டிப் தப்பாக உடை அணிந்து கண்ணாடி முன்பு நின்று தலைவாரிக் கொண்டிருந்தான் மாதவன். அவன் கிளம்பி வெளியே வந்ததும் “சார் எங்கயாவது வெளிய போகனுமா? ஜீப் எடுக்கவா?”, என்று கேட்டான் வெற்றி.
“ஆமா வெற்றி, இங்க பக்கத்துல தான். குச்சி கூட ஒரு வைத்தியர் என்னைப் பாக்க வந்தார்ல. அவரைப் பாக்க தான் போறேன். நான் போய்க்கிறேன். நீங்க உங்க வேலையைப் பாருங்க. ஜீப் கீ மட்டும் தந்தா போதும்”
“அங்கயா? அங்க எல்லாம் தனியா போக வேண்டாம் சார். அங்க இருக்குற மக்கள் எல்லாம் எப்ப எப்படி இருப்பாங்கன்னு நமக்கு தெரியாது. நீங்க தனியா அவ்வளவு தூரம் போக வேண்டாம். நான் உங்களுக்கு துணைக்கு வரேன், வாங்க போகலாம்”, என்று சொல்லி ஜீப்பை எடுத்தான்.
“உங்களுக்கு ஒண்ணு தெரியுமா வெற்றி? அங்க உள்ள மக்கள் எல்லாரும் நம்மளைப் பாத்து இப்படி தான் பயப்படுவாங்க. அவங்களுக்கு நம்ம தான் எதிரியா தெரியுவோம்”, என்று புன்னகைத்தவாறே ஜீப்பில் ஏறி அமர்ந்தான்.
“அது என்னவோ உண்மை தான் சார். அவங்க நினைக்கிறதுலயும் தப்பு இல்லை. அவங்களை காக்கனு ஒரு இலாக்காவை ஏற்படுத்திட்டு அவங்களையே கூட்டத்தோட அழிக்க நினியக்கிறது எந்த விதத்துல நியாயம்? ஆனா நாம அதை பத்தி பேசவும் முடியாது. அதை சரி செய்யவும் முடியாது. சரி அதை விடுங்க சார். ஆமா நாம இப்ப எதுக்கு அந்த வைத்தியரைப் பாக்க போறோம்?”
“என்னோட வனமங்கை கண்ணுல சிக்க மாட்டாளான்னு பாக்க தான்”, என்று மனதில் நினைத்தவன் “இல்லை அவர் ஒரு மூலிகை கேட்டிருந்தார்ன்னு எல்லார்க் கிட்டயும் சொன்னேன்ல? அதைப் பத்தி விசாரிக்க தான். அப்படியே அந்த வைத்தியசாலையையும் பாத்தா உதவியா இருக்கும்னு தோணுச்சு. அதான் போறேன்”, என்றான்.
“நல்லது சார், ஆஸ்பத்திரியை விட கண்டிப்பா இங்க வைத்தியம் நல்லா தான் இருக்கும்”, என்று சொல்லி ஜீப்பை செலுத்தினான்.
அந்த மலை கிராமம் வந்ததும் ஜீப்பை நிறுத்திய வெற்றி “இனி நடந்து தான் சார் போகணும்”, என்று சொல்லி இறங்கி நடந்தான். வனமங்கை கண்ணில் படமாட்டாளா என்ற ஏக்கத்தோடு மாதவனும் பின்னே நடந்தான்.
அவர்கள் இருவரையும் கண்டதும் அங்கிருந்த மக்கள் அனைவரும் ஒரு வித பதட்டத்திலே இருக்க மாதவன் வைத்தியர் பற்றி கேட்டதும் தான் நிம்மதியானார்கள்.
“திடீர்னு நீங்க வந்து நின்னதும் இந்த இடத்தையும் பிடுங்க வந்துட்டீங்கன்னு பயந்துட்டோம் தம்பி. வைத்தியரை பாக்க வந்தீங்கன்னு சொன்ன பிறகு தான் நிம்மதியா இருக்கு. அதோ தெரியுது பாருங்க, அந்த குடில் தான் வைத்தியர் ஐயா வீடு”, என்றார் ஒருவர்.
“இங்க குலசேகரன் வீடு எது?”, என்று கேட்டான் மாதவன்.
“ஓ குச்சி வீடா? அதோ அந்த குடுசை தான். ஆனா குச்சி எப்பவும் வைத்தியசாலைல தான் இருப்பான், அங்க போய் பாருங்க”, என்றதும் மூடியிருந்த அந்த குடிசையை ஒரு பார்வை பார்த்து விட்டு வைத்தியர் குடிலை நோக்கி நடந்தான். வெற்றியும் அவனைக் குழப்பத்துடனே பின் தொடர்ந்தான்.
குடிலுக்கு வந்த அவர்களை முதலில் கண்டது குச்சி தான். குச்சி மாதவனை முறைத்துப் பார்க்க மாதவனோ அவனிடம் ஆர்வமாக பேசினான்.
அவர்களை கண்ட வைத்தியர் அன்புடன் வரவேற்க “நான் வீட்டுக்கு போறேன் தாத்தையா”, என்று சொல்லி விட்டு ஓடி விட்டான்.
“அவனுக்கு வனமங்கைன்னா உயிர். அவளை நீங்க ஒரு வார்த்தை சொன்னதும் பயலுக்கு பொறுக்கலை. நீங்க வாங்க உக்காருங்க”, என்று சொல்லி அவர்களை அமர வைத்தார் வைத்தியர்.
“என் மேலயும் தப்பிருக்கு ஐயா”, என்று சொல்லிய படி மாதவன் அமர்ந்தான் என்றால் வெற்றியோ அவர்கள் பேசுவது என்ன என்று புரியாமல் அமர்ந்தான்.
மாதவனின் கண்கள் வனமங்கையை தேட அதை கண்ட வைத்தியர் சிரித்துக் கொண்டார். பின் அவனது ஊர் குடும்பம் வேலை பற்றி விசாரித்தார்.
“என்ன இவர் பொண்ணு கொடுக்க போற மாதிரியே நம்ம சார் கிட்ட விசாரிக்கிறார்?”, என்று எண்ணினான் வெற்றி.
சிறிது நேரம் வைத்தியரிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு இருவரும் கிளம்பினார். திரும்பி நடக்கும் போது மாதவன் எதுவோ யோசனையிலே வர வெற்றி எதுவும் அவனிடம் கேட்க வில்லை.
வனமங்கையின் குடிசை அருகே வந்ததும் மாதவனின் நடை ஒரு நொடி நின்றது. பின் அங்கு யாரும் கண்ணில் தட்டுப் படாததால் ஜீப்பை நோக்கி நடந்தான். அவன் வந்தது தெரிந்தால் அவன் நினைவில் குடிசைக்குள் வாடி வதங்கிக் கிடக்கும் வனமங்கை வெளியே வந்து அவனுக்கு தரிசனம் கொடுத்திருப்பாளோ என்னவோ? அவன் வருகையை குச்சி அவளிடம் சொல்ல வில்லை. அவனும் வெளியே வரவில்லை.
ஜீப்பில் ஏறி அமர்ந்ததும் அதை மெல்ல செலுத்திய வெற்றி “எனக்கு ஒண்ணுமே புரியலை சார். நாம எதுக்கு இங்க வந்தோம்? அந்த வைத்தியர் எதுக்கு உங்க கிட்ட அவ்வளவு விசாரிச்சார்?”, என்று கேட்டான்.
“சும்மா தான் வெற்றி”, என்று சமாளித்தான் மாதவன்.
“சும்மா தானா? நான் கூட அவர் உங்களுக்கு பொண்ணைக் கட்டிக் கொடுக்கப் போறாரோன்னு நினைச்சேன்”, என்று சொன்னதும் மாதவனின் உதடுகள் சிரிப்பால் மலர்ந்தது.
“இருக்கலாம். யார் கண்டது? ஏன் நான் மாப்பிள்ளை மாதிரி இல்லையா?”, என்று சிரிப்புடன் கேட்டான் மாதவன்.
“விளையாடாதீங்க சார்”, என்று சொல்லி சிரித்த வெற்றி ஜீப் ஓட்டுவதில் கவனம் செலுத்தினான்.
“எப்படி நான் இனி உன்னைப் பாப்பேன். உன் மனசுல என்ன இருக்கு? எனக்கு உன்னைப் பாக்கணும். உன் கிட்ட நிறைய விஷயம் பேசணும். கண்ணுல மாட்டாம என்னைக் கொன்னுட்டு இருக்க டி நீ”, என்று மனதுக்குள் வனமங்கையிடம் பேசியவாறே சீட்டில் சாய்ந்து அமர்ந்தான் மாதவன்.
அடுத்து வந்த நாட்கள் எப்போதும் போல கடந்தது. தினமும் குச்சி மூலிகை வாங்க மட்டும் அந்த பக்கம் வருவான். மாதவனைக் கண்டதும் முறைத்தாலும் வைத்தியருக்காக அந்த மூலிகைச் செடியை வாங்கிச் செல்வான்.
வனமங்கையும் காண முடியாமல் போனாலும் குச்சியைப் பார்ப்பதே மாதவனுக்கு கொஞ்சம் நிம்மதியை தந்தது. ஆனால் மாதவனைப் பற்றிய எந்த தகவலும் தெரியாமல், தன்னுடைய தம்பி தினமும் மாதவனைக் காண்கிறான் என்ற விஷயமும் தெரியாமல் அவன் நினைவில் கரைந்தாள் வனமங்கை.
ஏதோ ஒரு தவிப்பு அவளை முழுவதுமாக ஆட்கொண்டது. ஒரு வேளை மாதவனைக் கண்டு விட்டால் இந்த தவிப்பு அடங்கி விடுமோ?
அவளது நிலையைக் கண்டு அதிகம் கவலை கொண்டது குச்சி தான். அவன் எவ்வளவு முயற்சி செய்தும் வனமங்கையை பழைய படி மாற்ற முடிய வில்லை. தேனப்பன் கூட மகளிடம் எவ்வளவோ பேசி விட்டார். அவள் அப்படியே இருக்கவும் சீக்கிரம் வனமங்கைக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டார். அவர் எண்ணம் தெரிந்திருந்தால் அவள் அவருக்காக சாதாரணமாக இருப்பது போல நடித்திருப்பாளோ என்னவோ?
பொறுத்து பொறுத்து பார்த்த குச்சி அடுத்த நாள் நேராக சென்றது நின்றது வைத்தியரிடம் தான்.
“தாத்தையா, எல்லாரோட நோயையும் குணப் படுத்துறீங்க தானே? என் அக்காவையும் சரி பண்ணுங்க”, என்றான்.
“வனமங்கைக்கு என்ன டா உடம்புக்கு?”, என்று பதட்டமாக கேட்டார் வைத்தியர்.
“உடம்புக்கு ஒண்ணும் இல்லை. ஆனா அன்னைல இருந்து அவ அப்படி தான் இருக்கா. என் கிட்ட சரியா பேசுறது இல்லை. வீட்டை விட்டு வெளியவே வர மாட்டிக்கா. சரியா சாப்பிடவும் மாட்டிக்கா”
“அடேய் உன் அக்கா வீம்புக்காரி. அதனால தான் அந்த பாரஸ்ட் காரன் சொன்னதை அவளால் தாங்க முடியலை. இதுக்கு நாம என்ன செய்ய முடியும்? அவளே மாறுவா விடு”
“எனக்கும் என்ன செய்யன்னு தெரியலை தாத்தையா? நானும் அந்த சாரை முறைக்க தான் செய்றேன். ஆனா அவர் என் கிட்ட இப்ப வர நல்லா தான் பேசுறார். அன்னைக்கு பேசினதுக்கு மன்னிப்பும் கேக்குறார். ஆனா அக்கா தான்….”
“அவர் மன்னிப்பு கேட்டது உன் அக்காவுக்கு தெரியுமா?”
“தெரியாது. அன்னைக்கு அவர் இங்க வந்ததும் தெரியாது தாத்தையா”
“அது தெரிஞ்சா உன் அக்கா மாறிருவாளோ என்னமோ?”, என்று அவர் சொன்னது தான் தாமதம் வீட்டை நோக்கி சிட்டாக பறந்தான் குச்சி.