மாயாவி 5 ::
இந்த உலகத்தையே உந்தன்…
ஒற்றை பார்வையில் எதிர்க்கும் நீ…
எந்தன் ஒற்றை பார்வைக்கு நடுங்குகிறாயே…
என்னடி மாயாவி நீ !
மாறன் போன் பண்ணியதும் உள்ளே வந்தவனின் கண்களில் பதட்டமாக நின்றிருந்த அவன் மனைவியே தெரிந்தாள்.
“மேடம் ஏன் இவ்ளோ பதட்டமா இருக்காங்க? எப்பவும் திமிரா தானே இருப்பாங்க…” என்று யோசனையில் நின்றிருந்தவனை மாறன் அழைத்தார்.
“அமுதா ! நீ உன் பிரெண்டை போய் பார்த்துட்டு வேலை விஷயம் என்ன ஆச்சு கேட்டுட்டு வா… நான் இங்கயே இருக்கேன்…” என்று அவர் சொன்னதும் மலர்ந்த அவன் முகம் கவியின் வார்த்தையில் அதிர்ந்தது.
பின்னே இவளுடன் இங்கேயே தங்க வைக்கும் தந்தையின் முடிவை முறியடிக்க, நண்பனை சந்திக்க செல்லுவது போல சென்று வேலை கிடைக்கவில்லை என சொல்லி திரும்ப ஊருக்கே சென்று விடலாம் என்ற அவனின் எண்ணத்தை இவன் முறியடித்தால் அதிராமல் என்ன செய்வான்….
கவியின் வார்த்தைகளை கேட்ட குழலியோ உறைந்திருக்க மாறனோ மகிழ்ந்து போயிருந்தார்.
“என்ன அமுதன் எதுவும் சொல்லாம இருக்கீங்க?” என்று மூவரின் சிந்தனையை கவி கலைக்க,
“இல்ல வேணாம்… என் பிரெண்டே பார்த்துக்கறேன்னு சொல்லி இருக்கான்… உங்களுக்கு எதுக்கு சிரமம்…” என்று உள்ளுக்குள்ளே கடுப்போடும் வெளியே புன்னகையோடும் சொன்னவனை பார்த்து புன்னகைத்த கவி,
“நானும் காருவும் டிசைனர்ஸ் தான்.. இப்ப இங்க சிவில் டிபார்ட்மெண்ட்ல வேகண்ட் இருக்கு… நீங்களும் சிவில் முடிச்சிருக்கீங்க… இதுல என்ன சிரமம் இருக்க போகுது… இன்னும் கேட்டா இது எங்களுக்கு ஹெல்ப் தான்.. ப்ளீஸ்.. ஓகே சொல்லுங்க… காரு நீயும் கொஞ்சம் சொல்லேன்…” என்றவனை கொலைவெறியோடு முறைத்தாள்.
“நான் ஓகே சொல்றது இருக்கட்டும், நீங்களே எப்படி முடிவு பண்ண முடியும், இன்டெர்வியூ எடுத்து உங்க ஜீஎம் எம்டி எல்லாம் ஒத்துக்க வேணாமா…”என்று நக்கலாக கேட்டவனை பார்த்து கவி புன்னகைக்க, மாறனோ சத்தமாக சிரித்து விட்டார்.
“அப்பா ! என்னப்பா? இப்ப எதுக்கு சிரிக்கறீங்க? இது என்ன உங்க கால கம்பெனி மாதிரி ஆளுங்க சொல்லி விட்டா சேர்த்துப்பாங்கன்னு நினைச்சீங்களா? இங்க எல்லாம் வேலை கிடைக்கறதே பெரிய விஷயம்… உங்களுக்கு இதெல்லாம் புரியாது விடுங்க…” என்றவனை இடைமறித்த மாறன்,
“டேய்! நீ சொல்றது எதுவும் எனக்கு தெரியாது தான்.. ஆனால் ஒன்னு மட்டும் எனக்கு தெரியும்…” என்று நமட்டுச் சிரிப்போடு அவர் நிறுத்த,
“அப்படி என்ன தெரியும் உங்களுக்கு?” என்று அவன் எரிச்சலாக கேட்டதும்,
“கவி தம்பி தான் இந்த கம்பெனிக்கு முதலாளி, நம்ம கருத்தம்மா தான் அவருக்கு அடுத்த நிலையில இருக்கறதுன்னு தெரியும்…” என்று சொல்லி விட்டு அவர் சிரித்தார்.
“போச்சு போச்சு இப்படி சிக்கிட்டியேடா… எங்கயோ ஏதோ பெரிய வேலைன்னு அசால்ட்டா இருந்தியே கடைசியிலே நீ வைச்ச பொறியில நீயே மாட்டிக்கிட்டியே…”
“சும்மாவே அவளுக்கு அதிக திமிரு இதுல அவளுக்கு கீழே வேலை செஞ்சுக்கிட்டு அவ கூடவே தங்கணும்னா, இதெல்லாம் நமக்கு ஆகாது…”
“அவ கூட கல்யாணம் ஆன அதிர்ச்சியில இருந்தே இன்னும் நான் மீண்டு வரல.. அதுக்குள்ள அடுத்த அடியா… தலையே போனாலும் சரி அவ இருக்கற பக்கமே தலையை வைச்சு படுக்க கூடாது…” என்று அவனுக்குள்ளே புலம்பிக் கொண்டிருந்தவனின் மனசாட்சியோ,
“தலை போன அப்புறம் எப்படி தலையை வைச்சு படுப்ப…” என்று எள்ளி நகையாட அதை தட்டி உள்ளே அனுப்பினான்.
“நீங்க ஒன்னும் யோசிக்காதிங்க உங்க பிரெண்ட் பார்த்து வைச்ச வேலையை விட இங்க பெருசா இருக்காது.. சம்பளமும் அந்த அளவுக்கு தரோம்…ப்ளீஸ் ஓகே சொல்லுங்க…” என்று கவி கேட்டதும்,
“இல்ல சாரி தப்பா எடுத்துக்காதீங்க… அப்பாவுக்கு வேற உடம்பு சரியில்லை… இந்த நிலைமையில அவரை அங்க தனியா விட்டுட்டு நான் இங்க இருக்க முடியாது…” என்று அமுதன் மறுக்க,
“அங்கிள் ! வீட்ல ஆன்ட்டி அப்புறம் அமுதன் தம்பி உங்களை பார்த்துப்பாங்கள்ல… அமுதன் இங்கேயே இருக்கட்டுமே… இல்ல எங்க கூட வேலை செய்யறதுல உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா நீங்க தாராளமா சொல்லலாம்… நான் எதுவும் தப்பா நினைச்சுக்க மாட்டேன்…” என்று அவரைப் பார்த்து வாய் வார்த்தையில் சொன்னவனின் கண்கள் வேறு ஏதோ சொல்லுவதை படித்த மாறன்,
“தம்பி ! எனக்கு ஒண்ணுமில்லை.. வீட்ல எல்லாரும் இருக்காங்க… அவங்க பார்த்துப்பாங்க… இந்த மாதிரி இடத்துல உங்க கூட வேலை செய்யறதுல எனக்கு சந்தோசம் தான்…” என்று அவர் சம்மதம் சொன்னதும்,
குழலியோ நெடுநேரமாக தான் ஒருத்தி இங்கிருப்பதை கண்டுகொள்ளாமல் அவன் இஷ்டத்துக்கு முடிவெடுத்துக் கொண்டிருக்கும் கவியை முறைத்தாள்.
“கவி ! அவங்க தான் சொல்றாங்கல்ல மாமா கூட இருந்து பார்த்துக்கணும்னு அப்புறம் ஏன் நீ கட்டாயப்படுத்தற?” என்று காரமாக கேட்டவளை பார்த்த அமுதன்,
அவளின் முகபாவனையும் வார்த்தை தொனியையும் அவனுக்கு எதிராக புரிந்துக் கொண்டு, “ஏன் ? இவளுக்கு நான் இங்க வேலை செய்யறது பிடிக்கலையாமா? அப்ப கண்டிப்பா இங்க தான் இருக்கணும்…” என்று முடிவெடுத்தான்.
“எனக்கு இங்க வேலை செய்ய சம்மதம்…” என்று பட்டென்று சொன்னவாறே குழலியை முறைத்துக் கொண்டிருக்க,
“இவங்க ஏன் இப்ப முறைக்கிறாங்க? போச்சு நான் சொன்னதுக்கு கோபமாகி தான் இந்த முடிவெடுத்திருக்காங்க… நான் பேசாம இருந்திருக்கலாம்…” என்று தன்னையே நொந்துக் கொண்டாள்.
இருவரும் அவர்களுக்கு அவர்களே சொந்த செலவில் ஆப்பு அடித்துக் கொள்ள , அந்த ஆப்பிற்கு காரணமான இரண்டு ஆணிகளுக்கோ மகிழ்ச்சி தாளவில்லை. அவர்களுக்கு கிடைத்த இடைவெளியில்,
“அங்கிள் ! அப்ப அமுதன் இனி காரு கூட தங்கிக்கட்டும்… நீங்க எந்த கவலையும் இல்லாம ஊருக்கு போயிட்டு வாங்க…” என்று கவி சொல்லவும்,
“நல்லது தம்பி ! நான் கூட அவனை இங்கயே தங்க வைக்கணும்னு தான் கூட்டிட்டு வந்தேன்.. அவன் இங்கிருந்து கிளம்பனும்னு என்னென்னவோ சொன்னான் ஆனால் கடையிசில அவனே இங்க இருக்கேன்னு சொல்ல வைச்சிட்டிங்க… நல்லபடியா அவங்களே அவங்க வாழ்க்கையை பார்த்துப்பாங்க… இதுக்கு அப்புறம் எனக்கு என்ன கவலை வேண்டி கிடக்கு…உங்களை போல ஒரு நண்பன் கிடைக்க எங்க கருத்தம்மா கொடுத்து வைச்சிருக்கணும்…” என்று நெகிழ்ந்தவரைப் பார்த்தவன்,
“அதெல்லாம் இனி எல்லாம் சரியாகிடும் நான் பார்த்துக்கிறேன்…” என்றவனுக்கு அப்போது தெரியவில்லை அது எதுவும் அத்தனை சுலபம் இல்லை என்று…
சம்மந்தப்பட்ட இருவரும் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தனர்.. இனி ஒரே அலுவகத்தில் ஒரே வீட்டில் எப்படி ஒருவர் ஒருவரை பார்த்துக் கொண்டு இருக்க போகிறோம்…
வேறு எதுவும் நடந்து இப்போது நடந்ததெல்லாம் மாறி விடாதா என்ற எண்ணம் இருவருக்குள்ளுமே ஓடினாலும், எழுதியதை திருப்பி எழுத முடியாத விதியின் வசத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் தெள்ளத் தெளிவாக புரிந்தது… அவர்களின் யோசனையை கலைப்பது போல,
“அமுதன் இந்தாங்க உங்க அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்… இதுல கையெழுத்து போடுங்க…” என்று கவி நீட்டியதும்,
“டேய் ! மூச்சு விட கேப் கொடுடா…இப்படி விடாம தீயா வேலை செஞ்சு என்னை வைச்சு செய்யற…” என்று மனதிற்குள் புலம்பியவர்கள் எதில் ஒத்து போகிறார்களோ இல்லையோ கணவன் மனைவி இதில் ஒரே மாதிரியாக நினைத்தனர்.
“காரு! அங்கிள் ரொம்ப சோர்வா தெரியறாங்க… நீ உன் வீட்டுக்கு கூட்டிட்டு போ…” என்று அவளிடம் சொன்னவன்,
“அமுதன்! நீங்களும் இப்ப போய் ரெஸ்ட் எடுத்துட்டு நாளைல இருந்து ஆபீஸ்க்கு வந்துடுங்க…” என்று அவனிடம் சொல்ல,
“இல்ல… நான் போய் என் பிரெண்டை பார்த்துட்டு வரேன்… அப்பா நீங்க போய் ரெஸ்ட் எடுங்க…” என்று அவரின் பதிலுக்கு காத்திராமல் கிளம்பியதும்,
“மாமா ! நீங்க போய் கீழே நில்லுங்க நான் இதோ வரேன்…” என்று குழலி அவரிடம் சொல்ல அவரும் கவியிடம் சொல்லிவிட்டு வெளியேறினார்.
கிடைத்த தனிமையில் கையில் அகப்பட்ட பொருளெல்லாம் கவியை நோக்கி பறந்தன… “என்ன ஜோடி சேர்த்து வைக்கறியோ? நடக்காத விஷயத்தை ஏன் இப்படி வலுக்கட்டாயமா என் மேல திணிச்சு என்னை கொடுமைப்படுத்தறீங்க? என்னோட நிம்மதி எல்லாம் குழி தோண்டி புதைக்க தான் நீ என் பிரெண்டா இருக்கியா ?” என்று கோபமாக பேசியவளை முறைத்தான்.
“இங்க பாரு பூனை ! நாங்க என்ன செய்யறோம் ஏன் செய்யறோம்னு தெரியாத அளவுக்கு நீ ஒன்னும் சின்ன குழந்தை இல்லை… எல்லாமே உடனே நடக்க சொல்லல ஆனால் கல்யாணம் ஆகியும் இரண்டு பேரும் இப்படி ஆளுக்கு ஒரு திசையில இருந்தா எப்படி எல்லாம் சரி ஆகும்? இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படியே இருக்க போற… வாழ்க்கையோட நிதர்சனத்தை புரிஞ்சிக்கோ…”
“ஆனால் இப்ப நீ என்னை அடிக்க வந்த கோபத்துல ஒன்னு மட்டும் தெரிஞ்சுது… முதல் முறையா உன்னோட உணர்வுகளை வெளிப்படையா காட்டியிருக்க… நான் செஞ்சது பிடிக்கலைன்னா நீயே உங்க மாமாகிட்டேயும் அவர்கிட்டேயும் சொல்லிடு… நான் தான் உன் நிம்மதியை பறிக்கற ஆளாச்சே…” என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியேறியவனை பார்த்து அதிர்ந்தவள்,
நண்பன் சொன்னது போல கோபமோ சந்தோஷமோ கஷ்டமோ என்று எந்த உணர்வினையும் இதுவரை இந்த அளவிற்கு வெளிக்காட்டியது இல்லை… அவன் சொன்ன நல்லது கெட்டது தெரிந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தவள் மாறனோடு வீடு சென்றாள்.
என்னனென்னவோ நினைத்துக் கொண்டு பெங்களூர் வந்தால் இப்படி எதுவும் தன்வசம் இல்லாமல் கைமீறி சென்று கொண்டிருப்பதை உணர்ந்த அமுதன் எரிமலையின் சீற்றத்தில் இருந்தான்.
காலையில் இருந்து சாப்பிடாமல் இருந்தது வேறு ஒரு பக்கம், அவன் நண்பனும் வேலையில் பிசியாக இருப்பதால் கண்ணில் சிக்கிய ஒரு ஹோட்டலில் நுழைந்தவன் சாப்பாட்டோடு எல்லோரையும் சேர்த்து அரைத்து வயிற்றுக்குள் தள்ளினான்.
சாப்பிட்டு முடித்ததும் எரிச்சல் கொஞ்சம் மட்டுப்பட தந்தையிடம் செல்லலாம் என்று நினைத்தவனுக்கு அப்போதே கையில் வீட்டின் விலாசம் இல்லாதது நினைவு வர, தந்தைக்கு போன் பண்ணி விலாசம் வாங்கிக் கொண்டவன்,
“ஐயோ ! இனி நம்ப வாழ்க்கை நமக்கு இல்லையா? இவங்க விரிக்கிற வலையில நம்ம விழ கூடாது… எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த திமிர்பிடிச்சவகிட்ட இருந்து பிச்சிக்கிட்டு போகணும்… “என்று யோசித்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்ததும்,
அந்த அப்பார்ட்மெண்ட் வேறு அவனை மிரட்டியது. சுற்றி அந்த இடத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டே அழைப்பு மணியை அழுத்த, வெகு நேரம் கழித்து அவனின் மனையாளே வந்து கதவை திறந்ததும் இருவரும் ஒருவர் பார்வையில் ஒருவர் விழுந்தனர்.