“சரி சரி பூனை ரொம்ப சீராத… உள்ள இருக்க புலிங்க உனக்கு மேல சீற போறாங்க…” என்றவனின் குரலில் தோழியை குறித்த அக்கறையே மேலோங்கி இருந்தது.
“காரு நாங்க நாளைக்கே கிளம்பி வர்றோமே… பாப்பா இரண்டு பேரையும் பார்த்து ஒரு வாரம் மேல ஆகுது… உனக்கும் டெலிவரிக்கு இன்னும் பத்து நாள் தானே இருக்கு… நாங்க இப்பவே வர்றோமே…” என்றவன் கெஞ்சலாக கேட்டதும்,
“டேய்! ஒரு கம்பெனி ஓனர் மாதிரி பேசுடா… நானும் ஒரு வாரமா உனக்கு இதுக்கு பதில் சொல்லிட்டேன்… நான் டெலிவரிக்கு ஹாஸ்பிடல் கிளம்பும் போது சொல்றேன் அப்ப வந்தா போதும்னு… எல்லாருமே இங்க வந்துட்டா கம்பெனியை யாரு பார்த்துப்பா…” என்று குழலி அதட்டினாள்.
“அமுதன்! உங்க நிலைமையை நினைச்சா எனக்கு கொஞ்சம் கவலையா இருக்கு… நீங்க எப்படி இவங்க ஐஞ்சு பேரையும் சமாளிக்க போறீங்கன்னு தெரியல… அதிலும் நம்ம பாப்பாவை கூட சமாளிக்கலாம்…”
“ஆனா இந்த பூனையையும் அந்த புலிகளையும் நீங்க சமாளிக்கறதை பார்க்க நான் ரொம்ப ஆர்வமா இருக்கேன்….” என்று கவி சொல்லி போனை வைக்கவும் அமுதன் முகம் விழுந்து விட்டது.
“போச்சு! போச்சு ! இப்ப தான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி இவரை நான் சமாளிச்சு வைச்சு இருந்தேன் மறுபடியும் இப்ப ஆரம்பிக்க போறாரு…” என்று மனதோடு பேசியவள்,
“எழில்! வாங்க போய் தூங்கலாம்…” என்று அவனோடு சென்று படுக்க ஆயத்தமானாலும் அவன் முகத்திலிருந்த வாட்டம் அவளை உறங்க விடாமல் தடுக்க கட்டிலில் சாய்ந்தவாறு அமர்ந்தவள் அவனை தன்னருகே அமர்த்தினாள்.
“என்னாச்சு எழில்! இப்ப எதுக்கு முகத்தை தொங்க போட்டுட்டு இருக்கீங்க?” என்று அவள் மென்மையாக கேட்டதும், அவளின் அருகே அமர்ந்தவன் ஆறுதல் தேடும் குழந்தையாக அவள் தோளில் தன் முகத்தை புதைத்தான்.
“என்ன எழில்?” என்று அவன் தலையை கோதியவாறு குழலி கேட்க,
“நான் ஒரு நல்ல அப்பாவா இருப்பேனா?” என்று அவன் கேட்டதை கண்டு திடுக்கிட்டாள்.
ஏதோ அவளின் பிரசவத்தையும் குழந்தையையும் நினைத்து வருந்துகிறான் என்று நினைத்தவளுக்கு இந்த கேள்வி பதற செய்தது.
“ஏன்? ஏன் அப்படி கேட்கறீங்க? நீங்க நல்ல அப்பா தான்…” என்றவளின் வார்த்தைகள் அவனை சமாதானம் செய்யாமல் போக,
“பயமா இருக்கு குழல்… இப்ப இருக்க காலகட்டத்துல ஒரு குழந்தையை வளர்க்கறதையே கண்ணாடி மாதிரி கையாளனும் சொல்லுவாங்க… நமக்கு நாலு பிள்ளைங்க… அவங்களை நான் சரியா வழி நடத்துவேனா… அவங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுப்பேனா…”
“இன்னைக்கு அவங்க குழந்தையா இருக்கும் போது ஹீரோவா தெரியற நான் அவங்க வளரும் போது அவங்க எண்ணத்துக்கு ஈடா இருப்பேனா… என்னவோ சொல்ல தெரியாத பயம்… என்னை மாதிரி வளர்ந்துடுவாங்களா?” என்றவாறே அவளின் கழுத்தினுள் புதைந்தான்.
“யோவ்! முதல்ல எந்திரி! எனக்கு நேரா இப்படி எதிர்ல வந்து உட்காரு…” என்று அவள் அதட்ட அவள் வார்த்தையை தட்டாமல் எதிரே அமர்ந்தான்.
“இங்க பாருங்க எழில்! அவங்க நம்ம பசங்க நம்ம வளர்ப்பு… அந்த வளர்ப்பு மேல முதல்ல நமக்கு நம்பிக்கை இருக்கனும்… நீங்க இப்ப உள்ள இருக்க பாப்பாவை சீண்டுறதும் நான் நம்ம பொண்ணுங்களை முறைக்கறதாலயும் நமக்கு அவங்க மேல பாசம் இல்லைன்னு அர்த்தமா என்ன?அது மாதிரி ஒவ்வொன்னுக்கும் அர்த்தம் கண்டுபிடிக்க கூடாது… புரியுதா?”
“நம்ம பசங்களுக்கு சுயநலம் இல்லாத ஒவ்வொரு செயலோட மதிப்பையும் ஒழுக்கத்தையும் கத்து கொடுங்க… ஆடம்பர வாழ்க்கைக்கும் அத்தியாவசியத்துக்கும் இருக்க வித்தியாசத்தை கத்து கொடுங்க…”
“அவங்களுக்கான தரமான படிப்பை கொடுத்து, நம்மையே மொத்தமா சார்ந்து இல்லாம நம்மளோட அரவணைப்புல வாழ்க்கையை கத்துக்கற அளவுக்கு அவங்களை வளர்த்து விடுங்க… அது போதும்… இதெல்லாம் உங்களால பண்ண முடியும்… எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு…” என்றவள் கூடவே,
“நம்ம இத்தனை பேரு இருக்கோம் அப்படி விட்டுட மாட்டோம்,,, அதனால நீங்க கவலைப்படாதீங்க… உங்களோட இந்த பயத்தை பசங்க கிட்ட காட்டாதிங்க… கண்டிப்பா நம்ம பசங்களுக்கு நீங்க ஹீரோவா தான் இருப்பீங்க… சரியா…” என்று ஆறுதலாக சொன்னவளைப் பார்த்து மென்மையாக சிரித்தான்.
“நம்ம சுற்றி எத்தனை பேர் இருந்தா என்ன குழல்? எல்லாருக்கும் மேல நம்ம பசங்களுக்கு அம்மா நீ இருக்கியே… உன்னை விட நம்ம பசங்களை வேற யாரு நல்லா வளர்த்துடுவாங்க… என்னையே சரி பண்ற… பசங்க எம்மாத்திரம்…” என்றவனின் குரலில் மனைவியை குறித்த பெருமையே இருந்தது.
“ஹான்! அப்படி என்ன சரி பண்ணிட்டேனாம்?”
“ஆமா! முன்னாடி வேலைக்கு போகல இப்ப ஏதோ வேலைக்கு போறோம் சம்பாதிக்கிறோம் இந்த அளவுக்கு தான் நான் யோசிச்சேன்… ஆனா அதோட நிற்காம அடுத்த கட்டத்துக்கு நீ தானே என்னை நகர்த்தி இப்ப பிசினஸ் பண்ற அளவுக்கு கொண்டு வந்த…”
“அது மாதிரி எல்லாத்தையும் பார்த்துக்க நீ கூட இருக்கும் போது நான் லூசு மாதிரி கவலைப்படறேன் பாரு…” என்றவனுக்கு இப்போது புன்னகை விரிந்தது.
“ஆமா! ஆமா ! நீங்க லூசு தான்… குழந்தைங்கன்னு வந்ததும் பொண்டாட்டியை டீல்ல விட்ட ஆளாச்சே…” என்று அவனிடம் முறுக்கிக் கொண்டு அவனை தள்ளி விட்டு படுத்தவளின் அருகே படுத்தவன்,
“ஆமா பசங்களுக்கு மட்டும் தான் நான் ஹீரோவா… உனக்கு இல்லையா…” என்று சீண்டியபடி அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.
“ஹான்! அதை இன்னும் பத்து வருஷம் கழிச்சு கேளுங்க சொல்றேன்…” என்றவளின் கேலியை உணர்ந்தவன்,
“ஹா ஹா ! சரி நான் அப்பவே கேட்டுக்கிறேன்… நீ வேற ஒன்னு கேட்டியே அது கொஞ்சமா தரலாம்னு இருக்கேன்…” என்றவனின் குரலில் இருந்த பேதம் புரிய அவளுள் சிறு படபடப்பு.
“இப்ப இருக்க நிலைமையில ஐஸ்கிரீம் நிறைய சாப்பிட முடியாது அதான் நீ ஆசைபட்டேன்னு கொஞ்சமா தரலாம்னு…” என்று அவன் அவளை நெருங்க அங்கே அவர்களுக்குள் ரகசிய பரிமாற்றங்கள்…
அவள் கேட்டதை கொடுத்தவன் தனக்கான பங்கை அவளிடம் பெற்றுக்கொண்ட பிறகே அவளை விட்டு விலகியவன்,
“நான் சொன்னா நீ நம்பமாட்டேங்குற ஆனா பாரு கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி நான் இருந்த மனநிலையை அப்படியே இப்ப மாத்தி விட்டுட்ட…. அப்ப நீ ஏதோ மாயம் பண்ற தானே…” என்று அவன் மலர்ச்சியோடு சொன்னதும்,
“உங்க அளவுக்கு ஒன்னும் மாயம் பண்ணிடல…” என்று அவன் நெஞ்சில் படுத்தவாறே உறங்கிப் போனாள்.
ஒரு வாரம் சென்ற நிலையில் குழலிக்கு பிரசவ வலியெடுக்க ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டாள்.
கவியும் சரசும் அவர்களின் பிள்ளைகள் ப்ரதீயும் மற்றும் ப்ரதியங்கா வுடன் வந்து சேர்ந்திருக்க பிள்ளைகள் எல்லோரையும் கண்ணன் கவனிப்பில் விட்டுட்டு கடவுளை வேண்டியபடி மற்றவர்கள் காத்திருந்தனர்.
சில மணிநேர போராட்டத்திற்கு பிறகு புதல்வர்களை பெற்றெடுத்தவள் அயற்சியில் கண்ணுறங்க, குழந்தைகளை மாறன் தம்பதியினர் வாங்கியிருக்க, இரண்டு வாரம் கழித்து நலமுடன் வீடு வந்து சேர்ந்தனர் தாயும் சேயும்…
மூன்று மாதம் கழித்து பிள்ளைகளுக்கு பேர் வைக்கும் வைபவம் நடக்க எல்லோரும் கூடியிருந்தனர். இளமாறன் திருச்செல்வன் என்று அவர்களுக்கு பெயர் சூட்ட அங்கே ஒரு கொண்டாட்டம்.
“மாமா! இந்த ப்ரதியூம் என்னை அடிக்கிறான்…” என்று தாமரை கவியிடம் முறையிட,
“ஏன்டா?” என்று மகனை கண்டித்து அவளை தூக்கி கொண்டவனைப் பார்த்த அவன் மகள் அமுதனிடம் சென்று தன்னை தூக்குமாறு கையை நீட்டினாள். அதை பார்த்த எல்லோர் முகத்திலும் தானே முறுவல் மலர்ந்தது.
பிள்ளைகள் எல்லோரையும் அருகே அழைத்து அணைத்த அமுதன்,
“நீங்க ஒருத்தர் ஒருத்தர் சண்டை போடாம ஒண்ணா இருக்கணும்… ப்ரதி நீ தான் இவங்க எல்லாரையும் பத்திரமா பார்த்துக்கணும்… இந்த குட்டி தம்பிங்க வளர்ந்ததும் அவனும் உன்கூட சேர்ந்து இவங்களை பார்த்துப்பான்… சரியா…” என்றதும்,
“சரி மாமா!” என்றான் பெரிய பொறுப்பு கிடைத்த மகிழ்வில்…
“அப்பா ! நானும் ப்ரதி கூட சேர்ந்து பார்த்துக்கறேன்…” என்று தாமரை சொல்ல,
“கண்டிப்பாடா பாப்பு…” என்று கவி சொன்னதும், அவளே சென்று ப்ரதியுடன் சேர்ந்து கைகோர்த்து கொண்டு அவனை பார்த்து சிரிக்க அவனும் சிரித்தான். இதை எல்லாம் பார்த்த பெரியவர்களுக்கு சந்தோஷமாக இருந்தது.
தன் பேரப்பிள்ளைகளின் செயல்களை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த மாறன் அருகில் சென்ற குழலி,
“நீங்க அன்னைக்கு என்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வைக்கலைன்னா எனக்கு இந்த மாதிரி ஒரு நிறைவான குடும்பம் கிடைச்சு இருக்காது… இதெல்லாம் உங்களால தான் மாமா…“ என்றவளின் கண்கள் சந்தோசஷத்தில் கலங்கியது.
“ஹே ! கருத்தம்மா! மாமா நான் இருக்கும் போது நீ எதுக்கும் கலங்க கூடாது… நீ என் பொறுப்புடா… நான் உன்னை அப்படி எல்லாம் விட்டுடுவேனா… கண்ணை துடை….” என்று அதட்டினார்.
“அங்கிள்! இவளை நம்பாதீங்க.. பூனை மாதிரி… அழற மாதிரி பாவ்லா காட்றா…” என்று அவளை கேலி செய்ய, அவளோ அவனை முறைத்தாள்.
“ஹான்! இதான் உன் லுக்கே…” என்ற கவி,
“அழறதுக்கு அபிநயம் எப்படி பிடிக்கணும்னு இவகிட்ட கத்துக்கோ…” என்று தன் மனைவியை காட்ட, அவளோ அவன் கையில் நறுக்கென்று கிள்ளினாள்.
“இத்தனை பேரு இப்படி ஒரு அபிநயம் பிடிக்காதம்மா… நீ ரொம்ப அமைதியான பொண்ணுன்னு நினைச்சுட்டு இருக்காங்க…” என்று அவளின் காதோரம் ரகசியம் பேச அவளோ அவனை முறைத்தாள்.
“அங்க என்ன சொல்லிட்டு இருக்க கவி?” என்று செல்வி கேட்டதும்,
“அதும்மா… நமக்கும் நாலு குழந்தை இருந்தா வீடு கலகலன்னு இருக்கும்லன்னு சொல்றாரு…” என்று சரஸ்வதி சொன்ன பதிலில் திகைத்தவன்,
“என்னது நாலா? என்னால முடியாது… இவங்க மூணு பேரையே என்னால சமாளிக்க முடியல… இதுக்கு மேல முடியாது…” என்று அலறியவனைப் பார்த்து எல்லோரும் சிரிக்க, குழலியோ அமுதனின் முகத்தை ஆராய அவன் முகம் மலர்ந்து இருப்பதை பார்த்து நிம்மதியானாள்.
இந்த சிரிப்பு சத்தத்தில் அமுதன் மற்றவர்களை கவராமல் மனைவியை நோக்கி கண்ணடித்து முத்தத்தை பறக்க விட, அவனை “போயா மாயாவி” என்றவளின் இதழில் புன்னகை உறைந்து போய் இருந்தது.
திருமணத்தின் அரிச்சுவடு அறியுமுன்னே
முறிந்த பந்தம் கடந்த காலமாக மாற!!!
துணையாக இருந்த தனிமை பயம் தர!!!
எதிர்கால வாழ்க்கை ஏக்கமாக மாற!!!
கட்டாயத்தின் பேரில் அவன் கட்டிய
தாலியில் விரும்பியே சிக்குண்டேன்!
கடந்த காலத்தை நொடியில் கடந்து
நிகழ் காலத்தில் அவனுடன் வாழ ஏதேனும்
மாயம் நடக்காதா என்று ஏங்கிய நாட்கள்!
இன்று ஏக்கங்கள் எல்லாம் ஏற்றங்களாக
மாற்றி விட்டானே என் மாயவன்!
என் கடந்தகாலத்தை துச்சமாக கடந்து
என்னை எனக்காக ஏற்றானே என்னவன்!
என் நேர்மை திமிரை ஆதரித்து
என் அதிகாரத்திற்கு ஆதரவாக
குறைவே இல்லாமல் குறையும் இல்லாத
அவன் நேசத்தை எனக்கு உணர்த்துகிறானே
என் நேசன் !
முத்தாக பிள்ளைகள் இருந்தாலும்
சேயாக எண்னிடம் அடைக்கலமாகி
என் தாய்மையையும் உணரவைத்தானே என் தாயுமானவன்!!!
இன்று என் வாழ்க்கையை நிறைவாக்கி விட்டானே!
இது எல்லாம் காலம் செய்த மாயம் அல்ல!!!
என்னவன் செய்த மாயம் !!!
என்மீதான அவன் காதல் செய்த மாயம்!!!
என்னனென்னவோ மாயம் செய்து
இந்த பிறவிப் பயனை என்னை அடைய வைத்து விட்டான் அந்த மாயன்!
இனி வரும் பிறவியிலும் அவனுடனான வாழ்வே வேண்டும் என்று ஏங்க வைத்து விட்டான் அந்த மாயாவி!
இப்படியாக இனி வரும் காலங்களில் எதுவானாலும் எதிர்கொள்ளும் நம்பிக்கையுடனும் சந்தோஷமாகவும் இவர்கள் அனைவரும் ஒற்றுமையோடும் இருக்க வாழ்த்தி விடைபெறுவோம்! மக்களே! நன்றி!