கோவிலுக்கு போய் விட்டு ஜீப்பில் செல்லும் போது வெற்றி அமைதியாக வரவும் “என்ன ஆச்சு வெற்றி அமைதியா வரீங்க?”, என்று கேட்டான் மாதவன்.
“ஒண்ணும் இல்லை சார் சும்மா தான். நீங்க தான் ரொம்ப சந்தோஷமா இருக்குற மாதிரி இருக்கு”
“எதிர் பாக்காதது நடந்தா சந்தோஷம் வர தானே செய்யும்?”
“அப்படி என்ன நடந்துச்சு சார்? கோவிலுக்கு வந்தோம், சாமி கும்பிட்டோம் அவ்வளவு தானே? வேற எதுவும் பெருசா நடக்கலையே? ஆனா நீங்க போகும் போது இருந்ததை விட இப்ப அவ்வளவு ஹேப்பியா இருக்கீங்க?”
“அங்க இன்னொன்னும் நடந்துச்சு வெற்றி”
“என்னது? எனக்கு புரியலையே? என் கிட்ட சொல்லனும்னா சொல்லுங்க சார்”
“எனக்கும் யார் கிட்டயாவது சொல்லணும் போல இருக்கு வெற்றி. ஆனா என் ஆசை நிறைவேறுமா இல்லையான்னு எல்லாம் எனக்கு தெரியாது”
“என்ன சார் பீடிகை எல்லாம் பலமா இருக்கு?”
“விஷயம் கொஞ்சம் பெருசு தான் வெற்றி. நான் வனமங்கையை விரும்புறேன்”
“சார்..”
“இப்போ பாத்தோம்ல, அந்த பொண்ணு… அவளைத் தான்”
“என்ன சார் சொல்றீங்க?”
“அவளைப் பாத்ததுல இருந்து நான் நானா இல்லை வெற்றி. அப்படியே உயிருக்குள் நுழைஞ்சு என்னமோ பண்ணுறா? அவளைப் பாப்போமான்னு தவம் இருந்தப்ப தான் அந்த கடவுள் அவளை என் கன்னுல காட்டிருக்கார்”
“இதெல்லாம் சாத்தியமா சார்? அவங்க இனம் வேற. நாம வேற. நம்ம பாரஸ்ட் டிப்பார்ட்மெண்ட் இந்த காட்டுக்குள்ள வந்ததுக்கே அவங்க நம்மளை ஏதோ எதிரியைப் பாக்குற மாதிரி பாக்குறாங்க. இதுல பொண்ணு விசயம்னா…. கொன்னுருவாங்க சார்”
“தெரியுது. ரொம்ப ரிஸ்க் தான். ஆனா அவ இடத்துல வேற எந்த பொண்ணையும் இனி வச்சு பாக்க முடியாது. இத்தனை நாள் அழகான பொண்ணுங்களைப் பாக்கும் போது எல்லாரையும் போல நானும் ரசிச்சிருக்கேன் தான். ஆனா இவளைத் தவிர வேற யாரையும் அதுக்கப்புறம் நினைச்சது இல்லை. திருப்பி பாக்க மாட்டோமான்னு ஏங்கினதில்லை. என்னோட மனம் இவளோட அழகுல அமைதி அடைஞ்சிட்டு வெற்றி. இவ எனக்கானவள்ன்னு என் மனசு சொல்லுது”
“சரி வெற்றி, எனக்கு ஏதாவதுன்னா சப்போர்ட்டுக்கு வர மாட்டீங்களா?”
“கண்டிப்பா வருவேன் சார்”
“அது போதும் எனக்கு”
“அந்த பொண்ணு உங்களை விரும்புதா சார்?”
“தெரியலை, ஆனா இந்த கேள்விக்கு விடை தெரிஞ்சிக்க எனக்கும் ஆசையா இருக்கு”, என்று சொல்லி கண்களை மூடிக் கொண்டான். அவனை திரும்பிப் பார்த்த வெற்றிக்கு வெண்ணிலாவைப் பற்றி இப்போது இவனிடம் சொல்வோமா வேண்டாமா என்று குழப்பமாக இருந்தது. பின் அவன் அமைதியை கெடுக்க வேண்டாம் என்று விட்டு விட்டான்.
வீட்டுக்கு வந்ததும் மாதவன் அவனுடைய வீட்டுக்குள் தஞ்சம் புக அவனையே பார்த்த படி இருட்டுக்குள் நின்ற வெண்ணிலா வெற்றியின் கண்ணில் விழுந்தாள்.
அவள் அருகில் சென்ற வெற்றி “சாப்பிட்டியா மா?”, என்று கேட்டான்.
“இனி தான் அண்ணா”, என்று சொன்னாள் வெண்ணிலா.
“சரி, இருட்டுல எதுக்கு நின்னுட்டு இருக்க?”
“சும்மா தான்”
“சும்மா நின்னியா? இல்லை எங்க ஜீப் எப்ப வரும்னு பாக்க வெயிட் பண்ணிட்டு நின்னியா?”, என்று வெற்றி கேட்டதும் அதிர்ச்சியாக “அண்ணா”, என்று அழைத்தாள் வெண்ணிலா.
“உன் மனசுல என்ன ஓடுதுன்னு எனக்கு லேசா புரியுது மா. ஆனா இது வேண்டாம்”
“அண்ணா”
“ஆமா மா உன் ஆசை ஒரு நாளும் நிறைவேறாது. சார் மனசுல வேற ஒரு பொண்ணு இருக்கா”, என்று ஆரம்பித்து மாதவன் சொன்னதைச் சொன்னான். கூடவே வனமங்கை மாதவனை விரும்புறாளா இல்லையா என்ற குழப்பத்தை அவளிடம் சொல்ல வில்லை. அதைக் கேட்டு அதிர்ச்சியானாள் வெண்ணிலா.
“நீ என் தங்கச்சி மாதிரி. நீ ஏமாறக் கூடாதுணு தான் சொன்னேன். சாரை மறந்துரு. உன் மனசையும் மாத்திக்கோ. சார் கிட்ட உன் மனசையும் சொல்லாத. நான் சொன்ன விசயத்தையும் கேட்டுறாத. இருட்டுல நிக்க வேண்டாம், உள்ள போ”, என்று சொல்லி விட்டு அவன் வீட்டுக்குள் செல்ல அவளோ அதே இடத்தில் சிலை போல நின்றாள்.
அடுத்த நிமிடம் மாதவனின் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்க வேண்டும் போல் இருந்தது அவளுக்கு. ஆனால் இருட்டிய பின் ஒரு ஆணின் அறைக்குள் செல்வது தவறு என்று உரைக்க அந்த நினைப்பை விரட்டினாள். கலங்கிய கண்களுடன் வீட்டுக்குள் சென்றவள் அண்ணனுக்காக கலங்கிய கண்களை மறைத்துக் கொண்டாள்.
அடுத்த நாள் விடிந்ததும் மாதவன் நடக்கச் செல்லும் போது அவன் அருகே சென்று நின்ற வெண்ணிலா “நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்”, என்றாள்.
“குட் மார்னிங் வெண்ணிலா. என்ன பேசணும்? சரி வா நடந்துட்டே பேசலாம்”, என்று சொல்லி நடந்தான். அவனுடன் நடந்தவள் அமைதியாக வந்தாள்.
சிறிது தூரம் சென்றதும் “என்ன ஆச்சு வெண்ணிலா உன் முகம் ஒரு மாதிரி இருக்கு? எப்பவும் புன்னகை அரசி மாதிரி வலம் வருவ? இப்ப என்ன ஆச்சு?”, என்று கேட்டான்.
“என்ன ஆச்சு வெண்ணிலா? ஏன் டல்லாவே இருக்க? என் கிட்ட சொல்ல மாட்டியா?”
“நான் இப்படி இருக்க நீங்க தான் காரணம்”, என்று அவன் கண்களைப் பார்த்துச் சொல்ல அதிர்ந்து போய் நின்றான் மாதவன்.
“வாட், நானா? நான் என்ன செஞ்சேன்?”
“நேத்து நைட் நீங்க எங்க போனீங்க?”
“அது… அது வந்து….”, என்று தடுமாறியவனுக்கு அவளிடம் என்ன சொல்ல என்று தெரியவில்லை.
“என்ன தடுமாறுறீங்க? எங்க போனீங்கன்னு எனக்கு தெரியணும்”, என்று சொன்ன வெண்ணிலாவின் குரலில் ஒரு அரட்டல் வெளிப்பட அது பிடிக்காமல் முகம் சுளித்தான் மாதவன்.
மற்றவரிடம் பேசும் போதும் பழகும் போதும் மாதவன் இனிமையானவன் தான். புன்னகையுடன் வலம் வருபவன் தான். ஆனால் அவனை அரட்டும் படியோ அதிகாரம் செய்யும் படியோ யாராவது பேசினால் அடி பணிய மாட்டான். அது அவனது அம்மாவே ஆனாலும் சரி.
“உன் பேச்சு சரி இல்லை வெண்ணிலா. ஒரு நட்பின் அடிப்படையில் நீ கேட்டுருந்தா நான் கண்டிப்பா சொல்லிருப்பேன். ஆனா ஏதோ அதிகாரமா கேக்குற மாதிரி இருக்கு. அதுக்கு பதில் சொல்லணும்னு எந்த அவசியமும் எனக்கு இல்லை ஓகே? ஆமா உனக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி பேசுற?”, என்று சற்று எரிச்சலுடன் கேட்டான்.
“நீங்க அந்த மலை ஜாதிப் பொண்ணை பாக்க தானே போனீங்க?”, என்று அவள் கேட்டதும் கொஞ்சம் திக்கென்று இருந்தது.
ஆனாலும் “இது எப்படி உனக்கு தெரியும்?”, என்று கேட்டானே தவிர ஆமா என்று நேரடியாக பதில் சொல்ல வில்லை. அதே நேரம் இல்லை என்று மறுக்கவும் இல்லை.
“எப்படியோ தெரியும்? நீங்க அங்க தானே போனீங்க?”, என்று அதிலே நின்றாள் அவள்.
“இதை உன் கிட்ட வெற்றி தான் சொல்லிருக்கணும். ஆமா அவளைப் பாக்கத் தான் போனேன். இப்ப அதுல உனக்கு என்ன பிரச்சனை?”, என்று புருவம் நெரியக் கேட்டான்.
“நீங்க எதுக்கு அங்க போகணும்? “
“வாட் வெண்ணிலா? உன் பேச்சு எனக்கு இரிட்டேட்டிங்கா இருக்கு”
“ஆமா ஆமா இருக்கும் இருக்கும். இப்ப அவ பேச்சு தான் உங்களுக்கு இனிக்கும்? என் பேச்சு கசக்க தான் செய்யும்”
“எப்பா சாமி, உன் கிட்ட பேசினா என்னோட பி. பி தாறுமாறா எகிறிரும். ஆளை விடு”, என்று சொல்லி அவன் அங்கிருந்து நகரப் பார்க்க “நில்லுங்க”, என்று கத்தினாள்.
அவள் கத்தியதில் எரிச்சல் அடைந்தவன் அவளைப் பார்த்து “உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? பஜாரி மாதிரி கத்துற?“, என்று கேட்டான்.
“ஆமா ஆமா நான் லூசு தான். பஜாரி தான். பாத்த நிமிசத்துல இருந்து உங்களை விரும்பித் தொலையுறேன்ல நான் லூசு தான். எப்படா என் காதலை உங்க கிட்ட சொல்லலாம்னு நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்ல? நான் லூசு தான்”, என்று அவள் மனதைச் சொன்னதும் இப்போது அவன் அதிர்ந்து போனான்.
“வெண்ணிலா, நீ என்ன சொல்ற?”
“ஆமா மாதவன், ஐ லவ் யு”
“விளையாடாதே வெண்ணிலா. நான் உன்னை அந்த மாதிரி நினைச்சது இல்லை”
“பொய் சொல்லாதீங்க. நீங்க முதல்ல என்னை தான் ஆசையா பாத்தீங்க. எங்க இல்லைன்னு சொல்லுங்க பாப்போம்”
…
“என்னை விட அழகான பொண்ணைப் பாத்ததும் அவ பக்கம் திரும்பிட்டீங்க. எனக்கு நீங்க என்னை ரசிச்சது தெரியும் மாதவன். உங்க பார்வையை ஒரு பொண்ணா என்னால புரிஞ்சிக்க முடிஞ்சது”
“உன்னை ரசிக்கவே இல்லைன்னு நான் எப்ப சொன்னேன் வெண்ணிலா”
“அப்பாடி இதையாவது ஒத்துக்கிட்டீங்களே? அப்ப என்னை உங்களுக்கு பிடிக்கும் தானே?”