சந்தியா வண்டியில் இருந்து கீழே இறங்கி நின்றவள் “உங்களுக்கு என்னோட பேசணும், என்னைப் பார்க்கனும்ன்னு எல்லாம் ஆசையே இல்லை. நான்தான் உங்களையே நினைச்சிட்டு இருக்கேன். நீங்க இங்க வர்றத கூடச் என்கிட்ட சொல்லலை.நான் இன்னைக்கு எதேச்சையா வந்ததுனால உங்களைப் பார்த்தேன். இல்லன்னா என்னைப் பார்க்கமேலே போய் இருப்பீங்க அப்படித்தானே மாமா.” என்று சந்தியா கதிரை குற்றம் சொல்ல,
கதிர் எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன், அவன் கொண்டு வந்த பையை அவளிடம் கொடுக்க, எதற்கு என்று புரியாமல் அதை வாங்கிச் சந்தியா பிரித்துப் பார்க்க, உள்ளே அவளுக்குப் பிடித்த ஸ்வீட்ஸ், அவளுக்கு உடைகள் எல்லாம் இருந்தது.அதைப் பார்த்ததும் கதிர் தன்னைப் பார்க்கவும் வந்திருக்கிறான் என்று புரிந்து கொண்ட சந்தியாவின் மனதில் சந்தோஷம் பொங்க, அது அவள் முகத்திலும் வெளிப்பட்டது.
“சாரி மாமா நீங்க என்னைப் பார்க்கவே வராம இருந்துட்டீங்களா, பிறகு போனும் பண்ணலை அதுதான் அப்படிப் பேசிட்டேன். உங்களைப் பார்க்காம இருந்தது எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா?” என்ற சந்தியாவின் விழிகள் கலங்க,
“எனக்கும் அப்படித்தான் இருந்தது சந்தியா. ஆனா நீ என்னோட சேரவும் முடியாம, என்னை விட்டு விலகி இருக்கவும் முடியாம படுற பாட்டைப் பார்த்துத்தான். உன் மேல கோபமா இருக்கிற மாதிரி நடிச்சேன்.எனக்கு வேற வழி தெரியலை… இப்பவும் வந்திருக்க மாட்டேன். ஆனா இதுக்கும் மேல உன்னைப் பார்க்காம இருக்க முடியும்னு தோணலை. இன்னும் அஞ்சு மாசம்தான் இருக்கு உன் படிப்பு முடிய அதனாலதான் பரவாயில்லைன்னு வந்துட்டேன்.”
“காலேஜ்ல சீனியர்ஸ் ரொம்பக் கிண்டல் பண்ணாங்க. எனக்குமே படிச்சிட்டு இருக்கும் போது வேண்டாம்ன்னு தோனுச்சு. சாரி உங்களை ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேன்.” என்று சந்தியாவும், கதிரும் மாறி மாறி உருக,
இவர்கள் உருகியது வீட்டில் அல்லவே ரோடு என்பதால் போவோர் வருவோர் எல்லாம் இருவரையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே செல்ல, அதைச் சிறிது நேரம் சென்றே உணர்ந்த இருவரும் புன்னகையுடன் அங்கிருந்து சென்றனர்.மதியம் வரை வெளியே சுற்றியவர்கள் ஒரு உணவகத்தில் சென்று மதிய உணவை சாப்பிட்டனர். சந்தியா வேறு எங்காவது போவோம் என்று சொல்ல, கதிர் காவேரி வீட்டிற்கு போகலாம் என்றான்.
ஏன் அதுக்குள்ள வீட்டுக்கு போகலாம்ன்னு சொல்றாங்க என்று குழம்பியபடி வந்த சந்தியாவிற்கு வீட்டிற்கு வந்ததும் விடை தெரிந்தது.இவர்கள் வீட்டிற்குச் சென்ற போது சுபாஷும், காவேரியும் மதிய உணவை சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். இவர்களைப் பார்த்ததும் சாப்பிட அழைத்தனர்.
நாங்க சாப்பிட்டோம், நீங்க சாப்பிடுங்க என்ற கதிர் தூங்க போவதாகச் சொல்லி அறைக்குள் சென்றவன், உள்ளே இருந்து சந்தியாவை அழைக்க, சந்தியா ஹாலிலேயே உட்கார சென்றவள், கதிர் அழைக்கும் குரல் கேட்டு உள்ளே சென்றாள்.
சந்தியா உள்ளே வந்ததும், கதிர் கதவை சாற்ற. “அவங்க எதாவது நினைக்கப் போறாங்க…” என்று சந்தியா கதவை திறக்க செல்ல,
“ஹே இதுவும் நம்ம வீடுதான். அவ என்ன வெளி ஆளா… என் தங்கச்சிதான். பயப்படாம வா…” என்ற கதிர் சந்தியாவைக் கைகளில் ஏந்தியவன், சட்டென்று அவளைக் கீழே இறக்கி விட்டு “பார்த்தா ஆளு ஒல்லியா இருக்க, தூக்கினா இந்தக் கணம் கணக்கிற…”
“சினிமாவுல இந்த ஹீரோ எல்லாம் ஹீரோயின்ன எப்படிச் சட்டு சட்டுன்னு தூக்குறாங்கன்னே தெரியலையே. நம்மால முடியலடா சாமி.” என்று தன் முதுகை பிடித்துக்கொள்ள,
தன் இடுப்பில் கை வைத்து அவனை முறைத்த சந்தியா “சும்மா சொல்லாதீங்க. நான் நாற்பத்தி எட்டு கிலோ தான் இருக்கேன். என்னை உங்களால தூக்க முடியலையா…” என்று சந்தேகமாக கேட்டாள்.
கதிர் வாய்விட்டு சிரித்தவன் “எலிக்குஞ்சு மாதிரி கீச்சு கீச்சுன்னு கத்தாதடி…” என்றவன் அவளை எளிதாகத் தூக்கி முன்னும் பின்னும் சுழற்ற, சந்தியாவும் அவனோடு சேர்ந்து சிரித்தாள்.
கதிர் சந்தியாவைக் கட்டிலில் சென்று விட்டவன், அவனும் அவள் அருகில் படுக்க “இதுக்குதான் வீட்டுக்கு போகலாம்னு என்னை அவசரமா கூட்டிட்டு வந்தீங்களா….” என்ற சந்தியா கதிரை பார்த்து கேட்க, அவன் அவளைப் பார்த்துக் கண் சிமிட்டினான்.
சந்தியா கதிரின் நெற்றி, கண்கள், கன்னங்கள் என்று முத்தமிட… கதிர் கண் முடி படுத்திருந்தான். “என்ன செய்றீங்க மாமா…” என்று அவன் காதில் கிசுகிசுப்பாகக் கேட்ட சந்தியா, அவன் காதை வலிக்காமல் கடிக்க,
லேசாகக் கண் திறந்த கதிர் “enjoying, you continue…” என்றான் குரலில் போதையுடன். அதைக் கேட்டு புன்னகைத்த சந்தியா, அவன் இதழை நெருங்க, அவன் அவளை ஆவலுடன் எதிர் கொண்டான்.நீண்ட நேர முத்தத்திற்குப் பிறகு விலகிய இருவருக்கும் மூச்சு வாங்க, ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர். அப்போது கதிரின் கைப்பேசி அழைத்தது.
அழைப்பது அவனுடைய தந்தை என்பதால் கதிர் எடுத்து பேச, அந்தப் பக்கம் பெரியசாமி சொன்ன விஷயத்தைக் கேட்டு அதிர்ந்தவன், வேகமாகக் கட்டிலில் இருந்து இறங்கி வெளியே சென்றான்.கதிர் கைப்பேசியில் பேசியபடி வெளியே சென்றவன், உடனே திரும்பி வந்து “சந்தியா என்னோடதுல சிக்னல் சரியா இல்லை… உன்னோட செல்லை தா. ஒரு போன் பண்ணிட்டு தரேன்…” என்று சந்தியாவுடைய கைபேசியையும் வாங்கிக்கொண்டு வெளியே சென்றான்.
சந்தியாவும் கதிர் சொன்னதை நம்பி தன் கைப்பேசியை அவனிடம் கொடுத்துவிட்டு அறையிலேயே அவனுக்காகக் காத்திருந்தாள்.
வெளியே வந்த கதிர் “அப்பா அத்தைய உடனே மதுரையில இருக்கிற பெரிய ஆஸ்பத்திரியில சேருங்க. நான் இப்பவே சந்தியாவோட கிளம்பி வரேன். லேட் பண்ணாம உடனே சேருங்கப்பா….” என்று பதட்டமாகச் சொல்ல,
“இங்க இருக்கிற டாக்டர் பொழைக்க வைக்க முடியாதுன்னு சொல்றாங்களேப்பா. ரொம்ப ரத்தம் போய்டுச்சு. கொண்டு போற வழியில எதாவது ஆகிட்டா…” என்று பெரியசாமி கவலைப்பட,
“அதெல்லாம் எதுவும் ஆகாது. நீங்க ஆம்புலன்ஸ்ல கூட்டிட்டு போங்க… நாங்க வந்துடுறோம்…” என்று கதிர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, துரை சந்தியாவின் கைப் பேசியில் அழைத்தார்.
அவரின் அழைப்பை பார்த்ததும், கதிர் தன் தந்தையின் அழைப்பை துண்டித்தவன், துரையின் அழைப்பை ஏற்க “பாப்பா! உங்க அம்மா ரொம்ப முடியாம இருக்காடா. இங்க டாக்டர் என்னென்னமோ சொல்றாங்களே. எனக்கு ரொம்பப் பயமா இருக்கே…” என்று அழுது கொண்டே துரை புலம்ப, கதிருக்கு தெரியும் கண்டிப்பாக யாரவது சந்தியாவை அழைப்பார்கள் என்று. அதனால்தான் அவள் கைப்பேசியை அவன் வாங்கி வைத்திருந்தான்.
சந்தியா இதை எப்படித் தாங்க போகிறாள்? என்று தன் மனைவியை நினைத்து வருந்தியவன், இப்போது துரையைத் தேற்றுவதே முக்கியம் என்பதால் “மாமா நான் கதிர் பேசுறேன். நீங்க தைரியமா இருங்க. அத்தைக்கு எதுவும் ஆகாது. அவங்களை உடனே மதுரையில இருக்கிற ஆஸ்பத்திரியில சேருங்க. நான் சந்தியாவோட அங்க வந்திடுறேன்.” என்று கதிர் துரையைத் தேற்ற,
அவர் மறுத்து எதோ சொல்ல வர “இப்ப நேரத்தை வீணாக்காதீங்க மாமா. ப்ளீஸ் தயவு செஞ்சு நான் சொல்றதை செய்ங்க. முதல்ல ஆம்புலன்ஸ்க்கு ஏற்பாடு பண்ணுங்க. நான் திரும்பக் கூப்பிடுறேன்…” என்று அழைப்பை துண்டித்தவன், உடனே சித்தார்த்தை அழைத்தான்.
அப்போது கதிரின் அருகில் சுபாஷ் வந்து நின்றான். “ஹாய் கதிர் எப்படி இருக்கீங்க?” என்று சித்தார்த் நலம் விசாரிக்க, அதற்கு பதில் சொல்லாமல் கதிர் நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.
“சித்தார்த் சந்தியாவோட அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. கர்ப்பப்பையில கட்டி இருந்திருக்கும் போலிருக்கு. அது தெரியாம, இப்ப வலி அதிகமாகி மயக்கம் ஆகிட்டாங்க. ஹாஸ்பிடல் போனா, ரொம்ப ரத்தம் போய்டுச்சுக் காப்பாத்துறது கஷ்டம்னு சொல்றாங்களாம். நான் அவங்களை மதுரைக்குக் கொண்டு போகச் சொல்லி இருக்கேன். உன்னால எதாவது உதவ முடியுமா…” என்று கதிர் கேட்க, சுபாஷ், சித்தார்த் இருவருமே அதிர்ந்தனர்.
சந்தியாவை நினைத்து வருந்திய சித்தார்த், ஒரு நொடி என்ன செய்வது என்று புரியாமல் நிற்க “சித்தார்த் ரொம்ப அவசரம். உனக்கு அங்க யாரவது டாக்டர்ஸ் தெரியுமா…” என்று கதிர் அழுத்தி கேட்டதும்,
“எனக்குத் தெரியாது… ஆனா என் அம்மா அப்பாவுக்குத் தெரியலாம். நான் அவங்களைக் கேட்டுச் சொல்றேன்.” என்று தொடர்பை துண்டித்தவன், உடனே தன் பெற்றோரிடம் பேச,
சித்தார்த்தின் அம்மாவோடு படித்தவர் இப்போது மதுரையில் ஒரு பெரிய மருத்துவமனையில் தலைமை மருத்துவராக இருப்பதால், அவரிடம் சந்தியாவின் அம்மாவை அழைத்துக்கொண்டு செல்லும்படி சொன்னவர்கள், அந்த மருத்துவரையும் அழைத்துப் பேசினார்கள்.
உடனே கதிரை அழைத்துச் சித்தார்த் விபரம் சொல்ல, கதிர் உடனே துரையை அழைத்துப் பேசினான்.
“மாமா நமக்கு இருக்கிற நேரம் ரொம்பக் குறைவு. எவ்வளவு சீக்கிரம் அத்தைய அந்த ஹாஸ்பிடலுக்குக் கொண்டு போறமோ அவ்வளவு சீக்கிரம் நாம அவங்களை காப்பாத்திடலாம். அதனால உடனே அவங்களை அந்த ஹாஸ்பிடலுக்குக் கொண்டு போங்க… சந்தியாவுக்கு இன்னும் விஷயம் தெரியாது. நான் அவக்கிட்ட பக்குவமா விஷயத்தைச் சொல்லி கூட்டிட்டு வரேன்.” என்றவன், தன் தந்தையையும் அழைத்து விவரம் சொன்னான்.
சித்தார்த், துரை, பெரியசாமி என்று ஒருவர் மாற்றி ஒருவரிடம் கதிர் பேசிக்கொண்டிருந்தாலும், இடைப்பட்ட நேரத்தில் சுபாஷிடம் விமானத்தில் மதுரைக்குப் பயணச் சீட்டு வாங்க சொல்லவும் மறக்கவில்லை. சுபாஷும் அந்த வேலையைப் பார்க்க சென்றான்.ரொம்ப நேரம் கதிருக்காகக் காத்திருந்த சந்தியா… அவன் வராததால் அவனைத் தேடி வெளியே வர, சந்தியாவைப் பார்த்த கதிருக்கு ‘ஐயோ…’ என்று இருந்தது.
இவள் எப்படி இந்த விஷயத்தைத் தாங்குவாள்? இவளிடம் இந்த விஷயத்தைச் சொல்ல எனக்கு சக்தி கொடு கடவுளே என்று வேண்டியபடி சந்தியாவை அழைத்துக்கொண்டு உள்ளே வந்தான்.
கதிர் சந்தியாவிடம் சொல்வதற்கு முன்பு காவேரி “என்னண்ணே இது, அத்தைக்குப் போயா இப்படி ஆகணும். கடவுளே ! முதல்ல அப்பாவுக்கு இப்ப அத்தைக்கு. எதுக்கு நம்ம குடும்பத்துக்கு மட்டும் இப்படிச் சோதனை வருதோ?…” என்றாள் அழுது கொண்டே.
முதலில் புரியாமல் பார்த்த சந்தியாவுக்குப் பிறகு புரிய… “அம்மாவையா சொல்றாங்க மாமா…. அம்மாவுக்கு என்ன ஆச்சு?” என்று கதிரை போட்டு உலுக்க,
“பயப்படுற மாதிரி ஒன்னும் இல்லை. நீ டென்ஷன் ஆகாத. வயிறு வலியாம் வேற ஒன்னும் இல்லை.” என்று கதிர் சமாளிக்க, அப்போது சித்தார்த் உள்ளே நுழைந்தான்.
சித்தார்த்தின் முகத்தைப் பார்த்ததுமே சந்தியாவுக்கு எதோ விபரிதம் என்று புரிந்தது. “அம்மாவுக்கு ஒன்னும் இல்லைனா… என்னை இப்பவே அம்மாவோட செல்ல பேச வைங்க….” என்று சந்தியா விழிகளில் கண்ணீருடன் கேட்க,
வேதவல்லி மயக்கத்தில் இருக்கிறார் இப்போது அவருடன் எப்படிப் பேச வைக்க முடியும் என்று நினைத்த கதிருக்கு ஆயாசமாக வந்தது. இனி மறைக்க ஒன்றும் இல்லை என்று நினைத்தவன், வேதவல்லி அபாயக் கட்டத்தில் இருப்பதை மட்டும் மறைத்து மற்ற அனைத்தையும் சொன்னான்.கதிர் சொன்னதைக் கேட்ட சந்தியா கதறி அழ, கதிர் அவளைத் தேற்றும் வழி தெரியாமல் நின்றான்.
மதுரைக்கு விமானப் பயணச் சீட்டு இருக்கிறது என்று சுபாஷ் சொன்னதும், அனைவரும் கிளம்ப, சித்தார்த்தும் அவர்களோடு கிளம்பினான்.அடுத்த ஒரு மணி நேரத்தில் வேதவல்லியை மதுரையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் சேர்த்து இருந்தனர். கதிர் கைப்பேசியில் பேசிக்கொண்டே இருந்தான்.
அவன் ஒவ்வொரு முறை பேசும் போதும், தன் அம்மாவுக்கு என்ன ஆனதோ என்ற பயத்தில் சந்தியாவின் உடல் நடுங்க, அதை உணர்ந்த கதிர் அவளோடு சித்தார்த்தை விட்டுவிட்டு விலகி சென்று பேசினான்.அம்மா ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார் என்று சந்தியாவுக்குப் புரிந்தது. இல்லையென்றால் விமானத்தில் கிளம்ப மாட்டார்கள் என்று தெரியும்.
“அம்மா என்னை மதுரை மெடிக்கல் காலேஜ்லதான் சித்துப் படிக்கச் சொன்னாங்க. நான் தான் கதிர் மாமாவுக்காக இங்க வந்தேன். நான் அங்கயே இருந்திருந்தா எங்க அம்மாவுக்கு இப்படி ஆகி இருக்காது இல்ல…” என்று சந்தியா கேட்ட போது சித்தார்த்துக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
அவள் சொன்னதைக் கேட்ட கதிருக்கு தனக்காக அவள் பெற்றோர் குடும்பம் அனைத்தையும் விட்டுவிட்டு தானே வந்தாள். அவளை நல்லபடியாக அவள் குடும்பத்துடன் சேர்த்து விட வேண்டும் என்று நினைத்தான்.