அவன் உள்ளே சென்று பார்த்த போது வனிதா வனமங்கையின் கையில் குழந்தையை கொடுத்து விட்டு வைஷ்ணவிக்கு “அத்தை டா”, என்று சொல்லி வனமங்கையை அறிமுகப் படுத்திக் கொண்டிருந்தாள்.
குழந்தையை மடியில் வைத்த படி அமர்ந்திருந்த வனமங்கை முகத்தில் உயிர்ப்பு இருக்க மாதவனுக்கு அதுவே போதுமானதாக இருந்தது. அவனை ஆனந்தமாக நிமிர்ந்து பார்த்தாள். அவள் கண்களில் இத்தனை உறவுகளை கொடுத்ததுக்கு நன்றி உணர்வு இருந்தது.
“நீ எனக்கு நன்றி சொல்லுவியா டி? நீயும் நானும் வேறயா?”, என்ற கண்டிப்புடன் அவளைப் பார்த்தான். அதைப் புரிந்து கொண்டவள் அழகாக சிரித்தாள். அவள் அருகில் சென்று அமர்ந்தான் மாதவன். குழந்தையை அவன் கையில் கொடுத்தாள் வனமங்கை.
“என்ன பேர்க்கா வச்சிருக்க?”, என்று மாதவன் கேட்க வனிதாவோ அவனுக்கு பதில் சொல்ல வில்லை.
அவளைப் பார்த்து சிரித்தவன் “உன் கோபம் போகலையாக்கா? உன்னை சமாதானப் படுத்தச் சொன்னேனே? எங்க இந்த மாம்ஸ்?”, என்று கேட்டான்.
“வந்தேன்”, என்ற படி வந்த கிருஷ்ணன் “அதெல்லாம் உன் அக்கா சமாதானம் ஆகிட்டா. சும்மா உன் கிட்ட சீன் போடுறா”, என்று சொல்ல அவள் தலையில் கொட்டினாள் வனிதா.
“வனிதா, என்ன இது? மாப்பிள்ளை கிட்ட மரியாதை இல்லாம?”, என்று கீதா அரட்ட “விடுங்க அத்தை”, என்ற கிருஷ்ணன் “வருண் கிருஷ்ணன்ன்னு வச்சிருக்கோம் மாப்பிள்ளை”, என்றான்.
“நல்ல பேர் மாம்ஸ்”, என்று சொன்ன மாதவன் மருமகனை கொஞ்சினான். பின் கிருஷ்ணன், கீதா, மூவரும் வீட்டுக்கு கிளம்பி விட்டார்கள்.
வனிதா தான் வனமங்கைக்கு துணையாக இருந்தாள். வனிதாவையும் அவளுக்கு அதிகம் பிடித்திருந்தது. வனமங்கைக்கு மருதாணி வைப்பது, அவளுக்கென்று வாங்கிய நகை புடவைகளை காட்டுவது என்று இரண்டு நாட்களும் நகர்ந்தது. அங்கே இருந்த இரண்டு நாட்கள் இருவருக்கும் இடையே அழகான நட்பும் மலர்ந்தது.
அடுத்த நாள் அழகாக விடிந்தது. அன்று தான் மாதவன் வனமங்கைக்கு திருமணம். இந்த ஒரு வாரத்தில் வனமங்கையை ஓரளவுக்கு மாற்றி இருந்தார்கள் கீதா.
“பொண்ணு என்ன அழகு? அதான் மாதவன் மயங்கி கூட்டிட்டு வந்துட்டான் போல?”, என்று உறவினர்கள் பேசிக் கொண்டார்கள்.
கீதாவுக்கு வேலைகள் அதிகமாக இருந்ததால் வனமங்கையிடம் சிரித்து பேசி விட வில்லை. வரும் உறவினர்கள் என்ன சொல்வார்களோ என்ற கவலையிலே இருக்க வனமங்கையோ அவளுக்கு தன்னைப் பிடிக்க வில்லையோ என்று எண்ணி சோர்ந்தாள்.
மணமக்களை மண மேடையில் அமர வைத்தார்கள். அவள் அழகில் சொக்கித் தான் போனான். வனமங்கையோ அங்கிருந்த கூட்டத்தைக் கண்டு அஞ்சி தலை குனிந்தே இருந்தாள்.
“ரொம்ப அழகா இருக்க டி”, என்று அவன் காதில் கிசுகிசுக்க அவள் முகம் இன்னும் சிவந்து போனது. திருமணத்திற்கு வெற்றி, விஷு, வந்தனா, ராம் நால்வரும் வந்திருந்தார்கள்.
முகூர்த்த நேரம் வந்ததும் அனைவரின் ஆசியோடு அவள் கழுத்தில் தாலி கட்டினான். கருகுமணி மாலையும் நகைகளுக்கு அடியில் அவள் கழுத்தில் தான் கிடந்தது.
அதன் பின் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவது, உறவினர்களை சந்திப்பது, சடங்குகள் என நேரம் சென்றது. மண்டபத்தில் இருந்து வீட்டுக்கு வந்ததும் இருவருக்கும் வனிதா தான் ஆரத்தி எடுத்தாள். அதன் பின் பால் பழம் கொடுக்க பட்டது.
அதன் பின் மதிய விருந்து, கோவில் என கடக்க அன்று இரவும் வந்தது. முதலிரவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கிருஷ்ணன் தான் பார்த்துக் கொண்டான்.
பத்து மணி ஆனதும் அவளை மிதமாக அலங்கரித்த வனிதா. வனமங்கையை அவனுடைய அறைக்கு வெளியே விட்டு விட்டுச் சென்றாள். அவனை தனி அறையில் காணப் போவதை எண்ணி அவளுக்கு பயமாக இருந்தது. நாக்கு வறண்டு தண்ணீருக்கு ஏங்கியது. அறைக்கு செல்வதற்குள் அவளுடைய கால்கள் இரண்டும் பின்னிக் கொண்டது. அறைக்குள் செல்ல முடியாமல் திணறினாள்.
அவன் தூங்கிருப்பானா? என்ன பேசுவான்? என்ன நடக்கும் என்று விடை தெரியாத பல கேள்விகள் அவளுக்குள் படை எடுத்தன.
இத்தனைக்கும் அவன் அவளுக்கு பழக்கமானவன் தான், நெருக்கமானவன் தான். முத்தங்களால் அவளை அர்ச்சித்தவன் தான். ஆனால் இன்று கணவன் என்ற உரிமையில் இருக்கையில் அவளுக்குள் பல எதிர்பார்ப்புகள் கிளர்ந்தது.
ஒரு வழியாக அந்த அறையைத் திறந்ததும் அவளது இதயத் துடிப்பு அதிகரித்தது. அதைக் கட்டுப் படுத்திய படி உள்ளே சென்றாள். அவள் உள்ளே போன போது அவன் அந்த அறையில் இல்லை. அவன் அங்கே இல்லாதது அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. எங்க போய்ட்டார் என்று அந்த அறையை அலசினாள். அவன் இல்லை என்றதும் அவள் முகம் கூம்பிப் போனது.
முதலிரவை எண்ணி அவளுக்குள் கிளர்ந்திருந்த இதமான இம்சை அவளை விட்டுச் சென்றிருந்தது. அப்போது “என்னை ரொம்ப தேடுற போல?”, என்று கேட்ட படி அவள் முதுகு பக்கமாக வந்து நின்றான் மாதவன். அவன் குரல் கேட்டு படக்கென்று திரும்பினாள். அவனுடைய உதட்டில் உறைந்திருந்த புன்னகை அவளது மனக்கவலையை அகற்றியது.
“அது வந்து.. நான்”, என்று வார்த்தைக்கே தடுமாறினாள். அவன் நிதானமாக அவளை நெருங்கினான். அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தலை குனிந்து நின்றாள்.
அவள் தோள் மீது அவன் கரம் பதிந்த போதும் அவள் அவனை நிமிர்ந்து பார்க்க வில்லை. அவனுடைய மூச்சுக்காற்று அவளுடைய முகத்தை உரசி சென்றது. அவளது பார்வை உறமேரிய அவனுடைய மார்பின் மீது விழுந்ததே தவிர அவனை நிமிர்ந்து பார்க்க அவளுக்கு தைரியம் இல்லை.
அவளை அழைத்துக் கொண்டு கட்டிலை நெருங்கினான். கட்டிலில் அமர்ந்து அவளையும் தன்னருகே அமர வைத்துக் கொண்டான்.
“என்ன டி? பயமா இருக்கா?”, என்று கிசுகிசுப்பாக வந்தது அவன் குரல்.
“உங்க கிட்ட நான் எதுக்கு பயப்படனுமாம்?”, என்று கேள்வி கேட்டாலும் அவனை நிமிர்ந்து பார்க்க வில்லை.
“அப்புறம் எதுக்கு என்னைப் பாக்க மட்டிக்க? என்னைப் பாருடி”, என்றதும் தயக்கத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவனுடைய கண்களில் வழிந்த தாபத்தை ஒரு நொடிக்கு மேல் பார்க்க முடியாமல் கண்களை மூடிக் கொண்டாள்.
அவன் அவளை நெருங்கி அவளுடைய கன்னத்தில் இதழ் பதிக்க “விளக்கு எரியுது”, என்றாள் வனமங்கை,.
சிறு சிரிப்புடன் எழுந்து சென்றவன் விளக்கை அணைத்து விட்டு அவளை நெருங்கி வந்தான். அவள் உடல் முழுவதும் உணர்வலைகள் அடிக்க ஆரம்பித்தது.
அவன் இதழ்கள் அவள் கன்னம், காது மடல், நெற்றி என்று பயணித்து கடைசியில் இதழ்களில் வந்து இளைப்பாறியது. இதழ்கள் இணைந்ததில் இதயத்தில் படபடப்பு வருவது மர்மம் தான்.
அவளை கட்டிலில் கிடத்தியவன் அவள் மீது படர்ந்தான். அவனது விரல்கள் அவள் மேனி மீது பரவிப் படர்ந்து அவள் உணராத பல செய்திகளைச் சொல்ல ஆரம்பித்தது. அவன் விரல் உணர்த்தும் மொழி கூட அவளுக்கு புரிந்தது விந்தை தான்.
அவன் தொடுகையில் இதமான இம்சை அவள் உடல் முழுவதும் பரவி, கண் மூடி கிறங்கினாள். நடப்பதை நம்ப முடியாமல் அவள் தவிக்கும் போது அவன் மீசை ரோமங்கள் அவள் முகம் தீண்டி நடப்பது உண்மை தான் என்று அவளை நம்ப வைத்தது.
இருவரின் இதயத்துடிப்பு மட்டுமே அந்த அறையில் ஒலித்தது. நடக்கும் அனைத்தும் இனிய நினைவுகளாக இருவரின் மனதிலும் பதிந்து கொண்டிருந்தது. கண் மூடி அவன் கரங்களுக்குள் கிடந்தவளின் உடல் எங்கும் சுக அதிர்வுகள் மட்டுமே.
அவனுடைய முதுகில் பரவிய அவள் கரங்கள் அவன் பின்னந்தலையில் பரவி அவன் முடியை இறுக்கிப் பிடித்ததில் அவன் உடல் சிலிர்த்துப் போனது.
அவனுடைய ஆலிங்கனத்தில் இத்தனை நாள் இவன் எப்படி கட்டுப்பாடோடு இருந்தான் என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்தது. கூடவே அவனை இப்படி நல்ல முறையில் வளர்த்த கீதா மீது இருந்த மதிப்பு இன்னும் உயர்ந்தது. அவனுடைய இடைவிடாத முத்தங்களால் மூச்சு திணறிப் போனாள் வனமங்கை.
அணையுடைத்த வெள்ளமாய் அவர்கள் இருவரும் கலந்து கரைந்து போனார்கள். தன்னுடைய தாபங்கள் முழுவதையும் தீர்த்த அவன் அவளை தன்னுடைய கையணைப்பில் வைத்த படி தூங்கச் சொன்ன போது இரவு கூட முற்றுப் பெற்றிருந்தது.
தங்களின் வாழ்க்கை இந்த அளவுக்கு நிறைவு பெறுமா என்ற பயத்தில் இருந்தவர்கள் அது நடந்து விட்ட ஆனந்தத்தில் நிம்மதியாக தூக்கத்தைத் தழுவினார்கள்.
காலை ஒன்பது மணிக்கு தான் அவளுக்கு விழிப்பு வந்தது. அரண்டு புரண்டு விழித்தவள் அவனை எழுப்பினாள். அவனுக்கும் மணியைக் கண்டு திகைப்பு தான். அவசரமாக குளித்து முடித்து வந்த வனமங்கை சேலை கட்டத் தெரியாமல் திணறி அவன் தான் கட்டி விடும் படி ஆனது. சேலை கட்டுகிறேன் என்று அவன் கரங்கள் வேறு எல்லை மீற அவளோ அழுதே விட்டாள்.
“ஏண்டி அழுற?”
“ஏற்கனவே அத்தைக்கு என்னை பிடிச்சிருக்கா பிடிக்கலையான்னு தெரியலை. இதுல நேரம் கழிச்சு எந்திரிச்சிட்டேன். நீங்க இப்பவும் என்னைப் போக விடாம பண்ணுறீங்க? எனக்கு பயமா இருக்கு”, என்று அவள் சொல்ல “எம்மா தாயே, நான் ஒண்ணும் பண்ணலை. போதுமா? நீ போய் உன் அத்தையவே கொஞ்சு. நான் குளிக்க போறேன்”, என்று சொல்லி விட்டு ஓடி விட்டான்.
அவளை சமாதானப் படுத்த அவனுக்கும் ஆசை தான். ஆனால் அதற்கும் அவன் நேரம் எடுத்துக் கொண்டால் அவள் இன்னும் அழுவாள் என்பதால் தான் விலகி வந்து விட்டான். கூடவே அம்மா பற்றி கூடிய விரைவில் புரிந்து கொள்வாள் என்று எண்ணிக் கொண்டான்.
காலை உணவை உண்டு விட்டு தட்டை கழுவி வைத்த பிறகு மெல்லிய கொலு சொலி கேட்டது கீதாவுக்கு.
ஈரத்தலையில் சுற்றியிருந்த அவளது துண்டும், இதுவரை இல்லாத புதுப் பொலிவுடன் கூடிய அவள் முகமும்,. அவளது கண்ணச்சிவப்பும் கீதாவின் கண்களில் பட்டது. அதுவே அவர்களின் நிறைவான வாழ்க்கையை சொல்ல மலை ஜாதிப் பெண்ணுடன் எப்படி வாழ்க்கையைத் துவங்குவான் என்று எண்ணியிருந்த கீதாவின் கவலை அவளை விட்டுச் சென்றது.