சரண் – 18
ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும் அழகே
உன் திம்மென்ற கன்னத்தில்
திம்மென்ற நெஞ்சத்தில் இச்சென்று இதழ் வைக்கவா
இச்சைக்கோர் விலை வைக்கவா
உன் உம் என்ற சொல்லுக்கும் இம்மென்ற சொல்லுக்கும்
இப்போதே தடை வைக்கவா
மவுனத்தை குடி வைக்கவா
கதிரவனின் கண்கள் பூலோகக் காதலியைப் பிரிந்து போவதை நினைத்து சோகச் சித்திரமாக சிவந்து போயிருந்த பொன்மாலைப் பொழுது. திடிரென்று பெய்த கோடை மழையில் குளித்து, புத்துணர்ச்சியுடன் இருந்த மரங்கள் தென்றல் காற்றில் அசைந்தாட, சாளரத்தின் வழியாக உட்புகுந்த சில்லென்ற குளிர்காற்றில் விழி அசைந்தாள் வனமங்கை.
ஜன்னலின் பின்னே தெரிந்த செவ்வானப் பொழுது அந்திமம் ஆவதை நினைவு கூற, சட்டென்று மணியைப் பார்த்தாள். அது ஐந்தெனக் காட்ட, 11 மணியளவில் உள்ளே வந்தவர்கள் மதிய உணவிற்கு கூட எழும்பாமல் உறங்கியதை எண்ணி நொந்து போனாள், அவனிடமிருந்து தன்னைப் பிரித்து அவசர அவசரமாகக் குளித்து, கீழே சென்று பூஜையறையில் ஒரு அட்டனன்ஸைப் போட்டு விளக்கேற்றி, கிச்சனுக்குள் புகுந்தாள். அனைத்தும் மின்னல் வேகம் தான்.
காஃபிக்கு பாலை அடுப்பில் வைக்கப் போக, அதுவரை அவளது செய்கையை பார்த்துக் கொண்டிருந்த நாச்சியார், “முதல்ல சாப்பிடு, அப்புறம் காஃபி போடலாம்.” எனவும்,
“இல்ல ஆச்சி மாமாக்கு ரொம்ப பசி போல, அதான் காஃபி எடுத்துட்டு போகலாம்ன்னு..” என்று இழுக்க,
அவள் தன் முகத்தைப் பார்த்து பேசுவதற்கு சங்கோஜப்படுவதை உணர்ந்தவர், “வெற்றி எழுந்துட்டானா..?” என்றார்.
‘இல்லை’ எனும் விதமாய் தலையாட்ட, “இன்னும் துரை எழுந்துக்கவே இல்ல, அதுக்குள்ள காஃபியா..? தூக்கத்துல இருக்குறவனுக்குப் பசிக்கும், குளிச்சிட்டு வந்த உனக்குப் பசிக்காதா..? முதல்ல நீ சாப்பிடு.. அவன் எழுந்ததும் கீழ வருவான். இல்ல எழுந்தா கூப்பிடுவான்..” என்று பெரியவர் முடிக்க,
“எனக்குப் பசியில்ல ஆச்சி, அவரை எழுப்பி, கெளப்பி ரெண்டு பேரும் ஹாஸ்பிடல் போயிட்டு வர்ரோம்..” என்றவள், “ஆச்சி நாளைக்கு எங்கையோ போகனும்னு மாமா சொன்னாங்க, எங்கேன்னு உங்களுக்குத் தெய்யுமா..?” என,
“ம்ம்… சொன்னானே.. உங்கிட்ட இதைப்பத்தி பேசலையா..? பேசிடுறேன்னு சொல்லித்தானே உன்னைக் கூப்பிடவே வந்தான்.” என பதிலுக்கு கேட்க,
“இல்ல.. அதுவந்து பேசினார்.. ஆனா அதுவந்து எங்கேன்னு எல்லாம் சொல்லல..” திக்கித் தினற, ‘என்ன பேசினான், எப்படி பேசினான், என்ன செய்தான் என்று இவரிடம் எப்படி சொல்ல, தலையைக் குனிந்தபடியே டைனிங்க் டேபிளில் அமர்ந்து சாப்பிட ஆரம்பிக்க,
பெண்ணின் முகத்தைப் பார்த்து வந்த சிரிப்பை அடக்கியவர், “சரி விடு அவன் சொல்லாட்டி என்ன.? நான் சொல்றேன். வெற்றி கூட கிளம்புறதுக்கு எல்லாம் ரெடி செஞ்சுக்கோ.. ஒரு வாரம் பத்து நாள் ஆகும் அங்க வேலை முடிய…” எனப் பெரியவர் முடிக்கும் முன்னே
“இல்ல ஆச்சி நான் போகமாட்டேன். புகழ் மாமா இப்படி இருக்கும்போது, நாங்க எப்படி வெளியூர் போறது. என்னால முடியாது. மாமாக்கிட்ட நீங்க பேசுங்களேன் ஆச்சி. வெற்றி மாமா வருத்தப்படுற மாதிரி பேச என்னால முடியாது..” என்றவளை “போதும் மங்கை” என்ற நாச்சியின் கண்டிப்பான குரல் நிமிர வைத்தது.
அவரது அழுத்தமான குரலில் நிமிர்ந்து பார்த்தவர், கோபமான முகத்தைப் பார்த்து, “என்ன ஆச்சி.? நான் தப்பா எதுவும் சொல்லிட்டேனா..? எதுக்கு என்மேலக் கோபப்படுறீங்க..” என மென்று முழுங்க.
“அது என்ன பழக்கம், என்ன சொல்ல வர்ராங்கனேத் தெரிஞ்சிக்காம பேசுறது..” என்று அதேக் குரலில் கேட்க, “இல்ல ஆச்சி.. அது..” என இழுத்தாள்.
“நீயெல்லாம் டாக்டருக்குப் படிச்சிருக்கன்னு சொன்னா உலகம் சிரிக்கும். முதல்ல மனுசங்களைப் புரிஞ்சிக்கப் பழகு. என்ன சொல்ல வர்ராங்கன்னு காது கொடுத்துக் கேட்டுப் பழகு. வனிதா மாதிரியே நீயும் வெற்றி முன்னாடி புகழ் முக்கியம்ன்னு பேசாத. உன் அத்தை செஞ்ச தப்பை நீயும் செய்யாத. நீ வெற்றியோட மனைவி. அவனுக்குத்தான் நீ முதல் முக்கியத்துவம் கொடுக்கனும். புகழ் முக்கியம் தான். ஆனா வெற்றியை விட இல்ல..” என்றார் கண்டனமாக.
“ஆச்சி..” என அதிர்ந்து விழித்தவளிடம், “இத்தனை வருஷமா உன் அத்தை செஞ்சதையே நீயும் செய்ற மாதிரி இருக்கு மங்கை. புகழைப் பார்த்துக்க நாங்க இத்தனைப் பேர் இருக்கோம். அவன் உடம்புக்கு முடியாம இருக்கும் போது உன்னை வெளியூர் போக கூப்பிடுறான்னா ஏதோ முக்கியமான வேலையா இருக்கும் அப்படின்னு கூட தோனலையா.. அவன் தம்பி ஹாஸ்பிடல்ல இருக்கும் போது அவன் மட்டும் எப்படி சந்தோசமா இருப்பான். அது கூட உனக்குப் புரியல, நீயெல்லாம்..” என்றவரின் ஆவேசப் பேச்சில் ஆடிப் போய்விட்டாள் மங்கை.
அவர் பேச்சில் இருந்த உண்மையில் கூனிக்குறுகினாள். புகழை மட்டும் யோசித்து வெற்றியிடம் நடந்து கொண்ட தன் முட்டாள்தனத்தை எண்ணி வெட்கமாகிவிட்டது. கோபமாகத் தன்னையேப் பார்த்துக் கொண்டிருந்தவரிடம் வந்தவள், “ஆச்சி நான் அப்படியெல்லாம் யோசிக்கல. மன்னிச்சிடுங்க ஆச்சி. எங்க மேரேஜ் நடந்ததே புகழ் மாமாவால தான். அவர் மட்டும் துணிஞ்சு இந்த முடிவு எடுக்கலன்னா எங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் என்ன ஆகியிருக்கும். அவருக்கு ஆக்ஸிடன்ட் ஆனதே எங்களால தானோன்னு வருத்தமா இருக்கு ஆச்சி. அதனால்ல தான் நான் மாமா கூட சண்டைப் போட்டேன். ஆனா நீங்க சொல்றதும் சரிதான். மாமா எதையும் யோசிக்காம செய்ய மாட்டாங்க. எனக்குப் புரியுது. இனி இப்படி நடந்துக்க மாட்டேன். என்னை மன்னிச்சிடுங்க ஆச்சி..” என நீண்ட விளக்கம் கொடுத்தவளின் கைகளைப் பிடித்துக் கொண்டார் பெரியவர்.
“மங்கை.. ஒரு விஷயம் புரிஞ்சுக்கோ எது நடக்கனும்னு இருக்கோ. அதுதான் நடக்கும். உங்களுக்கு கல்யாணம் நடக்கனும்னு இருக்கு. அவனுக்கு விபத்து நடக்கனும்னு இருக்கு. உங்களால தான் புகழுக்கு ஆக்ஸிடன்ட் ஆச்சுன்னு யோசிக்காத. அப்படியே இருந்தா வாழ்க்கை முழுசும் அதையே யோசிச்சிட்டு இருப்பியா..? அப்போ உங்க வாழ்க்கை நரகமாகும். அவனுக்கு எந்த நல்லதும் நடக்க வேண்டாம. முதல்ல இந்த குற்ற உணர்ச்சியைத் தூக்கி தூரப் போடு. நடந்தது எல்லாம் விதின்னு அது மேல பழியைப் போட்டுட்டு, அடுத்த வேலையைப் பாரு. ஏத்துக்க கஷ்டமா இருந்தாலும், நிதர்சனம் அதுதான். சரியா..? என்றவரிடம் சரியென தலையசைத்தாள் மங்கை.
“என்னடா ஆச்சி இப்படி பேசுறாங்களேன்னு நினைச்சிடாத, நீ வருத்தப்படனும்னு இப்படி பேசல. உண்மையை புரிஞ்சுக்கனும்னு தான் சரியா..” என்றவர், புகழைப் பற்றி அனைத்தையும் கூறி, அதற்கு வெற்றி செய்திருக்கும் திட்டங்களையும் கூற, அனைத்தையும் கேட்ட மங்கைக்கு ஆச்சரியமாக இருந்தது. புகழா இப்படி என்று..
நிஜமாவா ஆச்சி.. புகழ் மாமாவா, நம்பவே முடியல, எந்தப் பொண்ணைக் காட்டினாலும் னிமிர்ந்து கூடப் பார்க்க மாட்டாங்க. அவங்களா இப்படி..! நான் கூடா மாமா நீங்க சாமியாரா போகப் போறீங்களான்னு கெட்டுருக்கேன். அந்த சாமியாரையே சாச்சுப் போட்ட அந்தப் பொண்ணை பார்க்கணுமே ஆச்சி. நீங்க எல்லாரும் ஓகே சொல்றீங்கன்னா, ரொம்ப நல்லப் பொண்ணு தான் போல, சூப்பர் ஆச்சி, எனக்கு இப்போதான் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு. நான் போய் மாமாவை எழுப்பி என்ன என்ன தேவைப்படும்ன்னு கேட்டு எடுத்து வைக்குறேன்..” எனத் துள்ளிக் கொண்டு எழுந்தவளைப் பிடித்து நிறுத்தியவர்,
“அம்மாடி தாயே உட்காரு, நான் இன்னும் முழுசா சொல்லி முடிக்கல, உன் அத்தையை மறந்துட்டுப் பேசுற, சும்மாவே ஆடுவா… இப்போ உன் புகழ் மாமா சலங்கையை வேற கட்டி விட்டுருக்கான். என்ன ஆட்டம் ஆடப் போறாளோ தெரியல, நானும் பாலனும் ஹாஸ்பிடல்ல அவக்கிட்ட பேசினோம். கேட்டுட்டு அமைதியா இருந்தா.. ஒரு ரியாக்ஷனும் காட்டல, வெற்றியும் கட்டாயப்படுத்தாதீங்க, அவங்க யோசிக்க டைம் கொடுங்கன்னு சொல்லியிருந்தான். அதனால நாங்களும் அதைப்பத்தி அதிகமா பேசல, ஆனால் கல்யாணம் கண்டிப்பா நடக்கும்ன்னு மட்டும் புரிய வச்சிருக்கோம். இதெல்லாம் நிஜம்ன்னு அவ நம்பனும். அதுக்கு ஒரு வழி இருக்கு. நீ பேசினா உங்கத்தைக் கேட்பா.. கண்டிப்பா கேட்பா… அதுவும் புகழுக்காக கண்டிப்பா கேட்பா… இப்போ ஹாஸ்பிடல் போகும் போது பேசிப்பாரு..” என வழி சொல்லிக் கொடுக்க,
“இல்ல ஆச்சி.. நீங்க கவனிச்சீங்களா இல்லையா தெரியல, அத்தை இப்போலாம் முன்ன மாதிரி இல்ல. நல்லாத்தான் நடந்துக்குறாங்க. அவங்க வேண்டாம்ன்னு சொல்ல மாட்டாங்க. புகழ் மாமாவோட வாழ்க்கை எவ்வளவு முக்கியம்ன்னு அவங்களுக்குத் தெரியும். அதனால இந்த கல்யாண விசயத்துல மறுக்க மாட்டாங்கன்னு தான் நினைக்கிறேன். ஆனாலும் நீங்க சொல்றதுனால பேசிப் பார்க்குறேன். இப்போ போகட்டுமா..” என அதுவரை சீரியஸாகப் பேசியவள், கடைசியில் பாவமகப் பேச,
மங்கையின் பேச்சில் சட்டென்று சிரித்த நாச்சியார், “காஃபி எடுத்துட்டுப் போகலையா.. உன் மாமாவுக்கு பசிக்குமே..” எனக் கேலி செய்ய,
“போங்க ஆச்சி.. நான் எழுப்பிக் கீழ கூப்பிட்டு வர்ரேன்..” என விட்டால் போதும் போல, சிட்டென மாடியை நோக்கிப் பறந்திருந்தாள்.
“ஏய் விளக்கு ஏத்தினதை மரந்திடாத..” என்றப் பெரியவரின் பேச்சுக் காற்றோடு தான் கரைந்து போனது.
அறைக்குள் நுழைந்தவளின் பார்வையில் அப்போதுதான் எழுவதற்காக உருண்டு கொண்டிருந்த கணவன் பட்டான். எதையும் யோசிக்காமல் கதவைத் தாழிட்டவள், வேகவேகமாக கட்டிலிலேறி அவன் மேல் தொம்மென்று விழுந்தாள்.
உறக்கத்திலிருக்கும் போது விழவும், அவனும் என்னவோ என்று பயந்து அவளை வளைத்துப் பிடித்து உருள, இருவரும் கட்டிலிலிருந்து கீழேக் கிடந்தனர்.
“அய்யோ அம்மா..” என அலறியபடியே எழுந்தவள் அவன் முறைப்பதைப் பார்த்து, “பொண்டாட்டி ரொமான்டிக்கா வந்து மேல விழுந்தா இப்படித்தான் கீழத் தள்ளி விடுவீங்களா.. பாருங்க என் இடுப்பேப் போச்சு…” என முறைக்க
“போய் வெளியச் சொல்லிடாத, மொத்த உலகமும் உன்னப் பார்த்து சிரிக்கும். இப்படி டேங்கர் லாரி மாதிரி வந்து மேல விழுந்து, எல்லா பார்ட்ஸையும் பஞ்சர் பண்ணிட்டு, ரொமாண்டிக்கா விழுந்தேன்னு சொல்ற…” எனப் பதிலுக்கு அவனும் முறைக்க,
“ம்ம்ம்… நான் ஒன்னும் டேங்கர் லாஅரி இல்ல, நீங்க சிக்ஸ் பேக் வச்சி, அங்க அங்க மசில்ஸ் எல்லாம் ஏத்தி பார்க்க அய்யனார் மாதிர் இருக்கீங்களே.. நான் உங்க மேல விழுந்தா அப்படியே பூ மாதிரி இருக்கும்ன்னு தப்பா நினைச்சிட்டேன். இந்த ஆர்ம்ஸ், சிக்ஸ் பேக் எல்லாம் டுபாக்கூர்ன்னு இப்போ தானே தெரியுது…” என அவனை வம்பிழுக்க,
“ஹேய் யாரோட ஆர்ம்ஸ் பார்த்து டுபாக்கூர் சொன்ன, எல்லாம் ரியல்மா.. வேணும்னா இந்த ஒத்தக் கையில நீ ஊஞ்சலாடு, மாமா அசையாம அப்படியே நிப்பேன்..” என்றவன் அவளையும் எழுப்பித் தானும் எழுந்து, லுங்கியை மடித்துக் கட்டியவன், ஒற்றைக் காலைத் தூக்கி கட்டிலில் வைத்து, கையை மடக்கி அவளை வா என்று அழைக்க,
அவளோ அவனது ஒவ்வொரு செய்கையிலும் மெய்மறந்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போதுதான் அவனும் அவளைக் கவனிக்க ஆரம்பித்தான். காலையில் என்னக் குதி குதித்தாள். இப்போது சாந்த சொரூபியாக இருக்கிறாள். என்ன நடந்தது என்று மூளையைக் கசக்க வேண்டிய அவசியமே இல்லாமல், கட்டிலின் மேல் இருந்தக் காலில் ஏறி அமர்ந்த மனையாள் அவன் நெஞ்சில் அப்படியே சாய்ந்து கோண்டு.. “லவ் யூ மாம்ஸ்.. லவ் யூ சோ மச்..” எனவும்,
“ஆஹான் என்னாச்சு என் பொண்டாட்டிக்கு, இன்னைக்கு என்னென்னமோ பன்ட்றாளே. என் குட்டி மன்சு தாங்காதுடி, என்ன நடந்துச்சின்னு சொல்லு. சோழியன் குடுமி சும்மா ஆடாதுன்னு எனக்குத் தெரியும்…” என மனைவியை வம்பிழுத்தாலும், அவனும் அவளை அணனைத்துக் கொண்டான்.
“ம்ம்ச்ச்.. எப்பவும் உங்களுக்கு விளையாட்டுத்தான். சொல்லுங்க எதுக்கு எங்கிட்ட சொல்லல, நான் ரொம்ப பயந்து போயிட்டேன். அதோட அவருக்கு ஆக்ஸிடன்ட் ஆனதே நம்மாளால தானோன்னு வேற குற்ற உணர்ச்சி. நான் மென்டல் மாதிரி இங்க சுத்திட்டு இருக்க, நீங்க ஜாலியா அனுமார் வேலைப் பார்க்க போயிருக்கீங்க..” என அவன் தோளில் கடித்து வைக்க,
“ஏய் பிசாசு, ரத்தக்காட்டேறி டி நீ..” என்றவன் அப்படியே அவளை இரண்டு கைகளாலும் அள்ளி, அவள் எப்படி அவன் மேல் விழுந்தாளோ அதே போல் மெத்தையில் போட, “மாமா..” எனப் பல்லைக கடித்தவளின் மேல் அவனும் விழுந்து, அசையாமல் பிடித்து அவள் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்து, “உனக்கு இருக்குற அதேக் குற்ற உணர்ச்சி எனக்கும் இருக்காதா..? அவன் வாழ்க்கையை நான் வாழ்றதா நெறைய நாள் மன்சுக்குள்ளயே புழுங்கியிருக்கேன். அதெல்லாம் வெளிய சொல்ல முடியாத வலி. இப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கு. அவனுக்குனு ஒரு வாழ்க்கை அமைஞ்சா தான் எனக்கு நிம்மதியா இருக்கும். புகழ் விரும்பின வாழ்க்கையை அமைச்சிக் கொடுக்க வேண்டியக் கடமையும், பொறுப்பும் ஒரு அண்ணணா எனக்கு இருக்குது. அதைத் தான் செய்றேன்..” என்றுவிட்டு விரிந்த அவளின் விழிகளில் முத்தமிட்டான்.
மாமா.. ஆச்சி நம்மளைக் கிளம்பி வரச் சொன்னாங்க, எழுந்துறீங்க போகலாம். நான் கிளம்பிட்டேன். நீங்க தான் ரெடியாகனும்..” எனப் பேசிக்கொண்டே வந்தவள், கணவணின் பார்வையில் தெரிந்தப் பார்வையில், வாயை மூடி தன்னை ஒரு முறைக் குனிந்து பார்க்க, அவளது அழகான புடவை, அங்குமிங்கும் சுருண்டு அவளை மேலும் அழகாக்கிக் கொண்டிருந்தது அவனுக்கு. “அய்யோ.. தள்ளுங்க மாமா.. விளக்கு ஏத்திட்டேன்.. இனி அதெல்லாம் ஒன்னும் கிடையாது ப்ளீஸ் மாமா…” என்றவளின் திமிறலை அடக்கியவன்,
“அது என்மேல் வந்து விழும் போது யோசிச்சிருக்கனும் வனி டார்லிங்.. உன் ஹிப்ல அடிப்பட்டிருக்கு இல்ல, அங்க மசாஜ் செய்யப் போறேன். சோ நீ இப்படி ரியாக்ட் பன்றது நோ யூஸ்..” என்று அவளிடம் தன் காரியத்தை சாதிக்கத் துவங்கினான் கணவனாக.