மாயாவி 11 ::-
வலி தந்த காயம் சிறிதோ பெரிதோ…
வலியால் மீளாத துயிலில்…
நான் செல்லும் நேரத்தில்…
எந்தன் காயத்தை…
ஒற்றை பார்வையாலே வருடி…
என்னை மீட்டு உயிர்த்தெழ வைக்கிறாயே!
என்னடி மாயாவி நீ !
யாரும் இல்லா உலகில் தனியாக புயலில் சிக்கி சோர்வடையும் போது அந்த நேரத்தில் தன்னை தோளில் சாய்த்துக் கொண்டு இளைப்பாற வைக்கும் தேவதையாகவே தெரிந்தாள் அவனின் மனையாள்…
அவள் திமிர் பிடித்தவ அதிகாரம் பண்றவ என்ற அவனின் நினைப்பெல்லாம் எங்கோ பறந்து செல்ல அவள் உடனிருப்பாள் எதுவானாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் மனதில் அழுத்தமாக பதிந்ததால் அது கொடுத்த உரிமையே அவளை அழைக்கவும் வைத்தது…
“குழல்!”
அவன் அழைப்பு தன்னுள் ஏதோ தாக்கம் கொடுப்பதை உணர்ந்தவள், அதை ஓரம் தள்ளிவிட்டு அவனிடம்,
“சொல்லுங்க!”
“இங்க பணம் கட்ட சொல்றாங்க…ஆனால் என்கிட்ட அவ்வளவு பணம் இல்லை…” என்று எந்த தயக்கமும் இல்லாமல் உரிமையாக கேட்டவனிடம்,
“உங்க பேங்க் விவரம் எனக்கு அனுப்புங்க… நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க… மாமாவுக்கு எதுவும் ஆகாது…நான் உடனே கிளம்பி வரேன்…” என்று ஆதுரமாக பேசிவிட்டு போனை வைத்தாள்.
அதன்பிறகு ஊருக்கு கிளம்ப ஆயத்தமானவள் கவிக்கு அழைத்து சொன்னதும் அவனும் உடன் வருகிறேன் என்று சொல்லவும் இருவரும் கிருஷ்ணகிரி வந்து சேர்ந்தனர்.
ஹாஸ்பிடலின் உள்ளே வந்தவர்கள் அங்கு தொய்ந்து போய் அமர்ந்திருந்த அமுதனை பார்த்து வருந்தினாலும், அவனையும் அழைத்துக் கொண்டு டாக்டரிடம் சென்று அனைத்து விவரங்களையும் கேட்டு அறிந்து கொண்டதும்,
“அத்தையும் கண்ணனும் எங்க?” என்று குழலி அவனிடம் கேட்டாள்.
அப்போது தான் தாயிடம் இன்னும் சொல்லவில்லை என்பதே உரைக்க, “அம்மாவுக்கு இன்னும் தெரியாது… கண்ணனுக்கு பரீட்சை அதனால இந்த வாரம் ஊருக்கு வரல… ஹாஸ்டல்ல தான் இருக்கான்…” என்றவன் செல்விக்கு அழைத்து பக்குவமாக விஷயத்தை சொல்லி வர சொன்னான்.
அதன்பின் கவி அனைத்தையும் கையில் எடுத்துக் கொண்டான்… மாறனின் மருத்துவ அறிக்கைகளை வைத்து அதற்குரிய சிறப்பு மருத்துவரிடம் கலந்தாலோசித்தவன் அமுதனிடமும் எல்லாவற்றையும் விவரித்து என்ன செய்யலாம் என்று அவனிடமே கேட்டான்.
கவி மருத்துவரிடம் பேசும் போது அமுதனையும் உடன் வைத்து கொண்டு தான் பேசினான்… அவன் பேசிய விதங்களையும் பேசிய விஷயங்களையும் வைத்து முதல் முறையாக அவனை கவியுடன் ஒப்பிட்டான்.
எப்படி அறிவுரை கூறுவது பிடிக்காதோ அதே போல மற்றவருடன் ஒப்பிட்டு பேசுவது பிடிக்காதவன் இன்று அவனே மற்றவனுடன் தன்னை ஒப்பிட்டான்.
“அமுதன்! சொல்லுங்க… என்ன பண்ணலாம்?” என்று கவி கேட்டதும்,
“எனக்கு தெரியல… நீங்களே எது சரியா வரும்னு முடிவு பண்ணிட்டு சொல்லுங்க…” என்றவனின் குரலில் இருந்த வெறுமையை இனம்கண்டவன்,
“எல்லோருக்கும் எல்லாமே தெரிஞ்சிடாது.. ஒன்னு அவங்க சூழ்நிலைகள் கத்துக்கொடுக்கலாம் இல்லை தெரிஞ்சுக்கணும் என்ற ஆர்வத்தில் அவங்களே கத்துக்கிட்டு இருக்கலாம்… நீங்க மனசுல போட்டு எதையும் குழப்பிக்காதீங்க…” என்று கவி சொன்னதும்,
அவன் வார்த்தையில் சற்று தெளிந்த அமுதன் மறுபடியும் அவனிடம் விவரங்கள் கேட்டு கொண்டு தந்தைக்கான சிகிச்சையை பற்றி டாக்டரிடம் அவனே பேசியதும் அதற்கான முயற்சியில் இறங்கி வெற்றிகரமாக இரண்டாம் முறையாக மாறனை மீட்டு எடுத்தனர்.
கவி இரண்டு நாள் இருந்தவன் அவரின் சிகிச்சை முடிந்து தனியறைக்கு மாற்றப்பட்டதும் கிளம்பிவிட்டான். தோழியுடன் இருந்து பார்த்துக் கொள்ள அவனுக்கு விருப்பம் இருந்தாலும் அங்கிருந்த சூழல் அதற்கு ஒத்துப்போகவில்லை…
ஏனெனில் இந்த இரண்டு நாட்களாக செல்வி கணவனின் உடல்நிலையை நினைத்து புலம்பியதை விட மருமகளை அவ்வப்போது மறைமுகமாக சாடியதே அதிகம் ஆகும்…
“எப்ப பாரு மருமக மருமகன்னு அவளையே தானே தலையில தூக்கி வைச்சு கொண்டாடுவாரு… அதனால தானே நேரம் காலம் பார்க்காம என்ன ஏதுன்னு விசாரிக்காம என் பையனுக்கு கட்டி வைச்சாரு… ஆனால் என் பையனை துளி கூட மதிக்கிறது இல்லையாமே… இப்ப அவர் உடம்பு முடியாம படுத்து இருக்கும் போது என் பையன் மட்டும் தானே தனியா அல்லாடிட்டு இருக்கான்…”
“எப்ப இந்த கல்யாணம் நடந்ததோ அப்ப இருந்து அவருக்கும் என் புள்ளைக்கும் நேரமே சரியில்லை… யார் பண்ண பாவமோ இப்படி எங்களை சுத்துது… ஒருவேளை அதனால தானோ என்னவோ முதல் கல்யாணத்தில அவளை அத்து விட்டு இருப்பாங்க….” என்று அவர் சொல்லி முடிக்கும் முன்னே,
“அம்மா ! ஆன்ட்டி!” என்று இருவேறு குரல்கள் வேகமாக ஒலித்தது.
“ஆன்ட்டி ! ஏன் இப்படி பேசறீங்க? அவளை பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?” என்று கோபமாக கேட்க ஆரம்பித்து ஒரு அடி முன்னே எடுத்து வைத்த கவியை பிடித்து தன் கண் பார்வையிலே அவன் பேச்சை நிறுத்தினாள் குழலி… அதன்பின் தான் அங்கிருக்க முடியாமல் தோழியின் குடும்ப வாழ்வை எண்ணி கிளம்பிவிட்டான்…
அவனோடு தன் தாயை அதட்டிய அமுதனுக்கும் தாயின் பேச்சில் கோபம் வர அவன் முதலில் பார்த்தது அவனின் மனையாளையே… ஆனால் அவள் முகத்தில் எந்த உணர்வும் இல்லாமல் வெறுமையாக இருந்தது.
இது எல்லாம் மருத்துவமனையில் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட தனியறையில் நடந்து கொண்டிருக்க, அவள் அத்தை பேசியதற்கு எந்த பதிலும் பேசாமல் வெளியே வந்து அமர்ந்து விட்டாள்.
உள்ளே அமுதன் தாயை கண்டிக்க, அவரோ அவன் பேச்சை காதில் வாங்காமல் பேசிக் கொண்டிருந்ததில், தான் அன்று ஏதோ சொல்ல போய் அதை வைத்து தான் தாய் இன்று இவ்வாறு பேசுகிறார் என்பதை அறிந்தவன் தன்னையே நொந்து கொண்டு வெளியே வர, அங்கு அமர்ந்திருந்தவளை எதிர்கொள்ள முடியாமல் வெளியே சென்று தன்னை சிறிது ஆசுவாசப்படுத்தினான்.
ஒருவரை பற்றி சரிவர தெரியாமல் நம்முடைய எண்ணங்களுக்கு அவர்களை பலியாக்குவதை முதல் முறையாக நேரிடையாக அதுவும் தன் மூலமாக உணர்ந்தவனுக்கு தன்னை பற்றிய மதிப்பீடு போகப்போக கீழே இறங்கி கொண்டிருந்தது.
இரண்டாம் முறை எல்லோரையும் பயமுறுத்திய மாறன் மேற்கொண்ட உயர் சிகிச்சையில் குணமடைந்து வீடு வந்து சேர இரண்டு வாரங்கள் ஆனது.
இந்த இரண்டு வாரங்களில் யாரேனும் ஒருவர் மருத்துவமனையில் மாற்றி மாற்றி தங்க, தன் வீட்டிற்கு செல்ல முடியாமல் மாறன் வீட்டிலேயே தங்க வேண்டிய நிர்பந்தம் குழலிக்கு உருவானது. அவளின் நல்ல நேரமாக கண்ணன் ஊரில் இல்லாமல் போனது வசதியாகப் போக அவன் அறையிலே தங்கினாள்…
மாறன் கொஞ்சம் தெம்பாகி பேச ஆரம்பிக்கவே ஒரு வாரம் ஆனது… இனி அவரை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே மூவரிடமும் இருந்தது… அத்தியாவசிய பேச்சுக்கள் கூட மூவரின் மத்தியில் எழவில்லை…
அதன்பின் அவர் வீடு வந்த பிறகு மேலும் இரண்டு நாள் இருந்த குழலி போன முறை போல மாறனிடம் மட்டுமே சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டாள்.
நாட்கள் மெதுவாக நகர குடும்பத்தின் ஆணிவேர் ஓய்ந்த பிறகே தாய்க்கும் மகனுக்கும் நிதர்சனம் புரிய ஆரம்பித்தது. கிருஷ்ணகிரியில் கண்ணாடிகளை தயாரிக்கும் கம்பெனியில் அதை வெட்டும் பகுதியில் வேலை செய்து வந்த மாறன் போன முறை உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மட்டுமில்லாமல் மகன் தான் இனி வேலைக்கு செல்கிறானே என்ற எண்ணத்தில் வேலையை விட்டு நின்றிருந்தார்.
அதன்பின் மகன் மறுபடியும் வீடு வந்த போது அவர்களிடம் மறுபடியும் வேலைக்கு கேட்டு சென்றிருந்தார். இனி அவரே வேலைக்கு செல்லலாம் என்று நினைத்தாலும் அதற்கு அவரின் உடல்நிலை சற்றும் ஒத்துழைக்கவில்லை..
இந்த நிலையில் வீடு கட்டுவதற்காக பேங்கில் வாங்கிய லோன், மகன்களின் படிப்புக்காக வாங்கிய கடன்கள் என்று ஒவ்வொருத்தரும் வந்துகேட்க ஆரம்பிக்க, அந்த வீட்டில் அவரின் வருமானம் மட்டுமே என்ற நிலையில் இன்று அது கூட இல்லாத காரணத்தினால் தாயும் மகனும் தடுமாற ஆரம்பித்தனர்…
அப்படி கேட்கும் போது தான் இது போல கடன் உள்ளதே அவர்களுக்கு தெரிய வந்தது… அதிலும் அமுதனை கேட்கவே வேண்டாம்… ஏற்கனவே குற்ற உணர்ச்சியில் இருப்பவன் இது போன்ற சூழ்நிலைகளை கையாள முடியாமல் தவித்து போனான்…
தந்தைக்கு உதவியாக வேலைக்கு சென்று இதை எல்லாம் சரி செய்யலாம் என்று அவன் காலம் கடந்து யோசிக்கும் போது வாழ்க்கை அவனுக்கு அதற்கான சந்தர்ப்பம் தராமல் போக தளர்ந்து போனவன்,
எப்போதும் போல தந்தைக்கு மாத்திரை கொடுக்க அவர் அறைக்கு சென்று அவருடன் பேச்சு கொடுத்தவாறே அனைத்தும் செய்ய அவரின் பேச்சோ ஒன்று இரண்டு என்று எண்ணிக்கையில் வர அவனுள் புருவ முடிச்சு…
நிமிடங்களில் அதற்கான பதில் தெரிந்தது, தான் பெங்களூரில் இருந்து இங்கு வந்த நாளிலிருந்து தந்தை தன்னிடம் சரியாக பேசுவதில்லை என்பதையே இப்போது தான் உணர அவன் மனம் காய்ந்தது…
“ஏன்ப்பா?என்கிட்ட பேச கூட உங்களுக்கு பிடிக்கலையா இல்ல என்னை எதுவும் பேசிடுவீங்கன்னு பேசாம இருக்கீங்களா? (Zolpidem) ” என்று அவரின் மனதை அறிந்து கேட்டதும்,
“நான் யாரையும் பேசற நிலைமையில இல்லப்பா… அதுக்கு முதல்ல எனக்கு தெம்பு இல்ல…“என்று சோர்ந்து பேசியவரைப் பார்த்தவன்,
“சாரிப்பா! என்னால தான் எல்லாமே… கேட்டதெல்லாம் கிடைக்குதுன்னு தெரிஞ்ச எனக்கு அதுக்கு பின்னாடி இருந்த உங்களோட கஷ்டம் தெரியல… எதை பத்தியும் கவலை இல்லாமல் சொகுசா வாழ்ந்த எனக்கு அதுக்கு பின்னாடி இருந்த உங்களோட உழைப்பு தெரியல…”
“இதெல்லாம் எந்த அளவுக்கு உடனே சரி பண்ண முடியும்னு தெரியலப்பா… ஆனால் சரி பண்ணிடுவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு… எதுவும் நினைச்சு நீங்க உங்களை வருத்திக்காதீங்க… எங்களுக்கு நீங்க வேணும்ப்பா…” என்று தழுதழுத்த குரலில் சொன்னவனைப் பார்த்தவர்,
“பெத்தவங்க எல்லாரும் அவங்க கடைசி காலம் வரைக்கும் நம்ம கஷ்டப்பட்டா கூட பரவால்ல நம்ம பசங்க கஷ்டப்பட கூடாதுன்னு தான் நினைப்பாங்க… நீங்க விருப்படறதெல்லாம் செஞ்சு கொடுக்கறது எங்களுக்கு கஷ்டம் இல்ல விருப்பம் தான்… ஏதாவது ஒரு நிலையில உங்களுக்கு தேவையானதை நீங்களே பார்த்துப்பீங்கன்னு ஒரு நம்பிக்கை வரும்… அது கூட பெத்தவங்க எங்களுக்காக இல்லை…”
“நம்ம பசங்க நல்ல வேலை, கல்யாணம் ,குழந்தைன்னு அவர்களுக்கான வாழ்க்கையை நிம்மதியா சந்தோஷமா வாழற அளவுக்கு வளர்ந்துட்டாங்கன்னு ஒரு நிலையில தோணும்… ஆனால் இதுவரைக்கும் எதுவானாலும் என் பையன் பார்த்துப்பான்னு அந்த நம்பிக்கையை நீ எனக்கு கொடுக்கல அமுதா…” என்று தோற்றுப்போன குரலில் சொன்னவரைப் பார்த்து தலைகுனிந்தான்.
“உனக்கான வாழ்க்கைக்கான அஸ்திவாரமே சரியா இல்லாதப்போ உன்னை நம்பி அவ வாழ்க்கை நல்லா இருக்கணும்னு கருத்தம்மாவை வேற உனக்கு கல்யாணம் பண்ணி வைச்சிருக்கேன்… நீ மாறமாட்டேன்னு தெரிஞ்சு தான் பத்து வருஷத்துக்கு முன்னாடியே ரங்கன் உன்னை கருத்தம்மாவுக்கு வேணாம்னு சொன்னானோ…”
“அவளோட பழைய வாழ்க்கையில இருந்து போராடி மீட்டெடுத்த நானே இன்னைக்கு அவளோட வாழ்க்கையை கெடுத்துட்டேனோ…” என்று புலம்பியவரை பார்த்து மனதில் பெரிதாக அடிவாங்கியவன்,
“என்னப்பா சொல்றீங்க?” என்று எழும்பாத குரலில் அவன் கேட்டதும், அவரின் நினைவுகள் தன்னாலேயே பின்னோக்கி சென்றது.