மாயாவி 32 ::-
ஆறு வருடங்கள் கழித்து!!!!
“அடியேய்! சொன்னா கேளு… இந்த நேரத்துல அங்க வேணாம்… இன்னொரு நாள் கண்டிப்பா கூட்டிட்டு போறேன்…” என்று சொன்னவனை பெரிதாக சட்டை செய்யாமல்,
“இப்ப என்னை கூட்டிட்டு போறீங்களா? இல்லையா?” என்று எந்த ஆர்ப்பாட்டமும் இல்லமால் அழுத்தமாக கேட்டவளை முறைத்தான்.
“இப்ப எதுக்கு முறைக்கறீங்க? நான் என்ன என்னை வெளியூருக்கா கூட்டிட்டு போக சொன்னேன் இல்லை கூர்க் தான் கூட்டிட்டு போக சொன்னேனா.. இங்க இருக்க அந்த ஏரிக்கு தான் கூட்டிட்டு போக சொன்னேன்… அதுக்கே இவ்வளவு அலம்பல்…” என்று நக்கலாக சொல்லியவளை பார்த்து தலையில் அடித்து கொண்டான்.
“அடியேய் ! நீ கூட்டிட்டு போக சொல்றது தப்பில்லை… ஆனா இந்த நேரத்துல நீ இந்த மாதிரி இருக்கும் போது கூட்டிட்டு போக சொல்றதுக்கு தாண்டி சொல்றேன்…” என்றவன் பின்னிருந்து அவளை அணைத்தபடி அவளின் நிறைமாத வயிற்றை வருடினான்.
“ப்ளீஸ்! எழில் ! இன்னைக்கு பௌர்ணமி அங்க சூப்பரா இருக்கும்… போகலாம்… ப்ளீஸ்…” என்று அவள் கொஞ்சலில் உருகினாலும்,
“அதெல்லாம் முடியாது குழல்… சொன்னா கேளு…” என்றான்.
“யோவ் என்ன ஓவரா தான் பண்ற… இப்ப என்னை கூட்டிட்டு போற அவ்வளவு தான்… “
“அடம் அடம்… எல்லாத்திலும் சரியான பிடிவாதக்காரி…” என்றவனை முறைத்தாள்.
“நான் நினைக்கறதை நான் செய்யறேனோ இல்லையோ நீ நினைக்கறதையும் சேர்த்து என்னை நல்லா செய்ய வைக்கற…” என்றவனின் குரலில் அதற்கான மகிழவே இருந்தது.
“ஆமா ஆமா அப்படியே நான் நினைக்கறதை தான் நீங்க செய்யறீங்களாக்கும்… இதுல என்னை அடம் பண்ணறேன்னு வேற சொல்றீங்க…” என்று அவள் முகத்தை திருப்பவும்,
“அடியேய்! நீ அடம்பிடிச்சு தான் நாலாவது ரிலீஸ்க்கு வந்து நிற்கற…” என்றபடி அவளின் கன்னத்தோடு கன்னம் வைத்து இழைத்தவனை தள்ளி விட்டாள்.
“ஆஹான்! அப்ப உங்களுக்கு அந்த பிடிவாதத்துல பங்கு இல்லையோ…” என்று அவள் காரமாக கேட்டதும்,
“பின்ன… அதான் சொன்னேனோ நீ நினைக்கறதையும் நான் நினைக்கறதையும் சேர்த்தே என்னை செய்ய வைக்கறன்னு….” என்றவன் மறுபடியும் அவளை தன் கைவளைவில் கொண்டு வந்தான்.
“சரி உன்னை கூட்டிட்டு போறேன்…. ஆனா ரொம்ப நேரம் அங்க இருக்க கூடாது… உடனே கிளம்பிடனும்… இதுக்கெல்லாம் சரின்னு சொன்னா கூட்டிட்டு போறேன்…” என்று அவன் சொன்னதும் மகிழ்வோடு திரும்பியவளின் வயிறு அவனோடு உரசவும் உள்ளே இருந்த குழந்தை துள்ளியது.
“உள்ளே இருக்கவன் வேறே இப்பவே உனக்கு மேல துள்ளுறான்… வெளியே வந்ததும் என் நிலைமை என்ன ஆக போகுதோ…” என்றவனின் சலிப்பு அவன் குரலில் இல்லை…
“எப்படி உங்க பொண்ணுங்க என்னை இப்ப பெண்டு நிமித்தறாளே அப்படியா… நல்லவேளை இப்ப இங்க இல்லை… இல்லைன்னா நானும் கூட வர்றேன்னு என்கூட எனக்கு போட்டியா கிளம்பி இருப்பாளுங்க…” என்றவளின் முகமோ தன் மகள்களை நினைத்து விகசித்தது…
“அடியேய்! அவ குழந்தை… அவங்க கூட போய் எப்ப பாரு மல்லுக்கு நிற்கற…” என்று பேசியபடியே மனைவியை கைத்தாங்கலாக அழைத்து வந்து காரில் ஏற்றியவன் ஏரிக்கரையை நோக்கி வண்டியை மிதமான வேகத்தில் ஓட்டினான்.
முழுநிலவின் பிம்பத்தை தாங்கிய ஏரிக்கரையின் ஓரம் அன்று போல அமர்ந்தவர்களின் வாழ்க்கை அந்த நிலவின் பிம்பம் போல முழுமையாக பொலிவாக தோன்றியது.
இது முழுக்க முழுக்க அவர்களுக்கான நேரம்… இங்கு ஊருக்கு வந்தாலே ஏரிக்கரைக்கு செல்லாமல் பெங்களூர் திரும்பியது இல்லை… அவன் தோளில் சாய்ந்தவாறு அவள் பேசும் ஆயிரம் கதைகளை ரசிப்பதை விட அவளை ரசித்துக் கொண்டு அமர்ந்திருப்பான்.
இப்போதும் அவன் தோளில் சாய்ந்து கொண்டிருந்தவளையும் தன் பிள்ளையையும் சேர்த்து அவளின் இடையோடு அணைத்திருந்தான்.
“எனக்கு இப்ப ஐஸ்கிரீம் சாப்பிடணும் போல இருக்கு?” என்றவளை முறைத்தவன்,
“இன்னும் ஐஞ்சு நிமிஷம் தான் உனக்கு டைம் ஒழுங்கா இந்த இடத்தை விட்டு கிளம்பறோம்…” என்று கறாராக சொன்னான்.
“ம்க்கும்… நீ நினைக்கறதை எல்லாம் நான் செய்யறேன்னு பேச்சு மட்டும் தான்… ஆனா ஒன்னும் செய்யறது இல்லை…” என்று அவள் முணுமுணுக்க, அவன் என்னவென்று கேள்வியாக நோக்கினான்.
“ஒண்ணுமில்லை…” என்று அவள் நொடிக்க,
“ஆமா தாமரை பாப்பா ஏன் இன்னும் எனக்கு போன் பண்ணல… நீ பேசினியா? நாளைக்கு காலைல வந்துடுவாங்கல்ல…” என்று அவன் தன் மகளைப் பற்றிய பேச்சை ஆரம்பித்தான்.
“ஆமா ! ஆமா ! என்கிட்ட பேச தவறினாலும் உங்க மகளுங்ககிட்ட பேசிடுவீங்களே… இன்னமுமா பேசலை…” என்று அவள் கேலியாக கேட்கவும் அவன் போன் ஒலிக்கவும் சரியாக இருந்தது.
அப்பா! என்று மகள்களின் கோரஸான அழைப்பில் நெகிழ்ந்தவனுக்கு இந்த உலகையே வென்ற கர்வம்…
முன்பு ஒரு காலத்தில் பொறுப்பில்லாமல் ஏனோ தானோ என்று வாழ்ந்தவனின் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கொடுத்த அவன் மனைவியோடு சேர்ந்து இன்று அவனை ஹீரோவாக நினைக்கும் குழந்தைகள் கிடைத்தது அவனிற்கு வரமே…
இந்த மூன்று தேவதைகளும் சேர்ந்து அவனின் நேரத்தை முழுமையாக ஆக்கிரமித்திருக்க வெளியே வர காத்திருக்கும் அவனின் தவப் புதல்வர்களோ அவனின் மனைவிக்கு இணையாக அவனை சீண்டிக் கொண்டிருந்தனர்.
ஆம் தவப்புதல்வர்கள் தான்… அவன் மாயாவி அவனிடம் வேண்டி நின்ற தவம் அவர்கள்… ஏற்கனவே ஒருவருக்கொருவர் இரண்டு வயது வித்தியாசத்தில் தாமரை, கன்விகாஸ்ரீ என்று இரண்டு மகள்களை பெற்றதும் அதோடு போதும் என்று அவன் சொல்ல, குழலியோ அவனிடம் மல்லுக்கு நின்றாள்.
“உங்க ஆசைக்கு ரெண்டு பொண்ணு கொடுத்தேன்ல… ஒழுங்கா என் ஆசையை நிறைவேத்துங்க… எனக்கு ஒரு பையன் வேணும்…” என்று அவன் மறுக்க வழியே இல்லாமல் தவத்தை ஆரம்பிக்க அவளுக்கு கிடைத்ததோ இரண்டு.
கண்ணா லட்டு தின்ன ஆசையா மொமெண்ட் அவளுக்கு… ஆனால் அமுதனுக்கோ இப்பவே கண்ணை கட்டுதே மொமெண்ட்… இப்போதே தாய்க்காக அவனிடம் போர்க்கொடி தூக்க ஆரம்பித்தனர்… அவன் அவளை ஏதேனும் வம்பிழுத்தால் போதும் உள்ளிருந்தே துள்ளுவர்…
மகள்களிடம் பேசியவாறே உள்ளே இருந்த தன் பிள்ளைகளை அவளின் வயிற்றின் வழியே வருடி கொடுத்தவனின் விழிகளோ மனைவியின் விழிகளோடு மௌனமாக உரையாடி கொண்டிருந்தது.
இந்த ஆறு வருடத்தில் எத்தனையோ மாற்றங்கள்… கவி கடனுக்காக கொடுத்த பணத்தை அனைத்தையும் திருப்பி கொடுத்து கடன் பத்திரத்தை முறித்திருந்தான்.
ஆறு மாதம் முன்பே கவியுடன் பார்ட்னராக சேர்ந்து தனியாக கட்டிடம் கட்டும் கம்பெனி ஆரம்பித்திருந்தான். கவியும் குழலும் அந்த கம்பெனியிலே இன்டீரியர் ப்ராஜெக்ட் பார்க்க, அமுதனும் சரஸ்வதியும் சேர்ந்து இந்த புது கம்பெனியை பார்க்கின்றனர்.
ஆறு வருடத்தில் அமுதன் தனக்கென்று ஒரு அடையாளத்தை வேலையில் உருவாக்கி இருக்க அதன் பொருட்டே இந்த புது கம்பெனி ஆரம்பம்.
எத்தனை வேலை பளு இருந்தாலும் மனைவி மகளைப் பார்க்க வாரத்தில் மூன்று நான்கு முறை இங்கு வந்து விடுவான். குழலியோ ஒவ்வொரு பிரசவத்திற்கும் தன் தாய் வீடு கூட செல்லாமல் இங்கே செல்வியின் கவனிப்பில் இருக்க, மகள்களோ மாறன் மற்றும் கண்ணனின் கவனிப்பில் இருந்தனர்.
மகளின் இந்த நிறைவான குடும்ப வாழ்க்கையை பார்க்க பார்க்க குழலியின் பெற்றோருக்கு நிறைவாக இருந்தது. மகளை அதிகம் நெருங்க முடியாததால் பேரப் பிள்ளைகளோடு ஐக்கியமாக குழலியும் தடுக்கவில்லை. மகள் பெங்களூரிலிருந்து மாறன் வீடு வந்தாலே அவள் திரும்ப செல்லும் வரை தினமும் வந்து சென்றனர்.
இப்போது நெருங்கிய உறவினர் திருமணம் என்பதால் பேர பிள்ளைகளோடு மாறன் தம்பதியினரும் கண்ணனும் சென்றிருந்தனர். அதுவும் மகன் இங்கே மருமகள் அருகே இருப்பதால்… இரவு உறங்கும் முன் மகள்கள் தந்தையுடன் பேசும் வழக்கத்தினால் இப்போது பேசினர்.
“அப்பா! இன்னும் தென் டேஸ்ல தம்பி வந்துடுவானான்னு கண்ணப்பா சொன்னாங்க… ஆமாவா…” என்று மழலையின் மொழியில் மூத்த மகள் தாமரை கேட்க, கூடவே இளைய மகளின் கிள்ளை மொழியும் கேட்டது.
இப்போதும் மனைவியின் பிரசவத்திற்கு நேரம் நெருங்குவதால் பிரசவம் முடியும் வரை இங்கேயே இருப்பதற்காக இன்று தான் வந்து சேர்ந்தான்.
குழலியின் முதல் இரு பிரசவத்திற்கே அவளின் நிலையை கண்டு கலங்கி போயிருந்தான். இப்போதோ இரட்டை பிள்ளைகள் வேறு. நல்ல முறையில் அனைத்தும் முடிய வேண்டும் என்ற வேண்டுதல்கள் பல…
மகள்களிடம் அவன் கொஞ்சும் அழகை ரசித்தாலும் வெளியே அவனை முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்த மனைவியை பார்த்து சிரித்தவன், பேசி முடித்ததும் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான்.
வீட்டிற்கு வந்து இரவு உடைக்கு மாறி குழலிக்கு இதமான சூட்டில் பாலை கொடுத்தான். அந்நேரம் பார்த்து கவி போன் பண்ணவும் தன் தலையில் கொட்டியவாறே அழைப்பை ஏற்றான்..
“அது எப்படி அமுதன் அங்க போனதும் எங்களை மறந்துடறீங்க?ஒவ்வொரு முறையும் ஊருக்கு போய்ட்டு போன் பண்ணுங்கன்னு சொன்னா உங்க வீட்டம்மாவையும் உங்க தேவதைகளையும் பார்த்ததும் போன் ஞாபகம் வரல… அப்படி தானே…” என்று கேலி செய்ய, அமுதனோ அசடு வழிந்தாலும்,
“நானாவது இங்க ஊருக்கு வந்த அப்புறம் தான் அப்படி… ஆனா சரஸ் பக்கத்துலயே இருக்கும் போதே நீங்க எங்களை மறந்துடறீங்க… என்ன இருந்தாலும் எனக்கு நீங்க இதுல சீனியர் தான் கவி…” என்று அவன் திருப்பி கொடுத்தான்.
“சரி சரி ! நம்ம ரகசியம் நமக்குள்ள… நம்ம சரித்திரத்தை யாருக்கும் சொல்லிடாதீங்க.. இன்னைக்கு உங்க தேவதைங்க பிஸியா… எங்க கூட பேசவே இல்ல… அவங்க கிட்ட பேசியே ஆகணும்னு இந்த ப்ரதியூம் என்னை தூங்க விடாம எழுப்பி விட்டு இருக்கான்…” என்றவனின் குரலில் மகனை குறித்த பெருமையே…
“ஹா! ஹா ! அனுபவிங்க அனுபவிங்க… அவங்க ரெண்டு பேரும் அவங்க தாத்தா கூட ஒரு கல்யாணத்துக்கு போய் இருக்காங்க… நாளைக்கு காலையில வந்துடுவாங்க… வந்ததும் பேச சொல்றேன்…”என்றான் அமுதன்.
“ஹா ஹா ! கல்யாணத்துக்கு போற அளவுக்கு பெரிய மனுஷிங்க ஆகிட்டாங்களா… நாளைக்கு பேசிக்கிறேன் அவங்ககிட்ட… உங்க பெரிய குழந்தை என்ன பண்ணுது?” என்று கவி கேலியாக குழலியை கேட்டதும்,
இத்தனை நேரம் அவர்களின் பேச்சை அமைதியாக கேட்ட குழலி, “நீ சொன்னாலும் சொல்லலைன்னாலும் நான் பெரிய குழந்தை தான்டா… உனக்கு ஏன்டா பொறாமை…” என்றாள்.