மேலும் ஐந்து வருடங்களுக்கு பிறகு…. மதியும் தேனும் பத்தாம் வகுப்பில் இருந்தார்கள். இப்போது சொந்த ஊரான சத்தியமங்கலத்துக்கே அவனுக்கு வேலை மாறுதல் கிடைத்திருந்தது. சொந்த வீட்டில் இருந்து தான் வேலைக்கு சென்று கொண்டிருக்கிறான். அதனால் பிள்ளைகள் படிப்பும் தடையில்லாமல் சென்று கொண்டிருந்தது.
மாதவனின் மஞ்சத்தில் மஞ்சம் கொண்டிருந்தாள் அவனது வனதேவதை. அப்போது கதவு தட்டும் ஓசை கேட்டது. முதலில் கண் விழித்தது வனமங்கை தான். அது யாராக இருக்கும் என்று தெரிந்து அடித்து பிடித்து எழுந்தவள் அவசரமாக கணவனை ஒரு பார்வை பார்த்து விட்டு வாசலை நோக்கிச் சென்றாள்.
வெளியே அவர்களை முறைத்து பார்த்த படி நின்றிருந்தாள் அவர்களது புதல்வி தேன்மொழி. அப்பாவைப் போல உயரம் கொண்டிருந்தாலும் அம்மாவைப் போல அழகுடன் இருந்தாள்.
“என்ன டி முறைக்கிற? அதுவும் காலையிலே?”, என்று கேட்ட வனமங்கை மகளை தினுசாக பார்த்தாள்.
“போ மா, உன் பேச்சு கா. இன்னைக்கு தீம் பார்க் கூட்டிட்டு போறேன்னு சொன்ன தானே?”
“ஆமா ஆமா, நாம முக்கா வாசி இருக்குறதே ஏதாவது காட்டுக்குள்ள தான். இதுல இப்ப கொஞ்ச மாசமா தான் இங்க வந்து இருக்கோம். இங்க வந்தும் அங்க போகணும் இங்க போகணும்னு அடம் பண்ணிட்டு இருக்க? பள்ளிக்கூடம் போகலையா டி?”
“அது ஸ்கூல் மா”
“அது எங்களுக்கு தெரியாதாக்கும்?”, என்று அவள் முறுக்கிக் கொள்ள “அம்மா நான் குளிச்சிட்டேன். நீங்களே டிபன் செய்ங்க. நீங்க செஞ்சா தான் சத்தானதா செய்வீங்க. ஆச்சி செஞ்சா எப்பவும் போல தோசை இட்லி தான் கிடைக்கும்”, என்ற படி வந்து நின்றான் மதி.
“ஐயே, அந்த கூலும் கஞ்சியும் எனக்கு வேண்டாம் பா. எனக்கு மொரு மொரு நெய் தோசை தான் வேணும்”, என்று முகம் சுளித்தாள் சின்னவள்.
“பாப்பு, எப்பவும் அப்படியே சாப்பிடக் கூடாது. இன்னைக்கு கேப்பை புட்டு தான். அதை தான் செய்யப் போறேன். நீ சாப்பிட்டே ஆகணும். ஆச்சிக்கு உடம்பு சரி இல்லை. அவங்களை தொந்தரவு பண்ணக் கூடாது”, என்று அவள் குரல் சற்று ஓங்கி ஒலிக்க “சரி மா”, என்றாள் தேன்மொழி.
“மதி, நேத்து எழுதினதை கொஞ்ச நேரம் படி. அம்மா குளிச்சிட்டு வந்து செஞ்சு தரேன். இன்னும் நேரம் இருக்கு கண்ணா”
“சரி மா”
“பாப்பு, நாளைக்கு அப்பாக்கு லீவ், நாளைக்கு எங்கயாவது வெளிய கூட்டிட்டு போவாங்க. இன்னைக்கு ஸ்கூல்க்கு போ”
“அப்ப நேத்தே இதைச் சொல்லிருக்க வேண்டியது தானே? இன்னைக்கு கூட்டிட்டு போறேன்னு ஏன் சொன்ன மா? தப்பு உன் மேல தான்”, என்று தாயைக் குற்றம் சாட்டினாள் மகள்.
மகளின் புத்திசாலித்தனத்தில் வியந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் “அப்படியா? நேத்து நான் இதைச் சொல்லிருந்தா என்னைப் போட்டு நைட் எல்லாம் உயிரை வாங்கிருப்ப. உன் கிட்ட இருந்து தப்பிக்க தான் அப்படிச் சொன்னேன்”, என்றாள் வனமங்கை.
“அப்ப என்னை கூட்டிட்டு போக மாட்டியா?”
“அதான் நாளைக்குன்னு சொல்றேன்ல?”
“நீ நாளைக்கும் இதையே தான் சொல்லுவ. நான் என் பிரண்ட்ஸ் கிட்ட எல்லாம் இன்னைக்கு வர மாட்டேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்”
“அப்படின்னா உன் அப்பா கிட்டயே கேளு. உன் பாடு உன் அப்பா பாடு”, என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்தவள் மாற்றுடையை எடுத்துக் கொண்டு குளிக்க சென்றாள்.
“அப்பா, எந்திரிப்பா”, என்ற மகளின் குரலில் புன்னகையுடன் கண் விழித்தான் மாதவன்.
“பாட்டி எந்திச்சதும் எனக்கும் விழிப்பு வந்துருச்சுப்பா. மதியும் எந்திச்சு குளிச்சாச்சு. அப்பா எங்கயாவது வெளிய கூட்டிட்டு போ பா. வீட்ல இருக்க போர் அடிக்குது”
“உன் அத்தை ஊருக்கு போவோமா?”
“போன வாரம் தானே அங்க போனோம்? கண்ணன் என்னை அடிச்சிட்டே இருப்பான் பா. அங்க வேண்டாம்”
“சரி, எங்க போகலாம்? நீயே சொல்லு”
“ஏதாவது தீம்பார்க் போகலாமா?”
“நீ கேட்டு நான் வேண்டாம்னு சொல்லுவேனா டா? ஆனா இப்ப நீ ஸ்கூல்க்கு போ. நீ ஸ்கூல் முடிஞ்சு வந்ததும் ஷாப்பிங் போய் நாளைக்கு வெளிய போறதுக்கு தேவையான எல்லாம் வாங்கிட்டு வரலாம். நாளைக்கு காலைல கிளம்பிறலாம். ஸ்கூல்க்கு ரெண்டு நாள் லீவ் போட்டுரு. அப்புறம் சட்டர்டே சண்டே வந்துரும். நேரடியா மண்டே நீ ஸ்கூல்க்கு போனா போதும்”, என்று சொல்ல சந்தோசமானவள் “அப்பான்னா அப்பா தான்”, என்று சொல்லி அவன் கன்னத்தில் ஒரு முத்தம் பதித்து விட்டு பள்ளிக்கு கிளம்பச் சென்றாள்.
வனமங்கை கண்டிப்பை காட்டுவாள் என்றால் மாதவன் பிள்ளைகளை அவர்கள் போக்கிலே போய் சரி செய்வான்.
வனமங்கை குளிக்கிறாள் என்பதை தெரிந்து கொண்ட மாதவன் மீண்டும் படுத்துக் கொண்டான். அவன் உறங்குகிறான் என்று எண்ணிய வனமங்கை பிள்ளைகள் வரக்கூடும் என்பதால் கதவைத் தாழிட்டு விட்டு உடை மாற்ற ஆரம்பித்தாள்.
மெதுவாக எழுந்து கொண்டவன் அவள் பின்னே சென்று நின்றான். அவனது மூச்சுக்காற்று அவள் முதுகில் பட “திருட்டு மாடு எந்திரிச்சிட்டிட்டீங்களா?”, என்று கேட்ட படி புடவை கட்ட ஆரம்பித்தாள்.
அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தவன் அவள் வாசனையை உள்ளிளுக்க அவன் செய்கையில் கிறங்கியவள் “பிள்ளைகளுக்கு சாப்பாடு செய்ய போகணும். உங்களுக்கும் நேரம் ஆச்சு. குளிக்க போங்க”, என்றாள்.
“விரட்டுறதுலே இரு போடி”, என்று அவன் உதடு சொன்னாலும் அவன் கரங்கள் அவள் மேனியில் பயணித்தது. அவன் செய்கையில் கிறங்கியவளை சில பல நிமிடங்களுக்கு பிறகு தான் விட்டான்.
அப்போதும் குளிக்க போகாமல் மனைவியின் அழகை ரசித்த படி படுத்திருந்தான். அவளது நேர்த்தியான சேலைக் கட்டைக் கண்டு அவன் கண்களில் மெச்சுதல் வந்தது.
“சூப்பரா கட்டிருக்க டி”, என்றான். அவளை இந்த முறையில் சேலை கட்ட வைப்பதற்குள் அவனும் கீதாவும் பட்ட பாடு கொஞ்சம் நஞ்சம் இல்லை.
அதை நினைத்து அவள் புன்னகைக்க அவள் கன்னத்தில் தன்னுடைய உதடுகளை பதித்து விட்டே குளிக்கச் சென்றான்.
அதன் பின் பிள்ளைகளுக்கு அவனுக்கு என்று உணவு கொடுத்து மூவரையும் அனுப்பினாள். தன்னுடையே ஜீப்பிலே பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றான் மாதவன்.
பின் கீதாவுக்கு காலை உணவைக் கொடுத்து அவளுடன் பேசிய படி தானும் உண்டாள். அன்று மாலை பிள்ளைகள் வந்ததும் அவர்களை கவனித்து விட்டு அவன் அக்கடா என்று அமரும் போது மாதவன் வந்தான்.
அவனுக்கு டீ கொடுத்து விட்டு இரவு உணவை சமைத்தாள். பின் அனைவரையும் வெளியே அழைத்துச் சென்றான். தேவையானவற்றை மனைவி பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுத்தான்.
கடைசியில் மதியும் தேன்மொழியும் ஹோட்டலில் சாப்பிடலாம் என்று கேட்க வனமங்கை அவர்களை முறைத்தாள்.
“என்னைக்காவது தானே டி? விடு”, என்று சொல்லி அவர்களை அழைத்துச் சென்றான்.
வனமங்கை எதுவும் வேண்டாம் என்று சொல்லி விட அவளுக்கு பிடித்த ஐஸ் கிரீம் மட்டும் வாங்கிக் கொடுத்தவன் பிள்ளைகளுக்கு அவர்கள் கேட்டதை வாங்கிக் கொடுத்தான். ஆனால் வனமங்கை சாப்பிடாததால் அவனும் எதுவும் உண்ணவில்லை. வீட்டுக்கு வந்ததும் பிள்ளைகள் இருவரும் தூங்கச் செல்ல பெரியவர்கள் மூவரும் பேசிய படியே சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றார்கள்.
அடுத்த நாள் காலை சீக்கிரமே எழுந்து ஊருக்கு செல்ல தேவையானதை எடுத்து வைத்தாள் வனமங்கை.
நன்கு விடிந்ததும் கீதாவிடம் சொல்லி விட்டு கிளம்பினார்கள். பல இடங்களுக்கு அழைத்துச் சென்றவன் வனிதா வீட்டுக்கு சென்றான். அங்கிருந்து அனைவரும் ஒரு தீம் பார்க்குக்கு சென்றார்கள். மதி, தேன்மொழி, கண்ணன் மூவரும் ஒரே ஆட்டம் தான்.
கண்ணனின் அக்கா வைஷ்ணவி கடைசி வருடம் மருத்துவம் வெளியூரில் தங்கிப் படிக்கிறாள் என்பதால் அவள் வரவில்லை.
பிள்ளைகளை விளையாட விட்டு பெரியவர்கள் ரசித்தார்கள். மதியும் கண்ணனும் ஒரு கட்டத்தில் அந்த தண்ணீர் விளையாட்டில் இருந்து வெளியே வந்து கார் கேம் விளையாடச் செல்ல தேன்மொழியோ தண்ணீருக்குள் இருந்து வர மறுத்தாள்.
“இவளை… வாரம், வாரம் ஒரு பால்ஸ்க்கு கூட்டிட்டு போறீங்க தானே? என்னமோ தண்ணியவே பாத்தது இல்லாதது மாதிரி பண்ணுறா. அவளைக் கூப்பிடுங்க. நீங்க கூப்பிட்டா தான் கேப்பா”, என்றாள் வனமங்கை.
“செல்லக் குட்டி, வெளிய வா டா போதும், டைம் ஆச்சு பாரு”, என்றான் மாதவன்.
“ஒரு பிஃப்டீன் மினிட்ஸ்பா”, என்று அவள் கண்ணைச் சுருக்கி கெஞ்ச “சரி டா சரி டா”, என்று சொல்லி மனைவியின் கண்டனப் பார்வைக்கு ஆளானான் மாதவன். அதை கிருஷ்ணன் கிண்டல் செய்து வனிதாவிடம் ஒரு அடியை பெற்றுக் கொண்டான்.
கால் மணி நேரம், ஒரு மணி நேரம் ஆன பின்னர் தான் தண்ணீரில் இருந்து அரை மனதாக வெளியே வந்தாள் தேன்மொழி.
“ரொம்ப நேரம் தண்ணில விளையாடிருக்க பாப்பு. இந்த தண்ணி காட்டுல உள்ள அருவில இருக்குற நல்ல தண்ணீர் இல்லை. உடம்புக்கு ஏதாவது வந்தா என்ன பண்ணுவ?”, என்று அவள் தலையை துவட்டிய படியே கேட்டாள் வனமங்கை.
“விடு மங்கை, அதெல்லாம் ஒண்ணும் ஆகாது”, என்று மகளுக்காக பரிந்து வந்தான் மாதவன். ஆன்று இரவு மாதவன் குடும்பம் ஊருக்கு கிளம்பியது.
வனமங்கை பயந்தது போல பாதி தூரம் வரும் போதே தேன்மொழிக்கு பயங்கர காய்ச்சல் வந்தது. “ஹாஸ்பிட்டல் போகலாமா?”, என்று தயங்கிய படியே கேட்ட மாதவன் வனமங்கையின் பார்வையில் வாயை மூடிக் கொண்டான்.
வனமங்கை இப்போது வரைக்குமே மருத்துவமனை போனது கிடையாது. பிள்ளைகளையும் அழைத்துச் சென்றது கிடையாது. அவர்கள் குழந்தைகளாக இருந்த போது போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் போது கூட அவள் அது சரியா தவறா என்று தயங்க “நான் பிள்ளைகளுக்கு சொட்டு மருந்து கொடுத்தே தீருவேன். அதை உனக்கும் கூட உன் சின்ன வயசா இருக்கும் போது போட்டுருப்பாங்க. உனக்கு தெரியாது வனமங்கை. இதுக்கு அப்புறம் ஏதாவது காச்சல், தலை வலி வந்தா வேணா நீ பிள்ளைகளுக்கு இயற்கை வைத்தியம் பாத்துக்கோ. ஆனா சொட்டு மருந்து கட்டாயம் போட்டே ஆகணும்”, என்று அவன் கட்டாயமாக சொன்னதால் அப்போது மட்டும் அவன் பேச்சைக் கேட்டாள்.
அதற்கு பிறகு பிள்ளைகளுக்கு இயற்கை வைத்தியம் தான். சளி வந்தால் கூட அவள் இயற்கை வைத்தியம் தான் பார்ப்பாள். சளித் தொல்லையால் ஒரு வாரம் பிள்ளைகள் கஷ்டப் படுவார்கள். அதைக் கண்டு மாதவனுக்கு கோபம் வரும் தான்.