ஒரு முறை அப்படி ஆன போது மனது கேட்காமல் “ஹாஸ்பிட்டலுக்கு போனா, ஒரு வாரம் பிள்ளை கஷ்டப் படாதுல்ல?”, என்றான்.
“போன மாசம் உங்களுக்கு சளின்னு நீங்க ஊசி போட போனீங்க தானே? எத்தனை நாள்ல சரியாச்சு?”, என்று கேட்டாள் வனமங்கை.
அதுவும் ஒரு வாரம் ஆனது தான். அதனால் அவன் அமைதியாக இருக்க “எந்த மருந்தா இருந்தாலும் சரியாக கொஞ்சம் நாள் ஆகும். நாம இயற்கையா கொடுக்குற மருந்துல எந்த பாதிப்பும் வராதுன்னு நான் முழுசா நம்புறேன். என்னை என் போக்குல விடுங்க. என் காலத்துக்கு பிறகு பிள்ளைகள் என்ன செய்றாங்களோ செஞ்சிட்டு போகட்டும்”, என்று அவள் சொன்ன பிறகு அவன் என்ன சொல்வானாம்?
பழைய விஷயங்களை எல்லாம் நினைத்துப் பார்த்தவன் “இப்ப என்ன டி செய்றது?”, என்று கேட்டான்.
“காச்சல் நெருப்பா சுடுது. பாப்பு கண்ணு திறக்காம கிடக்குறா. இது வேற ஏதோ காச்சல் மாதிரி இருக்கு. அவ விளையாடின தண்ணில இருந்து கூட பரவிருக்கலாம். அதனால…”
“என்ன டி பயங்காட்டுற? இப்ப என்ன செய்யணும்னு சொல்லு மங்கை”
“குச்சி கிட்ட கொண்டு போகலாம்”
“அங்கயா? நேரம் ஆகுமே டி?”
“பரவால்ல, அங்கயே போங்க”, என்று சொன்னதும் அப்படியே ஜீப்பைத் திருப்பினான்.
அன்று இரவு முழுவதும் நெற்றியில் வெள்ளைத் துணியால் பத்து போடுவது, மூலிகை பொடியை கலக்கி அவளை குடிக்க வைப்பது என மகளைப் பார்த்துக் கொண்டாள் வனமங்கை. மதிக்கும் தேன்மொழியை நினைத்து கவலையாக தான் இருந்தது. அவளுடன் சண்டை போட்டாலும் அவளுக்கு ஒன்று என்றால் துடித்து விடுவான். “அப்பா, அவளைப் பாக்க பாவமா இருக்கு. குச்சி மாமா கிட்ட போனா சரி பண்ணிடுவாங்க. வேகமா போ பா”, என்று மதி சொன்னதும் வேகத்தைக் கூட்டினான் மாதவன்.
காலையில் அங்கே வந்து சேர்ந்து விட்டார்கள். அந்த காட்டுக்குள் ஜீப் நுழைந்ததும் எப்போதும் போல் வனமங்கை உடல் அதிர்ந்தது. எந்த மாதிரியான துன்பங்களை எல்லாம் அவள் பார்த்த இடமாயிற்றே. குத்துயிரும் கொலையுயிறுமாக அவளை ஆக்கிய பார்த்த காடாயிற்றே.
ஜீப் வந்த சத்தம் கேட்டுய் வெளியே வந்து பார்த்தான் குச்சி. அவன் இப்போது அழகான ஆண் மகனாக மாறி இருந்தான். படிக்க வில்லை என்றாலும் குச்சி இப்போது பல உயிர்களைக் காப்பாற்றும் சித்த வைத்தியன்.
அவர்களைக் கண்டு “அக்கா, மாமா, வாங்க வாங்க, டேய் மதி வா டா”, என்று வரவேற்ற படி அவர்களை நெருங்கியவன் சோர்ந்து இறங்கிய தேன்மொழியைக் கண்டு துடித்துப் போனான்.
“பாப்பு, பாப்புக்கு என்ன ஆச்சு? என்ன ஆச்சு மாமா?”
“ஜுரம் தான் டா”
“இல்லையே, ஏதோ வேற மாதிரி இருக்கு. சரி வாங்க உள்ள போகலாம்”, என்று குச்சி சொன்னதும் மகளை கை அணைப்பீலே கூட்டிச் சென்றான் மாதவன். உடனே மருமகளுக்கு சிகிச்சையை ஆரம்பித்து விட்டான் குச்சி.
அவளுக்கு மருந்து கொடுத்து விட்டு வெளியே வந்தவனிடம் என்னவென்று கேட்டார்கள். “அவளுக்கு வந்துருக்குறது விஷக் காச்சல்க்கா. உயிருக்கு ஆபத்து இல்லை. ஆனா சரியாக ரெண்டு மூணு நாள் ஆகும். எப்படி ஆச்சு?”, என்று கேட்டான்.
அவள் நடந்ததைச் சொல்லிய படி மாதவனை முறைத்தாள். “மாமாவை ஏன்க்கா முறைக்கிற? பிள்ளைகளை எங்கயும் கூட்டிட்டு போகாம இருக்க முடியுமா?”, என்று மாமனுக்கு பரிந்து பேசினான்.
“நல்லா சொல்லு டா குச்சி. அப்புறம் இப்படி இன்னொரு தரம் ஏதாவது வராம இருக்க ஏதாவது பொடியை தயாரிச்சு உன் அக்கா கிட்ட கொடுத்துரு. அப்ப தான் என்னை விடுவா, அது வரை பாட்டா பாடிட்டு இருப்பா”, என்று சிரித்தான்.
“பாப்பு பக்கத்துல இருங்க. நான் அப்பாவைக் கூட்டிட்டு வரேன். வா டா மதி”, என்று சொன்ன குச்சி மதியை அழைத்துக் கொண்டு வெளியே செல்ல மாதவனும் வனமங்கையும் மகள் அருகில் அமர்ந்தார்கள்.
வனமங்கை உர்ரென்று இருக்கவும் “என்ன டி?”, என்று கேட்டான்.
“நான் அறிவுரை சொல்றது உங்களுக்கு பாட்டு பாடுற மாதிரி இருக்கா?”, என்று கேட்டாள்.
“சும்மா சொன்னேன் போதுமா? ஸ்கூல்ல தான் என்ன சொல்லுவாங்கன்னு தெரியலை”
“அதெல்லாம் என்ன சொன்னாலும் சரியான உடனே தான் இங்க இருந்து போகப் போறோம்”
“பாடம் என்னத்துக்கு ஆகும் டி?”
“அதெல்லாம் நம்ம பிள்ளைங்க உங்களை மாதிரி அறிவாளிங்க. நல்லா படிச்சிருவாங்க”, என்று சொல்ல அவளைப் பார்த்து சிரித்தான்.
“அமைதியா இருங்க. அவ தூங்கட்டும்”
“சரி டி, அப்புறம் பாடம்னு சொன்ன உடனே தான் நினைவுக்கு வருது. உன் தம்பியோட மருத்துவக் கலை பத்தி ஒரு ஆர்டிக்கிள் எழுதணும்னு நம்ம வைஷு சொல்லிட்டு இருந்தா. நாம எப்படியும் நாலஞ்சு நாள் இங்க தான் இருப்போம். அவளைக் கூப்பிடலாமா?”
“இதெல்லாம் என் கிட்ட கேக்கணுமா? கூப்பிடுங்க. நான் அத்தைக்கு சொல்றேன். பயந்துட்டு இருப்பாங்க”, என்று சொல்லி கீதாவை அழைத்தாள். மாதவன் வைஷ்ணவியை அழைத்தான்.
“அப்படியா? என்ன திடீர்னு? என் கிட்ட சொல்லவே இல்லையே?”
“தேனுக்கு காச்சல்”
“ஐயோ, இப்ப எப்படி இருக்கு? என் கிட்ட கூட்டிட்டு வந்துருக்கலாம்ல?”
“நல்ல டாக்டர் கிட்டயே உன் அத்தை கூட்டிட்டு போக விட மாட்டிக்கா. இதுல உன் கிட்டன்னா”
“அத்தை பத்தி தெரியும் தான். ஆனா இப்ப நீங்க என்ன சொல்ல வறீங்க? நான் நல்ல டாக்டர் இல்லையா?”
“நீ டாக்ட்டரே இல்லையே?”
“மாமா”
“படிச்சு முடிக்கலைல்ல? அதைச் சொன்னேன். சரி ஒரு முக்கியமான விஷயம் சொல்ல தான் கூப்பிட்டேன்”
“என்ன மாமா?”
“சித்த மருத்துவம் பத்தி ஏதோ பண்ணணும்னு சொன்னியே? இங்க வரியா? நாங்க நாலஞ்சு நாள் இங்க தான் இருப்போம்”
“கண்டிப்பா வரேன் மாமா. இந்த சான்ஸை விட்டுருவேனா? ஆனா வீட்ல….”
“அக்கா கிட்ட பேசவா?”
“வேண்டாம் மாமா நீங்க தேனைப் பாருங்க. நான் அப்பா கிட்ட சொல்லி அம்மாவை கரெக்ட் பண்ணிக்கிறேன்”, என்று சொல்லி போனை வைத்தவள் தந்தைக்கு அழைத்து அனுமதி வாங்கினாள்.
கிருஷ்ணன் சரி என்று சொன்னாலும் வனிதா மறுக்க அவளுடைய கணவன் தான் அவளை சம்மதிக்க வைத்தான். அப்படியும் அவள் மறுக்கவே “நானே கூட்டிட்டு போயிட்டு கூட்டிட்டு வரேன் டி”, என்றான்.
“அப்படின்னா பரவால்ல”, என்று சொன்னாள் வனிதா. தேன்மொழிக்கு காச்சல் என்று கேள்வி பட்டு கண்ணனுக்கு அவளைக் காண வேண்டும் போல இருந்தது. “அப்பா நானும் வரேன். என்னையும் கூட்டிட்டு போங்க. எனக்கு லீவ் தான்”, என்றான் கண்ணன்.
கண்ணன் இப்போது பன்னிரெண்டாம் வகுப்பில் இருந்தான். “படிக்க ஸ்டடி லீவ் விட்டா நீ ஊர் சுத்த போறேன்னு சொல்ற? அதெல்லாம் வேண்டாம்”, என்று வனிதா மறுக்க “அம்மா பிளீஸ் மா”, என்று அவள் கன்னம் பற்றிக் கொஞ்சினான் மகன்.
“சரி சரி, கிளம்பு. எல்லாரும் போறீங்கன்னா நான் மட்டும் இங்க இருந்து என்ன பண்ணப் போறேன்? நானும் வரேன். எனக்கும் என் மருமகளைப் பாக்கணும்”, என்று சொல்ல அனைவரும் கிளம்பினார்கள்.
வைஷ்ணவிக்கு அழைத்த கிருஷ்ணன் “எல்லாரும் வரோம் டா வைஷு. நீ கிளம்பி ரெடியா இரு. உன்னைப் பிக்கப் பண்ணிக்கிறோம்”, என்று போனை வைத்தான்.
அவளது தோழி மித்ரா “என்ன டி வைஷு, ஏதோ பரபரப்பாவே இருக்க?”, என்று கேட்டாள்.
“உன் ஆளைப் பாக்க போறேன் டி. போட்டோ எடுத்துட்டு வரவா?”, என்று கேட்டு கண்ணைச் சிமிட்டினாள் வைஷ்ணவி.
அதைக் கேட்டு மித்ரா முகம் மின்ன “போட்டோ எல்லாம் எதுக்கு நேர்ல பாக்க சான்ஸ் கிடைச்சா நல்லா இருக்கும்?”, என்றாள்.
“ஏய் மித்து, நீயும் எங்க கூட வரியா? இது தான் நல்ல சான்ஸ் டி”
அவனைக் காண ஆவல் இருந்தாலும் “நானா? அங்கயா?”, என்று தயங்கினாள் மித்ரா.
“வீட்ல கேட்டு சொல்லு டி. உன்னையும் கூட்டிட்டு போறேன். புராஜெக்ட் வொர்க்ன்னு சொல்லு. இதை விட்டா வேற வாய்ப்பு கிடைக்காது”
“கண்டிப்பா கேக்குறேன்”, என்று சொல்லி பெற்றவர்களிடம் போராடி சம்மதம் வாங்கி அவர்களுடன் கிளம்பினாள்.
வனமங்கை மற்றும் மாதவனின் காதல் கதையை வைஷ்ணவி மித்ராவிடம் சொல்லும் போது தான் குச்சியைப் பற்றியும் சொல்லி இருந்தாள்.
“எனக்கு குச்சி அண்ணனை ரொம்ப பிடிக்கும். அவங்களைப் பாத்ததுல இருந்து தான் டாக்டர் ஆகணும்னு கனவே வந்துச்சு தெரியுமா?”, என்று அடிக்கடி வைஷ்ணவி சொல்ல நேரில் பார்க்காமலே குச்சி மீது மித்ராவுக்கு நேசம் துளிர் விட்டது.
அதுவும் ஒரு முறை அவனுடைய புகைப்படத்தைக் கண்டதில் இருந்து அவனை விரும்பவே ஆரம்பித்து விட்டாள். அவள் விருப்பம் நிறைவேறுமா நிறைவேறாதா என்று கூட அவளுக்கு தெரியாது. ஆனால் அவனை ஒரு முறையாவது கண்டு விட மாட்டோமா என்று தவம் இருந்தாள். அதற்கு வாய்ப்பு கிடைத்தால் விடுவாளா? ஆனால் அவளைப் பற்றி குச்சிக்கு எதுவும் தெரியாது. அவனோ ஒரு தவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தான். அவனுடைய தவத்தைக் களைப்பாளா இந்த மித்ரா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
கிளம்பி இருந்த வைஷ்ணவி மற்றும் மித்ராவைக் கண்டு கிருஷ்ணன் திகைத்தாலும் “அவளும் புராஜெக்ட் பண்ண வராப்பா”, என்றாள் வைஷ்ணவி.
மித்ராவை அனைவருக்கும் பிடிக்கும் என்பதால் “தாராளமா வரட்டும் டா. வா மா மித்ரா. அத்தை பக்கத்துல உக்காரு”, என்று சொல்லி விட்டார் கிருஷ்ணன். அவர்களை ஏற்றிக் கொண்டு கார் கிளம்பியது.
கீதாவிடம் பேசி விட்டு வந்த வனமங்கை “என்னங்க வைஷு கிட்ட பேசினீங்களா? என்ன சொன்னா? வராளா?”, என்று கேட்டாள்.
“வருவாள்”, என்று அவன் சொன்ன போது குச்சி உள்ளே வந்தான்.
“அப்பா எங்க டா?”, என்று கேட்டாள் வனமங்கை.
“பூஜைல இருக்கார். இப்ப வந்துருவார். மதி தாத்தாவை கூட்டிட்டு வறேன்னு அங்கே உக்காந்துட்டான். அப்பா இப்ப முனிவர் மாதிரி ஆகிட்டார்க்கா”, என்று சிரித்தான் குச்சி.