சித்ராவின் நிச்சயத்தன்று நந்தினி ஊரில் தான் இருந்தாள். சித்ரா நிச்சயத்துக்கு அழைத்தும், அவள் வரவில்லை. ஹாலில் அமர்ந்து டீவி பார்த்துக்கொண்டிருந்த நந்தினியிடம் அவள் அம்மா “இந்த வருஷத்திலிருந்து உனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சா தான், அடுத்த வருஷம் உன்னோட படிப்பு முடிஞ்சதும் கல்யாணத்தை வைக்கலாம்…” என்று சொன்னதும் நந்தினியின் முகம் வாடியது.
“உனக்குப் பண்ணிட்டு தான் உங்க அண்ணனுக்குப் பார்க்கணும்.”
நந்தினி எரிச்சலுடன் அமர்ந்திருந்த போது, வாசலில் அவளின் அண்ணன் மகேஷின் குரல் கேட்டது. யாரையோ வற்புறுத்தி வீட்டிற்குள் அழைத்துக் கொண்டு இருந்தான். இந்த அண்ணனுக்கு வேற வேலையே இல்லை என்று நந்தினி முனு முணுக்க, அப்போது மகேஷுடன் உள்ளே நுழைந்த கதிரை பார்த்ததும், அதுவரை இருந்த எரிச்சல் நொடியில் பறந்தோட, நந்தினியின் முகம் தாமரையாக மலர்ந்தது.
“வா, வாங்க…” என்று கதிரை தட்டு தடுமாறி அழைத்தவள், அவன் உட்கார சோபாவை காட்டினாள்.
கதிர் இல்லை வேண்டாம் என்று மறுத்தவன், மகேஷை பார்த்து “நான் கிளம்புறேன்.” என்றான்.
“இருங்க போகலாம்…” என்ற மகேஷ் தன் அம்மாவிடம் “நான் உரக் கடைக்குப் போயிட்டு திரும்பி வரும் போது வண்டி ரிப்பேர் ஆகி நின்னுடுச்சு, கதிர் அந்த வழியா வந்ததுனால, என்னை அப்படியே அவரோட வண்டியில ஏத்திட்டு வந்தார்…” என்றான்.
உடனே நந்தினி “எனக்கும் ஒரு தடவை பெட்ரோல் இல்லாம வண்டி ரோட்ல நின்ன போது, அவர் வண்டியில் இருந்து பெட்ரோல் தந்தார்.”என்றாள்குரலில்துள்ளலுடன்.
“நம்ம வீட்ல யார் வண்டி நின்னாலும், கதிர் இருக்கிறதுனால கவலை இல்லை.” என்று சிரித்த மகேஷ் “காபி போடுங்கம்மா….” என்றான்.
“இல்லை வேண்டாம், நான் கிளம்புறேன்.” என்று கதிர் கிளம்புவதிலேயே குறியாக இருக்க, நந்தினி வேகமாக ஓடிச்சென்று குளிர்பானம் கொண்டு வந்து கொடுத்தாள்.
கதிரும் அதற்கு மேல் மறுக்க முடியாமல், அதை வாங்கிக்கொண்டவன், மகேஷிடம் சில பொதுவான விஷயங்கள் பேசிவிட்டு, அவர்களிடம் விடைபெற்றுச் சென்றான்.
கதிர் சென்றதும் “ரொம்ப நல்ல மாதிரி…” என்றான் மகேஷ் தன் அம்மாவிடம். நந்தினி புன்னகையுடன் நின்றிருக்க, அவன் அம்மா “இந்தப் பையனோட தங்கச்சி தான வேற ஜாதி பையனை கல்யாணம் பண்ணிக்கிடுச்சு….”என்றார்.
“உனக்கு அவங்களைத் தெரியுமா அண்ணா?” என்று நந்தினி ஆர்வமாகக் கேட்க,
“ஒரு ஊரு, எப்படித் தெரியாம இருக்கும்?” என்ற மகேஷ் தன் தங்கையின் மகிழ்ச்சியைக் குறிப்பெடுக்கத் தவறவில்லை.
நந்தினி மேலும் கதிரை பற்றியே பேச, “கதிருக்கு ஒரு முறைப்பொண்ணு இருக்கு. இல்லைன்னா நம்ம நந்தினியை கதிருக்கே செய்யலாம். படிச்சு சென்னையில வேலை பார்க்கிறாப்புல, சொத்தும் நிறைய இருக்கு.” என்றான் மகேஷ் அவன் அம்மாவிடம்.
நந்தினியின் முகம் மேலும் மலர “அவங்களோட அத்தை பொண்ணு சந்தியா என்னோட ஃபரண்ட் தான் உனக்குத் தெரியுமே. அவ போன தடவை பார்த்தபோது அவங்க ரெண்டு குடும்பத்துக்கும் பிரச்சனை. அதனால அவங்க அப்பா கதிருக்கு அவளைச் செய்ய மாட்டேன்னு சொல்லிட்டாருன்னு சொன்னா…” என்றாள்.
“என்ன பிரச்சனையாம்?” என்று அவள் அம்மா மேலும் துருவ,
நந்தினிக்கு கதிரை கல்யாணம் செய்துகொள்வதில் ரொம்ப விருப்பம் இருக்கிறது என்று புரிந்துகொண்ட மகேஷ், தனியே தன் அம்மாவிடம் கதிரை நந்தினிக்கு பார்ப்போமா என்ற போது அவன் அம்மாவும் சரிஎன்றார். இதை எதையும் அறியாத கதிர் தன் அப்பாவை நல்லபடியாக ஊரில் கொண்டு வந்து சேர்த்துவிட்டோம் என்ற நிம்மதியுடன் சென்னைகிளம்பிச்சென்றான்.
மகேஷ்கு அவ்வளவாகப் படிப்பு வரவில்லை. தட்டு தடுமாறி கல்லூரி படிப்பை முடித்தவன், அவன் அப்பாவோடு சேர்ந்து வியாபாரம் செய்கிறான். அவனுக்குப் படிப்பு தான் வரவில்லையே தவிர வியாபாரத்தில் கெட்டிக்காரன். அவனுக்கு எங்கே எப்படிப் பேசினால் விஷயம் நடக்கும் என்று நன்றாகவே தெரியும்.
தன் தங்கை கதிரின் குடும்பத்தைப் பற்றிச் சொன்னது உண்மை தான் என்று தெரிந்து கொண்டவன், பெரியசாமியிடம் சென்று பேசினால் காரியம் நடக்காது என்பதையும் தெரிந்து வைத்திருந்தான். அதனால் கதிரின் தாய் மாமாவை சென்று சந்தித்தான்.
ஏற்கனவே சந்தியாவின் அப்பா துரை மேல் இருந்த கோபத்திற்கு இப்போது பழி தீர்த்துக்கொள்ளச் சந்தர்ப்பம் கிடைத்தால், சும்மா இருப்பாரா அவர். உன் தங்கச்சிக்கும், கதிருக்கும் கல்யாணத்தை நடத்தி வைப்பது என் பொறுப்பு என்றார் வாசு கர்வமாக. அன்றிலிருந்து வாசு லக்ஷ்மியின் மனதை கலைக்க ஆரம்பித்தார்.
“உன் மகனுக்கு என்ன குறை…? அந்தத் துரை அவன் பெண்ணைக் குடுக்கலைன்னா, என் மருமகனுக்கு வேற பொண்ணா கிடைக்காது. நான் பார்க்கிறேன் ஆயிரம் பொண்ணு…” என்பதில் ஆரம்பித்து,
“கதிரோட படிப்பையும், வேலையும் பார்த்து, என்கிட்ட நிறையப் பேரு உன் மகனை அவங்க பெண்ணுக்கு கேட்கிறாங்க, ஆள் வேற பார்க்க அம்சமா இருக்கான்னா. அது தான்.” என்று தங்கைக்கு ஐஸ் வைக்கத் தொடக்கி, அவரும் பல வழிகளில் முயற்சி செய்தார்.
ஒரு நாள் தன் மனைவியிடம் லக்ஷ்மியை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு வரச்சொன்னவர், அதே போல் மகேஷிடமும் நந்தினியை அவன் அம்மாவுடன் கோவிலுக்கு அனுப்பும்படி சொன்னார். லக்ஷ்மி நந்தினியை பார்த்தால் அவள் அழகில் மயங்கி சரி என்று சொல்லிவிடுவார் என்று நம்பினார்.
நந்தினியும், அவள் அம்மாவும் எதேச்சையாகக் கோவிலுக்கு வந்தது போல் லக்ஷ்மியிடம் காண்பித்துக்கொண்டனர். நந்தினியின் அம்மா லக்ஷ்மியிடம் வழிந்து வழிந்து பேசினார். அவர் பேசியது அனைத்தும் நந்தினியை பற்றித்தான்.
வீட்டிற்கு வந்த லக்ஷ்மியிடம் வாசு “பொண்ணு எப்படி?” என்றதும், லக்ஷ்மி புரியாமல் முழிக்க, அவரைப்பார்த்து சிரித்த வாசு “இன்னைக்குக் கோவில்ல பார்த்தியே நந்தினி, அதை நம்ம கதிருக்கு கல்யாணம் செஞ்சு கொடுக்க அவங்க வீட்ல ஆசைப்படுறாங்க.” என்றார்.
‘ஓ… இதுக்குத் தான் அந்த அம்மா அப்படிப் பேசுச்சா…’ என்று நினைத்த லக்ஷ்மி ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
“பொண்ணு எப்படி லட்சனமா இருக்கு பார்த்தியா. இன்ஜினியர்க்கு படிக்குது. உன் மகனுக்கு ஏத்த பொண்ணு. சும்மா உன் நாத்தனார் வீட்டை நம்பி, உன் மகனுக்கு வர்ற நல்ல சம்பந்தத்த வேண்டாம்னு சொல்லாத…” என்றார் அக்கறை உள்ளவர் போல்.
லக்ஷ்மிக்கு ஒரே குழப்பமாக இருந்தது. இந்தத் துரை இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறாரே, இவர் பெண்ணைக் கதிருக்கு தருவாரா, இவங்களை நம்பி கதிருக்கு வர்ற சம்பந்தத்தை வேண்டாம்னு சொல்வதா, என்று யோசித்தவர்,
தன் தம்பியிடம் “பார்ப்போம் டா, நான் உங்க மாமாக்கிட்ட பேசி பார்க்கிறேன். அவங்க அப்பா சொன்னா கதிர் மறுக்க மாட்டான்.” என்றவர் சமையல் அறைக்குள் செல்ல,
அவர் அக்கா சொன்னதைக் கேட்டு வாசு வெற்றி சிரிப்பு சிரிக்க, இவர்கள் பேசுவதைத் தன் இன்னொரு சகோதரன் பாண்டியன் வீட்டில் இருந்து கேட்ட வேதவல்லி அதிர்ச்சி அடைந்தார். சந்தியா இதை எப்படித் தாங்குவாள் என்று நினைத்தபோது அவரால் தாங்கவே முடியவில்லை. யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் தன்வீடு நோக்கிச் சென்றார்.
இதை எதையும் அறியாத கதிரும், சந்தியாவும் சோலை – சித்ரா திருமண நாளை ஆவலாக எதிர்ப்பார்த்திருந்தனர். அவர்கள் திருமணத்தில் இருவரும் மீண்டும் சந்தித்துக் கொள்ளப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் கண்களில் கனவுகளுடன் திரிந்தனர்.
சித்ராவின் திருமணம் புதன்கிழமையில் வந்ததால், சந்தியா முன் தினம் தான் கிளம்பி வந்தாள். திருமணத்திற்கு செல்லும் பரபரப்பில் அவள் தன் அம்மாவை சரியாகக் கவனிக்கவில்லை. கவனத்திருந்தால் அவரின் வாட்டம் தெரிந்து இருக்கும்.
வேகமாகக் குளித்துக் கிளம்பியவள், ஆடையையும், ஆபரணங்களையும் அணிந்து கொண்டு தயாராகிக் கீழே வந்தவள், தன் அம்மாவிடமும், அப்பத்தாவிடமும் நல்லா இருக்கா என்று ஆசையாகக் கேட்டாள். அவள் அம்மா லேசாகப் புன்கைக்க, அவள் அப்பத்தா அவளுக்குத் திருஷ்டி கழித்தவர் “அழகா இருக்கடி ராஜாத்தி. இப்ப தான் டாக்டருக்கு படிக்கிற பிள்ள மாதிரி இருக்க…” என்றார் மகிழ்ச்சியாக.
சந்தியாவும் அவர்களிடமிருந்து மகிழ்ச்சி குறையாமல் விடைபெற்று, உள்ளூர் என்பதால் திருமணத்திற்குத் தன் ஸ்கூட்டியில் சென்றாள்.
சித்ராவின் திருமணம் என்ற மகிழ்ச்சி ஒருபுறமும், கதிரை பார்க்கப் போகிறோம் என்ற ஆவல் ஒருபுறமாகச் சென்றவளின் மனம் வானில் பறக்கும் காற்றாடி போல் உயர பறந்தது. அதற்கு சற்றும் குறையில்லாமல் அவள் வண்டியும் பறந்தது.
வண்டியில் வேகமாகச் சென்றவள், எதிரே ஒரு வண்டியில் வாசும், அவர் மனைவி மேகலாவும் வருவதைப் பார்த்ததும் வண்டியின் வேகத்தைக் குறைத்தாள். வாசு வண்டியை நிறுத்தியதால், வேறு வழியில்லாமல் சந்தியாவும் அவரை மனதிற்குள் திட்டிக்கொண்டே வண்டியைநிறுத்தினாள்.
சந்தியாவைப் பார்த்து கிண்டலாகச் சிரித்த வாசு “நல்லாயிருக்கியா சந்தியா…? எப்ப வந்த…? என்று விசாரித்தார்.
“இன்னைக்குத் தான் வந்தேன் சித்தப்பா. என்னோட ஃபரண்ட்க்கு கல்யாணம் அதுக்குத் தான் போயிட்டு இருக்கேன்.” என்றாள்சந்தியா புன்னகையுடன்.
“அப்படியா நல்லது. கூடிய சீக்கிரமே, நீ உன்னோட இன்னொரு ஃபரண்ட் கல்யாணத்துக்கும் வர வேண்டியது இருக்கும்…” என்றதும், சந்தியா அவரைப் புரியாமல் பார்க்க,
“நந்தினி உன்னோட ஃபரண்ட் தான, அதுக்குத் தான் அடுத்தக் கல்யாணம்…” என்றதும் சந்தியாவின் முகம் மலர, அவர் அடுத்து சொன்ன “உன் மாமா மகன் கதிர் தான் மாப்பிள்ளை…” என்றதில் அவள் முகத்தில் புன்னகை மறைந்து, அதிர்ச்சி தோன்றியது. அதை ஒரு கொடூர திருப்தியுடன் ரசித்தபடி வாசு அங்கிருந்து சென்றார்.
சிறிது நேரம் வரை அங்கேயே சிலையாக நின்ற சந்தியா, வாசு சொல்வது உண்மையாக இருக்காது என்றே நம்பினாள். அந்த நம்பிக்கையுடனே திருமணத்திற்கும் சென்றாள். வாசலில் நண்பர்களுடன் பேசியபடி புன்னகையுடன் நின்றிருந்த கதிரை பார்த்ததும், அவள் மனதில் இருந்த கலக்கம் மறைந்து நிம்மதி வந்தது.
கதிர் சந்தியாவை கவனிக்கவில்லை. சந்தியா மண்டபத்தின் உள்ளே சென்ற போது. ஏற்கனவே திருமணச் சடங்குகள் ஆரம்பித்து இருந்தது. கூட்டமாக இருந்ததால் சந்தியா அங்கேயே ஒரு ஓரமாக நின்று மேடையில் நடப்பதை பார்த்துக்கொண்டு இருந்தாள்.
சிறிது நேரத்தில் சித்ராவை மேடைக்கு அழைத்து வந்தனர். முகம் மலர சித்ராவை பார்த்த சந்தியாவின் முகம் அருகில் வந்த நந்தினியை பார்த்ததும் மாறியது. நந்தினி அழகான பட்டுபுடவை உடுத்தி, நகைகள் அணிந்து பார்ப்பவர்களின் கண்களைக் கவரும்படி இருந்தாள்.