தூரத்தில் தெரிந்த மலைமுகட்டை வெறித்துப் பார்த்த படி அமர்ந்திருந்தாள் வனமங்கை. “அக்கா அக்கா”, என்று அழைத்தும் அவள் கவனம் அவன் மேல் பதியவில்லை. கைகளால் அவளை அசைத்தான்.
அதில் திடுக்கிட்டு அவனை பார்த்தவள் மலங்க மலங்க விழித்தாள். “அக்கா உனக்கு என்ன தான் ஆச்சு? நீ ஏன் இப்படி இருக்க?”, என்று கேட்ட படி அவள் எதிரே அமர்ந்தான்.
“எனக்கு ஒண்ணும் இல்லை டா. நீ சாப்பிடலை தானே? இரு உனக்கு எடுத்து தரேன்”
“ஐயோ அக்கா, நான் இப்ப தானே சாப்பிட்டு போனேன். அதைக் கூட மறந்துட்டியா?”
“ஓ அப்படியா? நிஜமாவே நினைவு இல்லை டா”, என்று அவள் சாதாரணமாக சொல்ல “அக்கா உன்னை திருடின்னு அந்த சார் சொன்னது தான் நீ இப்படி இருக்க காரணமா?”, என்று கேட்டான்.
வனமங்கை அவனைப் பார்க்க “சொல்லுக்கா அந்த சார் சொன்னதை தான் இப்பவும் நினைச்சிட்டு இருக்கியா?”, என்று மீண்டும் கேட்டான்.
“அந்த சார் சொன்னதை நினைக்கலை டா தம்பி. அவரையே தான் நினைச்சிட்டு இருக்கேன். எனக்கு அவரைப் பாக்கணும் போல, அவர் கூட இருக்கனும் போல தோணுது டா. நான் ஏன் இப்படி இருக்கேன்னு எனக்கே தெரியலை டா”, என்று அவள் மனது புலம்பித் தவித்தது,.
“அக்கா நீ அதுக்காக தான் இப்படி இருக்கேன்னா அதுக்கு அவசியமே இல்லைக்கா. அந்த சார் அன்னைக்கு அப்படி பேசினதுக்காக தினமும் என் கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு தான் இருக்கார். அவர் ஏதோ தெரியாம சொல்லிட்டாராம்,. உன் கிட்டயும் அவர் மன்னிப்பு கேட்டார். தினமும் என்னை மன்னிக்கச் சொல்லி கெஞ்சிட்டு தான் இருக்கார் தெரியுமா?”
“என்னது… நீ அவரைப் பாத்தியா? எப்ப டா? எப்ப டா குச்சி பாத்த?”, என்று கண்கள் மின்னக் கேட்டாள்.
பழைய வனமங்கை போல உற்சாகமாக அவனிடம் கேள்வி கேட்டவளைக் கண்டு சந்தோஷப் பட்டவன் “தினமும் பாத்துட்டு தான் இருக்கேன். வைத்தியர் ஐயா அவர் கிட்ட தான் மூலிகை வாங்க அனுப்ப்வார். காட்டுக்கு பின் பக்கம் போய் வாங்கிட்டு வருவேன்”, என்றான்.
அதைக் கேட்டு வனமங்கை அடைந்த உவகைக்கு அளவே இல்லை. அவள் ஆனந்தமாக அவனைப் பார்க்க “அவர் அன்னைக்கு நம்ம குடிசைக்கு கூட வந்தார்க்கா”, என்றான்.
“என்ன? என்ன டா சொல்ற?”, என்று கேட்டவளிடத்தில் ஒரு வித பரபரப்பு குடிகொண்டது. “என்னைத் தேடிருப்பானா? என்னைப் பாக்க தான் இங்க வந்தானா?”, என்ற கேள்வி அவளுக்குள் எழும்பியது.
“நம்ம குடிசைக்கின்னா நம்ம வீட்டுக்கு இல்லை. வைத்தியர் ஐயாவைப் பாக்க வந்தார்”
“அப்படியா? என் கிட்ட சொல்லிருக்கலாம்ல?”
“உனக்கு அவரை அவ்வளவு பிடிக்குமாக்கா? அவர் மேல உனக்கு கோபமே இல்லையா?”, என்று அவன் கேட்டதும் அவனது முதல் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் “அவர் மேல கோபப் பட அவர் என்ன டா தப்பு செஞ்சர்?”, என்று இரண்டாவது கேள்விக்கு விடையாய் அவனிடம் திருப்பி கேள்வி கேட்டாள்.
“திருடின்னு சொன்னது உனக்கு கோபம் இல்லையா?”
“அவர் தானே சொன்னார்? அதுக்கு எதுக்கு கோபம் வரணும்? அதை விடு டா. நாளைக்கும் நீ அவரைப் பாப்பியா?”
“ஆமா காலைல போவேன். நான் போகும் போது அவர் அந்த ஆத்து கிட்டயே நிப்பார். என்னைப் பாத்ததும் மூலிகை பறிச்சு தருவார்”, என்ற குச்சி “அப்பா வர சத்தம் கேக்குது. அப்பாக்கு நான் அந்த காட்டுக்கு போறது தெரியாது. அதனால காட்டிக் கொடுத்துறாத”, என்று சொல்லி விட்டுச் சென்றான்.
அதன் பிறகு வனமங்கையிடத்தில் மிகப் பெரிய மாற்றம் நிலவியது. கொஞ்சம் சந்தோசமாகவே வலம் வந்தாள். அவள் மாற்றம் குச்சிக்கு வியப்பாகவும் இருந்தது. அதே நேரம் குழப்பமாகவும் இருந்தது.
எப்படியோ அவள் மாறியதே போதும் என்று எண்ணிக் கொண்டான். அடுத்த நாள் அவன் கிளம்பும் போது இத்தனை நாள் கண்டு கொள்ளாத வனமங்கை இன்று அவனையே சுற்றி சுற்றி வந்தாள்.
அவன் போகும் போது “குச்சி அவர் பேசினா முகம் திருப்பாம பேசு டா. எனக்காக சரியா? நீ அவர் கூட முறைச்சிட்டு எல்லாம் திரியக் கூடாது”, என்றாள்.
சரி என்று மண்டையை ஆட்டி விட்டுச் சென்றான் குச்சி. அங்கே அவனுக்காக காத்திருந்தான் மாதவன்.
“வந்திட்டியா குச்சி, இரு நான் மூலிகை பறிச்சு எடுத்துட்டு வரேன்”, என்று சொன்ன மாதவன் அதை பறித்து வந்து அவனிடம் கொடுத்து விட்டு எப்போதும் போல் “சாப்பிட்டியா டா?”, என்று கேட்டான்.
எப்போதும் மூலிகையை வெடுக்கென்று வாங்கிக் கொண்டு அங்கிருந்து செல்லும் குச்சி இன்று அக்கா சொன்னது நினைவு வர “சாப்பிட்டேன்”, என்றான்.,
இத்தனை நாள் பேசாதவன் இன்று பேசவும் குஷியான மாதவன் “ஏய் பேசிட்டியா என் கிட்ட? ரொம்ப தேங்க்ஸ் டா. சாரி டா குச்சி நான் அன்னைக்கு அப்படி பேசிருக்க கூடாது”, என்று உண்மையான வருத்தத்தில் சொன்னான்..
“சரி, இனி மன்னிப்பு எல்லாம் நீங்க கேக்க வேண்டாம்”, என்று எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னான் குச்சி.
“என் மேல உள்ள கோபம் உனக்கு போயிட்டா டா குச்சி?”
“போயிட்டு சார்”
“எப்படி டா திடீர்னு போச்சு? முறைப் பொண்ணு மாதிரி முறைச்சிட்டே திரிஞ்ச”
“உங்க கிட்ட நல்ல படியா பேசணும்னு அக்கா சொல்லுச்சு”, என்று சொன்னதும் அவன் கண்கள் மின்னின.
“நிஜமா டா? உன் அக்கா என்னைப் பத்தி பேசினாளா குச்சி?”, என்று கண்கள் மின்னக் கேட்டான்.
“ஆமா”
“அவளுக்கும் என் மேல கோபமா டா?”
“இல்லை. உங்க மேல தப்பே இல்லைன்னு சொன்னா”
“இது போதும் டா எனக்கு. மனசு இத்தனை நாள் பாரமா அழுத்திட்டு இருந்தது. இன்னைக்கு தான் நல்லா இருக்கு. ரொம்ப நன்றி டா. சரி நேரம் ஆச்சு நீ கிளம்பு, பாத்து போ”, என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தவனின் மனது ஏதோ வானுலகத்தில் மிதப்பது போல குதுகளித்தது.
அன்று பகல் முழுவதுமே சந்தோசமாக சுற்றி கொண்டிருந்தான். மாலை ஆனதும் மனதில் அமைதி சூழ்ந்திருக்க “வெற்றி இங்க பக்கத்துல ஏதாவது கோவில் இருக்கா? இருந்தா கூட்டிட்டு போங்களேன்”, என்றான் மாதவன்.
“இங்க பக்கத்துல கிராமம்னு இருக்குறது, நேத்து போன ஊர் மட்டும் தான் சார். அவங்களோட கோவில் தான் இருக்கு. அங்க வேணும்னா போகலாமா?”
“வனமங்கை கோவிலுக்கு எல்லாம் வருவாளா?”, என்று அவன் எண்ண “அடேய் கடவுளைப் பாக்கணும்னு கிளம்பிட்டு உன் ஆளைப் பத்தி நினைக்கிறியே? இது தப்பு இல்லையா?”, என்று அவன் மனசாட்சி இடித்தது. அதில் தன் தவறை உணர்ந்தவன் “கோயிலுக்கு போகணும்னு தோணிருச்சு வெற்றி. அதனால போனா தான் நிம்மதியா இருக்கும். எங்கனாலும் சரி, போகலாம்”, என்று சொன்னான்.
“வாங்க போகலாம்”, என்று சொன்ன வெற்றியும் ஜீப்பைக் கிளப்பினான். அப்போது அங்கே வந்த வெண்ணிலா அவர்களிடம் “நானும் வரேன். என்னையும் கூட்டிட்டு போங்க. வந்தனாவையும் கூட்டிட்டு வரேன்”, என்று சொன்னாள்.
“வா மா”, என்று வெற்றி சொல்வதற்குள் “இந்த நேரத்துக்கு வேண்டாம் வெண்ணிலா. இன்னொரு நாள் பகல்ல உங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு போறோம்”, என்று சொன்னான் மாதவன். அவன் அப்படிச் சொன்னதும் வெற்றி எதுவும் சொல்ல வில்லை.
சிறிது நேரத்தில் இருட்டி விடும் என்ற உண்மை புரிந்த வெண்ணிலாவும் “இப்படியே தப்பிச்சிட்டு இருக்கீங்க. ஒரு நாள் என் கிட்ட மாட்டாமலா போய்றுவீங்க?”, என்று இரு பொருள் படச் சொன்னாள்.
அதைக் கேட்டு மாதவன் வெகுளியாக சிரிக்க வெண்ணிலா மனதில் எதுவோ இருக்கிறது என்று வெற்றி புரிந்து கொண்டான். அவள் கண்கள் மாதவனையே வட்டம் இடுகிறது என்று அவனுக்கு புரிந்தது.