மாதவன் வனமங்கையைக் கண்ட நிகழ்வு நடந்து இரண்டு நாட்கள் ஓடியிருந்தது. அன்று மாதவன் வெற்றியை அழைத்துக் கொண்டு சந்தைக்கு சென்றிருந்தான்.
அங்கே வனமங்கையும் தன்னுடைய தம்பியுடன் சந்தைக்கு வந்திருந்தாள். அவள் முகத்தில் சோகம் கவிழ்ந்திருந்தது. அவளுடைய மாலை தொலைந்து போனதில் இருந்தே அவள் அப்படித் தான் இருக்கிறாள்.
ஏதோ தன்னுடைய அன்னையே தன்னை விட்டு போனது போல அவளுக்கு தோன்றியதால் அவளால் எதிலுமே கவனம் செலுத்த முடியவில்லை. தேனப்பன் கூட என்னவென்று கேட்டு விட்டார். ஆனால் பிள்ளைகள் இருவரும் அவரிடம் எதுவுமே சொல்ல வில்லை.
சொன்னால் கண்டிப்பாக அவர் மன வேதனைப் படுவார். அவருடைய பழைய நினைவுகளை கீறி விட்டது போல இருக்கும் என்பதால் அதைச் சொல்லாமல் மறைத்து விட்டனர்.
தமக்கையின் சோகம் கண்ட குச்சியும் தன்னுடைய சகாக்களை அழைத்துக் கொண்டு மாலை தொலைந்து போன இடத்துக்கு வந்து பார்த்தான். ஆனால் அவன் கண்களுக்கு அவளுடைய தாவாணியோ அந்த மாலையோ தெரியவே இல்லை.
அந்த காட்டுக்குள் மீண்டும் நுழைய முடியாதவாறு அவர்கள் தோண்டி வைத்திருந்த குழியையும் அடைத்திருந்தனர். மீண்டும் பள்ளம் தோண்டலாம் என்று எண்ணி அவன் அமரும் போது யாரோ வரும் அரவம் உணர்ந்து அங்கிருந்து ஓடி வந்து விட்டான். அவனுக்குமே அந்த மாலையை எடுத்து எப்படி அக்காவிடம் சேர்க்கப் போகிறோம் என்று கவலையாக இருந்தது.
அவன் பிறந்ததும் அவர்களது அன்னை தாமரை இறந்து விட்டாள். அதனால் அவன் அன்னை என்ற வடிவில் வனமங்கையைத் தான் காண்கிறான். அதனால் அவள் முகம் வாடினால் அவனால் தாங்க முடியாது. மற்ற படி அவனுக்கு அந்த மாலை பெரிதல்ல.
ஆனால் அவளுக்கு அப்படி இல்லை. பிறந்ததில் இருந்து தாமரையின் கைக்குள் வளர்ந்தவள் வனமங்கை. அம்மாவின் சேலை முந்தானையை பிடித்த படி அந்த காட்டையே சுற்றி வந்த அவளுக்கு அன்னையின் இழப்பை இப்போது வரை தாங்க முடியவில்லை.
மனைவி இறந்த போது கைக் குழந்தையான குச்சியையும் பித்துப் பிடித்தவள் போன்று இருந்த மகளையும் கண்ட தேனப்பன் கூட பிள்ளைகளுக்காக தன்னுடைய சோகத்தை தனக்குள்ளே மறைத்துக் கொண்டார். வனமங்கையையும் கைக்குழந்தையாக இருந்த குச்சியைக் காண்பித்தே மாற்றினார்.
தாமரையின் கழுத்தில் கிடந்த தாலியை எடுத்து வைத்திருந்தவர் வனமங்கையிடம் கொடுத்து “இந்தா இதை வச்சிக்கோ. உன் அம்மா உன் கூடவே இருப்பா. அதனால இனி எப்பவும் அவளை நினைச்சு அழக் கூடாது கண்ணு. இனி தம்பியை நீ தான் பாத்துக்கணும். என்னால உங்க கூடவே இருக்க முடியாது. நான் ஏதாவது வேலை செஞ்சா தான் உங்களுக்கு கஞ்சியோ கூலோ ஊத்த முடியும்”, என்றார்.
தந்தை சொன்னதில் இருந்த நியாயம் பிடிபட வனமங்கை தன்னுடைய மனதை மாற்றிக் கொண்டாள். அவள் மனம் மாற முக்கியக் காரணம் குச்சி என்று சொன்னால் அது மிகையல்ல. அதன் பின் வந்த நாட்களில் அந்த மாலை அவளுடைய உடையுடனே தான் இருக்கும். தாமரையே தன்னுடன் இருப்பது போன்ற ஒரு நிம்மதி எழும். இப்போது அது இல்லை என்றதும் அவளால் தாங்க முடியவில்லை.
அந்த காட்டுப் பக்கம் சென்று மாலையைத் தேடிப் பார்க்க அவளுக்கும் தோன்றியது தான். ஆனால் அவளை குச்சி அங்கே செல்ல விடவில்லை. அப்படி அவள் போனால் தந்தையிடம் சொல்லி விடுவேன் என்று அவன் மிரட்டி வைத்திருப்பதால் அவள் அந்த காட்டுப் பக்கம் செல்லவே இல்லை.
அவள் மனதை சிறிது மாற்ற தான் சந்தைக்கு அழைத்து வந்தான் குச்சி. “இங்க வந்தாலாவது கொஞ்சம் சந்தோஷமா இருப்பேன்னு நினைச்சு தான் கூட்டிட்டு வந்தேன். இங்க வந்தும் இப்படியே இருக்கியேக்கா?”, என்று கேட்டான் குச்சி.
ஆனால் வனமங்கையிடம் இருந்து எந்த பதிலும் வராததால் அவளை திரும்பிப் பார்த்தான். அவளோ வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய முகத்தை குழப்பமாக பார்த்தான் குச்சி. அவள் கண்கள் எங்கோ நிலைகுத்தி இருந்ததைக் கண்டு “எங்க பாக்குறா?”, என்று எண்ணி அதே பக்கம் பார்வையைத் திருப்பினான்.
அங்கே வெற்றியும் மாதவனும் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். சந்தையில் பொருள்கள் வாங்க தான் மாதவன் வெற்றியை அழைத்துக் கொண்டு வந்திருந்தான். வனமங்கையின் பார்வை மாதவன் மீதே இருந்தது. ஒரு சின்ன படபடப்பும், மாலை கிடைத்து விடுமா என்ற ஆர்வமும் கலந்து அவனைப் பார்த்தாள்.
“அவங்க யாருக்கா? அவங்களை உனக்கு தெரியுமா?”, என்று கேட்டான் குச்சி.
“அன்னைக்கு அவர் கிட்ட தான் டா குச்சி மாட்டிக்கிட்டேன். அவர் கிட்ட தான் என் மாலை இருக்கும். இருக்கும் தானே? நான் போய் கேக்கட்டுமா? நீ இரு. நான் கேட்டுட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு ஒரு எட்டு எடுத்து வைத்தாள் வனமங்கை. அப்போது அவள் கையைப் பற்றி தடுத்தான் குச்சி.
“என்ன டா?”, என்று கேட்ட படி தம்பியைப் பார்த்தாள்.
“உனக்கு பைத்தியமாக்கா? நீயே போய் உன்னைக் காட்டிக் கொடுக்க போறியா? அனுமதி இல்லாம நீ அந்த காட்டுக்குள்ள நுழைஞ்சதுக்கு சட்டப் படி தண்டனை குடுப்பாங்க. அப்படி இருக்கும் போது அவங்க கண்ணு முன்னாடி போய் நின்னா உன்னை பிடிச்சிர மாட்டாங்களா? உன்னை வேற அவர் பாத்துட்டார்னு சொன்ன?””
“வேற என்ன டா செய்றது? அப்புறம் எப்படி என் மாலை கிடைக்கும்?”
“அந்த ஆள் உன்னை நிஜமாவே பாத்தாரா?”
“ஆமா”
“அப்படின்னா நீ அவர் கண்ணுல விழக் கூடாது. இங்க வா இந்த கடைக்குள்ள ஒழிஞ்சிக்கோ. அங்க என்ன நடந்தாலும் நீ வராத. உன்னை அவர் மறுபடியும் பாத்துறக் கூடாது”, என்று சொல்லி அவளை மறைந்து இருக்க வைத்தவன் மாதவனையே நோட்டம் விட்டான்.
கடைக்குள் நின்று வனமங்கையும் மாதவனைத் தான் பார்த்திருந்தாள். கம்பீரமாய்…. பெரிய குடும்பத்து பையன் என்ற அடையாளத்துடன் அங்கே இருப்பவர்களுடன் ஒட்டாத தோற்றத்துடன்.. களையாக இருந்தான் மாதவன்.
ஒரு ஜெர்க்கின் அணிந்து, தன்னுடைய இரு கைகளையும் பேண்ட் பாக்கெட்டில் விட்டபடி வெற்றியிடம் பேசிய படியே நடந்து வந்து கொண்டிருந்த அவனது தோற்றம் அவளை சிறிது கவரத் தான் செய்தது. அவனது இதழ்களில் இருந்த புன்னகை அவளுக்கு ரசிக்கும் ஆர்வத்தைக் கொடுத்தது. அவர்களது மலை ஜாதிக் கூட்டத்தில் இருந்த இளைஞர்கள் எல்லாம் பரட்டைத் தலையுடன் தாடியுடன் தான் இருப்பார்கள்.
பார்ஸ்ட் ஆபிசர் என்ற பதவிக்கு பொருத்தமாக இருந்தவனின் பிம்பம் முதல் முறை பார்த்த போதே அவள் மனதில் பதிந்தது தான். ஆனால் இன்றோ அவனிடம் இருந்து பார்வையை திருப்ப முடியாதவாறு ரசித்துக் கொண்டிருந்தாள். அவனது கம்பீரத்தின் மீது ஒரு பிரமிப்பு வந்திருந்தது என்று கூட சொல்லலாம். அவளுடைய பாட்டி தாத்தா சொன்ன கதைகளில் வரும் ராஜகுமாரன் தான் அவனைக் கண்டதும் அவளுக்கு நினைவுக்கு வந்தான்.
தன்னை ஒரு பெண் வைத்த கண் எடுக்காமல் பார்க்கிறாள் என்றும் அவள் மனதில் தான் ஒரு ஹீரோ இமேஜுடன் பதிந்து கொண்டிருக்கிறோம் என்று மாதவனுக்கு தெரியாதே. அதனால் அவன் இயல்பாக இருந்தான்.
ஒரு நொடி யோசித்த குச்சி பின் நிதானமாக மாதவனை நோக்கி நடந்தான். அவன் மாதவனின் அருகே செல்ல செல்ல இங்கே வனமங்கைக்கு படபடப்பு கூடியது என்று தான் சொல்ல வேண்டும். குச்சி அவனிடம் பேசி மாலையை வாங்கிக் கொண்டு வந்து விடுவானா என்று ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
மாதவனுக்கும் குச்சிக்கும் இடையில் ஒரு அடி இடைவெளி இருக்கும் போது மயங்கி விழுந்தான் குச்சி. அவன் மயங்கி விழுந்ததைக் கண்டு வெற்றியும் மாதவனும் திகைத்துப் போனார்கள் என்றால் தம்பி விழுந்ததைக் கண்டு பதறிப் போனாள் வனமங்கை.
அடுத்த நொடி மறைவில் இருந்து வேகமாக வெளியே ஓடினாள். அப்போது தான் குச்சி சொன்னது நினைவில் வர தன்னுடைய முந்தானையை எடுத்து முகத்தை சற்று மறைத்தது போல கட்டிக் கொண்ட படி அவர்களை நெருங்கினாள். அதற்குள் கூட்டம் அங்கே கூடியிருக்க “வனமங்கை உன் தம்பி மயங்கி விழுந்துட்டான் பாரு டி. பாத்து பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு போ. பய சாப்பிட்டானா இல்லையான்னு தெரியலையே?”, என்று ஒரு பெண்மணி சொல்ல தம்பியைப் பார்த்தாள்.
மாதவன் அவனை தன்னுடைய மடியில் போட்டுக் கொண்டு அவன் கன்னத்தை தட்டினான். “தம்பி, இங்க பாரு டா. கண் முழிச்சிக்கோ”, என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே வெற்றி தண்ணீர் பாட்டிலுடன் அங்கே வந்தான்.
வனமங்கையும் ஓடிச் சென்று குச்சி அருகில் அமர்ந்து “குச்சி என்ன ஆச்சு டா உனக்கு ஐயோ? நான் இப்ப என்ன செய்வேன்?”, என்று அழுதாள்.
திடீரென்று ஒரு பெண் குரல் கேட்கவும் நிமிர்ந்து பார்த்தான். அவள் கண்கள் மட்டும் தான் தெரிந்தது. அந்த கண்களை அவனுக்கு வேறு எங்கேயோ பார்த்தது போல .இருக்க அவளையே ஆராய்ச்சியாக பார்த்தான். ஆனால் அங்கிருந்த நிறைய பெண்கள் அப்படி முகத்தை மூடியிருந்ததால் அவனுக்கு வேறு எந்த சந்தேகமும் வரவில்லை. குச்சிக்கு என்ன ஆனதோ என்ற பதட்டத்தில் அவன் பார்வையை அவளும் பார்க்க வில்லை.
“சார் இந்த தண்ணியை அவன் முகத்துல தெளிங்க சார்”, என்று வெற்றி குரல் கொடுத்ததும் தான் நடப்புக்கு வந்தான் மாதவன். அதை வாங்கி அவன் முகத்தில் தெளித்தான். அப்படியும் குச்சி கண் விழிக்காததால் அனைவருக்கும் பயம் வந்தது.
“சரிங்க சார்”, என்று வெற்றி சொல்லும் போது “வேண்டாம் வேண்டாம், நாங்க அங்க எல்லாம் போக மாட்டோம். வைத்தியர் கிட்ட தான் போவோம்”, என்றாள் வனமங்கை.
“இல்லைங்க இந்த பையன் ரொம்ப வீக்கா தெரியுறான். குளுக்கோஸ் ஏத்தினா தான் அவனுக்கு சக்தியே கிடைக்கும். நாம ஹாஸ்பிட்டல் போகலாம்”, என்று உறுதியாக சொல்ல மெதுவாக கண்களை அசைத்தான் குச்சி.
“சார், பய முழிக்கிறான் சார். கொஞ்சம் குடிக்க தண்ணீர் கொடுங்க”, என்று வெற்றி சொன்னதும் அவனை சற்று சாய்வாக பிடித்துக் கொண்டு தண்ணீர் புகட்டினான்.
மாதவனின் கைக்குள்ளே இருந்த படி அரை பாட்டீல் தண்ணீரை காலி செய்த குச்சி கண்களை நன்கு திறந்து பார்த்தான். அவன் கண் விழித்ததும் அனைவரும் நிம்மதியாக மூச்சு விட்டார்கள். கூட்டமும் மெதுவாக கலைந்து சென்றது.
“அக்கா”, என்று அழைத்த படி வனமங்கையைப் பார்த்தவன் அவள் முகத்தை மறைத்திருக்கவும் நிம்மதியானான். பின் மாதவனைப் பார்க்க “இப்ப பரவால்லயா தம்பி?”, என்று கேட்டான் மாதவன்.