மாயாவி 24 ::
குமரியான நீ…
குழந்தையாக கெஞ்சும்…
அந்த சிணுங்களில் என்னை…
தொலைந்து போக வைக்கிறாயே!
என்னடி மாயவி நீ!
சில்லென்ற குளுமையும் பளிச்சென்று தெரியும் இயற்கையும் மனதிற்கு இதமாக இருக்க எல்லோரும் கூர்க்கை வலம் வந்தவர்கள் நடுநடுவே ஒருவரை ஒருவர் வாரி கொண்டும் கேலி பேசி கொண்டும் செல்ல அவர்களின் ட்ரிப் இனிதாக ஆரம்பித்தது.
“பாஸ் நீங்க எதுக்காக இந்த இடத்தை செலக்ட் பண்ணீங்க? நம்ம மாதிரி சிங்கிள்ஸ்க்கு கோவா தானே செட் ஆகும்… அங்க போயிருக்கலாம் பாஸ்…” என்று ஒருவன் சோகமாக கவியிடம் கேட்டான்.
“ஏன்டா இந்த இடத்துக்கு எல்லாம் நம்ம வர கூடாதுன்னு எதுவும் தடை போட்டு இருக்காங்களா?”
“அதெல்லாம் ஒன்னும் இல்லை பாஸ்… இது ஹனிமூன் ஸ்பாட்டாம்… அவனுக்கு கூட சுத்த ஜோடி இல்லாம தனியா சுத்தற கடுப்புல பேசறான்…” என்று வேறு ஒருவன் பதில் சொன்னான்.
“ஓஓ! அப்படியா விஷயம்… நீ ஒன்னும் கவலைப்படாதடா… கம்பெனி சார்பா உன் கல்யாணம் முடிஞ்சதும் இந்த இடத்துக்கே உன்னை ஹனிமூன் அனுப்பி வைக்கிறேன்…” என்று கவி சொன்னதும், சோகமாக இருந்தவன் உடனே பளீரென்று புன்னைகைத்து,
“சூப்பர் பாஸ்! ரொம்ப தேங்க்ஸ்… உங்களை போல ஒரு முதலாளி நாங்க பார்த்ததே இல்லை…”
“அப்படியே எனக்கு பொண்ணும் பார்த்து கல்யாணம் பண்ணி வைச்சீட்டிங்கன்னா உங்களுக்கு ரொம்ப புண்ணியமா போகும்…” என்று அவன் சொன்னதும்,
“டேய்! என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது… ஏதோ பையன் பீல் பண்ணறானேன்னு சொன்னேன்…. எனக்கே நான் இன்னும் பொண்ணு பார்க்கல… இதுல என்னையே உனக்கு பொண்ணு பார்க்க சொல்றியா…” என்று அவனை போட்டு மொத்த, அவனோ,
“அது என்ன பெரிய கம்ப சூத்திரமா பாஸ்… வீடு கட்ட இடம் பார்க்கறதுல தான் நீங்க பெரிய ஆளாச்சே… அது மாதிரி எனக்கும் பொண்ணு பார்த்து தர சொல்லி சொன்னது ஒரு குத்தமா… இதை யாரும் கேட்க மாட்டிங்களா…” என்றதும் அவனுக்கு மேலும் அடி விழ, அங்கே சிரிப்பலை.
இத்தனை நேரம் அவர்களின் பேச்சை கேட்டு சிரித்துக் கொண்டே வந்த குழலி, அவனின் இந்த கேள்வியில் பக்கென்று சத்தமாக சிரித்து விட்டாள்.
“டேய்! கவி பேசாம இந்த கம்பெனியை விட ஒரு மேட்ரிமோனி கூடவே அட்வைஸிங் சேர்த்தே ஒரு கம்பெனி ஆரம்பியேன்… உனக்கு அது நல்லா பொருந்தும்… அப்படியே உனக்கும் நீயே பொண்ணு பார்த்துக்கலாம்…” என்று குழலி கவியை கிண்டலடிக்கவும்,
ஒரு நொடி அவன் பார்வை சரஸ்வதியை தொட்டு மீண்டதை கண்டு கொண்ட குழலி, அப்போதே சரஸ்வதியின் அமைதியை கண்டு யோசனையானாள்.
“ஆமா ! ஆமா ! பூனை… நீ சொல்ற யோசனை நல்லா தான் இருக்கு… அப்படி ஆரம்பிச்சா என்னோட முதல் ஜோடி பேட்ச் அப் நீங்க தான்…” என்று அருகருகே நின்றிருந்த குழலியையும் அமுதனையும் சிரித்தவாறே கை காட்டியதும், குழலி தன்னிச்சையாக நகர, அமுதன் அவளை தன்னோடு சேர்த்து நிறுத்தியபடி,
“அடியேய் ! பஸ்ல தானே சொன்னேன்… இனி விலகறதை பத்தி யோசிக்க கூடாதுன்னு… அப்புறம் என்ன தள்ளி போற…” என்று அவளின் காதோரம் உரிமையாக கிசுகிசுத்தவனின் பேச்சும் நெருக்கமும் மங்கையவளை என்னவோ செய்தது.
இப்படியாக அனைவரும் சந்தோஷமாக அங்கு வலம் வர, சரஸ்வதி மட்டும் தனியாக பின்னாடி வந்து கொண்டிருக்க, அவளுடன் தேங்கிய கவி,
“என்னாச்சு? எதுக்கு இப்படி அமைதியா வர்ற… வரும் போதே சொன்னேன்ல இந்த ட்ரிப்ல நீ சந்தோஷமா இருக்கணும்னு… அப்புறம் என்ன?” என்று அவளை கடிய,
“உங்க விருப்பத்துக்காக எல்லாம் என் மனசை நான் மாத்திக்க முடியாது… என்னால இங்க இருக்க முடியல… நான் கிளம்பட்டுமா… யாராவது கேட்டாங்கன்னா உடம்பு சரியில்லைன்னு சொல்றீங்களா?” என்று வேகமாக ஆரம்பித்தவளின் சுருதி போக போக குறைந்தது.
“ஹே ! அபிநய சரஸ்வதி… ப்ளீஸ்… இப்படி இருக்காத… எப்பவும் போல துறுதுறுன்னு வாயாடிட்டு இருப்பல்ல அப்படி இரு ப்ளீஸ்… உன்னை இப்படி பார்க்க பார்க்க எனக்கு எப்படியோ இருக்கு… பார்க்க முடியல…” என்று வருந்தியவனை பார்த்தவள்,
“தெரியல… நான் ஏன் இப்படி இருக்கேன்னு… இப்படி இருக்கறதும் எனக்கும் பிடிக்காது… என்னவோ ரொம்ப பலவீனமா பீல் பண்றேன்… ஆனால் இதுக்கெல்லாம் நீங்க தான் காரணம்னு மட்டும் தெரியும்…” என்றவளின் குரல் குழப்பம் பாதியும் இயலாமை மீதியும் என்று ஒலித்தது.
அவளின் வார்த்தையை கேட்டு அதிர்ந்தவன் உடனே சுதாரித்து,
“சரி! எல்லாத்துக்கும் நானே காரணமா இருந்துட்டு போறேன்… நான் ஒன்னு சொல்றேன் கேட்கிறாயா?” என்றவனை கேள்வியாக ஏறிட,
“எல்லோரும் ரிலாக்ஸா மூணு நாள் சந்தோஷமா இருக்கலாம்னு இங்க வந்திருக்கோம்… எதை பத்தியும் யோசிக்காத… எதுவானாலும் இந்த ட்ரிப் முடிஞ்ச அப்புறம் பேசி தீர்த்துக்கலாம்…”
“அதுவரைக்கும் நீயும் மத்தவங்களோட சேர்ந்து என்ஜாய் பண்ணு…. சரியா… ப்ளீஸ் எனக்காக…” என்றவனின் அலைப்புறும் பார்வை அவளுக்கு என்ன உணர்த்தியதோ? சரி என்று சம்மதமாக தலையசைத்து மற்றவர்களோடு இணைந்து கொண்டு தன்னை கொஞ்சம் கொஞ்சமாக இயல்பாக்கினாள்.
மாலை ஐந்து மணிக்கு அங்கு நிலவும் குளிருக்கு ஏற்றது போல சூடாக ஏதேனும் சாப்பிடலாம் என்று எல்லோரும் அங்கிருந்த சிற்றுண்டி கடையில் குழுமினர்.
இன்றைய நாளை பற்றி பேசியபடி சூடாக காபியும் வடையையும் எல்லோரும் சாப்பிட, குழலி மட்டும் அங்கிருந்த மற்றொரு கடையை நோக்கி நகர்ந்தாள்.
மனைவியோடே இருந்தவன் அவள் அங்கிருந்து நகரவும் பின்னாடியே செல்ல, அவளோ அந்த கடையில் ஐஸ் கிரீம் வாங்கி கொண்டிருந்ததைப் பார்த்ததும்,
“குழல்! என்னது இது? இந்த குளிருல போய் ஐஸ் கிரீம் வாங்கி சாப்பிடற? வேணாம்… உனக்கு ஒத்துக்காம போக போகுது… உனக்கு வேற பீவர் வந்தா ரொம்ப வீக் ஆகிடுவ… ட்ரிப் என்ஜாய் பண்ண முடியாது… ஊருக்கு போன அப்புறம் நிறைய சாப்பிடலாம் வா…” என்று படபடவென அவன் சொல்லுவதை எல்லாம் காற்றில் பறக்க விட்டு கடைக்காரரிடம் காசை நீட்டிக் கொண்டிருந்தாள்.
அவளின் செயலை பார்த்தவன், அவள் கையை பிடித்து இழுத்து கொண்டு வந்தான்.
“அடியேய்! சொல்லிட்டே இருக்கேன்… அப்புறம் என்னை அடம்… சொன்னா கேட்க மாட்டியா?” என்று கடிய,
அவனின் இந்த செயலில் அதிர்ந்தாலும் உரிமையான அவன் பேச்சில் மகிழ்ந்தவள்,
“ப்ளீஸ்! எழில்! எனக்கு இப்ப ஐஸ்கிரீம் சாப்பிடணும் போல இருக்கு… ப்ளீஸ்.. ஒன்னே ஒன்னு…” என்றவளின் கெஞ்சலில் கரைய துடித்த மனதை அடக்கியவன்,
“ஊருக்கு போனதும் எவ்வளவு வேணுமோ வாங்கி தர்றேன்… இப்ப வேணாம்…” என்று அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து அவளையும் அமர வைக்க முகத்தை தூக்கி வைத்து கொண்டாள்.
“சொன்னா கேளு குழல்!” என்றவனின் மென்மையில்,
“போங்க! எனக்கு இது போல சாப்பிட தோணுது, இந்த மலை குளிர்ல நைட்ல நடக்க தோணுது, பனியில கூடவே மழையும் பெய்யும் போது அதுல சேர்ந்து நனைய தோணுது… எனக்கு இதெல்லாம் பிடிக்கும்னு தெரிஞ்சதே இங்க வந்த அப்புறம் தான்…”
“மனசு என்னவோ அமைதியா சந்தோஷமா இருக்கு… இதெல்லாம் பண்ணனும்னு போல இருக்கு… நீங்க எனக்கு பிடிச்சதை செய்ய விடமாட்டேங்கறீங்க…” என்றவளின் சிணுங்களில் முதல் முறையாக தொலைந்தே போனான்.
அவளுக்கு பதில் சொல்லுமுன்னே கவி அவர்களை தேடி அங்கே வர மற்றவர்களும் இணைந்தனர்.
அவர்களின் முதல் நாள் சுற்று பயணம் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்க, அவர்களுக்கு ஓய்வு கொடுக்க எண்ணியதோ என்னவோ அந்த இயற்கை திடீரென தூறல் போட ஆரம்பித்து எல்லோரையும் அவர்கள் இடம் அனுப்பி வைத்திருந்தது.
அவர்கள் பேருந்தை நிறுத்திய இடத்திற்கும் இப்போது சுற்றிப்பார்க்க வந்த இடத்திற்கும் இடையே தூரம் கொஞ்சம் அதிகம்… அது கடைத்தெருவும் கூட… அதனால் வரும் போது கடைத்தெருவை பார்த்தபடி நடந்தே வந்திருந்தனர்…
அவர்களின் பேருந்தை இங்கு கொண்டு வரும் அளவுக்கு அங்கு வழி இல்லை… இப்போது மழை வேறு வேகமாக தூறுவதால் அங்கு கிடைத்த வண்டியில் எல்லோரையும் பேருந்துக்கு அனுப்பி வைத்து கொண்டிருந்தனர் அமுதனும் கவியும்…
கடைசியாக எஞ்சியது இவர்கள் நால்வரே… கவி இருவரையும் அழைக்க, குழலியோ அங்கிருந்து வர மறுத்தாள்.
“பூனை! எதுக்கு இப்படி அடம் பண்ற… ஏற்கனவே இடம் ரொம்ப கூல் இதுல மழை வேற பெய்யுது… வா கிளம்பலாம்…” என்றவனிடம்,
“டேய்! நான் வரல… எனக்கு இந்த மழை இந்த குளிர் பிடிச்சு இருக்கு… நான் கொஞ்சம் நேரம் இருந்துட்டு வர்றேன்… நீங்க கிளம்புங்க…” என்று சொன்னவளின் முகம் அதற்கு நிகராக குளிர்ந்து இருந்தது.
“விளையாடாத பூனை! தனியா எப்படி வருவ? எங்களோடவே வா போகலாம்…” என்று அவன் மறுபடியும் அழைக்க,
“அதெல்லாம் நான் வந்துடுவேன்… ஹோட்டல் பேர் சொன்னா கூட்டிட்டு வந்து விட போறாங்க… தனியா வர என்ன பயம்…” என்றவளின் பார்வை ஒரு நொடி அவளின் கணவனை தொட்டு சென்றது.
“பூனை!” என்று அவன் ஏதோ சொல்ல வருவதற்குள் அவனருகே இருந்த சரஸ்வதி,
“எனக்கு ஒன்னும் தெரியாதுன்னு என்னை மட்டும் திட்ட தான் தெரியும்… ஆனா உங்களுக்கு தான் ஒன்னும் தெரியல… குழலி அக்காவுக்கு துணையா அவங்க ஆத்துக்காரு இருப்பாரு… வாங்க நம்ம கிளம்பலாம்…” என்று கவியை அழைத்ததும்,
“சரி பூனை! நாங்க கிளம்பறோம்… நீ பத்திரமா வந்து சேரு…. வாங்க அமுதன்…” என்றவன் அமுதன் பதில் கூறும் முன் அவன் கையை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றான்.
அவனுடன் சென்ற அமுதன் மனைவியையே திரும்பி பார்த்தவாறே செல்ல, அதை பார்த்த குழலி திகைத்தாள். கண்டிப்பாக கணவன் உடன் இருப்பான் என்ற நம்பிக்கையிலேயே அவள் கவியிடம் வர முடியாது என்று சொன்னாள். இப்போது அவன் சென்றதும் அவளுக்கு திக்கென்றது.
அவன் சென்று ஒரு பத்து நிமிடம் கூட இருந்திருக்காது, அவளருகே மூச்சு வாங்க நின்ற கணவனை பார்த்தவுடன் அவள் சித்தம் தெளிந்தாள்.
“சாரி! நான் போகணும்னு நினைக்கல… இந்த கவி தான் வேணும்னு என்னை கூட்டிட்டு போயிட்டான்…” என்று அவளை சமாதானப்படுத்த,
“ஏன் என் பொண்டாட்டியை தனியா விட்டுட்டு வர மாட்டேன்… நான் கூட இருந்து கூட்டிட்டு வர்றேன்னு சொல்ல வேண்டியது தானே…” என்று அவனை வறுத்தெடுத்தாள்.
“அடியேய்! அவன் தான் திடீர்னு வம்படியா இழுத்துட்டு போனான்… நான் ஏன் தனியா வர்றேன்? என் புருஷன் என்னை கூட்டிட்டு வருவாருன்னு நீ சொல்ல வேண்டியது தானே….” என்று வேகமாக திருப்பி கொடுத்தவன்,
“உன்னை சொல்லி தப்பு இல்லை… நீ சொல்ற அளவுக்கு நான் தான் இன்னும் நடந்துக்கலையே… முக்கியமா புருஷனா உனக்கு பாதுகாப்பும் நம்பிக்கையும் நான் தரலையே… அப்புறம் எப்படி நீ சொல்ல முடியும்…” என்றவனின் குரலில் இருந்த வலியை உணர்ந்தவளுக்கு ஏனோ வலித்தது.