“பாவம் சந்தியா இது எதுவும் தெரியாம, அவங்க அப்பாக்கிட்ட வாய் கொடுத்து வாங்கி கட்டினா. அப்பா ஏன் மா இப்படி மாறிட்டாருன்னு ஊருக்கு போறவரை ஒரே புலம்பல். எதோ சமாளிச்சு அனுப்பிவச்சேன்…” என்றார்பெருமூச்சுவிட்டபடி.
இவர்கள் இருவரும் பேசிக்கொள்வதைக் கேட்ட லக்ஷ்மிக்கு எதுவும் புரியவில்லை. அவர் குழப்பத்துடன் இருவரையும் மாறி மாறி பார்க்க, வேதவல்லி அவரை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றவர், நடந்த அனைத்தையும் சொல்லி அழுதார்.
“இது அநியாயம் வேதா, காவேரி பண்ணதுக்குக் கதிர் என்ன பண்ணுவான்…? நான் சந்தியா என்னோட மருமகன்னு தான் அவக்கிட்ட, உரிமையா கோபத்தைக் கூடக் காட்டினேன். கதிர் உன் மகளை அவனுக்கு வரப்போற பொண்டாட்டியா தான நினைச்சிருப்பான். இப்ப திடிர்னு வேண்டாம்னு சொன்னா அவன் மனசு கஷ்டப்படாதா? உன் வீட்டுக்காரர் பண்றது நியாயமா நீயே சொல்லு?” என்றார் லக்ஷ்மி ஆத்திரமும்அழுகையுமாக.
“கவலைப்படாதீங்க அண்ணி. அவர் அன்னைக்கு எதோ கோபத்துல பேசிட்டார். அவரால கதிரை விட்டு கொடுக்க முடியாது. நிச்சயம் ஒருநாள் அவரே அவர் தன் தப்பை உணர்வார்…” என்றார் வேதவல்லி ஆறுதலாக. லக்ஷ்மி கண்ணைத் துடைத்துக்கொண்டு தன் வேலையைப்பார்க்கஆரம்பித்தார்.
வெளியே எதையும் காட்டிகொள்ளாமல் இருந்தாலும் கதிரின் மனதிற்குள் புயல் அடித்துக்கொண்டு தான் இருந்தது. ‘சந்தியாவுக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சிடுச்சா, இதுக்கு முன்னாடி நான் வராதேன்னு சொன்னாலும், என்னைத் தேடி வந்தவ, இப்ப வராததுக்குக் காரணம் இது தானா, அவங்க அப்பாவுக்கு விருப்பம் இல்லைன்னா சந்தியா என்னை விட்டு போய்டுவாளா…’ என்று அவன் மனம்குழம்பிதவித்தது.
அவனால் தன் மாமன் பேச்சை மறந்து சந்தியாவோடு இயல்பாகப் பேசவும் முடியவில்லை. அவளை வேண்டாம் என்று விடவும் முடியவில்லை.
மறுநாள் மதியம் வழக்கம் போல் கதிர் சோலையின் கடைக்குச் சென்று பேசிக்கொண்டிருந்தான். அப்போது சித்ரா சாமான் வாங்க வந்தாள். மதிய நேரம் என்பதால் கடைத் தெருவில் ஆள் நடமாட்டம் இல்லை. அதனால் இப்போதே சித்ராவிடம் சோலையின் விருப்பத்தைச் சொல்லிவிடுவது என்று முடிவு செய்த கதிர், சோலையைப் பார்த்து தலை அசைக்க, அவனும் புரிந்துகொண்டு கடையில் இருந்து இறங்கி வெளியே சென்றான்.
அவன் போவதை பார்த்த சித்ரா “ஏங்க சாமான் குடுக்காம எங்க போறீங்க?” என்று குரல் கொடுக்க,
“பக்கத்தில தான் போறான். இப்ப வந்திடுவான்.” என்று பதில் தந்தது கதிர்.
கதிரை பார்த்ததும் முகம் மலர்ந்த சித்ரா “கதிர் அண்ணா எப்படி இருக்கீங்க?” என்றாள் மகிழ்ச்சியாக,
“நல்லா இருக்கேன் சித்ரா. நீ எப்படி இருக்க?”
“நானும் நல்லா இருக்கேன்…” என்ற சித்ரா மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக,
“இந்த வருஷம் உன் படிப்பு முடியுதே, மேற்கொண்டு என்ன பண்ணப்போறசித்ரா?”என்றான்.
“மேல படிக்க வசதி இல்லை. வீட்ல மாப்பிள்ளை பார்க்கிறாங்க. ஆனா எனக்கு வேலைக்குப் போகணும்னு ஆசை.” என்றாள்சித்ராமெதுவாக.
“நீ சோலைய பத்தி என்ன நினைக்கிற?” என்று திடீரென்று கதிர் கேட்டதும், எதுக்கு இப்படிச் சம்பந்தம் இல்லாம கேட்கிறாங்க என்று முதலில் நினைத்த சித்ராவுக்கு, கதிர் காரணம் இல்லாமல் எதையும் பேசுபவன் இல்லை என்று தெரிந்ததால் “நான் ஒன்னும் நினைக்கலை. ஆனா நீங்க எதாவது சொல்லனுமா….” என்றாள்.
அவளைப் பார்த்து புன்னகைத்த கதிர் “நான் உனக்கு நல்லது தான் நினைப்பேன் சித்ரா. சோலைக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. ஆனா அவன் உன்னளவுக்குப் படிக்கலைன்னு தயங்குறான். உனக்குச் சம்மதம்னா அவங்க வீட்ல சொல்லி உன்னைப் பொண்ணு கேட்க சொல்லுவான்.” என்ற கதிர், சித்ரா முகத்தில் மறுப்பு எதுவும் தெரியாததால்தொடர்ந்து,
“எனக்குச் சின்னதுல இருந்து அவனைத் தெரியும், நல்ல பையன் சித்ரா. உனக்கு மேற்கொண்டு படிக்க விருப்பம்னா உன்னைப் படிக்கவும் வைப்பான்.” என்று கதிர் சொல்லிக்கொண்டு இருந்த போதே சோலைகடைக்குள்நுழைந்தான்.
சித்ரா ஓரக்கண்ணில் சோலையைப் பார்க்க, அவன் முகத்தில் அத்தனை பதட்டம் தெரிந்தது. அதைப் பார்த்து பொங்கி சிரித்த சித்ரா “எனக்கு நான் படிச்ச பள்ளிக் கூடத்துலேயே டீச்சர் ஆகணும்னு ஆசை. அதுக்கு என்னைப் படிக்க வைப்பாங்களான்னு கேளுங்க. அதுக்குச் சம்மதம்னா எனக்கு இந்தக் கல்யாணத்துல சம்மதம் தான்…” என்றாள் வெட்கத்துடன்.
அதைக் கேட்டு அதுவரை இருந்த பதட்டம் சட்டென்று வடிந்து சோலையின் முகம் நொடியில் பிரகாசமாக மாறியது. “ம்ம், கண்டிப்பா டா…”என்றான் கதிரிடம் சொல்வது போல்,
“அண்ணா இன்னைக்குச் சரின்னு சொல்லிட்டு நாளைக்குப் பேச்சு மாறினா நான் பொல்லாதவள் ஆகிடுவேன். நல்லா யோசிச்ச சொல்ல சொல்லுங்க.” என்றாள் சித்ரா கண்டிப்புடன்.
“என்னடா மாப்பிள்ளை என் மேல இவ்வளவு தான் நம்பிக்கையா, எனக்கும் என் பொண்டாட்டி டீச்சர்னா சந்தோசம் தான் டா…” என்றான் சோலை முகம் முழுக்கப் புன்னகையுடன்.
இவர்கள் இருவரையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கதிரின் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு. “என்னை எதுக்கு டா உங்களுக்கு நடுவுல இழுத்து விடுறீங்க. எதுனாலும் இனி நீங்களே பேசி முடிவு செய்யுங்க. என்னை ஆள விடுங்க…” என்றவன், அங்கிருந்து செல்ல, சித்ராவும், சோலையும் கதிரை புன்னகையுடன் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
திடீரென்று சோலையின் முகம் வாட, சித்ரா என்ன என்பது போல் அவனைப்பார்க்க, “அவன் இப்படிச் சிரிச்சு எத்தனை வருஷம் ஆகுது தெரியுமா….” என்ற சோலையின் குரலில் அத்தனை வேதனை இருந்தது.
“சந்தியாவும் தான் கஷ்டப்படுறா, பாவம் அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்குமா…?” என்ற சித்ரா சோலையின் முகம் பார்க்க, விடை தெரியாத கேள்விக்கு அவன் என்ன பதில் சொல்லமுடியும். அவன் மெளனமாகக் கதிர் சென்ற திசையையே பார்த்த்துக்கொண்டிருந்தான்.
சித்ரா திருமணத்திற்குச் சம்மதம் சொன்னதும், சோலை சற்றும் தாமதிக்காமல் தன் வீட்டில் சித்ராவை பெண் கேட்க சொல்ல, முதலில் அவர்கள் வசதி இல்லாதவர்கள் என்று சோலையின் பெற்றோர்தயங்க,
“அந்தப் பிள்ளை டீச்சர் வேலைக்குத் தான் படிக்கப் போகுது. அது டீச்சர் வேலைக்குப் போனா எவ்வளவு சம்பாதிக்கும் தெரியுமா…..” என்று அவன் பெற்றோருக்கு ஆசைக் காட்டியவன், மறைமுகமாக சித்ராவிடம் கொடுத்த வாக்கையும் நிறைவேற்றினான்.
சோலையின் பெற்றோரும் பெரிதாக மறுக்கவில்லை. அடுத்த வாரமே பெண் பார்க்க சென்றவர்கள், அடுத்த மாதமே நிச்சயத்துக்கு நாள் குறித்து, வரும் சித்திரையில் திருமணம் என்று முடிவு செய்தனர்.
சித்ரா சந்தியாவுக்குப் போன் செய்து தன் நிச்சயத்தைப் பற்றிச் சொன்னதும், அவள் மாப்பிள்ளையைப் பற்றி விசாரித்தாள். சோலை தான் மாப்பிள்ளை என்று தெரிந்ததும் “சோலை அண்ணாவா, அவங்க நல்லவங்க தான். ஆனா படிக்கலையே சித்ரா, உனக்கு ஓகேவா, நீ இஷ்டபட்டு தான இந்தக் கல்யாணம் நடக்குது.” என்று விதவிதமாகக் கேள்வி கேட்டாள். அவள் மனம் தோழிக்காகத் தவித்தது.
அவளின் தவிப்பை உணர்ந்த சித்ரா வேண்டுமென்றே “எனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டம் இல்லைனா மட்டும், என்னைக் கட்டிக்க டாக்டரும், கலெக்டரும் வரிசையில வந்து நிற்க போறாங்களா, இல்லை எங்க அப்பாவுக்குத் தான் அப்படிப் படிச்ச மாப்பிள்ளை வந்தா வரதட்சனை கொடுக்க வசதி இருக்கா….” என்றாள் சிரிப்பைஅடக்கிக்கொண்டு,
“ஏன் டி அப்படிச் சொல்ற, நீ எவ்வளவு படிக்கணுமோ படி. நான் எங்க அப்பாக்கிட்ட சொல்லி உன்னைப் படிக்கவைக்கிறேன். படிச்சு முடிச்சதும் நீயே உன் கல்யாணத்துக்குத் தேவையான பணத்தை சம்பாதிக்கலாம். அதை விட்டுட்டு உனக்குப் பிடிக்காத கல்யாணம் பண்ணிக்காத சித்ரா ப்ளீஸ்….” என்றாள் சந்தியா கெஞ்சலாக.
அவள் சொன்னதைக் கேட்டு வாய்விட்டு சிரித்த சித்ரா “எனக்கு இந்தக் கல்யாணத்துல ரொம்ப இஷ்டம் தான் சந்தியா. சும்மா உன் கிட்ட விளையாடினேன். அதுவும் இது எங்க அண்ணன் பார்த்த மாப்பிள்ளை. அதனால நம்பி கழுத்தை நீட்டலாம்.” என்றதும்,
“உனக்குத் தான் அண்ணனே இல்லையே….” என்று சந்தியா சந்தேகமாகஇழுக்க,
“ஏன் சந்தியா உன் கதிர் மாமாவை நான் அண்ணன்னு சொல்லக் கூடாதா….” என்று சித்ரா சொன்னதும், சந்தியாவின் முகம் மலர, “கதிர் மாமாவா, அவங்க என்ன செஞ்சாங்க?” என்றாள் ஆர்வமாக.
சித்ரா நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்ல, “மத்தவங்க காதல் எல்லாம் சேர்த்துவைக்கத் தெரியுது. ஆனா தான் மட்டும் காதலிக்கவே இல்லைன்னு சாதிப்பாராம்.” என்று முனங்கியவள், சித்ராவிடம் தான் நிச்சயத்துக்குக் கண்டிப்பாக வருவதாகச் சொல்லி போனை வைத்தாள்.
சந்தியா சொன்னது போல் சித்ராவின் நிச்சயத்துக்கு ஊருக்குச் சென்றாள். சித்ராவின் குடும்ப நிலவரம் தெரியும் என்பதால் ஆடம்பரமாக இல்லாமல் எளிமையான புடவையில் சென்றாள்.
சித்ரா வீட்டின் முன்புறம் பந்தல் போட்டு அங்கே தான் நிச்சயத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். சந்தியா சீக்கிரமே வந்து சித்ராவுடன் இருந்தாள். மாலை ஆறு மணி ஆனதும், மாப்பிள்ளை வீட்டினர்வந்தனர்.
சோலையுடன் மாப்பிள்ளை தோழனாகக் கதிர் வந்திருந்தான். சந்தியாவுக்குக் கதிர் நிச்சயத்துக்கு வருவான் என்று தெரியாது. திருமணத்திற்குத் தான் வருவான் என்று நினைத்திருந்தாள். திடீரென்று கதிரை அங்குப் பார்த்ததும், அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கதிருக்கும் அதே நிலை தான்.
இருவரும் சந்தித்துக் கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது. ரொம்ப நாள் கழித்து சந்தித்ததால் இருவரின் மனமும் அவர்கள் பேச்சை கேட்காமல், மகிழ்ச்சியில் குத்தாட்டம் போட்டது.
சந்தியா கதிரை பார்வையால் விழுங்க, அவனும் அவளை இமைக்க மறந்து பார்த்துக்கொண்டிருந்தான். இவர்கள் இருவரையும் கவனித்த சோலையும், சித்ராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கேலியாகப் புன்னகைத்து கொண்டனர். அன்று சோலை, சித்ரா நிச்சயத்தில் கதிரும், சந்தியாவும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் இருவரின் பார்வைகளும் அவர்களுக்கு வேண்டிய பதிலை தந்ததால், அதிலேயே சந்தோஷப்பட்டு இருவரும் நிம்மதியாக இருந்தனர்.