“கடவுளே இத்தனை நாள் வரைக்கும் இந்த காட்டுல எந்த பிரச்சனையும் இல்லை. ஆனா இந்த வெண்ணிலா பொண்ணு சாரைப் பாக்குற பார்வையே சரி இல்லையே. அது அவளோட அண்ணனுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்? இது இந்த சாருக்கு வேற தெரியாது போலயே?”, என்று எண்ணி அமைதியாக வந்தான்.
மாதவனும் அவன் அமைதியை கவனிக்க வில்லை. மௌனமான பயணமாக இருந்தது அது. சிறிது தூரம் சென்றதும் ஒரு இடத்தில் ஜீப்பை நிறுத்திய வெற்றி “இது தான் சார் அந்த கோவில்”, என்றான்.
சுற்றிலும் மரம் சூழ்ந்த அந்த காட்டுப் பகுதியில் வீற்றிருந்தது அந்த கோவில். அமைதியான அந்த இடமும் மாலை நேரமும் மனதை மயக்கும் படி இருந்தது. அங்கே இறங்கி உள்ளே நடந்து சென்றார்கள். கோவில் என்பது பெரிய அளவில் எல்லாம் இல்லை. ஒரு சின்னக் குன்றின் மீது வீற்றிந்தது.
பாறையால் ஆன படிக்கட்டுகளின் மீது ஏறி மேலே சென்றனர். இவர்கள் அங்கே சென்ற போது வனமங்கையும் இன்னொரு பெண்ணும் சேர்ந்து தான் கோவிலைச் சுற்றி பெருக்கிக் கொண்டிருந்தார்கள்.
அவளைப் பார்த்து அப்படியே திகைத்து நின்று விட்டான் மாதவன். “போதும் பொண்ணுகளா, மத்ததை நாளைக்கு பெருக்கிக்கலாம். இப்ப நேரம் ஆச்சு. வாங்க பூஜை பண்ணுவோம்”, என்று பூஜை செய்யும் தாத்தா அழைக்க இருவரும் கை கழுவ சென்றார்கள்.
அப்போது தான் வனமங்கை மாதவனைப் பார்த்தாள். பார்த்தவள் விக்கித்துப் போனாள் என்று தான் சொல்ல வேண்டும். அவனைக் கண்ட படி சிலை என நின்று விட்டாள். “கடவுளே இது அவனா? அவனே தானா??”, என்ற நினைவுடன் விதிர்த்துப் போய் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
அவனுக்கும் அதே நிலை தான். உடல் நடுங்க நின்றிருந்தவளின் படபடப்பு அவனுக்குள் ஒரு வித மயக்க உணர்வைக் கொடுத்தது, அவளுடைய ஆவலான பார்வையில் இந்த பிறப்பின் பயனை அடைந்தது போல ஆனந்தம் கொண்டான். அவள் கண்ணில் இருப்பது ஆவலா தேடலா என்ற குழப்பம் இருந்தாலும் இப்போது அவளைப் பார்த்ததும் அவள் பார்வையும் அவனுக்கு சந்தோசத்தைக் கொடுத்தது. அவன் கண்ணெடுக்காமல் அவளைப் பார்க்க அவன் பார்வையில் தலை குனிந்தாள் வனமங்கை.
தன்னுடைய ஒற்றைப் பார்வைக்கு முகம் சிவந்து தலை குனிந்து நின்றவளின் வெட்கம் அவனை சுகமாக தாலாட்டியது. அவளது முகத்தையே ஆவலாக பார்த்தான். இமைகள் பட்டாம்பூச்சி போல படபடவென்று அடித்துக் கொள்ள, அந்த நீள்வடிவ கண்கள் நிலம் நோக்கி இருந்தது. அவள் நின்ற கோலம் ஒரு ஓவியம் போல அவன் கண்களுக்கு தோன்றியது.
மலரைக் கண்டால் மனதுக்கு எப்படி ஒரு அமைதி கிடைக்குமோ அது போன்ற உணர்வைக் அவளைக் கண்ட போது உணர்ந்தான் மாதவன். “ஐயோ கொல்றாளே”, என்று அவன் நினைக்கும் போது “சார் என்ன இங்கயே நின்னுட்டீங்க?”, என்று கேட்டான் வெற்றி.
அதே போல “ஐயா கூப்பிடுறார், கை கழுவிட்டு வாடி”, என்று அவள் கை பிடித்து தள்ளினாள் வனமங்கையின் தோழி.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்த படியே அங்கிருந்து நகர்ந்தார்கள். மாதவன் கோவிலுக்குள் சென்றான். தாத்தா பூஜையை ஆரம்பித்ததும் அவன் கண்கள் வனமங்கையை தேடி வாசலை நோக்கியது.
தயக்கத்துடன் கோவிலுக்குள் வந்தாள் வனமங்கை. இருவரும் எதிர் எதிரே நிற்க இந்த சந்தர்ப்பத்தைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி சொன்னான் மாதவன். அவன் பார்வை சாமி பக்கம் திரும்பியதும் வனமங்கையும் அந்த தெய்வத்தைப் பார்த்தாள்.
“கடவுளே ஒரு தடவை இவரை பாக்கணும்னு ஆசை பட்டேன். இதோ இவ்வளவு கிட்டத்துல பாத்துட்டேன். இது போதும் எனக்கு”, என்று சிரம் தாழ்த்தி வேண்டினாள். அவள் தரையில் விழுந்து கும்பிடும் போது அவளது நீண்ட பின்னல் தரையில் விழுவதைக் கண்டான். அவளது பின்னலை தொட்டு ரசிக்க ஆவல் வந்தது மாதவனுக்கு.
இருக்கும் இடம் உணர்ந்து தன்னை அடக்கிக் கொண்டாலும் அவளை ரசிப்பதை மட்டும் அவனால் விட முடியவில்லை. பூஜை முடியும் வரை அவன் அவளை ரசித்தான் என்றால் அவளோ அவன் பார்வையில் தடுமாற்றத்துடன் நின்றாள். இந்த உணர்வுகள் அனைத்தும் இருவருக்குமே புதியதாக இருந்தது.
பூஜை முடித்த தாத்தா அனைவருக்கும் கற்பூர ஆரத்தி காட்டினார். பின் உள்ளே சென்றவர் ஒரு மண் பானையை எடுத்து வந்து “பிச்சி வனமங்கை இதுல தினையரிசி பூட்டு இருக்கு. ஆச்சி சாமிக்கு படைக்க சொல்லி செஞ்சி கொடுத்தா. நீங்களும் சாப்பிடுங்க”, என்று சொல்லி வனமங்கை கையில் கொடுத்தார்.
பின் மாதவன் புறம் திரும்பிய தாத்தா “உங்க ஆட்கள் எல்லாம் இந்த கோவிலுக்கு வர மாட்டாங்க தம்பி. நீங்க தான் வந்துருக்கீங்க. நீங்க எங்க உணவு எல்லாம் சாப்பிடுவீங்களான்னு தெரியாது. சாமி பிரசாதம்ன்னு நினைச்சு வாங்கி சாப்பிடுங்க”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்றார்.
வெற்றி அதை வாங்கவா வேண்டாமா என்று தயங்க பிச்சி அவர்கள் இருவரிடமும் ஒரு பெரிய இலையை நீட்டினாள்.
அதை வாங்கிக் கொண்டு வனமங்கையைப் பார்த்த படியே மாதவன் அமர்ந்தான் என்றால் “இது என்ன இலை? இவ்வளவு பெருசா இருக்கு?”, என்ற நினைவோடு அமர்ந்தான் வெற்றி.
இருவரும் அமர்ந்ததும் அவர்கள் அருகே வந்த வனமங்கை தன்னுடைய கையை அந்த பானையில் விட்டு அவர்களுக்கு புட்டை எடுத்து வைத்தாள். மாதவனுக்கு வைக்கும் போது அவள் அவனுடைய ஆளை விழுங்கும் பார்வையை சந்திக்க முடியாமல் தலை குனிய தன்னருகில் கமழும் அவள் வாசனையில் சற்று கிறங்கித் தான் போனான் மாதவன்.
இருவருக்கும் புட்டை வைத்து விட்டு நிமிர்ந்த வனமங்கை பானையை தாத்தாவிடம் கொடுக்க சென்றாள். பிச்சி இருவருக்கும் ஒரு மலை வாழைப் பழத்தைக் கொடுத்தாள்.
“நீங்க சாப்பிடலையா மா?”, என்று கேட்டார் தாத்தா.
“வீட்டுக்கு கொண்டு போய் சாப்பிடுறோம் ஐயா”, என்றாள் வனமங்கை.
“அதானே அந்த குரங்குப் பயலை விட்டு நீ என்னைக்கு சாப்பிட்டுருக்க? சரி ரெண்டு பேரும் எடுத்து வச்சிட்டு கிளம்புங்க. இருட்ட ஆரம்பிச்சிட்டு பாரு”, என்று சொன்ன தாத்தா வீட்டுக்கு கிளம்ப ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். அவர் கிளம்பும் போது வனமங்கையும் பிச்சியும் கிளம்பினார்கள். அவர்கள் பின்னே மாதவனும் வெற்றியும் சென்றார்கள்.
அவ்வபோது வனமங்கை மாதவனை திரும்பி திரும்பி பார்த்த படி சென்றாள்.
“சார் எதுக்கு அந்த பொண்ணு நம்மளையே பாத்துட்டு போகுது?”, என்று அவன் காதைக் கடித்தான் வெற்றி,.
“அது தான் குச்சியோட அக்கா. அன்னைக்கு பாத்தோமே? அதான் பாத்துட்டு போகுது”
“என்னது? அந்த பொண்ணா இது?”, என்று அதிர்ந்து போய் கேட்ட வெற்றி “ஓ நம்மளை தெரிஞ்சதுனால தான் பாத்துட்டு போகுதா இருக்கும். நான் கூட என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன். சரி சார், வாங்க கிளம்பலாம். இருட்டிருச்சு”, என்று சொல்லி விட்டு டார்ச் ஆன் செய்து நடந்தான்.
அவன் பின்னே மாதவனும் நடந்தான். ஒரு திருப்பத்தில் நின்ற வனமங்கை அவனைத் திரும்பி பார்த்தாள். இனி எப்போது இவனைப் பார்ப்பேனோ என்ற எண்ணம் அவள் கண்களில் வெளிப்பட அந்த தேடல் மாதவனுக்கு பிடித்தது. உல்லாசமாக அவளைப் பார்த்து சிரித்தவன் கையசைத்து விட்டு சென்றான். அதற்கே அதிர்ச்சியாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் வனமங்கை.