“கடவுளே போட்டோவைப் பற்றி எதுவும் கேட்டுடக் கூடாது”, என்று வேண்டினாள்.
“அன்னைக்கு எதுக்காக என்னோட போட்டோவை எடுத்துட்டு போன?”, என்று கேட்டான்.
“அது அது… அது வந்து….”, என்று திணறியவள் “அது வந்து அது பாக்க நல்லா இருந்துச்சு. அது மாதிரி குச்சியும் நானும் சேந்து போட்டோ பிடிக்கணும்னு ஆசையா இருந்துச்சு. அதான் எடுத்துட்டு போனேன். எங்க ஆட்கள் அந்த மாதிரி போட்டோ எல்லாம் எடுக்க மாட்டாaங்க. அதான் எடுத்துட்டு போனேன். என்னை மன்னிச்சிருங்க. அப்புறம் எனக்கே அது தப்புன்னு பட்டுச்சு. அதான் திருப்பிக் கொடுக்க வந்தேன்”, என்று அவள் நிதானமாக சொல்ல அவனுக்கு சப்பென்று இருந்தது.
“இவ்வளவு தானா? நான் வேற எதுவோ நினைச்சிட்டேனே?”, என்று எண்ணி முகம் கூம்பி போய் அவன் நிற்க அவன் முக வாட்டம் அவளையும் பாதித்தது. உண்மையைச் சொல்வது இருவருக்கும் சரியானது அல்ல என்று எண்ணி தான் அவ்வாறு சொன்னாள். ஆனாலும் அவன் முக வாட்டம் அவளுக்கு கஷ்டமாக இருந்தது.
“சரி நீ போ”, என்று மாதவன் சொல்ல அவனைத் திரும்பி திரும்பி பார்த்த படி சென்றாள் வனமங்கை.
அவள் தன்னுடைய புகைப்படத்தை எடுத்ததை வைத்து அவள் மனதிலும் அவன் மீது நேசம் இருக்கிறது என்று நம்பியிருந்தான். ஆனால் புகைப்படம் என்ற ஒன்றையே இதுவரை எடுக்காதவள் அந்த ஆசையில் தான் எடுத்தேன் என்று சொல்லும் போது அவனால் அதை நம்பத் தான் முடிந்தது.
“நான் தான் தேவையில்லாம கற்பனை பண்ணிட்டேனா? என்னை மாதிரி அவளுக்கு எந்த உணர்வும் இல்லையா? இல்லையே என்னைக் கண்டதும் அவளுக்கு வர வெக்கம் உண்மை தானே? அவ மனசுல நான் இருக்கேன்”, என்று எண்ணி சிறு தெளிவைக் கொண்டு வர முயன்றான்.
என்ன நடந்தாலும் அவளைத் தவிர வேறு எந்த பெண்ணையும் அவனால் வாழ்க்கைத் துணையாக வடிக்க முடியாது என்ற உண்மையும் அவனுக்கு புரிந்து தான் இருந்தது.
“இப்ப என்ன? அவ உன்னை விரும்பலைன்னா கூட இனி உன் காதலைச் சொல்லி அவளை லவ் பண்ண வை”, என்று அவன் மனசாட்சி அறிவுரை வழங்க கூம்பியிருந்த அவன் முகம் மலர்ந்தது.
வீட்டுக்குச் சென்ற வனமங்கை வைத்தியரிடம் மூலிகையைக் கொடுத்தாள். மூலிகையை வாங்கிய படி அவளை நோட்டமிட்டார். அவனிடம் பேசினால் சிறிது தெளிவடைவாள் என்று நம்பிய அவருக்கு ஏமாற்றம் தான். ஏனென்றால் இப்போதும் அவள் முகத்தில் குழப்பமும் சோர்வும் தான் இருந்தது.
“யாரு டா கண்ணு மூலிகை பறிச்சு தந்தது?”, என்று கேட்டார்.
“அந்த சார் தான் வைத்தியர் ஐயா. சரி இருங்க. கஞ்சி ஊத்தி தரேன். குடிச்சிட்டு குடிலுக்கு போங்க”, என்று சொல்லி விட்டு அவள் வேலையைப் பார்க்க சென்றாள். இப்போது அவர் தான் குழம்பிப் போனார். இருவருக்கும் இடையில் ஒன்றுமே இல்லையா? அந்த தம்பி இவளிடம் எதையுமே பேச வில்லையா? இருவருக்கும் இடையில் ஒன்றுமே இல்லையா? என்று பல கேள்விகள் அவருக்குள் எழுந்தது. ஆனால் வெளிப்படையாக அதை கேட்டு இல்லாத ஒன்றை அவளுக்குள் உருவாக்க அவர் தயாராக இல்லை.
அதற்கு அடுத்த நாள் அவள் வருகைக்காக காத்திருந்தான் மாதவன். அவள் வருவாள் என்று அவன் உள் மனம் சொல்லியது. அவனது அறிவும் கட்டாயம் காச்சலில் விழுந்த குச்சியால் வர முடியாது, அதனால் அவள் தான் வருவாள் என்று சொல்லியது.
நினைத்தது போல அவள் தான் வந்தாள். “வா வனமங்கை. இந்தா மூலிகை”, என்று சாதாரணமாக சொல்லி ஏற்கனவே பறித்து வைத்திருந்த மூலிகையைக் கொடுத்தான். அவன் முகம் நிர்மலமாக இருந்தது. அவளைக் கண்டதும் அவனது முகம் மின்னுவதும் ஒரு தவிப்புடன் அவளிடம் எதையோ சொல்வது போல இருப்பதும் இன்று இல்லாமல் இருந்தது. இதற்கு முன்பு அவன் கண்களில் வழிந்த தேடல் இப்போது இல்லாததைக் கண்டு உள்ளம் சோர்ந்தாள் வனமங்கை. “அவ்வளவு தானா?”, என்று அவள் மனது கலக்கம் கொண்டது.
“நீயே அந்த போட்டோவை சும்மா தான் எடுத்தேன்னு சொல்லிட்ட. அப்புறமும் அவன் உன்னையவே சுத்தி வருவானா?”, என்று அவளது அறிவு எடுத்துரைத்தது. ஆனாலும் மனமோ எதையோ எண்ணி ஏங்கியது.
“சரி நான் வரேன்”, என்று சோர்வாக சொன்னாள். தன்னுடைய அமைதி அவளை பாதிக்கிறதோ என்று சிறு சந்தேகம் வந்தது அவனுக்கு. அவள் மனதை அறிவதற்காக “நாளைக்கு நீ வர வேண்டாம் வனமங்கை, குச்சியை அனுப்பு”, என்றான்.
அதைக் கேட்டு திகைத்துப் போனாள். குச்சிக்கு உடல்நிலை சரியாகி விட்டால் கண்டிப்பாக அவன் தான் இங்கு வருவான். வனமங்கையை அவன் வர விட மாட்டான் தான். இன்றே அவன் தான் வருவேன் என்று அடம் பிடித்தான். வைத்தியர் தான் இன்று ஒரு நாள் அவனை அலைய வேண்டாம் என்று சொன்னார். கடைசியாக இன்று மட்டுமாவது இவனைப் பார்க்கலாம் என்று எண்ணி தான் அவள் வந்தாள்.
ஆனால் அவனுக்கோ அப்படித் தோன்றவில்லையே. அவளை வரவேண்டாம் என்றல்லவா சொல்கிறான். தன்னைப் பார்க்கும் ஆவல் அவனுக்கு இல்லையா? ஆண்கள் எல்லாம் இப்படி தான் மனம் மாறுவார்களா? என்னை மறந்து விட்டானா? என்று எண்ணி அவளுக்கு அழுகை வரும் போல இருந்தது.
அவனை நிமிர்ந்து பார்த்தவள் அவன் முன் அழ மனதில்லாமல் “சரி”, என்றாள். அவளுடைய லேசாக கலங்கிய கண்கள் அவனுக்கு அவளுடைய மனதை பாதி காட்டியது.
அதை மேலும் அறிவதற்காக “நாளைக்கு நான் ஊருக்கு போறேன். அதனால இங்க இருக்குற வேற யாராவது தான் மூலிகை பறிச்சு தருவாங்க. இங்க இருக்குறவங்க எப்படினு எனக்கே இன்னும் தெரியாது. நான் இல்லாத நேரத்துல உன் கிட்ட எப்படி நடந்துக்குவாங்கன்னு தெரியாது. அதனால தான் உன்னை வர வேண்டாம்னு சொன்னேன்”, என்று விளக்கம் கொடுத்தான். அவன் சொன்னதைக் கேட்டு ஒரு நிம்மதி பெருமூச்சு வந்தது அவளுக்கு. கூடவே அவனது அக்கறை அவளைத் தாலாட்டவும் செய்தது.
அவள் முகத்தில் வந்து போகும் உணர்வுகளை அவன் பார்த்துக் கொண்டிருக்க தன்னுடைய தயக்கம் உதறி “திடீர்னு ஊருக்கு எதுக்கு? போயிட்டு எப்ப வருவீங்க?”, என்று கேட்டு விட்டு தான் கேட்டது அதிகப் படி என்பதால் நாக்கைக் கடித்துக் கொண்டாள். “அப்படி வாடி வழிக்கு”, என்று எண்ணிக் கொண்டு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான். காதலாக அவளைப் பார்த்தான். அவளோ தலை குனிந்து நின்றாள்.
அவளது உதடுகளுக்கு இடையே சிக்கியிருந்த நாக்கை விடுவிக்க எழுந்த தாபத்தை அடக்கியவன் “அக்காக்கு குழந்தை பிறந்திருக்கு. அதைப் பாக்கவும், அப்புறம் அம்மா எனக்கு கல்யாணத்துக்கு ஒரு பொண்ணு பாத்து வச்சிருக்காங்களாம். அதைப் பாக்கவும் போறேன்”, என்று சொல்ல அவனை அதிர்ந்து போய் நிமிர்ந்து பார்த்தாள். அவள் கண்கள் மேலும் கலங்க ஆரம்பிக்க அவள் மனது அவனுக்கு தெள்ளத் தெளிவாக புரிந்தது. அவளிடம் எதிர்கால வாழ்க்கையைப் பற்றித் தெளிவாக பேசியே ஆக வேண்டும் என்று முடிவெடுத்தான்.
ஆனால் அவளோ “சரி சார் போயிட்டு வாங்க, நான் வரேன்”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து போகப் பார்த்தாள்.
இருவருக்கும் இடையில் வேலி இருக்கும் வரை அவள் மனதை அறிய முடியாது என்று உணர்ந்தவன் “வனமங்கை, ஒரு நிமிஷம்”, என்று அழைத்தான்.
“என்ன சார்?”
“நான் குச்சிக்கு கொஞ்சம் பொருள் வாங்கி வச்சிருக்கேன். அதை அவன் கிட்ட கொடுத்துருவியா?”
“உனக்கு வாங்கிக் கொடுத்தா தான் தப்பு. அவனுக்கு கொடுத்தா தப்பில்லை. பிளீஸ் வாங்கிக்கோயேன்”, என்று அவன் சொன்னதும் “ஏன் எனக்கு மட்டும் வாங்கித் தர மாட்டாயா?”, என்று அவள் மனது சிணுங்கியது.
அவனைக் கண்டு அலைபாயும் மனதை அடக்கி விட்டு “சரி தாங்க”, என்றாள்.
“வீட்ல இருக்கே. எப்படிக் கொடுக்க?”
“எடுத்துட்டு வாங்க. நான் இங்கயே நிக்குறேன்”
“எவ்வளவு நேரம் இங்கயே நிப்ப? இந்த பக்கம் விலங்குகள் வராதுன்னாலும் மலைப்பாம்பு அதிகம் வரலாம்”
“அப்படின்னா நாளைக்கு குச்சி கிட்டயே கொடுத்துருங்க”, என்று சலிப்போடு தான் சொன்னாள். அவன் வேறு பெண்ணை பார்க்க போகிறான் என்றதும் அவளுக்கு ஓவென்று அழ வேண்டும் போல இருந்தது. அதனால் அவன் கண்ணில் இருந்து மறைய ஆசைப் பட்டாள். ஆனால் அவன் பிடிவாதமாக பிடித்து வைத்து பேசிக் கொண்டிருக்கவும் அவளுக்கு சலிப்பு வந்தது.
“நான் இன்னைக்கு சாயங்காலம் ஊருக்கு கிளம்பிருவேன் வனமங்கை. அப்புறம் எப்படி குச்சியைப் பாக்க? நீ ஒண்ணு செய். நீ கொஞ்சம் மெதுவா நடந்து வா. நான் அந்த பக்கம் வழியா அதை எடுத்துட்டு வரேன். சந்தைக்கு போற வழி திரும்பும்ல? அங்க ஒரு ரெண்டு நிமிஷம் நில்லு. நான் வந்துறேன்”
“சரி”, என்று சொல்லி விட்டு அவள் செல்ல “வரேன் இரு டி. இன்னைக்கு வசமா சிக்கிருக்க? அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டுருவேனா?”, என்று எண்ணிக் கொண்டு தன்னுடைய வீட்டுக்கு சென்று குலசேகரனுக்கு வாங்கி வைத்திருந்த பையை எடுத்துக் கொண்டு வெற்றியிடம் ஜீப் சாவியை வாங்கிக் கொண்டு சென்றான்.