Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennavalin Innisai

Ennavalin Innisai 14 1

அத்தியாயம் 14

உன்னைக் கண்டதும் சிறகடித்து

பறக்கிறது என் இமைகள்

என்னும் பறவைகள்!!!



Advertisement

அவன் நினைத்தது போல தேன்மொழி ஸ்ருதியை அழைக்க அந்த பக்கம் சொன்னதைக் கேட்டு “என்ன டி சொல்ற?”, என்று அதிர்ந்து போய்க் கேட்டாள் தேன்மொழி. 

Advertisement

“ஆமா தேனு, இப்படி பண்ணுவாங்கன்னு நினைக்கவே இல்லை. திடீர்னு அப்படிச் சொன்னா எப்படி இருக்கும்? மயக்கம் வந்ததுனால தப்பிச்சேன். இன்னொரு நாள் அவங்களை வரச் சொல்லணும்னு சொல்லிட்டாங்க. எனக்கு பயமா இருக்கு தேனு. என்ன செய்யன்னே தெரியலை டி”

Advertisement

“இப்ப பயந்து என்ன பண்ண? இந்த அறிவு உனக்கு முன்னாடியே இருந்துருக்கணும். இது இன்னையோட முடியுற விஷயம் இல்லை ஸ்ருதி”

Advertisement

“புரியுது. ஆனா என்ன பண்ணனு தெரியலை”

“உன் வாழ்க்கை எப்படி மாறப் போகுதோன்னு எனக்கு பயமா இருக்கு”, என்று சொன்ன தேன்மொழி அப்போது தான் டி‌வி பார்ப்பது போல அமர்ந்திருந்த ராகவனைப் பார்த்தாள். 

டி‌வி பார்ப்பது போல அமர்ந்திருந்தாலும் ஓரக் கண்ணால் அவன் தன்னையே பார்ப்பது புரிந்தது. “இவன் இப்படிச் செய்ய மாட்டானே? ஒரு வேளை நான் என்ன பேசுறேன்னு தெரிஞ்சிக்க தான் இப்படி கேக்குறானா?”, என்று எண்ணி அதை சோதிக்க “உனக்கு அந்த மாப்பிள்ளையை பிடிச்சிருந்ததா ஸ்ருதி?”, என்று கேட்டாள். 

அவள் நினைத்தது போல ராகவன் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாக வந்தது.

“மாப்பிள்ளையா? தயவு செஞ்சு அப்படி சொல்லாத தேனு. அப்புறம் அவனை நான் பாக்கவே இல்லை. அதான் அவங்க வரலைன்னு இவ்வளவு நேரம் சொல்லிட்டு இருந்தேன்ல?”, என்று கேட்டாள் ஸ்ருதி.

“மாப்பிள்ளை என்ன பண்ணுறார் டி?”, என்று தேன்மொழி கேட்க ஸ்ருதிக்கு பொறி தட்டியது. “ஏய் என்ன டி இப்படி கேக்குற? பக்கத்துல அவங்க இருக்காங்களா?”

“ம்ம்”

“அவங்க பொறாமையை தூண்டி விட இப்படி பேசுறியா தேனு?”

“ம்ம்”

“அதுக்கு வாய்ப்பே இல்லை. உங்க அண்ணனுக்கு எனக்கு கல்யாணமே ஆனா கூட பொறாமைன்னு ஒண்ணு வரவே வராது. சரி நான் வைக்கிறேன்”, என்று சொல்லி வைத்து விட்டாள். 

போனை வைத்து விட்டு தேன்மொழி டி‌வி பார்க்க அமர “யார் கிட்ட பேசிட்டு இருந்த?”, என்று கேட்டான் ராகவன். 

“என் ஃபிரண்ட் கிட்ட?”

“ஏதோ மாப்பிள்ளைன்னு காதுல விழுந்துச்சு”

“என் ஃபிரண்ட் ஸ்ருதியை தெரியும்ல? அவளை இன்னைக்கு பொண்ணு பாக்க வந்தாங்களாம்?”

“என்ன சொல்ற நீ?”

“ஆமா, நீ எதுக்கு இவ்வளவு ஷாக் ஆகுற?”

“இல்லை இன்னைக்கு அவ ஆபீஸ் வரலை. அதான் கேட்டேன். புராஜெக்ட் வேலை முடிக்கணும்ல?”

“ஓ”

“சரி மாப்பிள்ளை என்ன ஆச்சு? கல்யாணம் பிக்ஸ் ஆகிருச்சா?”, என்று தடுமாற்றத்துடன் கேட்டான். 

“கிட்டத் தட்ட அப்படி தான். மாப்பிள்ளை ரயில்வேல லோக்கோ பைலட்டாம். சென்ட்ரல் கவர்ன்மெண்ட் மாப்பிள்ளை. அவங்க வீட்ல வேணாம்னா சொல்லுவாங்க?”

“உன் ஃபிரண்ட் என்ன சொன்னா? அவளுக்கு அவனை பிடிச்சிருக்கா?”, என்று எதிர்பார்ப்புடன் அவன் கேட்க அவனுடைய மனநிலை கொஞ்சம் புரிந்தது தேன்மொழிக்கு. 

“ஸ்ருதி ஒண்ணும் சொல்லலையாம்? ஆனாலும் அவளோட வீட்ல பேசுறதை தானே அவ கேக்க முடியும்?”, என்று தேன்மொழி முடிக்க அடுத்த நொடி அறைக்குச் சென்று விட்டான். 

“ஸ்ருதிக்கு வேற ஆள் கூட கல்யாணம் ஆகிருமா? அவ கல்யாணம் பண்ணிக்குவாளா? வீட்ல கட்டாயப் படுத்தினா இவ என்ன சொல்லுவா? இனி அவ என்னைப் பாக்கும் போது முகத்தை திருப்பிட்டு போயிருவாளா?”, என்று பல கேள்விகள் அவனுக்குள் உதயமானது. 

அதே நேரம் ஸ்ருதியோ ராகவனைப் பற்றி தான் எண்ணிக் கொண்டாள். “என்னை மாப்பிள்ளை பாக்க வராங்கன்னு தெரிஞ்சாலும் நீ அமைதியா தானே இருப்ப? ஆனா எனக்கு ஆசையா இருக்கு டா. ஏன் டி நீ இன்னொருத்தன் முன்னாடி போய் அலங்காரம் பண்ணிட்டு நின்னன்னு நீ என் கிட்ட கோபப் படணும். கோவத்துல என்னை நீ அடிக்கணும். என் கிட்ட உரிமையா சண்டை போடணும்னு ஆசையா இருக்கு டா”, என்று எண்ணிக் கொண்டாள். 

கூடவே ராகவன் மனதில் தான் இருக்கிறோமா என்று புரியாமல் வீட்டில் இருப்பவர்களிடம் எப்படி திருமணத்தை மறுப்பது என்று எண்ணி அவளுக்கு தலை வேதனையாக இருந்தது. 

அடுத்த நாள் முதல் முறையாக அவளைப் பற்றி எண்ணிக் கொண்டே தான் குளித்து தயாரானான் ராகவன். அவள் இன்று வேலைக்கு வருவாளா இல்லை, இன்றும் லீவ் எடுத்திருப்பாளா என்று கவலை கொண்டது அவன் மனம். 

ஏதோ மனதை ஒரு பெரிய பாரம் அழுத்துவது போல இருந்தது. “தேவையில்லாம யோசிக்காத? இது அவ வாழ்க்கை அவ தான் முடிவு எடுக்கணும். உனக்கும் அவளுக்கும் தான் ஒண்ணும் இல்லைன்னு ஆகிருச்சுல்ல? இனி அவ யாரைக் கல்யாணம் பண்ணினா உனக்கு என்ன?”, என்று மனசாட்சி கேள்வி எழுப்ப அதற்கு விடை கூற அவனால் முடியவில்லை. 

என்ன தான் அதிலிருந்து வெளியே வர முயன்றாலும் அவனால் எப்போதும் போல சாதாரணமாக இருக்க முடியவில்லை. 

கிளம்பி முடித்து அறையை விட்டு வெளியே வர அமரும் தேன்மொழியும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். 

“அம்மா எனக்கும் எடுத்து வைங்க”, என்ற படி அவன் அமர அவனுக்கு இரண்டு தோசையை தட்டில் எடுத்து வந்து அவன் முன்பு வைத்த ராஜி அவனுக்கு சட்டினியை ஊற்றினாள். 

அனைவரும் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருக்க “ராகவா, அன்னைக்கு பாத்த பிறகு மாப்பிள்ளையை பாத்தியா? அவர் கிட்ட பேசுனியா? ஏதாவது சொன்னாரா?”, என்று கேட்ட படி அங்கு வந்தார் மதன்.

அவர் அப்படிக் கேட்டதும் தேன்மொழிக்கு புரை ஏற “பாத்து சாப்பிட மாட்டியா டி? எல்லாத்துக்கும் அவசரம், அந்த தண்ணியை எடுத்துக் குடி”, என்றாள் ராஜி. 

அவளது பதட்டத்தை யாருமே கண்டு கொள்ள வில்லை. ஆனால் அமர் பார்த்து விட்டான். அவனுக்கு தேன்மொழியைத் தெரியாதா என்ன? அவளிடம் கேட்க பல கேள்விகள் இருந்தாலும் மற்றவர்களுக்காக அமைதியாக இருந்தான்.

“நேத்தே சொல்லணும்னு நினைச்சேன் மா. நேத்து அவருக்கு கால் பண்னினேன். ஆனா அவர் பிசியா இருந்துருப்பார் போல? சரியா பேசலை. எனக்கு நவீணை ரொம்ப பிடிச்சிருக்கு. நம்ம தேனுக்கு பொருத்தமா இருப்பார்”, என்றான் ராகவன்.

“அப்புறம் என்ன டா? கல்யாணம் விஷயம் பேசிற வேண்டியது தானே?”

“பேசணும் பா. ஆனா நாமளே எப்படி ஆரம்பிக்க முடியும்? அவங்க வீட்ல இருந்து தானே முதல்ல பேச்சை ஆரம்பிக்கணும்?”, என்று ராகவன் கேட்க “ஆமா, அவங்க தான் ஆரம்பிக்கணும். அவங்க பொண்ணு கேட்டு வரட்டும்”, என்றார் மதன்.

“சரிப்பா, நான் ஆஃபிஸ்ல போய் நவீன்க்கு கால் பண்ணி பேசிக்கிறேன். இப்ப கிளம்புறேன்”, என்று சொல்லி விட்டு அவன் செல்ல தேன்மொழியோ “நான் இன்னைக்கு செத்தேன். அன்னைக்கே நவீன் இதெல்லாம் சரியா வராதுன்னு தெளிவா சொல்லிட்டார். ஆனா இந்த அண்ணன் மறுபடியும் ஆரம்பிக்கிறாரே?”, என்று எண்ணிக் கொண்டாள். அதற்கு மேல் உண்ண முடியாமல் “எனக்கு போதும் மா”, என்று சொல்லி விட்டு கை கழுவியவள் தன்னுடைய அறைக்கு சென்றாள். 

வேலைக்குச் செல்வதற்காக தன்னுடைய பேகை எடுத்துக் கொண்டிருக்க தட்டை கையில் ஏந்திய படியே அவள் அறைக்குள் வந்த அமர் சாப்பிட்டுக் கொண்டே “இப்ப என்ன பண்ணப் போற?”, என்று கேட்டான்.

“என்ன டா கேக்குற?”

“உன் மனசுல லவ்வே இல்லாம லவ் பண்ணுறேன்னு ஒரு பொய்யை அள்ளி விட்டுருக்கியே? அதுல இருந்து எப்படி தப்பிக்க போற?”

“அமர்”

“உன்னை எனக்கு தெரியாதாக்கா? சொல்லு என்ன செய்ய போற? அண்ணா அவர் கிட்ட பேசப் போறான்”

“அன்னைக்கு பேசினதுக்கே நவீன் என்னை பயங்கரமா திட்டிட்டார் டா. இனிமே இப்படி நடந்தா நம்ம பிரண்ட்ஷிப்பே கட் ஆகிரும்னு சொல்லிட்டார்”

“ரொம்ப கோபப் படுவாரா?”

“சே சே அவருக்கு கோபமே வராது டா. ரொம்ப சுவீட். நான் பண்ணின வேலையால தான் டென்ஷன் ஆகிட்டார்”

“உனக்கு அவரைப் பிடிக்குமா கா?”

“பிடிக்கும் டா”

“அப்படின்னா நீயே அவரைக் கல்யாணம் பண்ணிக்கோயேன்”

“அமர், என்ன டா சொல்ற?”

“எப்படின்னாலும் உனக்கு வேற மாப்பிள்ளை பாக்க தான் போறாங்க. நீ கொஞ்ச நாள்ல யாருன்னே தெரியாத ஒரு ஆளுக்கு தலையாட்ட தான் செய்யனும். நவீனைத் தான் உனக்கு தெரியுமே? பேசாம அவரையே கல்யாணம் பண்ணிக்கோ கா”

“நவீன் யாருன்னு தெரியுமா அமர்?”

“உன்னோட சீனியர்”

“அது உண்மை தான். ஆனா அவர் ஸ்ருதியோட அண்ணன்”

“என்னது?”

“ஆமா டா. எனக்கு மட்டும் தான் அந்த விஷயம் தெரியும். அண்ணனுக்கு கூட தெரியாது. அதே போல நவீனுக்கும் நான் ஸ்ருதியோட பிரண்டுன்னு தெரியாது. அது தெரிஞ்சா அண்ணன் என்ன பண்ணுவான்னு தெரியலை. அது மட்டுமில்லாம நவீன் என்னைக் கல்யாணம் பண்ண ஒத்துக்கணும்ல? ஸ்ருதி வீட்ல வேற மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சிட்டாங்களாம். அவளை நினைச்சா வேற கஷ்டமா இருக்கு. ஆக மொத்ததுல என்ன நடக்க போகுதுன்னு தெரியலை. இந்த அண்ணன் மனசுல வேற என்ன இருக்குனு தெரியலை. அவன் ஸ்ருதியை ஏத்துகிட்டான்னா எந்த பிரச்சனையும் இல்லை. ஆனா அவன் மனசுல என்ன இருக்குனு புரியவே மாட்டிக்கு”

“அக்கா ரொம்ப யோசிக்காத. எல்லாமே நம்ம தலைக்கு மேல போன விஷயம். நீ ஏன் ஸ்ருதி அக்காவை மீட் பண்ணனும்? அவங்க ஏன் அண்ணனை லவ் பண்ணனும்? நீ ஏன் நவீனைப் பாக்கணும்? எல்லாமே கடவுள் விதிச்சது தான் போல? எல்லாமே தன்னால நடக்கட்டும்னு விட்டுரு. ஒரு வேளை உனக்கும் நவீனுக்கும் தான் அந்த கடவுள் முடிச்சு போட்டுருக்காரோ என்னவோ?”

“என்ன டா சொல்ற?”

“ஆமாக்கா. அப்புறம் உனக்கும் நவீனுக்கும் கல்யாணம் முடிஞ்சா அண்ணன் ஸ்ருதி அக்காவை ஏத்துக்க கூட வாய்ப்பு இருக்கு. எல்லாம் நன்மைக்கே. சரி உனக்கு நேரம் ஆச்சு நீ கிளம்பு”

“சரி டா”, என்று சொல்லி விட்டு குழப்பத்துடனே ஹாஸ்பிட்டல் சென்றாள். அவள் பைக் ஸ்டாண்டில் வண்டியை நிறுத்தி விட்டு நிமிரும் போது நவீன் அவள் கண்ணில் பட்டான். அவனும் அவளை பார்த்தான் தான். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!