“நீயா கற்பனை பண்ணாத. உன்னை ரசிச்சதை சொல்ல எனக்கு என்ன பயம்? நேரடியாக கூட சொல்லிருப்பேன் நீ அழகா இருக்கேன்னு. இங்க பாரு வெண்ணிலா, நான் தெளிவா இருக்கேன். நீ தான் தெளியனும். ரசிப்பு தன்மை வேற, காதல் வேற”
“மாதவன்”
“அழகா இருந்தா யார் வேணும்னாலும் ரசிக்கலாம். ஆனா அதை அடைய நினைக்கிறது தான் முட்டாள் தனம். உன்னை முதல் தடவைப் பாத்தப்ப அழகா இருக்கேன்னு ரசிச்சேன் தான். ஆனா அதுக்கப்புறம் எத்தனை தடவை நாம மீட் பண்ணிருக்கோம். அப்ப எல்லாம் உன் கிட்ட ஏதாவது தப்பா நடந்துருக்கேனா? என்னை பேர் சொல்லிக் கூப்பிடுங்கன்னு நீ சொன்னப்ப எனக்கு நீ வந்தனா மாதிரி தான் தெரிஞ்ச. உன் கிட்ட பிரண்ட்லியா பழகினேனே தவிர வேற எதுவும் எனக்கு தோணலை”
“நீங்க பேசுறது எனக்கு கஷ்டமா இருக்கு மாதவன்”
“உண்மை எப்பவும் கசக்க தான் செய்யும் வெண்ணிலா. ஆனா அது தான் உண்மை. என் மனசுல வனமங்கை மட்டும் தான் இருக்கா. தேவையில்லாம நீ ஆசையை வளத்துக்கிட்டா அது உன் தப்பு. முதல் நாள் அழகா இருக்கேன்னு ரசிச்சது உண்மை தான். ஆனா நீ என் மனைவியா வரணும்னு எல்லாம் நினைச்சது இல்லை. ஆனா வனமங்கை உருவம் என் மனசுல ஒரு நொடில பதிஞ்சிருச்சு. அது நிரந்தரமா எனக்குள்ளே தங்கிருச்சு. இதுக்கு மேல இதைப் பத்தி என் கிட்ட பேசாத. உன் அண்ணன் உன் மேல உயிரையே வச்சிருக்கான். ஒழுங்கா வேலைக்கு போய் லைப்ல செட்டில் ஆகப் பாரு. இனி நாம பிரண்ட்லியா கூட பேசிக்க வேண்டாம்”, என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டான்.
நேராக வீட்டுக்கு வந்தவன் நின்றது வெற்றியிடம் தான். “நீங்க காரணம் இல்லாம வெண்ணிலா கிட்ட என்னைப் பத்தி சொல்லிருக்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியும் வெற்றி. தேங்க்ஸ், அதை சொன்னதுக்கு”, என்றான்.
“சாரி சார், நீங்க என் கிட்ட சொன்ன விஷயத்தை நான் வெண்ணிலா கிட்ட சொன்னது தப்பு தான். ஆனா அந்த பொண்ணுக்கு ஏதோ உங்க மேல நோக்கம்னு தெரிஞ்சது. அதை வளர விட வேண்டாம்னு தான் சொன்னேன். உங்க கிட்ட வந்து உளறிட்டாளா?”
“ஆமா சின்ன பொண்ணு, கூடிய சீக்கிரம் சரியாகிருவா. நீங்க கண்டு பிடிச்சதைக் கூட நான் உணரலை பாருங்க. எனிவே தேங்க்ஸ் வெற்றி”, என்று சொல்லி விட்டு அவன் வீட்டுக்கு செல்ல அங்கே வந்தாள் வெண்ணிலா. அவளைக் கண்ட வெற்றி முறைத்துப் பார்த்தான். தன்னுடைய தவறை உணர்ந்து அவள் தலை குனிந்தாள்.
“நீ நல்லா இருக்கணும்னு நினைச்சு தான் உன் கிட்ட சொன்னேன். நான் சொன்னதை உனக்குள்ளயே வச்சிருபேன்னு நினைச்சேன். ஆனா நீ சார் கிட்ட உளறிட்டு வந்துருக்க. இதுவும் நல்லதுக்கு தான். சார் இனி கவனமா இருப்பாங்கல்ல. இனி உன் வாழ்க்கையை எப்படி வச்சிக்கணும்னு நீ தான் முடிவு பண்ணனும்”, என்று சொல்லி விட்டு வெற்றியும் அங்கிருந்து சென்று விட்டான்.
அடுத்த இரண்டு நாட்கள் ஒரு மாதிரி சோகமாக முகத்தை வைத்துச் சுற்றிக் கொண்டிருந்தாள் வெண்ணிலா. ஆனால் அவளை மாதவன் கண்டு கொள்ளவே இல்லை. எதிரில் வந்தால் கூட கண்டு கொள்ளாமல் சென்றான். பாடத்தில் தன்னுடைய பார்வையை திருப்ப முயற்சி செய்து கொண்டிருந்தாள்.
மேலும் இரண்டு நாட்கள் கடந்திருந்தது. எப்போதும் மூலிகை வாங்க அந்நேரம் கிளம்பிச் செல்லும் குச்சி அன்று எழாமல் படுத்திருக்கவும் அவனை நெருங்கினாள் வனமங்கை. அவன் அனத்துவதைக் கண்டதும் அவனை நெருங்கி தொட்டுப் பார்த்தாள். அவனுக்கு காச்சல் அடித்தது. உடனே வைத்தியரை அழைத்து வந்தாள். அவர் வந்து அவனுக்கு மருத்துவம் பார்த்து அவனுக்கு தலையில் ஒரு மூலிகை பற்று போட்டு விட்டார். பின் வனமங்கையை திரும்பிப் பார்த்தவர் “இன்னைக்கு ஒரு நாள் அங்க நீ போயிட்டு வரியா மா?”, என்று கேட்டார்.
அவர் எங்கே போகச் சொல்கிறார் என்று புரிந்த வனமங்கைக்கு ஒரு நிமிடம் துள்ளிக் குதிக்க வேண்டும் போல இருந்தது. ஆனால் தயக்கமாகவும் இருந்தது.
“நானா? நான் எப்படி அங்க?…”, என்று அரை மனதாக கேட்டாள்.
“ஊர்க்காரனுங்க வேற யாரையும் அனுப்ப முடியாது மா. வேற ஏதாவது பிரச்சனையை இழுத்து விட்டுருவானுங்க. இளவட்ட பயலுக எல்லாம் பாரஸ்ட் காரங்களை அடிக்கணும்னு குதிச்சிட்டு கிடக்குறாங்க. அதனால தான் முன்னாடியும் அவங்களை ஏவாம உன்னை சொல்லிட்டு இருந்தேன். இத்தனை நாள் குச்சி செஞ்சான். இன்னைக்கு அவனுக்கு முடியலை. ஒண்ணு நீ போகணும். இல்லை நான் போகணும். நான் போகவா?”
“இல்லை இல்லை, உங்க கால் ஏற்கனவே வீங்கிருக்கு. அவ்வளவு தூரம் போக வேண்டாம்”
“வயசாகிருச்சுல்ல? அதான். சரி நீயே போயிட்டு வரியா?”
“ஆனா அப்பா போக கூடாதுன்னு சொன்னார்”
“தேனப்பன் கேட்டா என்னைச் சொல்லிரு. வெளியூர்ல இருந்து வந்து நம்ம கிட்ட மருந்து எடுக்குற ஆளுக்கு இன்னைக்கு ஏழாவது நாள் மருந்து கட்டு. இன்னைக்கு ஒரு நாள் விட்டா கூட ஆறு நாள் கட்டு வீணா போயிரும். அந்த தம்பி மூலிகை பறிச்சு வச்சிருக்கும். நீ வாங்கிட்டு வந்தா மட்டும் போதும்”, என்று சொல்ல சம்மதமாக தலையாட்டினாள்.
அவனைக் காண போகிறோம் என்ற ஆவலும் இருந்தது. அதே நேரம் அவன் என்ன சொல்வானோ என்ற பயமும் இருந்தது. கோவிலில் வைத்து அவன் பார்த்த பார்வையே அவளை இது வரை சரியாக தூங்க விட வில்லை. இதில் மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் என்ன ஆகுமோ என்று பயமாக இருந்தது. கூடவே அவனுடைய புகைப்படத்தை எடுத்ததற்கு காரணம் கேட்டாலும் அவளால் என்ன சொல்ல முடியும் என்று குழம்பிய படியே நின்றாள்.
அவள் தயங்கி நிற்பதைக் கண்டு “போய்ட்டு வா மா. அது வரை நான் குச்சி கூட இருக்கேன்”, என்று சொல்லி அங்கு அமர்ந்து கொண்டார் வைத்தியர். வேறு வழியில்லாமல் கிளம்பிச் சென்றாள்.
அதே நேரம் குச்சியை இன்னும் காண வில்லை. அவன் வருவானா வர மாட்டானா என்ற குழப்பத்தில் இருந்தான் மாதவன். எப்போதும் அவன் வந்த பிறகு தான் மூலிகை பறிப்பான் என்பதால் சும்மா நடந்து கொண்டிருந்தான்.
அப்போது யாரோ வரும் சருகு சத்தம் கேட்க திரும்பிப் பார்த்தான். அங்கே பயத்தையும் தயக்கத்தையும் முகத்தில் சுமந்த படி வந்து கொண்டிருந்தாள் வனமங்கை. அவளை எதிர் பார்க்காத மாதவன் வேகமாக அவள் அருகே ஓடிச் சென்றான். திடீரென்று தேவதையின் தரிசனத்தில் திக்குமுக்காடிய உணர்வு தான் அவனுக்கு.
அவள் வேலி அருகே வந்து நிற்க அவனும் அங்கே வந்து நின்றான். அவனுக்கு அவளை இன்னும் நெருங்க ஆவல் தான். ஆனால் அந்த வேலியைத் தாண்டி அந்த பக்கம் செல்ல முடியவில்லை. அவனைக் கண்டு அவள் தலை குனிந்த படி நிற்க அவனுக்கோ அவளைத் தவிர வேறு எங்கேயும் பார்வை செல்ல வில்லை.
வெகு நேரம் அவனிடம் இருந்து சத்தம் வராததால் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கவும் அவள் முகம் சிவந்தது. முழு வெட்கத்தில் சிவந்திருந்த அவள் முகத்தை பார்த்தவன் கிறங்கிப் போனான் என்று தான் சொல்ல வேண்டும். மனதுக்குள் ஒரு புது உணர்வு தடம் புரள ஆரம்பிக்க அவளை இழுத்து அணைக்க தோன்றியது அவனுக்கு.
அவனுடைய கண்கள் பரிவோடு, சொந்தத்தோடு அவளைத் தழுவியது. தனக்கே உரியவளைப் பார்ப்பது போல தான் அவளை ரசித்துப் பார்த்தான். அவள் அவனை மீண்டும் நிமிர்ந்து பார்த்தாள். அவன் பார்வையால் அவள் கண்கள் படபடவென்று அடித்துக் கொள்ள அந்த அழகான அசையும் ஓவியத்தை ரசித்தான் மாதவன்.
அவளோ கிறங்கி போகும் அளவுக்கு வெட்கம், தடுமாற்றம், படபடப்பு என அனைத்து உணர்வுகளும் கலந்த நிலையில் இருந்தாள். அவர்களுக்கு இடையில் வேலி இருந்தாலும் இன்னும் நெருங்கி அந்த வேலியை ஒட்டி நின்றான். இப்போது அவன் அருகாமை அவளை மேலும் படபடக்கச் செய்தது. அவனது சென்ட் வாசனை அவள் நாசியைத் தீண்டியது.
அதற்கு மேல் அங்கே இருப்பது தவறு என்று அவளது உள்ளுணர்வு உரைக்க “மூலிகை வேணும். நானும் போகணும் சார்”, என்று தயத்தை உதறிக் கூறியிருந்தாள்.
அவளுடைய ‘சார்’ என்ற அழைப்பு அவனுக்குள் சிறு சிணுக்கத்தை வர வைத்தாலும் அவள் பேசியது சந்தோஷமாக இருக்க சிறு சிரிப்புடன் அதை பறிக்கச் சென்றான்.
தேவையான அளவு மூலிகை பறித்தவன் அவள் அருகே வந்து வேலி வழியே அதைக் கொடுத்தான். அவனுடைய விரல் படாமல் அதை வாங்கியவள் அவன் கையை எடுக்கும் போது அவன் கையைப் பற்றிக் கொண்டாள். ஆனந்தமாக அதிர்ந்து போனான் மாதவன். அவள் தொட்ட அந்த நொடி படங்களில் பார்த்த காதல் காட்சிகளின் செல்ல சீண்டலும் இதழ் முத்தமும் இப்போது நினைவில் வந்து இம்சித்தது.
அவள் கை பற்றிய இடம் கதகதப்பாக இருந்தது. அவன் அவளையே ரசனையாக பார்க்க “உங்க கையைப் பிடிக்கலைன்னா இந்த கம்பில உங்க கை பட்டிருக்கும்”, என்று மெதுவாகச் சொல்லி விட்டு அவன் கையை விடுவித்தாள்.
“ஓ இதனால் தானா?”, என்று ஏமாற்றமாக இருந்தது அவனுக்கு. “நான் வரேன்”, என்று சொல்லி அவள் கிளம்ப போக அவளை உடனே அனுப்ப மனதில்லாமல் “இன்னைக்கு குச்சி ஏன் வரலை?”, என்று கேட்டான்.
“அவனுக்கு காய்ச்சல் அடிக்குது”
“ஐயோ பாவம். நான் அவனைப் பாக்க வரவா?”
“ஐயையோ வேண்டாம். நீங்க அங்க எல்லாம் வரக் கூடாது. சரி நேரம் ஆகிட்டு. நான் வரேன்”
“நில்லு வனமங்கை. என்னோட ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிட்டு போ”, என்று அவன் சொன்னதும் என்னவென்று அவனைப் பார்த்தாள்.