள்ளவில்லை. அது வேறு அவளைத் திருமணம் ஆனவள் என்று காட்டி கொடுப்பதால், அதைப் பார்த்தால் மேலும் கிண்டல் செய்வார்கள் என்று பயந்து போய் வேண்டாம் என்று விட்டுவிட்டாள்.
சித்தார்த் கூட அதற்கு அவளைக் கிண்டல் செய்தான். “என்ன உங்க மாமா மேல இருந்த லவ்ஸ். அதுக்குள்ளே குறைஞ்சிடுச்சா…” என்று.
சந்தியா அவனிடம் எதையும் சொல்லவில்லை. நண்பர்கள் என்றாலும் எதைச் சித்தார்த்திடம் சொல்ல முடியுமோ அதைத் தான் சந்தியா சொல்வாள்.ஹாஸ்டலில் சந்தியா எதைச் செய்தாலும் அதை அவள் திருமணமானவள் என்ற எண்ணத்திலேயே பார்க்கப்பட்டது.
அறையில் அனு இருக்கிறாள் என்று செல்லை எடுத்துக்கொண்டு வெளி வராண்டாவுக்கு வந்தால், அவளைக் கிண்டலாகப் பார்ப்பதும். என்ன போன்லயே குடும்பம் நடத்துறியா என்றும் கேலி செய்தனர்.அதற்கு பயந்து கொண்டு அனு இருந்தாலும் பரவாயில்லை என்று தன்னுடைய கட்டிலில் படுத்து, போர்வையைத் தலை வரை மூடிகொண்டு தான் கதிரிடம் பேசுவாள்.
சந்தியா படித்துக்கொண்டிருப்பதால் கதிரும் அந்தரங்கமாகப் பேசுவதை முடிந்த வரை தவிர்க்கத்தான் பார்ப்பான். ஆனாலும் சில நேரங்களில் மனைவி என்பதால் உரிமையுடன் பேசவும் செய்வான்.நான்காம் வருடம் என்பதால் சந்தியாவிற்கு இப்போது படிப்பதற்கு அதிகம் இருந்தது. அதோடு முக்கியமான ஆண்டும் கூட. அதே போல் கதிருக்கும் அடுத்த இரண்டு மாதத்தில் ப்ராஜெக்ட் ரிலீஸ் இருந்தது.
இது அவன் புது வேலையில் சேர்ந்த பிறகு வரும் முதல் ரிலீஸ் என்பதால். அவனும் தன் திறமையை நிரூபிக்கக் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தான்.ஒரு மாதம் வேகமாகச் சென்ற நிலையில் கதிர் ஒரு வார இறுதியில் சென்னைக்கு வந்தான். அவன் வருவதைச் சந்தியாவிடம் சொல்லவில்லை. அவளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்கட்டும் என்று சொல்லாமல் வந்தான்.
சனிக்கிழமை காலை சென்னை வந்தவன், நேராக அவன் நண்பர்களுடன் முன்பு தங்கியிருந்த வீட்டிற்குச் சென்று, சிறிது நேரம் தூங்கி விட்டு, பிறகு நண்பர்களுடன் அரட்டை அடித்து விட்டு, மதியம் ஆனதும் சந்தியாவைப் பார்க்க தன் நண்பனின் வண்டியை எடுத்துக் கொண்டு வந்தான். சந்தியாவிற்கு அன்று மதியம் வரை வகுப்புகள் இருந்தது.
வகுப்பு முடிந்து கல்லூரிக்குள் இருக்கும் பெஞ்சில் தனியாக அமர்ந்து. தன் தாலியை கையில் எடுத்து பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்கே சில நேரம் சந்தேகம் வரும். தனக்குத் திருமணமாகி விட்டதா என்று. அப்போது எல்லாம் இப்படித் தான்.சித்தார்த் அவளை ஒரு புன்னகையுடன் கடந்து சென்று பக்கத்தில் இருந்த இன்னொரு பெஞ்சில் அமர்ந்தான். அவனுக்குமே சில நேரங்களில் சந்தியாவை இப்படிப் பார்க்க பாவமாக இருக்கும்.
ஆனால் அவளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவான். சந்தியாவும் சிறிது நேரத்தில் சரியாகி விடுவாள்.அன்றும் அது போல் இருக்க, சித்தார் தான் முதலில் கதிர் வருவதைக் கவனித்தான்.
பார்த்தவன் முகம் புன்னகையில் மலர, சந்தியாவைப் பார்த்து “சந்தியா, கதிர்…” என்றான்.
பொய் சொல்கிறான் என்று நினைத்த சந்தியா “இப்ப எதுக்குத் தேவையில்லாம அவங்களை இழுக்கிற. பிறகு எனக்கு இப்பவே அவங்களைப் பார்க்கணும் போல இருக்குன்னு சொல்வேன். நீ தான் என்னைப் பெங்களூர் கூட்டிட்டு போக வேண்டியது வரும்.” என்று சித்தார்த்தை மிரட்ட, அதைக் கேட்டுக்கொண்டே புன்னகையுடன் வந்த கதிர் சந்தியாவின் அருகே சென்று அமர்ந்தான்.