“மாமா போதும் நிறுத்துங்க. பெரியவங்க பேசும் போது குறுக்க பேச கூடாதுன்னு தான், நான் இதுவரை பொறுமையா இருந்தேன். எங்க அப்பாவுக்கு எது எப்போ செய்யணும்னு உங்களை விட நல்லாவே தெரியும். அவர் பார்த்துப்பார், நீங்க கவலைப்படாதீங்க…” என்றான் பட்டென்று. வாசு தலையைத் தொங்க போட்டபடிவெளியேசென்றார்.
“எனக்கு மட்டும் சந்தியா இந்த வீட்டுக்கு மருமகளா வரணும்னு ஆசை இல்லையா என்ன. உங்க தங்கச்சி மாப்பிள்ளை தான முரண்டு பிடிக்கிறார். அது தான் வாசு இந்தச் சம்பந்தத்தைப் பத்தி சொன்னதும், அவங்களே விரும்பி வரும்போது வேண்டாம்னு சொல்லனுமான்னு நினைச்சேன்…”
“நீ நினைச்சதெல்லாம் போதும், போய் உன் வேலையைப் பார்.”
“பார்க்கிறேன் சாமி. இவரு தங்கச்சி வீட்டை நம்பி என் பையனுக்கு வர்ற நல்ல சம்பந்தத்தை வேண்டாம்னு சொல்றார்.” என்று முனங்கியபடி லக்ஷ்மி உள்ளே செல்ல,
தன் அம்மா பேசியதை கேட்டு கதிரின் முகம் மேலும் வாடியது. அமைதியாக அவன் அறைக்குச் சென்றான். பெரியசாமி அவன் செல்வதை வருத்தத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். சந்தியா பதற்றத்தோடு இருந்தாள். அவளிடம் வேதவல்லி என்ன என்று கேட்டதற்கு, இன்று வாசுவை வழியில் பார்த்ததையும், அவர் பேசியதையும்சொல்ல,
“அந்த மனுஷன் கொஞ்ச நாளா ரொம்ப ஆடிட்டு தான் இருக்கார். அவர் சொன்னா ஆச்சா, உங்க மாமா சொல்லணும். நீ அதை நினைச்சு வருத்தபடாத…” என்று சந்தியாவைத் தேற்றினார்.
சிறிது நேரத்தில் வெளியூரில் ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்த துரை வீட்டுக்கு வந்தார். மகளைப் பார்க்க ஆர்வமாக வந்தவர், அவளைத் தேடி அவள் அறைக்குச் செல்ல, அங்கே சந்தியா கட்டிலில் சுருண்டு படுத்திருந்தாள்.
“என்ன பாப்பா இந்த நேரத்துக்குத் தூங்குறா…” என்று அவர் மனைவியைவிசாரிக்க,
ரொம்ப அக்கறை என்று நொடித்த வேதவல்லி “அவளுக்குக் காய்ச்சல்.” என்றதும் துரை பதறி விட்டார்.
சந்தியாவின் அருகே சென்று மகளைத் தொட்டு பார்த்தவர் “ஆமாம் காய்ச்சல் அடிக்குது. டாக்டர் கிட்ட போவமா…” என்றதும்,
அவரைப்பார்த்து முறைத்த வேதவல்லி “அவளே டாக்டருக்கு தான் படிக்கிறா, அது உங்களுக்கு நினைப்பிருக்கா, அதெல்லாம் அவ மாத்திரை போட்டுட்டு தான் தூங்குறா, நீங்க அவளைத் தொந்தரவு பண்ணாம தூங்க விடுங்க.“ என்று எரிந்து விழுந்தார்.
துரை மகளின் அருகே கட்டிலில் அமர்ந்தவர், அவள் தலையை வருடிக்கொடுக்க, சந்தியா தூக்கத்திலேயே அவர் கையைத் தள்ளிவிட்டாள். மகளுக்குத் தொந்தரவாக இருக்க வேண்டாம் என்று துரை எழுந்து கதவை சாற்றிவிட்டு வெளியே சென்றார்.
அவர் வெளியே சென்றதும் சந்தியா கண் திறந்தாள். அவள் தூங்கவில்லை. தூங்குவது போல் பாசாங்கு செய்தாள். அவளுக்கு அவள் அப்பாவின் மீது கோபம். இவரால் அல்லவா, இவரின் ஜாதி வெறியால் அல்லவா, இவ்வளவு துன்பம் என்று நினைத்தவள் தாங்க முடியாமல் அழுதாள்.
மதிய உணவுக்கு லக்ஷ்மி வந்து கதிரை அழைக்க, சாப்பிட எழுந்து வந்தவன் தன் அப்பத்தாவிடம் சென்று “அப்பத்தா நீங்க அத்தை வீட்டுக்கு போயிட்டு வரீங்களா, சந்தியாவைக் காலையில் கல்யாண வீட்ல பார்த்தேன். அவளுக்கு ரொம்பக் காய்ச்சல். இப்ப எப்படி இருக்கான்னுதெரியல…?”என்றான்.
அவன் சொன்னவுடன் “இதோ போறேன் ராசா…” என்ற அப்பத்தா உடனே தன் மகள் வீட்டுக்கு கிளம்பியும் விட்டார். கதிருக்கு தெரியும் அவர் அங்குச் சென்றால், இங்கு நடந்ததைச் சொல்வார் என்று, அதைக் கேட்டால் சந்தியாவும் நிம்மதியாக இருப்பாள் என்று தான்அவரை அனுப்பினான்.
அவன் நினைத்தபடியே சந்தியாவைச் சென்று பார்த்த அப்பத்தா அந்த அறையிலேயே அமர்ந்து தன் மகளிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது வேதவல்லி வாசு இன்று சந்தியாவிடம் கதிருக்கும், நந்தினிக்கும் திருமணம் என்று சொன்னதைச்சொல்ல,
“அவன் கிடக்கிறான் லூசுப்பய, அதெல்லாம் ஒன்னும் கிடையாது.” என்றவர் சந்தியாவிடம் “அதைக் கேட்டு தான் நீ இப்படிச் சீக்கு வந்த கோழி மாதிரி கிடக்கிறியா, கிறுக்கு கழுதை. அதெல்லாம் உன்னோட பெரிய மாமனும், கதிரும் சேர்ந்து அவனை விரட்டி விட்டுட்டாங்க…” என்றவர் நடந்ததைச் சொல்ல, சந்தியா எழுந்து உட்கார்ந்தாள்.
“உங்க மாமன் இன்னும் ரெண்டு வருஷத்துக்குக் கதிருக்குக் கல்யாணம் பண்ற நினைப்பில்லைன்னு சொல்லிட்டான். உன்னோட படிப்பு முடிய ரெண்டு வருஷம் ஆகுமே, அதை வச்சு தான் அப்படிச் சொல்லி இருப்பான்.” என்றதும் சந்தியாவின் முகம் மலர்ந்தது.
அதன் பிறகு சந்தியா தெளிவாக இருந்தாள். மதியம் துரை வந்ததும் “இப்ப எப்படி இருக்கு மா?” என்றதற்கு “பரவாயில்லை ப்பா….” என்று பதில் தந்தாள்.
இருவரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டனர். சந்தியா அமைதியாகச் சாப்பிட்டாள். துரை அவளுக்கு உடம்புக்கு முடியாததால் அப்படி இருக்கிறாள் என்று நினைத்தார்.
“இந்த வருஷம் நம்ம கோவிலுக்கு இன்னும் பொங்க வைக்கல. அதனால தான் சந்தியாவுக்கு உடம்புக்கு முடியலையோ என்னவோ. நாளைக்கு நைட் தான் சந்தியா ஊருக்கு போறா, அதனால நாளை காலையில போய் பொங்க வச்சிட்டு வந்திடுவோம்.” என்றார் வேதவல்லி.
துரை அதற்கு சரி என்றதும் “அப்படியே எங்க ரெண்டு அண்ணனுங்களுக்கும், உங்க தங்கச்சிக்கும் நாளைக்கு வர சொல்லிட்டு வந்திடுங்க…” என்றதும், துரை வேதவல்லியை முறைக்க, “சொந்த பந்தத்தைக் கூப்பிடாம பொங்க வைக்க முடியுமா…” என்றார் வேதா,
அப்போது வேதாவின் அம்மா அங்கிருந்ததால் துரையால் ஒன்றும் சொல்லமுடியவில்லை. அதனால் சரி என்றவர், தன் இரு மச்சினர்களுக்கும் நேரில் சென்று சொன்னார். அதே போல் வெளியூரில் இருந்த தன் தங்கைக்கும் கைப்பேசியில் அழைத்துச் சொன்னார்.
திருமண மண்டபத்தில் இருந்து சொல்லாமல் வந்ததால், மாலை ஆனதும், கதிர் சோலையைச் சென்று பார்த்து பேசிவிட்டு வந்தான். கதிர் சென்றதும் சோலை சித்ராவிடம் விஷயத்தைச் சொல்ல,
“அதுதான பார்த்தேன். நிச்சயத்துக்கு வர்ற கௌரவம் பார்த்த நந்தினி, கல்யாணத்துக்கு மட்டும் எப்படி வந்தான்னு நினைச்சேன். கதிர் அண்ணன் வருவாங்கன்னு தெரிஞ்சு தான் வந்திருக்கா. இருக்கட்டும் ஒரு நாளைக்கு அவளுக்குப் பேய் ஓட்றேன்.” என்றாள் சித்ரா கோபமாக,
“அம்மா தாயே நீ இன்னைக்கு மூட் அவுட் ஆகிடாதமா, அப்புறம் எனக்குக் கஷ்டம்…” என்று சோலை சிரிக்க, சித்ரா அவனைப் பார்த்துப் பொய்யாக முறைத்து விட்டு உள்ளே சென்றாள்.
வீட்டிற்கு வந்த கதிரிடம் லக்ஷ்மி துரை வந்து மறுநாள் பொங்கல் வைக்க அழைத்து விட்டு சென்றதை சொல்ல, கதிருக்கும் சந்தியாவை நேரில் பார்க்க வேண்டும் போல் இருந்ததால், அன்று ஊருக்கு கிளம்புவதாக இருந்தவன், தன் பயணத்தைத் தள்ளி வைத்தான்.
எப்போதும் எங்குச் சென்றாலும் ஒரே வண்டியில் தான் எல்லோரும் செல்வார்கள். இந்த முறை துரை அவர் குடும்பத்துக்கு ஒரு வண்டியும், வேதவல்லியின் பிறந்த வீட்டினருக்கு வேறு ஒரு வண்டியும் சொல்லிஇருந்தார்.
கதிர் அவர்களோடு செல்லாமல், சிறிது நேரம் சென்று அவன் பைக்கில் சென்றான். துரையின் குல தெய்வ கோவில் ஊருக்கு வெளியில் தோட்டத்தில் இருந்தது. எப்போதும் துள்ளி திரியும் சந்தியா இப்போது அமைதியாக இருந்தாள். பெரியசாமியிடம் நலம் விசாரித்தவள், தன் அப்பத்தாவின் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டாள்.
சிறிது நேரம் சென்று “வாப்பா கதிரு…” என்று அவள் அப்பத்தா சொன்னதும், கதிர் என்ற வார்த்தையில் கண் திறந்து பார்த்தவள், எதிரில் அவன் நிற்ப்பதை பார்த்ததும், நம்ப முடியாமல் தூக்கத்தில் கனவோ என்று நினைத்துக் கண்களை நன்றாகக் கசக்கி விட்டு பார்த்தாள்.
அவள் செய்கையில் கதிருக்குச் சிரிப்பு வந்தது, அதை அடக்கியவன் சந்தியாவின் அப்பத்தாவிடம் “நல்லா இருக்கீங்களா பாட்டி….”என்றுநலம்விசாரித்தான்.
“நல்லாயிருக்கேன் ராசா, நீ எப்படி இருக்க…? எப்ப ஊருக்கு வந்த?என்றார்பதிலுக்கு.
“நல்லாயிருக்கேன் பாட்டி. என் ஃபரண்ட்க்கு கல்யாணம் அதுக்கு வந்தேன்.” என்றவனின் பார்வை என்னவோ சந்தியாவின் மீது தான் இருந்தது.
கதிர் தன் மேல் கோபத்தில் இருப்பானோ என்று பயந்து கொண்டிருந்த சந்தியாவுக்கு, அவன் பார்வையே வேண்டிய பதிலை தந்ததால், அவள் முகமும் மலர்ந்தது. சந்தியா எழுந்து பொங்கல் வைக்கும் இடத்தில் சென்று அமர்ந்தாள். கதிர் வருவதற்கு முன் சோர்ந்து படுத்திருந்தவள், அவன் வந்ததும் எழுந்து உட்கார்ந்ததை அவள் அம்மா, அப்பத்தா, ஆச்சி கவனித்துக்கொண்டு தான் இருந்தனர்.
பெரியசாமியால் அதிக நேரம் ஒரு இடத்தில் உட்கார முடியாது என்பதால், அவர் காரிலேயே படுத்திருந்தார். வீட்டுப் பெண்கள் பொங்கல் வைக்கும் வேலையைப் பார்க்க, கதிர் சென்ற போது துரையும், பாண்டியனும் அங்கு இல்லை.
கதிர் தன் சித்தப்பா மக்களோடு சேர்ந்து பேசிக்கொண்டிருந்தான். அப்போது அங்கே வந்த துரை கதிரை பார்த்து வா என்று சொல்லவில்லை. அவருக்குக் கதிர் ஊருக்கு வந்திருப்பது இப்போது தான் தெரியும். அவனைக் கண்டுகொள்ளாமல் வேறு வேலை இருப்பது போல் அங்கிருந்து நகர்ந்து விட்டார்.
கதிருக்குக் கோபமாக வந்தது, அவன் திரும்பி சந்தியாவைப் பார்க்க, அவளும் அங்கு நடந்ததைப் பார்த்துக்கொண்டு தான் இருந்தாள். அவள் முகமும் வாடிவிட்டது. சந்தியாவுக்காகத் தன் மாமா செய்த உதாசீனத்தைக் கதிர் பொருத்துக் கொண்டான். பொங்கல் வைத்து முடித்ததும் சாமி கும்பிட்டனர். சாமி கும்பிட்டதும் எல்லோரும் சாப்பிட உட்கார, அப்போதும் துரை கதிரை சாப்பிட வா என்று அழைக்கவில்லை. அழைக்காமல் சாப்பிட உட்கார கதிர் என்ன ரோஷம் கெட்டவனா, அவன் அங்கிருந்த எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு சாப்பிடாமலே கிளம்பிவிட்டான்.
“சாப்பிட்டிட்டு போ…. கதிரு.” என்ற வேதவல்லியை பார்த்து புன்னகைத்தவன், அருகில் நின்ற சந்தியா வைத்திருந்த பொங்கலிருந்து சிறிது மட்டும் எடுத்து வாயில் போட்டுக் கொண்டு “என் ஃபரண்ட் சோலை இருக்கான் இல்ல, அவங்க வீட்ல இன்னைக்குக் கறி விருந்து. என்னைச் சாப்பிட வர சொல்லியிருக்கான். நான் அங்க சாப்பிட்டுக்கிறேன்.” என்றான் யாருக்கும் எந்த வருத்தமும் வராதபடி.
அவன் சொன்ன காரணம் ஏற்றுக்கொள்ளும்படி இருந்ததால், வேதவல்லியும் அதற்கு மேல் அவனை வற்புறுத்தவில்லை. துரை அவனைக் கவனித்துக்கொண்டு தான் இருந்தார். கதிர் சாப்பிடாமல் சென்றதற்குக் காரணம் சந்தியாவுக்குத் தெரியும். அவள் மனதில் விலகி இருந்த சோர்வு மீண்டும் வந்தது. அவள் சாப்பிட பிடிக்கவில்லை என்று சொல்லி அவள் அப்பத்தாவின் மடியில் படுத்துக்கொண்டாள்.
இப்படி ஒத்த பிள்ளைய பெத்து வச்சிக்கிட்டு, அது மனசு புரியாம இருக்கானே என்று சந்தியாவின் அப்பத்தா தன் மகனை நினைத்து வருத்தப்பட்டார்.
சந்தியாவுக்கு உடம்பு சரியில்லாததால், துரையும் அவளுடன் வந்து கல்லூரியில் விட்டுவிட்டு சென்றார். எப்போது ஊருக்கு சென்றாலும் சந்தியாவே தான் சித்துவை அழைப்பாள். இந்த முறை அவள் அழைக்கவே இல்லை.
நேரில் வந்ததும் பேசிக்கொள்வோம் என்று இருந்த சித்துவிடம் வந்ததிலிருந்து சந்தியா பிடிகொடுத்தே பேசவில்லை. மதிய உணவு வேளையில் கைப்பேசியுடன் தனியாகச் சென்ற சந்தியாவைச் சித்துத் தொடர்ந்து சென்றான்.
“எங்க அப்பா வீம்புக்குன்னே நம்பக் கல்யாணத்தை நடக்க விட மாட்டார் மாமா, நீ பேசாம நந்தினியை கல்யாணம் பண்ணிக்கோ, உங்க ரெண்டு பேருக்கும் பொருத்தம் நல்லா இருக்கு…” என்ற சந்தியாவின் பேச்சை கேட்ட சித்து அதிர்ந்து நின்றான் என்றால், அந்தப் பக்கம் கதிரின் நிலை……?