அவன் முகத்தில் இருந்த சந்தோஷம் அவன் யாரைக் காணச் செல்கிறான் என்பதை வெற்றிக்கு தெளிவாகப் பறைசாற்றியது. அவன் முகத்திலும் புன்னகை உதயமானது. கூடவே கடவுளிடம் அவனுக்காக ஒரு வேண்டுதலையும் வைத்தான்.
வனமங்கை அந்த இடத்துக்கு நடந்து வருவதற்குள் இவன் ஜீப்பில் சென்று நின்றிருந்தான். அவனைக் கண்டதும் அவன் அருகில் சென்றாள் வனமங்கை. அவள் முகம் ஏதோ பறிகொடுத்தது போல இருந்தது.
அவனுக்கும் அவளுக்கும் இடையே வெகு தூரம் என்று அவளுக்கு தெரிந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள அவளுக்கு கஷ்டமாக தான் இருந்தது. அவன் காதலைச் சொல்லியிருந்தாலும் அவள் மறுக்க தான் செய்திருப்பாள். ஏனென்றால் அவர்கள் இனத்தில் திருமணம் அந்நியர்களுடன் முடிக்க மாட்டார்கள். ஆனாலும் ஒரு பெண்ணாக அவளுடைய அகம் தொட்டவன் மாதவன் தான்.
இந்த உண்மை எல்லாம் புரிந்தாலும் அவனுடைய மனதில் அவளுக்கு இடம் இல்லை என்று தெரிந்ததும் அவளுக்கு கஷ்டமாக இருந்தது. அதுவும் வேறு ஒரு பெண் அவன் வாழ்க்கையில் வரப் போகிறாள் என்றதும் அவளுக்கு வலிக்கவே செய்தது.
தன்னருகே வந்ததும் “இந்தா, இதை குச்சி கிட்ட கொடுத்துரு”, என்று சொல்லி ஒரு பையைக் கொடுத்தான்.
சரி என்னும் விதமாய் தலையசைத்து விட்டு அதை வாங்கிக் கொண்டாள். இடையில் தாவணியில் கட்டியிருந்த மூலிகையையும் எடுத்து அந்த பையில் வைத்தாள். பின் வருகிறேன் என்னும் விதமாய் தலையசைத்து விட்டு அங்கிருந்து செல்வதற்காக திரும்பினாள். அவன் இனி தனக்கு இல்லை என்று எண்ணி அவள் கண்கள் கலங்கியது. அவள் ஒரு அடி எடுத்து வைக்கும் போது அவள் கரம் பற்றி தடுத்தான் மாதவன்.
அவன் தொட்டதும் அதிர்ந்து நின்றாள் வனமங்கை. ஆனால் அவனைத் திரும்பிப் பார்க்க வில்லை. அப்படித் திரும்பினால் அவளுடைய கண்ணில் துளிர்த்த கண்ணீரை அவன் கண்டு விடுவான் என்பதால் அவனுக்கு முதுகு காட்டி நின்றாள்.
அவள் கையை விடாமல் அவள் பின்னே நெருங்கி நின்றான் மாதவன். அவனுடைய நெருக்கத்தில் அந்த நேரத்திலும் அவள் உடல் சிலிர்த்தது. இது சரியல்ல என்று அவள் மனம் எச்சரிக்க செய்ய அவனுடைய கையில் இருந்து தன்னுடைய கரத்தை உருவ போராடினாள். ஆனால் அவனை திரும்பி பார்க்க வில்லை. அப்படிப் பார்த்தாள் கட்டாயம் அவன் முன்பு அழுது விடுவோம் என்று அவளுக்கு தெரிந்தே இருந்தது.
நெருங்கி நின்றவனோ “மங்கை”, என்று அழைத்தான். அவன் குரல் அவ்வளவு குழைந்து வெளி வந்தது. அதுவும் அந்த அழைப்பு அவளை சிலிர்க்க வைத்தது.
அவனுடைய மென்மையான குரலில் அவளுக்குள் அதிர்வு வந்தது. “என் கையை விடுங்க, நான் போகணும்”, என்று முணுமுணுத்தாள். நமநம என்று இருந்த அவளது குரலே அவளது மனநிலையை அவனுக்கு பறைசாற்றியது.
அவன் அவள் கரத்தை விடவும் இல்லை. அவளிடம் வேறு பேசவும் இல்லை. அவளை இன்னும் நெருங்கி நின்றான். அவனது மூச்சுக் காற்று அவளது ஆடை மறைக்காத வெற்றுத் தோளில் பட உடல் சிலிர்த்து படக்கென்று அவன் பக்கம் திரும்பினாள்.
அவளுடைய கலங்கிய கண்கள் பரிதவிப்பாய் அவனை எறிட்டது. அவள் கண்களில் இருந்த கலக்கமும் கண்ணீரும் அவனை பெரிதும் தாக்கியது என்று சொன்னால் அது மிகையில்லை.
அடுத்த நொடி அவனுடைய கரம் உயர்ந்து அவள் கண்ணீரைத் துடைத்தது. அவனுடைய தொடுகையில் அவள் அதிர்வாக அவனைப் பார்க்க “என்னை உனக்கு பிடிச்சிருக்கா?”, என்று வார்த்தைக்கு வலிப்பது போல மென்மையாக கேட்டான். அவன் அப்படி கேட்டதும் அவள் கண்கள் அதிர்ச்சியில் விரிய அவள் கண்கள் பேசும் கவிதையை உற்று படித்துக் கொண்டிருந்தான்.
அவள் கண்கள் அவன் மீதான நேசத்தை அவனுக்குச் சொன்னாலும் அவளது வாய் மொழியாக அதை கேட்க ஆசைப் பட்டான்.
“சொல்லு மங்கை என்னை உனக்கு பிடிச்சிருக்கா?”, என்று மீண்டும் கேட்டான். அவள் இதற்கு என்ன பதில் சொல்வாள்? உண்மையைச் சொன்னால் அவளால் அவனைத் திருமணம் செய்ய முடியுமா? இல்லை பொய் சொன்னால் தன்னை விட்டு விடுவானா? ஆனால் கண்கள் உண்மை பேசிக் காட்டிக் கொடுக்கையில் அவள் உதடுகள் பொய் தான் சொல்ல முடியுமா?
எதிர்பார்ப்பு நிறைந்த அவனுடைய கண்களைக் காண முடியாமல் தலை கவிழ்ந்து நின்றாள்.
“என்னைப் பாரு மங்கை. என் கண்ணைப் பாத்து பதில் சொல்லு. எனக்கு உண்மை தெரியணும்”, என்று கேட்க மௌனமாக அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.
பின் ஒரு முடிவுடன் “நாம நினைக்கிறது எதுவும் நடக்காது. நீங்க வேற நான் வேற”, என்று சொன்னாள்.
அவள் பிடிக்க வில்லை என்று சொல்லியிருந்தால் அவளை விட்டு விலகி இருப்பானோ என்னவோ? ஆனால் மறைமுகமாக அவள் சொன்ன பதிலில் அவள் மனது அவனுக்கு புரிந்தது.
“புடிச்சிருக்கா இல்லையான்னு கேட்டா ஆமா இல்லைனு சொல்லணும். ஆனா நீ சொல்ற பதிலை என்னன்னு எடுத்துக்குறது. நீ இல்லைன்னு சொல்லலைல? அதனால ஆமானு எடுத்துக்கவா?”, என்று சிரிப்புடன் கேட்டான்.
அவனுடைய மயக்கும் புன்னகையைக் கண்டு அவள் மீண்டும் தலை குனிய அவன் விரல் அவளுடைய தாடையை பற்றி நிமிர்த்தியது. அவள் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் கன்னத்தில் வடிய அவன் கரம் அதை துடைத்து விட்டது.
அவள் இரண்டு கன்னத்திலும் கையை வைத்து அவள் கண்ணுக்குள் உற்றுப் பார்த்தவன் “நான் உனக்கு வேண்டாமா டி?”, என்று உயிர் உருகும் குரலில் கேட்டான். அவன் கேள்வியில் அவளுடைய கண்களில் இருந்து கண்ணீர் பெருகி வடிந்தது.
“ஆசைப் பட கூட கொடுத்து வச்சிருக்கணும். ஆசைப் பட்டதை அடைய ரொம்ப ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும். அந்த கொடுப்பனை எனக்கு இல்லை சார். நீங்க வேற, நான் வேற”, என்று அவள் சொல்ல அடுத்த நொடி அவள் கன்னத்தில் இருந்து கையை எடுத்து விட்டான்.
அவள் கண்ணீர், அவளது முகம் அவள் காதலை காதலை அவனுக்கு உரைத்தது தான்;. ஆனால் அவனுக்கு அவள் வாய் மொழியாக கேட்க வேண்டும் போல இருந்தது. அவளுடைய மனதை வார்த்தையால் சொல்லாமல் அழுது கொண்டிருப்பவளைக் கண்டு கோபமாக வந்தது. “சரி நான் உனக்கு வேண்டாம்ல? நீ போ. இனி நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன்”, என்று சிறு கோபத்துடன் சொல்ல அவனது நிராகரிப்பும் அவளுக்கு வலித்தது.
அவனது கோபமும் நிராகரிப்பும் அவளை பெரிதும் பாதிக்க சிறு கேவலுடன் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள். அவள் கையில் இருந்த பை கூட கீழே விழுந்திருந்தது. அவளது இந்த செய்கையை அவன் எதிர் பார்க்கவே இல்லை. அதிர்ந்து போனான். அவள் வாயால் கேட்க வேண்டும் என்று எண்ணியவனுக்கு இந்த சரணாகதி அதிகம் பிடித்திருந்தது. அவன் கரங்களும் அவளை வளைத்து அணைத்துக் கொண்டது.
அவளது அருகாமையில் அவனுக்குள் காதல் உணர்வுகள் ஒவ்வொன்றாக படையெடுக்க தன்னுடைய மார்பில் இருந்து அவளை பிரித்தெடுத்தவன் அவளது முகமெங்கும் முத்த மிட்டான். பின் அழுகையில் துடிக்கும் அவளது இதழ்களை தன்னுடைய இதழ்களால் மூடினான்.
அவனுடைய செய்கையில் கண்களை விரித்து அதிர்ச்சியடைந்தவள் அவனிடம் இருந்து விலக முயன்றாள். அவனோ அவளை இறுக்கி பிடித்திருந்தான். அவன் பிடியில் இருந்து அவளால் அசையக் கூட முடியவில்லை. சிறிது நேரத்தில் தன்னுடைய முயற்சியை விட்டு விட்டு அவன் கரங்களுக்குள் அடங்கியவள் அவன் இதழ் முத்தத்தை ஆழ்ந்து அனுபவித்தாள்.
இதழ்களின் இணைவில் இருவருக்கும் ஜில்லென்ற உணர்வு உடல் முழுவதும் பரவியது போல இருந்தது. அவளது நாசியைத் தீண்டிய அவனது வியர்வை கலந்த ஆண்மை வாசனை அவளை அதிகம் மயக்கியது. அவள் இந்த உலகத்திலே இல்லை.
அவள் இடையை முரட்டுத் தனமாக பற்றி இருந்தவன் அவள் இதழ்களில் கரைந்து அவளையும் கரைத்துக் கொண்டிருந்தான்.
இருவருக்கும் மூச்சுக் காற்று தேவையாய் இருக்க அப்போது தான் அவளை விட்டான். கண்களை மூடி அவன் கரத்துக்குள் இருந்தவளைப் பார்க்கும் போது கந்தர்வக் கன்னி இப்படி தான் இருப்பாளோ என்று தோன்றியது அவனுக்கு.
“மங்கை..”, என்று கிசுகிசுப்பாய் அவன் அழைக்க வெட்கத்துடன் கண் விழித்துப் பார்த்தாள். அவன் அவளைக் கண்டு இதமாக புன்னகைக்க நிதர்சனம் உரைக்க கனவிலிருந்து விழிப்பது போல அவன் கரங்களுக்குள் இருந்து விலகினாள்.
“ப்ச் என்ன டி?”, என்று சலிப்பாக கேட்டான் மாதவன்.
“நேரம் ஆச்சு நான் போகணும்”
அவள் சொல்வது உண்மை என்பதால் கீழே விழுந்த பையை எடுத்து அவள் கரத்தில் கொடுத்தவன் “சரி கிளம்பு”, என்றான்.
“ஊருக்கு போறீங்களா?”, என்று அவள் தயக்கத்துடன் கேட்டதும் சிரித்து விட்டான்.
“அது உன் மனசை அறிய நான் சொன்ன பொய்”, என்று அவன் சொன்னதும் அவள் முகம் பல வர்ணஜாலங்களை அவனுக்கு காட்டியது.
அவன் புன்னகையில் மாட்டிக் கொண்ட உணர்வு வந்தாலும் “என்னை விட்டுற மாட்டீங்க தானே?”, என்று கலக்கமாக கேட்டாள்.
அவள் எதற்காக இப்படி ஒரு கேள்வி கேட்கிறாள் என்று தெரியாமல் போனாலும் “நீ இல்லைன்னா நான் இல்லை டி. இது சத்தியமான உண்மை”, என்றான். தெளிந்த முகத்துடன் அவனைப் பார்த்த படியே அங்கிருந்து சென்றாள்.
அவள் கண்ணில் இருந்து மறையும் வரை அவளைப் பார்த்த படியே நின்றிருந்தான் மாதவன்.