“எனக்கு இந்த ஸ்கூலை விட்டு போக மனசில்லை தேனு. அதான் இப்படி பண்ணிட்டேன்”, என்றாள் ஸ்ருதி.
“இந்த ஸ்கூலை விட்டுப் போக மனசில்லையா? இல்லை என்னை விட்டுப் போக மனசில்லையா? எனக்கு தெரியும் ஸ்ருதி. நான் உன் வாழ்க்கையில் இருக்குறது வரைக்கும் தான் நீ என் அண்ணன் உனக்கு கிடைப்பான்னு நிம்மதியா இருப்ப. நான் உன் வாழ்க்கையில இல்லாம போனா நீ என் அண்ணனை நினைச்சு ஒண்ணும் இல்லாம போயிருவ. அதுக்காகவாது நான் உன் வாழ்க்கையில எப்பவும் இருப்பேன் டி”, என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டாள்.
டாக்டர் அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என்று சொன்ன பிறகு “மாமா, நான் ஸ்ருதியை என்னோட வீட்டுக்கு ரெண்டு நாள் அழைச்சிட்டு போகவா?”, என்று கேட்டாள் தேன்மொழி.
“அதெல்லாம் வேண்டாம் மா”, என்றார் தேவேந்திரன்.
“பிளீஸ் மாமா, ரெண்டு நாள் லீவ் தானே? நாளைக்கு என் தம்பிக்கு பிறந்த நாள் வேற?”
“யாருக்கு அமருக்கா?”
“ஆமா மாமா. ஸ்ருதி வந்தா அவன் ரொம்ப சந்தோஷப் படுவான். சண்டே நைட் ஸ்ருதியை வீட்ல கொண்டு வந்து விட்டுறேன்“
“என்னங்க, அவ போயிட்டு வரட்டும். இப்ப வீட்டுக்கு வந்தாலும் அவ ஒரு மாதிரி தான் இருப்பா”, என்றாள் வேணி.
“போறியா ஸ்ருதி?”, என்று தந்தை கேட்க சந்தோஷமாக மண்டையை ஆட்டினாள். அவளுடைய நாயகன் வாழும் வீட்டுக்குச் செல்ல அவளுக்கு கசக்குமா என்ன?”
“சரி போயிட்டு வா; திங்கள் கிழமை அப்பா உன்னை ஹாஸ்டல்ல சேக்குறேன். இனி ஒரு தரம் இப்படி பண்ணக் கூடாது”, என்று சொல்ல சந்தோஷமாக தலை ஆட்டினாள் ஸ்ருதி.
ஹாஸ்பிட்டலிலே ஸ்ருதிக்கு உடை இருந்ததால் அதை எடுத்துக் கொண்டு இருவரும் கிளம்பினார்கள். நான் உங்களை கொண்டு வந்து விடட்டுமா மா?”, என்று கேட்டார் தேவேந்திரன்.
“அப்ப என் சைக்கிளை கொண்டு போக முடியாது மாமா. நான் அட்ரஸ் சொல்றேன். ஸ்ருதியை வேணும்னா வீட்ல கொண்டு வந்து விடுங்க”, என்று தேன்மொழி சொல்ல “பிளீஸ் பா, நானும் தேனு கூட நடந்து போறேன்”, என்று ஸ்ருதி கெஞ்சினாள். “சரி வீட்டுக்கு போயிட்டு கால் பண்ணிச் சொல்லிருங்க”, என்று அனுமதி கொடுத்தார்.
இருவரும் ஹாஸ்பிட்டலில் இருந்து கிளம்ப போகும் போது தேன்மொழி அமைதியாக வந்தாள்.
“என்ன ஆச்சு டி? என் மேல் கோபமா?”, என்று கேட்டாள் ஸ்ருதி.
“எனக்கு உன் கிட்ட பேசவே பிடிக்கலை ஸ்ருதி”, என்று தேன்மொழி கோபமாகச் சொல்ல ஸ்ருதி அழுது விட்டாள்.
அவள் அழுதது கஷ்டமாக இருதாலும் தேன்மொழி எதுவும் பேச வில்லை.
சிறிது நேரம் கழித்து “ஏன் டி இப்படி பண்ணின?”, என்று ஆதங்கமாக கேட்டாள்.
…..
“இது உனக்கு தப்பா தெரியலையா ஸ்ருதி? எங்களை எல்லாம் பிரிஞ்சு ஒரெடியா போக முடிவு பண்ணிட்டல்ல?’
“இல்லை தேனு, எனக்கு கஷ்டமா இருந்துச்சா? இங்க இருந்து போகக் கூடாதுன்னு தான் அப்படி பண்ணினேன்”
“இங்க இருந்து போனா என்ன?”
“இங்க இருந்து போனா உன்னைப் பாக்க முடியாது. உன் கூட்ட பேச முடியாது”
“தினமும் பேச முடியாதே. என்னைக்காவது நீ கால் பண்ணலைன்னா நான் என்ன ஆவேன்னே தெரியாது”, என்று ஸ்ருதி சொல்ல அதை எப்படி எடுத்துக் கொள்ள என்று தேன்மொழிக்கு தெரிய வில்லை.
அதற்குள் வீடு வந்து விட்டது. “உங்க வீட்ல இந்த விஷயம் தெரிய வேண்டாம் தேனு”, என்று கேட்டுக் கொண்டாள் ஸ்ருதி.
“இதைச் சொன்னா இப்படி ஒரு கோழை கிட்ட பிரண்ட்ஷிப் வச்சிருக்கியேன்னு என்னைத் தான் திட்டுவாங்க”, என்று சொல்ல ஸ்ருதி முகம் வாடியது.
“வீட்ல யாருக் கிட்டயும் சொல்ல மாட்டேன் டி. ஆனா கையில இருக்குற கட்டு காட்டிக் கொடுத்துரும்”
“அது கீழே விழுந்து கம்பி கிழிச்சிருச்சுன்னு சொல்லிக்கலாம்”
“சரி உன் தப்பை உணர்ந்துட்டல்ல அதுவே போதும்”, என்று சொன்ன தேன்மொழிக்கு ராகவன் இவளுக்கு கிடைக்க வில்லை என்றால் ஸ்ருதி என்ன ஆவாளோ என்று கவலையாக இருந்தது.
அவளைக் கண்டதும் “ஸ்ருதி அக்கா”, என்ற படி ஓடி வந்து அமர் அவளை அனைத்துக் கொண்டான். பள்ளியில் வைத்து பார்த்திருப்பதால் ராஜியும் அவளைக் கண்டு “வாடாம்மா”, என்று அனைத்துக் கொண்டார்.
பின் வரவேற்பு படலத்தில் அவளுடைய கையில் இருந்த கட்டு பற்றி விவரிக்க பட்டது. ஏதோ சொல்லி சமாளித்து விட்டு “வாடி, நம்ம வீட்டைச் சுத்திப் பாக்கலாம்”, என்று தோழியை அழைத்துச் சென்றாள் தேன்மொழி.
“அமர் நீயும் வரியா?”, என்று ஸ்ருதி கேட்க “நான் கிரிக்கட் பாக்கப் போறேன்”, என்று சொல்லி அமர்ந்து விட்டான். ராஜி இரவு உணவை சமைக்கச் செல்ல “இது தான் என்னோட ரூம். நானும் அமரும் இங்க தான் இருப்போம். இது அம்மா அப்பா ரூம், அப்புறம் அது அண்ணா ரூம்”, என்று எல்லாவற்றையும் ஸ்ருதிக்கு காட்டினாள் தேன்மொழி.
ராகவனுடைய அறைக்குள் சென்று அவன் தொட்டப் பொருள்களை எல்லாம் பார்க்க ஸ்ருதியின் கால்கள் ஏங்கியது. ஆனால் அதை உரிமையாகச் செய்ய முடியாததால் அமைதியாக நின்றாள். ஆனால் அவள் மனது தேன்மொழிக்கு புரியாதா என்ன?”
“வா, என்னோட ரூமைக் காட்டுறேன்”, என்று சொல்லி அவளை அழைத்துச் சென்ற தேன்மொழி அதன் பின் “அண்ணா நிறைய மியூசிக் இன்ஸ்ட்ரூமென்ட் வச்சிருக்கான். வா காட்டுறேன்”, என்று சொல்லி ராகவனின் அறைக்கு அழைத்துச் சென்றாள்.
ஏதோ சொர்கத்தில் நுழையும் பரவசத்தோடு உள்ளே நுழைந்தாள் ஸ்ருதி. அங்கிருந்த பொருள்களை எல்லாம் அவள் தொட்டுத் தடவிப் பார்க்க ஏதோ பேசிய படி இருந்தாலும் அவள் முகத்தையே தான் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள் தேன்மொழி.
“இந்த காதல் வந்தால் இந்த பாடு படுத்துமா?”, என்று எண்ணி அவளுக்கு சிரிப்பாக கூட வந்தது.
“இங்க கொஞ்ச நேரம் உக்காரலாமா தேனு?”, என்று ராகவனின் கட்டிலில் அமர அவள் அனுமதி கேட்க “பைத்தியம் முத்திருச்சு”, என்று எண்ணிய தேன்மொழி “இதுக்கெலாம் அனுமதி கேக்கனுமா? வா உக்காரு”, என்று சொல்லி கட்டிலில் அமர்ந்து அவளையும் அமரச் சொன்னாள்.
அந்த கட்டிலில் அமரும் போது ஏதோ ராகவனின் மடியிலே அமர்வது போல ஒரு பிரம்மை எழுந்தது ஸ்ருதிக்கு. அவளை திசை திருப்ப “நாளைக்கு அமருக்கு பிறந்த நாள் டி. நாளைக்கு காலைல போய் ஏதாவது கிஃப்ட் வாங்கிட்டு வருவோமா? கடை இங்க பக்கத்துல தான் இருக்கு”, என்றாள் தேன்மொழி.
“கண்டிப்பா போகலாம். என்ன வாங்கலாம்? நானும் அவனுக்கு வாங்குவேன். அவனுக்கு என்ன பிடிக்கும்?”, என்று கேட்டு சிறிது நேரம் அதற்கு பிளான் செய்தார்கள்.
“அக்கா, அப்பா வந்தாச்சு”, என்று அமர் குரல் கொடுக்க “வாடி அப்பா வந்துட்டாங்களாம்”, என்று சொல்லி அவளை அழைத்து வந்து மதனுக்கு அறிமுகப் படுத்தினாள்.
ஏற்கனவே அவளைப் பத்தி தெரியும் என்பதால் அவரும் அவளிடம் சொந்த பெண்ணிடம் பேசுவது போல தான் பேசிக் கொண்டிருந்தார்.
அன்று இரவு உணவை முடித்து விட்டு ஸ்ருதியும் தேன்மொழியும் தேன்மொழியின் அறைக்கு உறங்கச் செல்ல அமரோ ராகவன் அறைக்குள் சென்று படுத்துக் கொண்டான்.
இரவு உறக்கம் வராமல் இருவரும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். “நாளைக்கு அமர் பெர்த்டே பங்ஷன்க்கு உங்க அண்ணன் வருவாங்களா?”, என்று சாதாரணமாக கேட்பது போல கேட்டாள் ஸ்ருதி.
“அவன் எங்க வருவான்? வந்தா தான் இன்னைக்கு நைட் கிளம்பிருப்பானே? கிளம்பினா கால் வந்துருக்கும். கால் வரலைல்ல? அதனால வர மாட்டான் போல? ஏதோ செமினார் வேலை இருக்குனு சொன்னான்”, என்று சொன்னாள் தேன்மொழி.
அவன் வர மாட்டான் என்று தெரிந்து கஷ்டமாக இருந்தாலும் அவனைக் காணாமல் இருப்பதே நல்லது என்றும் புரிந்தது. சும்மாவே தன் மீது கோபமாக இருப்பவன் அவனுடைய வீட்டிலே அவள் இருந்தால் என்ன சொல்வானோ என்று பயமாக இருந்தது. அதை விட அவன் இப்போது தன்னை நினைவு வைத்திருப்பானோ என்பது கூட அவளுக்கு சந்தேகமே.
“என்ன டி அமைதியாகிட்ட? தூக்கம் வந்துருச்சா?”, என்று தேன்மொழி கேட்டதும் “இல்லை டி, சரி நாளைக்கு என்ன பிளான்? எப்ப கேக் வெட்டுவீங்க? கோவிலுக்கு போவீங்களா?”, என்று பேச்சை மாற்றினாள் ஸ்ருதி.