“நீங்க தான் ஜாலியா பேசிப்பீங்களே? அவ உன்னோட குளோஸ் பிரண்டு தானே? நான் எங்க படிக்கிறேன்னு கூடவா அவளுக்கு தெரியாது? நீயும் என்னைப் பத்தி பேச மறந்துட்டியா தேனு?”, என்று ராகவன் கேட்க அண்ணன் பேசுவதும் அவன் வருத்தமும் அவன் மனதில் இருப்பதும் தெளிவாக புரிந்தது தேன்மொழிக்கு.
“அப்படியா சங்கதி? அவ உன்னைப் பத்தி தெரிஞ்சிக்காதது உனக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கா? அப்படின்னா என் பிரண்டு காதல் கண்டிப்பா ஜெயிச்சிரும்”, என்று எண்ணிக் கொண்டு “அவ கேப்பாண்ணா. நான் தான் உன்னை பத்தி எதுக்கு தேவையில்லாம ஸ்கூல்ல பேசணும்னு சொல்லலை”, என்று உண்மையைச் சொல்லி விட்டுச் சென்றாள்.
போகும் முன் “நீயாவது அவ கிட்ட இனி இப்படி பண்ணாதேன்னு சொல்லுண்ணா. அட்வைஸ் பண்ணு”, என்று சொல்லி விட்டு தான் சென்றாள்.
“என்ன நான் சொல்லனுமா? நான் அவ எதிர்ல போனாலே அவ பார்வை தினுசா மாறிருது. அவ கண்ணு ரெண்டும் மீன் வலை மாதிரி இருக்கு. அந்த மீன் வலைக்குள்ள மாட்டிக்க நான் விரும்பலை பா”, என்று எண்ணிக் கொண்டான்.
சிறிது நேரத்தில் இரண்டு தோழிகளும் கடைக்குச் செல்ல கிளம்பி விட்டார்கள். அமரும் அவர்களுடன் செல்வேன் என்று அடம் பிடிக்க அவனுக்கு வாங்குவதை அவனே பார்த்தால் நன்றாக இருக்காது என்று எண்ணி அவனை வீட்டில் இருக்கச் சொன்ன தேன்மொழி ஸ்ருதியை ஹாஸ்பிட்டல் அழைத்துச் செல்வதாக சொன்னாள். அதற்கு பின்னர் தான் அமர் அமைதியானான்.
ஆனாலும் இரண்டு பெண்களை தனியே விட மனதில்லாமல் அவர்களுக்கு துணையாக ராகவனை அனுப்பினாள் ராஜி. அவன் முதலில் மறுத்தாலும் தங்கைக்காக என்று எண்ணிக் கொண்டு சென்றான்.
கிஃப்ட் ஷாப்புக்கு சென்றதும் இருவரும் அமருக்கு ஏற்கனவே வாங்க வேண்டும் என்று முடிவு செய்திருந்ததை வாங்கினார்கள். ராகவனும் தம்பிக்கு கிஃப்ட் வாங்கினான். பின் கடையில் ஒரு கிஃப்ட் அழகாக இருக்க அதை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனை நோட்டம் விட்டாள் ஸ்ருதி.
ஒரு ஊஞ்சலில் இரண்டு குருவிகள் ஆடிக் கொண்டிருப்பது போல இருந்த கிஃப்டை பார்த்துக் கொண்டிருந்தான். பின் அதை வைத்து விட்டு அங்கிருந்து அவன் நகர்ந்து விட்டான். அதை எடுத்துப் பார்த்தாள். அந்த ஊஞ்சல் கண்ணாடியால் செய்யப் பட்டிருந்தது. அதில் இருந்த குருவிகள் பீங்கானால் செய்யப் பட்டு அழகாக இருந்தது.
அமருக்கு தேவையானதை வாங்கி விட்டு கிஃப்ட் பேப்பர் சுற்றக் கொடுத்தார்கள். ஸ்ருதி வாங்கியதையும் சேர்த்து ஒரே பில்லாக போட அவளுக்கும் சேர்த்து ராகவனே பணம் கட்டினான். ஆனால் ஸ்ருதி அவள் வாங்கிய கிஃப்டுக்கான பணத்தை தேன்மொழி பர்சில் வைத்து விட்டாள். பின் மூவரும் கடையை விட்டு வெளியே வந்தார்கள்.
அப்போது “என்னோட பர்சை அங்கயே வச்சிட்டு வந்துட்டேன்”, என்று ஸ்ருதி சொல்ல “சீக்கிரம் போகச் சொல்லு தேனு. எனக்கு கொஞ்சம் கூட ரெஸ்ட் இல்லை. நான் கொஞ்ச நேரம் தூங்கணும்”, என்று எரிந்து விழுந்தான் ராகவன்.
ஸ்ருதி அமைதியாக உள்ளே சென்று அவன் பார்த்த கிஃப்ட்டுக்கும் பில் போட்டு வாங்கிக் கொண்டு பேகில் வைத்து கொண்டு வந்தாள்.
அதற்கு பின்னர் அன்றைய இரவில் அமருக்கான பெர்த்டே செலிப்ரேசன் நடந்தது. தோட்டத்தில் வைத்து தான் கேக் வெட்டினார்கள்.
குடும்பத்தினர் மட்டும் தான் என்பதால் ஸ்ருதியும் அங்கு சந்தோஷமாக இருந்தாள். ஸ்ருதி அழகான உடை எதுவும் எடுத்து வராததால் தேன்மொழியின் பாவாடை தாவணியை அணிந்திருந்தாள்.
ராகவனின் பார்வை அடிக்கடி அவள் மேல் பட்டு திரும்பியது. ஏனோ அவளைப் பார்க்க சிறு பெண் என்றெல்லாம் இப்போது தோன்ற வில்லை. அவளுடைய அருகாமையில் கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய தடுமாற்றம் அதிகரித்துக் கொண்டே வந்தது. அதை எண்ணி அவனுக்கே வியப்பாக இருந்தது. மீண்டும் மீண்டும் அவன் கண்கள் அவள் பக்கமே திரும்ப தன்னை சமாளிப்பதற்குள் திணறி போனான்.
கேக் எல்லாம் வெட்டி முடித்து விட்டு அனைவரும் தோட்டத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். பாட்டின் நாயகனும் நாயகியும் அங்கே இருக்க அவர்களை பாடச் சொல்லி கேட்டு மற்றவர்கள் ரசித்துக் கொண்டிருந்தார்கள்.
கடைசியாக பாடி முடித்த ராகவன் தொண்டையை செரும “தேனு அண்ணனுக்கு தண்ணி எடுத்துட்டு வா”, என்றாள் ராஜி. “போ மா, நான் சீரியஸா கேக் சாப்பிட்டுட்டு இருக்கேன். நீ போ”, என்றாள் தேன்மொழி.
“சீரியஸா கேக் சாப்பிடுறியா? போடி, கொஞ்ச நேரம் நிம்மதியா உக்கார முடியுதா?”, என்று சளித்த படி ராஜி எழுந்து கொள்ள “நான் எடுத்துட்டு வரேன் ஆண்ட்டி”, என்று சொல்லி விட்டுச் சென்றாள் ஸ்ருதி .
சிறிது நேரம் சென்ற பின்னரும் அவள் வராததால் “தண்ணி எடுக்க போன ஆளை இன்னும் காணும்? இதுக்கு நானே போய்க் குடிச்சிருப்பேன்”, என்று சொன்ன ராகவன் வீட்டுக்குள் சென்றான்.
உள்ளே வந்ததும் “இவ எங்க போனா?”, என்று தேட அவளோ கிட்சன் உள்ளே பயத்துடன் நின்றிருந்தாள். “தண்ணி கூட ஒழுங்கா எடுத்து தர முடியாதா?”, என்று கேட்ட படி அவளை நெருங்க அவள் கண்களோ அந்த தண்ணீர் கேனின் மீதிருந்த பல்லியின் மீதே நிலைத்திருந்தது.
அதை பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது. “பல்லிக்கா பயந்து நிக்குற?”, என்று கேட்டுக் கொண்டே அந்த கேனை நெருங்கினான். அவன் நெருங்கியதும் பல்லி ஓடி விட்டது. ஆனால் அதை ஸ்ருதி கவனிக்க வில்லை. அவளை சீண்ட எண்ணி “இதுக்கெல்லாம் பயப்படலாமா? இதோ நான் கையாலே பிடிச்சிட்டேன்”, என்று கையை மூடி அவள் புறம் நீட்ட “ஐயோ சி உவ்வே”, என்றாள் ஸ்ருதி.
“உவ்வே வா? இரு இப்ப அதை உன் மேலயே போடுறேன்”, என்று சொல்லி அவள் மீது வெறுங்கையை வீச அவன் உண்மையிலே பல்லியைத் தான் போட்டு விட்டான் என்று எண்ணி கத்தி துடிக்க ஆரம்பித்து விட்டாள் ஸ்ருதி.
அவள் திடீரென்று கத்தவும் “ஏய் கத்தாத டி, அமைதியா இரு. நீ கத்துறது பக்கத்து வீட்டுக்கே கேட்டுரும் போல?”, என்று அவளை அமைதிப் படுத்த முயன்றான்.
“ஐயோ சி, அது எங்க போச்சு, ஐயோ என் மேல தான் இருக்கா? ஏன் இப்படி செஞ்சீங்க? அது என் மேல தான் இருக்கா?”, என்று அவள் கதற “ஐயோ கத்தாத டி அம்மா அப்பாக்கு கேக்க போகுது”, என்று உண்மையிலே பதறினான் ராகவன்.
“நீங்க ஏன் அதை என் மேல போட்டீங்க? அது எங்க இருக்கு? பிளீஸ் விரட்டுங்க. ஐயோ எனக்கு பல்லின்னாலே பயம். ஐயோ அருவருப்பா இருக்கே. அம்மாமாமாமாமா”, என்று அவள் அலற அடுத்த நொடி அவளை நெருங்கி அவளுடைய இதழ்களை சிறை செய்து விட்டான்.
அதிர்ச்சியில் அவள் கண்கள் ஒரு நொடி விரிந்து அடுத்த நொடி இயல்பாகி மயக்கத்துடன் மூடிக் கொண்டது.
அவள் கத்துவதை நிறுத்த தான் அப்படிச் செய்தான். கூடவே அவன் மனதில் எழுந்த ஆசையால் கூட இருக்கலாம். ஆனால் அவள் கண்களில் மயக்கத்தைக் கண்டவனுக்கு அவளிடம் இருந்து விலக முடியவே இல்லை.
அதுவும் கண்களை மூடி மெய் மறந்து அவள் முத்தத்தை ரசிக்க இப்போது அவன் கண்களும் மயக்கத்துடன் மூடிக் கொண்டது. அவளுடைய கன்னத்தில் இருந்த கைகள் மெதுவாக நகர்ந்து அவள் முதுகை வளைத்து பிடித்தது.
என்னமும் செய்து கொள் என்பது போல அவன் கைக்குள் அடங்கி இருந்தவளின் கரமும் அவன் முதுகை வளைத்துக் கொண்டது. இருவரும் மற்றவரின் அருகாமையில் மயங்கி நிற்க ஸ்ருதிக்கோ கால்கள் பலமில்லாமல் தள்ளாடியது.
அவன் மீதே மொத்தமாக சாய்ந்தாள். மூளை செயல் இழந்து உணர்வுகள் மட்டும் பேசிக் கொண்டிருக்கும் ராகவனோ அவளை இன்னும் இறுக்கிக் கொண்டான். உதடுகள் பேசிக் கொள்ளும் முத்தம் என்ற பாஷை மட்டும் நிற்கவே இல்லை.
அவர்களைக் காண வில்லையே என்று எண்ணி தேன்மொழி எழுந்து அங்கே வர எப்போதும் போல அமரும் அங்கு வந்தான். இருவரும் ஒன்று சேர்ந்து அறைக்குள் பார்க்க அங்கே நடந்த காட்சியில் அமர் கத்த வர அவன் வாயை இறுக மூடிய தேன்மொழி அவனை அங்கிருந்து அழைத்துச் சென்றாள்.
“என்ன உள்ள போன யாரையும் காணும்? ராகவா, தேனு? என்ன டா பண்ணுறீங்க? டிவி பாக்க உக்காந்துட்டீங்களா? இருங்க கம்பை எடுத்துட்டு வந்து நாலு வைக்கிறேன்”, என்று அங்கே இருந்தே ராஜி குரல் கொடுக்க அவசரமாக அவளிடம் இருந்து விலகி அவனுடைய அறைக்குள் சென்று விட்டான் ராகவன்.
நிற்க முடியாமல் தள்ளாடிய ஸ்ருதி சமையல் மேடையில் சாய்ந்து நின்று சமாளித்தாள். அதே நேரம் வீட்டின் பின் பக்கம் நின்றிருந்த தேன்மொழிக்கும் அமருக்கும் இயல்பாக சிறிது நேரம் எடுத்தது.
“என்னக்கா இதெல்லாம்?”, என்று கேட்டான் அமர்.
“அமர், நான் இப்ப சொல்றதை நீ எப்பவும் வெளிய சொல்லக் கூடாது. இது என் மேல சத்தியம்”
“சொல்லாதேன்னு சொன்னா சொல்லாம இருக்க போறேன் . அதுக்கு எதுக்குக்கா சத்தியமெல்லாம் கேக்குற?”
“சத்தியம் பண்ணு டா”
“உனக்கு ஆபத்து வரும் போது மட்டும் அந்த சத்தியம் செல்லு படியாகாது. மத்த படி யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்”, என்று சொல்லி அவள் கையில் அடித்து சத்தியம் செய்தான் அமர்.
“அமர், இது விளையாட்டு இல்லை. ஸ்ருதியோட வாழ்க்கை. இப்ப நீ பாத்ததை எப்பவும் வெளிய சொல்லக் கூடாது”
“இதைப் போய் நான் யார் கிட்ட சொல்லப் போறேனாம்? சரி அண்ணா ஸ்ருதி அக்காவை விரும்புறானா?”
“அப்படி தான் தோணுது. அவன் இல்லைன்னு சொல்றான். ஆனா ஸ்ருதிக்கு அவன் மேல பைத்தியம்”