“நாளைக்கு தான் டி எல்லாம் தெரியும். என்ன நடக்குதுன்னு பாப்போம்? சரி நீ பெயின் கில்லர் போட்டுருக்க. சீக்கிரம் தூங்கு”, என்று தேன்மொழி சொல்ல ஸ்ருதியும் அதன் பிறகு எதுவும் பேசாமல் படுத்து விட்டாள்.
அடுத்த நாள் எப்போதும் போல விடிந்தது. ஸ்ருதி சீக்கிரமே கண் விழித்து விட்டாள். அடுத்த வீட்டில் வந்து அதிக நேரம் தூங்கினால் என்ன நினைப்பார்களோ என்ற பயம் தான் காரணம். (இப்போதே மாமியார் என்ன சொல்வார்களோ என்று பயமாக இருந்ததோ என்னவோ?)
தேன்மொழி நன்கு உறங்கிக் கொண்டிருக்க காலைக் கடன்களை முடித்து விட்டு முகம் கழுவி அறையை விட்டு வெளியே வந்தாள் ஸ்ருதி.
அன்று அனைவருக்கும் விடுமுறை என்பதால் ராஜியே அப்போது தூங்கிக் கொண்டு தான் இருந்தாள்.
“ஆண்ட்டியே எந்திரிக்கலை போல?”, என்று எண்ணிக் கொண்டு வீட்டைத் திறந்து தோட்டத்துக்கு வந்தாள்.
சூரியன் முழுவதுமாக வராத அந்த காலை வேளையில் மனதுக்கு அவ்வளவு அமைதி தந்தது. அவள் இயற்கையையும் தோட்டத்தையும் வியந்த படி இருக்க அவள் பின்னால் இருந்து இரண்டு முரட்டுக் கரங்கள் அவள் கண்களைப் பொத்தியது.
தேன்மொழி தான் என்று எண்ணி அவசரமாக அந்த கையை விலக்க அந்த கரங்களின் மீது தன்னுடைய கரங்களை வைத்தாள் ஸ்ருதி. அதில் இருந்த ரோமங்களின் வளர்ச்சி அவளுக்கு திகைப்பைக் கொடுக்க “ஐயோ இது தேன்மொழி இல்லையே? ஒரு வேளை அங்கிளோ?”, என்று எண்ணி “யார் இது? யாருன்னு தெரியலையே”, என்று சொல்லிக் கொண்டே அந்த கையைத் தடவிப் பார்த்தாள்.
வீட்டில் இருக்கும் அனைவருக்கும் சர்பிரைஸ் கொடுக்க ராகவன் தான் சொல்லாமல் கொள்ளாமல் வந்திருந்தான். காலையில் தோட்டத்தில் நிற்பது தேன்மொழி என்று நினைத்து தான் சத்தம் காட்டாமல் வந்து நின்று அவள் கண்களைப் பற்றினான்.
ஆனால் அவள் குரல் வேறு மாதிரி இருக்கவும் திகைத்து போய் கையை எடுத்து விட்டு விலகி நின்றான். அவள் அவசரமாக திரும்பிப் பார்க்க இருவருமே அந்த சந்திப்பில் விக்கித்துப் போனார்கள்.
இன்னும் வளர்ந்து அவளது குழந்தை முகம் சற்று மாறி இன்னும் அழகாக நின்றவளைக் கண்டவன் “இவளா?”, என்று அதிர்ந்து போய் பார்க்க “கடவுளே, இவங்களா? என்ன ஆளே இப்படி மாறிட்டாங்க?”, என்று வைத்த கண் எடுக்காமல் பார்த்தாள். அவனது தோற்றத்தை ரசித்தாள்.
அவளது கண்கள் அவனைக் கண்டதும் வெட்கம் கொண்டு தாழவும் முடியாமல் ஆசையாக அவனை ரசிக்கவும் முடியாமல் படபடத்தது. அவளுடைய படபடப்பில் கவரப் பட்டான் ராகவன்.
இமைகள் இரண்டும் பட்டாம் பூச்சி போல படபடவென்று அடித்துக் கொள்ள அந்த கண்களில் இருந்த மயக்கம் அவனை சுழற்றி அடிப்பது போல இருந்தது.
அவனுடைய கல்லூரியில் படிக்கும் பெண்களிடம் கூட தோன்றாத ஒரு உணர்வு அவளைக் கண்டதும் அவனுக்கு உருவானது.
தன்னைக் கண்டு படபடப்புடன் அவள் நின்ற கோலம் ஒரு ஓவியம் போல அவன் மனதில் பதிந்தது. முன்பை விட இன்னும் வளர்ந்து, கொழுக்மொழுக்கென்று, சிவந்த நிறத்துடன் இருந்தவளின் கன்னங்களைக் கிள்ள வேண்டும் போல ஒரு ஆசை எழுந்ததில் அவனே திணறித் தான் போனான்.
“இவ என்ன இப்படி அழகா மாறிட்டா?”, என்று அவன் உள்ளம் எண்ணியது. அவனும் அவளையே பார்த்துக் கொண்டிருக்க அவன் பார்வையில் அவள் முகம் செவ்வானமாக சிவந்து போனது. அவளுடைய கூந்தல் இன்னும் நீளமாக வளர்ந்திருக்க “முடி கூட வளந்துருச்சு போல?”, என்று எண்ணிக் கொண்டான்.
அவளுடைய வெட்கமும் தவிப்பும் கண்டவனுக்கு ஏதோ உடல் எல்லாம் மின்சாரம் தாக்கியது போல ஒரு உணர்வு உண்டானது. அதற்கு பிறகு தான் தன்னுடைய அதிர்ச்சியை மாற்றிக் கொண்டவன் “நீ எங்க இங்க?”, என்று கோவமாக கேட்டான்.
அவன் கேட்ட கேள்வியும் அவன் முகத்தில் வந்து போன கோபமும் அவளுடைய சந்தோஷத்தை அப்படியே துணி கொண்டு துடைத்தது போல சென்று விட்டது.
“தேனு தான் அழைச்சிட்டு வந்தா”, என்று தலை குனிந்த படி சொல்ல “இந்த தேனுக்கு அறிவே இல்லை”, என்று சொல்லி விட்டு வீட்டுக்குள் சென்று விட்டான். அவனுடைய உதாசீனத்தில் விக்கித்துப் போய் நின்றாள்.
அவனுக்கு அவளைக் கண்டதும் அதிர்ச்சி தான். இந்த இரண்டு வருடத்தில் அவள் மாறி இருந்து அவனிடம் எப்படி இருக்கீங்க என்று சாதாரணமாக பேசி இருந்தால் அவனும் பேசி இருப்பான். ஆனால் அதை விட்டுவிட்டு அவனை தின்று விடுவது போல அவள் பார்க்க அவளுடைய பார்வையை தாங்க முடியாமல் தன்னுடைய மனதை அடக்கி அவளிடம் கோபம் காட்டி விட்டு வீட்டுக்குள் சென்றான்.
கண்களில் தேங்கிய கண்ணீருடன் அங்கிருந்த கல்லில் அமர்ந்தாள் ஸ்ருதி. அவளைத் திரும்பி பார்த்த ராகவனுக்கு அவளுடைய தோற்றம் மனதை பிசைந்தது. ஆனாலும் இவள் ஏன் என்னை விட்டு போக மறுக்கிறாள் என்ற எரிச்சலும் வந்தது.
சிறிது நேரம் கழித்து ஸ்ருதி உள்ளே செல்ல அனைவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அமைதியாக தேன்மொழி அருகில் சென்று நின்று கொண்டாள்.
அவன் வந்ததும் வீட்டினர் அனைவரும் சந்தோஷ பட அதற்கு பின் பிறந்த நாள் பற்றி பேசப் பட்டது. ராகவன் அறைக்கு செல்ல அவன் பின்னேயே அனைவரும் சென்றார்கள். அனைவரும் சேர்ந்து அமரை வாழ்த்தும் சத்தம் கேட்க ஏனோ தான் மட்டும் அங்கே அதிகப் படியாக தான் இருந்தது ஸ்ருதிக்கு.
தோழியை மறந்து தேன்மொழி ராகவனிடம் கதை பேசிக் கொண்டிருக்க “அந்த பிள்ளையை தனியா விட்டுட்டு இங்க வந்து நின்னுட்டு இருக்க? போ”, என்று விரட்டினான் ராகவன்.
அவனைக் குழப்பமாக பார்த்தவள் “இவன் இப்ப ஸ்ருதி மேல அக்கறை வச்சு இதைச் சொல்றானா? இல்லை வேற எதுவுமா?”, என்று தெரியாமல் குழம்பிய படி தோழியைப் பார்க்கச் சென்றாள்.
அங்கு ஸ்ருதி ஏதோ தனிமையில் அமர்ந்திருப்பது போல இருக்க அவளுடன் சென்று அமர்ந்து கொண்டாள். ஸ்ருதியைப் பிடிக்காத ராகவன் எப்படி அவள் மனநிலையைப் பற்றிச் சரியாக சொன்னான் என்று குழப்பமாக இருந்தது தேன்மொழிக்கு.
அதற்கு பின்னர் காலை உணவின் போது தான் அனைவரும் ஒன்றாக அமர்ந்திருந்தார்கள். ராகவனை நிமிர்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆசையும் ஆனால் நிமிர்ந்து பார்த்தால் திட்டுவான் என்ற பயத்திலும் உண்ண முடியாமல் அமர்ந்திருந்தாள் ஸ்ருதி.
மற்ற அனைவரும் பேசிக் கொண்டிருந்ததால் யாரும் அவளைக் கவனிக்க வில்லை. அப்போது தான் ராகவன் அவள் கையில் இருந்த கட்டைப் பார்த்தான். ஏதோ உள்ளுக்குள் பதட்டம் அவனையே அறியாமல் உதயமானது.
அவளுக்கு என்னவாயிற்று என்று கேட்க வேண்டும் போல இருந்தது. ஏதோ தவறாக நடந்திருக்கிறது என்று மட்டும் அவன் உள்ளுணர்வு உணர்த்தியது. அதை என்னவென்று கேட்டால் தான் நிம்மதி வரும் என்ற நிலையில் இருந்தான். ஆனாலும் அனைவரின் முன்னால் எப்படி கேட்க என்பதால் அமைதியாக இருந்தான்.
சிறிது நேரம் கழித்து தேன்மொழி மட்டும் தனியே இருக்க அவளது அறைக்குள் ஸ்ருதி கடைக்குச் செல்ல கிளம்பிக் கொண்டிருந்தாள்.
தங்கை தனியாக இருப்பதைப் பார்த்து “தேனு இங்க வா”, என்று அழைத்தான் ராகவன்.
“என்ன அண்ணா?”
“உன் பிரண்டு கையில என்ன ஆச்சு?”, என்று அவன் பதட்டத்துடன் கேட்க தோழியின் மனது தெரியுமாதலால் அவனிடம் உண்மையைச் சொல்ல முடிவு எடுத்தாள்.
“பிளேட் வச்சா?”, என்று அதிர்ந்தவன் “ஏன் என்ன ஆச்சு?”, என்று பதட்டத்துடன் கேட்டான்.
“அவங்க அப்பாவுக்கு டிரான்ஸ்பராம். இவளுக்கு இந்த ஊரை விட்டு நம்ம ஸ்கூலை விட்டு போக மனசில்லையாம். அதான் உலகத்தை விட்டு போகவே முடிவு பண்ணிட்டா”, என்று சொல்லி அவனை ஆழம் பார்த்தாள்.
“என்ன சொல்ற நீ? இதுக்கு கையை வெட்டிப்பாங்களா?”
“செஞ்சு வச்சிருக்காளே. ஹாஸ்பிட்டல் போய் தான் அவளை இங்க கூட்டிட்டு வந்தேன். திங்கள் கிழமை அவங்க வீட்ல ஹாஸ்ட்டல் சேக்குறேன்னு சொன்ன பிறகு தான் சிரிச்சிருக்கா. இந்த ஸ்கூல் மேல அவளுக்கு என்ன பைத்தியமோ தெரியலை”
“இது பைத்தியக்காரத்தனம் இல்லையா தேனு? என்னைக்கு இருந்தாலும் அவ இந்த ஸ்கூல் முடிச்சு போய்த் தானே ஆகணும்?”
“ஆமா இதை அவளுக்கு யார் சொல்றது? அவ மனசுல என்னவோ இருக்கு. என்னன்னு சொல்ல மறுக்குறா? எனக்குமே இந்த ஊரை விட்டு போக முடியாத அளவுக்கு இங்க யார் இருக்காங்கன்னு தான் தோணுது”
“அவங்க அப்பாவுக்கு எந்த ஊர்ல டிரான்ஸ்பர் கிடைச்சிருக்கு”
“நீ இருக்குற சென்னைக்கு தான்”
“அவ ஊரும் அது தானே? அப்ப ஏன் அவ போகலை?”, என்று கேட்டவனுக்கு “நான் அந்த ஊர்ல தானே இருக்கேன்? அது தெரிஞ்சும் ஏன் அங்க வரலைன்னு சொல்லிருக்கா?”, என்று குழப்பம் வந்தது.
“எனக்கு தெரியலைண்ணா”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து செல்லப் போனாள் தேன்மொழி.
அந்த குழப்பத்தை நிவர்த்தி செய்வதற்காக “தேனு”, என்று அழைத்தான் ராகவன்.
“என்ன அண்ணா?”
“நான் சென்னைல படிக்கிறேன்னு அவளுக்கு தெரியுமா?”
“தெரியாது அண்ணா”, என்றதும் அவன் முகம் கூம்பி போனது. நான் என்ன படிக்கிறேன் எங்க படிக்கிறேன் என்று கூட தெரியாமல் இருக்கிறாளா என்று அவனுக்கு கஸ்டமாக இருந்தது. அந்த கஷ்டம் எதனால் என்று அவனுக்கு தெரியவில்லை.